Blogger Widgets

Total Page visits

Friday, August 16, 2013

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!


தலைவா ரிலீஸ் பிரச்னை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் அப்படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசிடம் அனுமதி கோரியுள்ளனர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கி இருந்தார். விஜய் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்து இருந்தார். 

வெடிகுண்டு மிரட்டல்

இப்படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் தமிழகத்தில் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, யு சான்று பெற்றும் வரிவிலக்கு கிடையாது என தமிழக அரசு கூறியது, படத்தில் அரசியல் தொடர்பான சர்ச்சை காட்சிகள் இருக்கிறது என அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் தமிழகத்தில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகநாடுகளில் தலைவா படம் ரிலீஸானது.

முதல்வருக்கு வேண்டுகோள்

தலைவா படம் வெளியாகாததால் ஒருபுறம் ரசிகர்கள் கவலை அடைந்த உள்ள நிலையில், மறுபக்கம் இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டிக்களும் தலைவா படம் வெளிவர தொடங்கியுள்ளன. இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‌மேலும் படத்தை ரிலீஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷூம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்க முடிவு

இந்நிலையில் படம் வெளிவராததால் தலைவா படத்தில் நடித்தவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை கமிஷனருக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் ‘தலைவா’ திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள். படம் வெளிவராததால் பெரும் நஷ்டம் ‌ஏற்பட்டுள்ளது. மேலும் திருட்டு விசிடிக்களும் பெருகி வருகிறது.

இதனால் ‘தலைவா’ படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம் மற்றும் படத்தில் நடித்த பிற நடிகர்கள், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தலைவா’படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி அளிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments: