Blogger Widgets

Total Page visits

Sunday, December 28, 2014

தரமான ஆரம்பக் கல்வி தேவை

தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
இங்கேதான் கோளாறு உள்ளது எனக் கல்வி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்ச்சி நிச்சயம் உண்டு. அவர்கள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என நினைக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர் என கல்வித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்து இட்டுவிட்டு தங்களது சொந்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்கள். சில ஆசிரியர்கள் பல தனியார் நிறுவனங்களில் பகுதிநேரப் பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களை ஒன்றும் செய்ய இயலாது. சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை எடுத்தால் சங்கம் போராட்டத்தில் இறங்குகிறது என வேதனையுடன் கூறினார் ஓர் அதிகாரி.
ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியுடனும், சேவை மனப்பான்மையுடனும் வேலை செய்தால்தான் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்க இயலும்.
அடுத்து பாடத் திட்டங்களை எடுத்துக் கொள்வோம். அப்போதெல்லாம் தேர்வில் சாய்ஸ் என்பது மிகமிக குறைவாகவே இருக்கும்.
மேலும் ஒரு கேள்விக்கு 4 பதிலைக் கூறி, இதில் எது சரி எனக் கூறு என்ற கேள்விகள் இருக்காது. தற்போது உள்ள இந்த இரு முறைகளினால் மாணவர்கள் படிக்கும் திறன் குறைந்து விடுகிறது. அவர்களின் ஞாபகத் திறன் மழுங்கடிக்கப்படுகிறது.
மேலும், தற்போது மனக்கணக்கு என்கிற பாடம் இல்லை. இந்த மனக் கணக்கு ஞாபக சக்தியை வளர்ப்பதோடு, பிற்காலத்தில் பல வேலைகளை சுலபமாகச் செய்ய வழி செய்யும்.
தற்போது கால்குலேட்டர் வந்துவிட்டது. அந்த காலத்தில் பின்னல் கணக்கு, அல்ஜீப்ரா கணக்கு என எதையும் எழுதி பார்த்து தான் விடையளிக்க முடியும். இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தது. தற்போது கால்குலேட்டர் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திறன் வளர்க்கப்படுவதில்லை.
மேலும், நோட்ஸ் புத்தகம் வாங்கி அக் காலத்தில் யாரும் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும்போதே கேள்வி பதிலைக் கூறிவிடுவார். அதனை நோட்டுப் புத்தகத்தில் எழுதி படிக்க வேண்டும்.
தற்போது எங்கும் நோட்ஸ். எதற்கும் நோட்ஸ் என மாணவர்களின் கற்கும் திறனை மிகவும் குறைத்து விடுகிறது.
அடுத்து அந்தக் காலத்தில் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது. தற்போது அது இல்லை. காரணம் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க இயலாது. அப்படி கண்டித்தால் ஆசிரியர் அடித்து விட்டார் என புகார் எழும்.
மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு கூறியுள்ளதை மாணவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளைக் கண்டும் காணாதது போல இருந்து விடுகிறார்கள்.
தற்போது பள்ளியில் வகுப்பறையை மாணவர்கள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் சிலர் மாணவர்களின் நிலை பாரீர் எனக் கூக்குரலிடுகின்றனர். இதுபோன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் பயமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டது.
இப்படிப் படிப்பவர்கள் பின்னாளில் ஆசிரியர்களாக பணிபுரிய நேர்ந்தால் எப்படி இருக்கும்? இது போன்ற காரணங்களால்தான் ஆரம்பக் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.
நம் பிள்ளைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலி எனக் கூறி வருகிறோம். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி அளித்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு, வருங்கால சமுதாயமும் மேம்படும்.

By எஸ். பாலசுந்தரராஜ்

தொட்டால் மனம் மலரும்!

உலகிலேயே உணர்வுகளின் அடிப்படையில் உயிர்களை வகைப்படுத்தியது தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் மட்டுமே. "உற்றறிவதுவே ஓரறிவுயிரே' என்கிறது தொல்காப்பியம். அதாவது, ஓர் அறிவு உயிருக்கு தொடுதல் உணர்வு மட்டுமே உண்டு.
ஆகவே, ஓர் அறிவு உயிர்களான மரம் செடி கொடிகளோடு உரையாட வேண்டுமெனில் அவற்றைத் தொட்டுத்தான் பேச வேண்டும். மரங்களைத் தொட்டுத் தழுவி நோய் நீக்குவதை ஒரு சிகிச்சை முறையாகவே சித்த மருத்துவம் கூறுகிறது.
மேலை நாடுகளில் தொடு சிகிச்சை (ற்ர்ன்ஸ்ரீட் ற்ட்ங்ழ்ஹல்ஹ்) உடல் மற்றும் மனச் சிக்கல்களுக்கான மருத்துவ முறையாக வளர்ந்துள்ளது. மியாமி பல்கலைக்கழகத்தில் தொடுகை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
கேட்கும் திறனும் கண் பார்வையும் பிறவியிலேயே இல்லாத ஹெலன் கெல்லர் தொட்டுத் தொட்டுத்தான் எழுத்துக்களை வாசித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தொட்டால் மலரும் பூக்களாக சொற்கள் இருந்திருக்கின்றன.
சின்னஞ்சிறு இலைகளை விரித்தபடி நிற்கும் செடி ஒன்று - நம் விரல்கள் தொட்டமாத்திரத்தில் அதன் இலைகள் மடங்கி மூடிக் கொள்கின்றன. இந்தச் செடிக்கு "தொட்டாற்சிணுங்கி' என்று பெயர் வைத்தவன் ஒரு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.
தூரத்தில் தரையைத் தொடுவதுபோல் தோற்றம் தரும் தொடவே முடியாத வானத்தின் பெயர் "தொடுவானம்'! இதுவும் அழகான சொல்லாட்சிதானே?
நமது இரண்டு கன்னங்களையும் தொட்டுத் தடவி திருஷ்டி கழிக்கும் அம்மாவின் தொடுகைக்கு இணையான ஆசீர்வாதத்தை எந்த மகானால் தந்துவிட முடியும்?
மகாபாரதத்தில் திருதிராட்டிரன் மனைவி காந்தாரி துரியோதனின் உடம்பெல்லாம் தொட்டுத் தடவினால் அவனை யாராலும் கொல்ல முடியாது. கண்ணிரண்டையும் கறுப்புத் துணியால் கட்டியிருக்கும் காந்தாரிக்கு மகன் இடுப்பின் கீழ் அணிந்திருந்த ஆடை தெரியவில்லை. அவளால் தொடமுடியாத அந்த தொடைப் பகுதியை கிருஷ்ணன் சைகை காட்ட பீமன் அடித்து வீழ்த்தியதாக கதை உண்டு. அன்னையின் தொடுகை எத்துணை ஆற்றல் மிக்கது என்பதை இது உணர்த்துகிறது.
இராமாயணத்தில் இராமபிரான் இலங்கைக்கு பாலம் அமைப்பதில் உதவிய அணிலின் கதை நாம் அறிந்ததுதான். இராமபிரான் அணிலை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்ததுதான் அதன் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்று சொல்வது உண்டு.
அநுமன் கடலைத் தாண்டி இருக்கலாம். ஆனால் அன்பு தலைமுறைகளைத் தாண்டக் கூடியது என்பதே இக்கதையின் செய்தி.
கணவன் மீது கோபம் கொண்டபோது, "என்னைத் தொடக்கூடாது' என்று கட்டளையிட்டாள் திருநீலகண்டரின் மனைவி என்பது ஒரு கதை.
ஏழைத் தாய் குழந்தைக்குச் சோறூட்டுகிறாள். தொட்டுக் கொள்ள காக்கையும் குருவியும்! இதில் உள்ள கவித்துவச் சிந்தனை ஒருபுறமிருக்க சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள துணைக் கறியாக உள்ள பதார்த்தங்களை "தொட்டுக்கை' என்று குறிப்பிடும் சொல் மரபு உண்டு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் நண்பரும் சேர்ந்தே அலுவலகம் செல்வோம். தினமும் புறப்படும்போது உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் தோளைத் தொட்டு "போயிட்டு வரேம்ப்பா' என்று சொல்லிவிட்டு வருவார். எவ்வளவு அவசரமானாலும் அப்பாவைத் தொடாமல் வரமாட்டார்.
அப்போது அந்த முதியவர் முகத்தில் பரவும் திருப்தியையும் ஆனந்தத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஒரு தொடுகைக்காக முதியவர்கள் ஏங்குகிறார்கள் என்பதை நாம் அறிவோமா?
உடம்பெல்லாம் புண்ணும் சீழுமாய், சாலையோரம் விடப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்கள் உடம்பைத் துடைத்து பணிவிடை செய்து பாதுகாத்ததால் அன்னை தெரசாவை புனிதர் நிலைக்கு உயர்த்தி வணங்க வைத்தது வாட்டிகன்!
குழந்தைகள் நம்மைத் தொடும்போது ஏற்படும் பரவச உணர்வை "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் மெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும் மயக்குறு மக்கள் இல்லோர்க்கு பயக்குறைவில்லை தாம் வாழும் நாளே...' என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. "மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்' என்கிறார் திருவள்ளுவர்.
குழந்தைகளை தாய்மார்கள் அடிக்கடி தொடுவதால் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் கூடுதலாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நோயாளிகளைத் தொட்டு உரையாடும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் பெரிதும் குறைவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
பாரதி கடவுளை கண்களால் காண மட்டும் விரும்பவில்லை. விரலால் தீண்டவும் விரும்பினான். அதனால்தான் "தீக்குள் விரலை வைத்தால், உனைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடினான்.
சிறுவயதில் வீடுகளில் ஏற்றப்படும் குத்துவிளக்கின் சுடருக்குள் விரல் நீட்டும் விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? அந்தச் சுடருக்குள் நுழையும் விரலை தீ செல்லமாகச் சுடும். அதுதான் கடவுள் என்று குதூகலித்து கைகொட்டிச் சிரிக்கிறான் பாரதி குழந்தை போலே!
அண்மையில் ஒரு பிரம்மாண்ட அணுவெடிப்புச் சோதனை முடிவில் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டதாக (எர்க்ள் ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங்) விஞ்ஞானிகள் அறிவித்தபோது கடவுளை ஏறத்தாழ தொட்டுவிட்டதாகவே அறிவுலகம் பெருமைப்பட்டுக் கொண்டது.
வானத்தில் கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் விண்கல விரல்களால் பிரபஞ்சம் எங்கும் கடவுளைத் தேடித் துழாவ ஆரம்பித்து விட்டான் மனிதன். பாவம் அவன் படுத்திருப்பது கடவுளின் மடி என்று அறிந்தானில்லை.
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று ஆசைப்பட மைதாஸின் கதையை மறக்க முடியுமா? உண்ணும் உணவும் ஆசை மகளும் கூட தான் தொட்டதனால் பொன்னாகிப் போனதும்தான் அவனுக்குப் புத்தி வந்தது!
பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்திய ஆன்மிக குரு ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகையில் தங்கத்தாலோ பிற உலோகங்களாலோ ஆன நாணயங்களையோ ஆபரணங்களையோ தொட்டாலே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று குறிப்பிடுகிறார். அந்த ஆன்மிக குருதான் ராமகிருஷ்ண பரமஹம்சர்!
விரல் என்பது மனதின் பெளதிக வடிவம். மனத்தின் நீட்சி. விரல் தொடும் முன்னதாகவே மனம் தொட்டு விடுகிறது. "இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்கிறான் கம்பனின் ராமன்.
ஏதோ காரணத்தால் உறவினர் ஒருவருடன் பல வருடங்கள் பேசாமலே இருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஒருவித பகைமை உணர்வாகவே அது வளர்ந்துவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார்.
பிறகு ஏதோ சந்தர்ப்பத்தில் அந்த நண்பரின் கையைப் பிடித்து எப்படி இருக்கீங்க என்று நண்பர் கேட்ட மாத்திரத்தில் அவர் நெகிழ்ந்து விட்டாராம். கை தொட்ட ஒரு நொடியில் பகைமைச் சுவர் சுக்குநூறாகி இதயங்களை இணைத்துவிட்டது.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் தமது அன்புக்குரியவர் தன்னைத் தொட வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
தொடுங்கள். தழுவிக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களோடு உடலளவில் நெருங்கி இருங்கள். அங்கே புரிதல் இயல்பாகி விடும். வார்த்தைகளே தேவை இல்லாத வாத்சல்யம் உறவுகளுக்கு உயிர் தருகிறது.
பாலியல் சீண்டல்கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் எதிர்பாலினத்தவர் ஒருவருக்கு ஒருவர் சாதாரணமாகத் தொடவே அஞ்சும் நிலைதான் உள்ளது.
அந்தக் காலத்து திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். காதலன் காதலியைத் தொடுவது அபூர்வமாகவே இருக்கும். அப்படித் தொட்டாலும் அதில் விரசம் இருக்காது.
"அப்பா என்னை சம்பூர்ண ராமாயணம் படத்துக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்' என்று என் மனைவி பரிதாபமாகச் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
திரைப்படங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒழுக்கம் சமூக உணர்வுகளிலும் வேரோடி இருந்தது. அந்தக் காலத்தில் பொது இடங்களில் ஆண்கள் - கணவனாகவே இருந்தாலும் - தங்களைத் தொட்டுப் பேசுவதை பெண்கள் அனுமதிப்பது கிடையாது. அது ஒருவித பண்பாட்டுச் சீர்மை. படித்தவர்களைவிட பாமரர்களே இதனைத் தீவிரமாகப் பின்பற்றினர்.
ஆனால், இன்று மெத்தப் படித்த மேதாவிகள் கேரளாவிலும், தமிழக ஐ.ஐ.டி. வளாகத்திலும் "இளமைத் திருவிழா' என்ற பெயரில் அரங்கேற்றிய வக்கிரக் காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் காண்பிக்கப்பட்டபோது அது விரசத்தின் உச்சமாக இருந்தது.
தொடுதலும், தழுவுதலும், முத்தமிடுதலும் பொது இடத்தில் இளமையின் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இளைஞர்களில் ஒரு சாரார் முழக்கமிடுகின்றனர்.
தொடுதலின் வண்ணங்கள் திசைமாறுகின்றன.
மண்ணின் மணம் காப்போம்; மானத்தையும்தான்!

கட்டுரையாளர்: எழுத்தாளர். தஞ்சாவூர்க்கவிராயர்

எதற்கும் எல்லை உண்டு

கடிதப் போக்குவரத்து முற்றிலும் குறைந்து, கைப்பேசிக் குறுந்தகவல் முறையும் பின்தங்கிவிட்டதாகத் தோன்றும் நிலையில், இப்போது பெரும்பான்மையானோரை இணைக்கும் பாலமாக இருப்பவை முகநூல், சுட்டுரை, வாட்ஸ் அப் - ஆகிய மூன்றும்தான்.
முகம் பாராமலேயே உயிருக்குயிராய்ப் பழகிய கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையாரின் "சங்க கால நட்பு', இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் பரவலாக இருந்த "பேனா நட்பு' ஆகியவற்றின் புதிய பரிமாணம்தான் இவை.
வங்கியில் கணக்கு இருக்கிறதோ இல்லையோ, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கு இல்லையென்றால், நாம் நவீன அறிவியல் உலகில் பல படிகள் பின்னால் இருப்பதாகத் தோன்றிவிடும்.
உலக மக்கள்தொகையில் 126 கோடிப் பேர் முகநூல் பயன்படுத்துகின்றனர். அதாவது, 13 பேருக்கு ஒருவர் முகநூல் இணைப்பில் உள்ளார்.
இந்தியாவில் 9 கோடிப் பேர் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள்; 27 சதவீதம் பேர் பெண்கள். முகநூல் பயன்படுத்துவோரில் 24 சதவீதம் பேர் 14 முதல் 25 வயதுக்கு உள்பட்டோர்.
முன்னணி சமூக வலை தளங்களில் ஒன்றான சுட்டுரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதக் காலத்தில் 25 கோடியாக அதிகரித்துள்ளது.
முகநூலில் ஒரு நிமிடத்தில் 24 கோடியே 60 லட்சம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றனவாம்.
முகநூலை தங்களது புகைப்படங்களின் தொகுப்பாகவும், அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை தாங்கள் செய்யும் பணிகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடவுமே பலர் பயன்படுத்துகின்றனர்.
அதேநேரம், பொது அறிவுத் தகவல்கள், விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ரத்தத் தேவை, வேலைவாய்ப்புச் செய்திகள் போன்ற பயனுள்ள செய்திகளும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
சில நாள்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த அவர் தனது 10-ஆவது வயதிலேயே சொந்த ஊரை விட்டு குடும்பத்துடன் கடலூர் மாவட்டத்துக்கு செல்ல நேரிட்டது. விவரம் புரியாத அந்த வயதிலிருந்த நண்பர்கள் குறித்த ஏக்கம் அவரை வாட்டி வதைத்தது.
இப்போதுதான், அவருடைய 39-ஆவது வயதில் தனது பால்யகால நண்பர்கள் பற்றியத் தகவல் தெரிந்ததாம். விரைவில் நண்பர்களைச் சந்திக்கவுள்ளதாகவும், 29 ஆண்டுகால தேடலுக்கு பலன் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பேருதவி புரிந்ததாக அவர் குறிப்பிட்டது "முகநூல்'!
இவரைப்போல விட்டுப்போன நட்புகளையோ, உறவுகளையோ முகநூல் மூலம் சிலர் தேடிக் கண்டடைகின்றனர். முகநூல் மூலம் அறிமுகமாகி, நண்பர்கள் குழு அமைத்து, மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூக செயல்களிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பகிர்வுத் திறனை வளர்க்கும் அளவுக்கு முகநூல், படைப்புத் திறனை வளர்க்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், எங்கிருந்தோ, யாரோ அனுப்புகின்ற ஏதோ ஒன்றை "பார்வர்டு' அல்லது "ஷேர்' அல்லது "லைக்' செய்யும் பணியே பெரும்பாலும் நடக்கிறது.
சிலர் பிறரது கருத்துகளைச் "சுட்டு' முகநூலில் உரைப்பதால், முகநூலே "சுட்டுரை'யாகவும் (டுவிட்டராகவும்) மாறிவிடுகிறது, சில நேரங்களில்.
சிலர் நாள் முழுவதும் முகநூலே கதி எனக் கிடந்து, உலகின் பல மூலைகளில் இருக்கும் முகம் தெரியாத பலரை நண்பர்கள் பட்டியலில் வைத்து அழகு பார்க்கும் நட்புப் பிரியர்களாக உள்ளனர்.
ஆனால், அத்தகையோர் அண்டை வீட்டுக்காரர்களுடனோ, அலுவலகத்தில் சக ஊழியர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ அன்பை பரிமாறிக்கொள்கின்றனரா என்பது கேள்விக்குறியே.
கண்ணால் கண்டதை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதைப்போல, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் "கண்டதை'ப் பகிர்ந்துகொள்வதும் முகநூலில் அதிகமுள்ளது.
அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பது, பெண்களின் பெயர்களில் போலிக் கணக்குத் தொடங்கி மற்றவர்களை ஏமாற்றுவது, அரசியல்வாதிகள், நடிகர் - நடிகைகள் என பிரபலமானவர்களை நியாயமற்ற முறையில் விமர்சிப்பது, ஜாதி - மத மோதல்களைத் தூண்டும்விதத்தில் கருத்துத் தெரிவிப்பது, தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு திரட்டுதல் போன்ற போக்கும் அதிகரித்து வருகிறது.
எல்லை தாண்டாதவரை எதுவும் அபாயமில்லை என்ற கருத்து இந்தச் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்போருக்கும் பொருந்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

By மா. ஆறுமுககண்ணன்

படித்துக்கொண்டே இருப்போம்!

இந்தியாவில் கற்றோர் மிகுதியாக உள்ள மாநிலம் கேரளம். புத்தகம் வாசிப்போர் மிகுதியாக உள்ள மாநிலம் மேற்கு வங்காளம். புத்தகம் மிகுதியாக வெளியாகும் இந்திய மொழிகளில் முதலாவது இடம்பெற்றிருப்பது இந்தி. திரைப்படம், தொலைக்காட்சி முதலான காட்சி ஊடகங்களும், கிரிக்கெட் முதலான பொழுதுபோக்கு ஊடகங்களும் கணிசமான அளவு படிப்பைப் பாதிக்கின்றன.
இத்தடைகளை எல்லாம் மீறி நூல்களைப் படிக்க வாய்ப்பும் தேவையும் ஒரு நாட்டில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் புதிய புதிய கருத்துகள் எல்லாருக்கும் சென்று சேரும். புதிய கருத்துகளை எழுதுவோரும் ஊக்கம் பெறுவர்.
தமிழைப் பொருத்த அளவு நூல்களின் வரத்து கற்றவர் எண்ணிக்கை அளவு தொடர்ந்து பெருகுவது இல்லை. கற்றவர் பிளஸ் 2-வோ, பிற பட்டப் படிப்புகளோ படித்துவிட்ட பிறகும் படித்துக் கொண்டிருக்கும்போதும் நூல்களை வாசிக்கும் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்வது இல்லை.
பொதுவாகத் தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் நூலகப் பதிவுகளைக் கல்லூரி முதல்வர்களில் சிலர் அன்றாடம் மாலையில் அமைதியாகச் சென்று பார்ப்பது உண்டு. யாரார் நூலகத்திற்கு வந்து செல்கிறனர் என்பதையும், புத்தகம் எடுத்துச் செல்கின்றனர் என்பதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.
விரிவுரையாளர்களில் சிலர் தம்முடைய பாடப்பொருளுக்குத் தக்க நூல்களை எடுத்துச் செல்வது மட்டுமன்றி, பெரும்பெரும் நாவல்களையும் சிறுகதைகளையும் தம் வீட்டில் உள்ளோர் படிப்பதற்காக எடுத்துச் செல்வதுண்டு. சிலர் நூலகம் பக்கமே வருவதில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1963-வாக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி வே. சுப்பிரமணிய நாடார் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அப்பல்கலைக்கழகத்தில் உள்ள பேரரங்கான ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் வாசிப்போர் அரங்கம் நடத்துவார்.
அங்கு பயிலும் மாணாக்கர், தாம் அந்த வாரம் படித்த புதிய புத்தகம் பற்றி மேடை ஏறிப் பேசவேண்டும். ஆண்டு இறுதியில் மிகுதியாக நூல் வாசித்தோர்க்குத் தனிப் பரிசுகளைத் துணைவேந்தர் தன் சொந்தச் செலவில் கொடுப்பார்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் விடுமுறை என்றும் பார்க்காமல் துணைவேந்தர் காலை 10 மணி முதல் 1 மணி வரை வந்து அமர்ந்திருப்பது அதிசயம்.
அந்தப் பேரரங்கு முழுதும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் அமரமுடியும் என்றாலும், சில நூறு பேராவது வந்து அமர்ந்திருப்பர். நோக்கம், மாணவரிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பெருக்கவேண்டும்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக இருந்து அதனை நிறுவி வளர்த்த அறிஞர் கே. வெங்கடசுப்பிரமணியம் புத்தக விரும்பி. எனவே, ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழக சார்பில் பெரும் புத்தகக் கண்காட்சியை நகரிலே செலவு செய்து நடத்துவார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இதுபோன்றதொரு புத்தகக் கண்காட்சியை அப்பல்கலைக்கழக நூலகர் துணைவேந்தர் துணையோடு நடத்துவார். ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாகக் காசு கொடுத்து அல்ல, கடனுக்காக புத்தகத்தைக் கண்காட்சியில் வாங்கிக் கொள்ளலாம். புத்தகம் வாங்கினதற்கு அடையாளமாகக் கையெழுத்து இடவேண்டும். உரிய தொகையைப் பல்கலைக்கழக நிதி அலுவலர் நேரில் பார்த்துச் செலுத்திவிடுவார்.
செலுத்தப்பட்ட பணம் 10 மாதத் தவணைகளில் ஆசிரியர் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும். புத்தகம் வாங்கும் ஆசிரியர் தனக்குத் தேவைப்படும் புத்தகங்கள் மட்டுமல்லாமல் தன் மனைவி, மக்கள், உறவினர் முதலான அனைவருக்கும் தேவைப்படும் புத்தகங்களை இக்கடன் வசதியைப் பயன்படுத்திக்கொண்டு வாங்கிக் கொள்ளலாம். பின்னாளில் துணைவேந்தர் மாறியபோது இப்பழக்கம் ஏனோ கைவிடப்பட்டு விட்டது.
புத்தக வாசிப்பைப் பெருக்குவதற்காகப் புதுவைப் பல்கலைக்கழகத்திலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் அறிவு என்பதோடு தொடர்புடைய புதன்கிழமையில் அறிவரங்கம் நடத்தப்பெறும். இந்த அறிவரங்கத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டுரையை எழுதி வழங்குதல் வேண்டும்.
கல்லூரி ஆசிரியரிடையேயும் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் கட்டுரை எழுதும் பழக்கமும் வரவேண்டும் என்பதற்காக மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக எல்லையில் உள்ள கல்லூரிகளில் இவ்வறிவரங்கம் தொடர்ந்து நடத்தப்பெற்றது.
நோக்கம், ஆசிரியர்களை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்பதாகும்.
பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று, வேலைக்கு அலைந்து, வேலை கிடைத்தவுடன் ஆசிரியராக அமர்கிறவர்கள், தொடர்ந்து தம் பாடப்பொருளில் வெளிவரும் புதிய புதிய நூல்களைப் படிப்பதில்லை.
அவர்கள் படிக்க படிக்கத்தான் புதிய கருத்துகளையும் புதிய செய்திகளையும் வகுப்பறையில் மாணவர்களுக்குச் சொல்லமுடியும். பழைய புத்தகங்களிலும் பழைய குறிப்பேடுகளிலும் உள்ள செய்திகளை மட்டும் வாந்தி எடுப்பதால் வளர்ச்சி ஏற்படாது.
புதிய புத்தகங்களை எழுதவும், வெளியிடவும் அப்புத்தகங்களில் உள்ள கருத்துகள் பரவவும் வேண்டுமென்றால், தொடர்ந்து விடாமல் நூல்கள் வெளிவந்துகொண்டே இருக்க வேண்டும். அண்மையில் ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பான் பகுதி நாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கு பரவியுள்ள தொலைக்காட்சி, மின்னஞ்சல் முதலான காட்சி ஊடகங்களால் புதிய நூல்வரத்து நின்றுவிடவில்லை என்பதை நேரில் காணமுடியும்.
இரயிலிலும் விமானத்திலும் பயணம் செய்வோர் இன்னொன்றையும் நேரில் கண்டிருக்க முடியும். எல்லார் கையிலும் ஏதேனும் புத்தகங்கள் இருக்கும். பயணி தான் படிக்க ஏதேனும் புத்தகம் வேண்டும் என்று கேட்டுப் பெறலாம். இதுபோன்ற அன்பழைப்பு நம் நாட்டிலும் பெருகவேண்டும்.
நெடுந்தூர இரயில் பயணங்களில் பெட்டிக்கு உள்ளேயே புத்தகங்களைக் கொடுத்துப் படிக்க வைத்து வாங்கும் நூலகங்களை அந்தந்த நிர்வாகம் நடத்த வேண்டும். அதற்காக வாசகரிடமிருந்து சிறு வாடகை பெற்றாலும் தவறில்லை.
தற்போது இரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் புத்தகக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு மேலாக இரயில் பயணத்தின் ஊடேயும் புத்தகங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல் வேண்டும்.
சென்னை இலயோலா கல்லூரி ஆங்கிலத் துறையிலும் தமிழ்த் துறையிலும் ஒரு சிறந்த பழக்கம் கடைப்பிடிக்கப் பெற்றது. அங்கு மதிப்பெண் கிரெடிட் ஆக வழங்கப்பெறும். புத்தக வாசிப்புக்கு என்று தனி கிரெடிட் உண்டு.
ஒவ்வொரு மாணவருக்கும் புதுப்புது புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் செய்வது. அவரே புதுப்புது நூல்களைப் படிக்க ஊக்குவிப்பது. அவர் ஒரு பருவத்தில் படித்த நூல்களை உரிய ஆசிரியரிடம் காட்டி அதற்கு என்று தனி கிரெடிட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கு என்று தனி மதிப்பெண் வழங்கப்பெற்றது. இத்தகு பழக்கங்களை எல்லாக் கல்வி நிலையங்களிலும் கொண்டு வருவது கடினமில்லை.
அயல்நாடுகளில் பல்கலைக்கழக வினாத்தாள்களில் புத்தகப் பகுதியையே அப்படியே கொடுத்தும் புத்தகத்தையே அப்படியே கொடுத்தும் குறிப்பிட்ட நேரம் வழங்கி அந்த நேரத்திற்குள் நூல்களை வாசித்துச் சுருக்கி எழுதவேண்டும். அதற்குத் தனி மதிப்பெண் வழங்கப்பெறும்.
இப்படிப் பலவேறு வழிகளில் வெறும் பாடப்புத்தகப் புழுக்களாக மட்டும் இருக்கின்ற மாணவரைப் புதிய நூல் வாசிக்கும் பழக்கம் உடையவராக மாற்றுதல் வேண்டும். முன்பை விட நம் இளைஞரிடையே வாசிக்கும் பழக்கம் கூடியிருக்கிறது.
இப்பழக்கம் அந்தந்த வாரம் வெளிவரும் பொழுதுபோக்கு இதழ்களை மட்டும் சார்ந்திருக்கிறது. அத்துடன் இல்லாமல் அவற்றிற்கு அப்பால் புதிய நூல்களையும் படிக்கச் செய்வது பற்றி தொடர்புடைய அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இதன் விளைவு உடனடியாகக் கண்ணுக்குத் தெரியாது. காலப்போக்கில் தொடர்புடைய அந்த இளைஞர்க்கும் அந்த நிறுவனத்திற்கும் அந்தச் சமுதாயத்திற்கும் அந்த நாட்டிற்கும் பெரும் நன்மையைத் தரும்.

கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

சிரிக்க மறந்த கதை

இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.
கவலையின் அளவு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால், எல்லாருமே பிரச்னைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.
இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.
சென்னை போன்ற நகரங்களில் மின்சார ரயிலில் தினந்தோறும் 30 கிலோமீட்டர் பயணிக்கும் ஒரு பயணி, அருகில் அமர்ந்திருப்போரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் சிந்தனையிலேயே அமர்ந்திருப்பார்.
தான் தினமும் கடந்து செல்லும் பாதையில் பிரபல உணவகம் ஒன்று அமைந்திருக்கும். ஆனால், அதைப் பற்றி அவருக்கு சுத்தமாகத் தெரிந்தே இருக்காது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவ மாணவர்கள் கபடி, கிட்டிப்புள்ளு, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் என பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும், விளையாடச் செல்லலாம் என்ற முனைப்பில் இருப்பர்.
இன்று அப்படியல்ல. விடியோ விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே முக்கியப் பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களாகவே சிரித்துக் கொள்வதைத்தான் காண முடிகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே அரிதான விஷயமாக உள்ளது.
"மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு' என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்தளவுக்கு வாழ்க்கை வெறுமையாகி விட்டது என நாம் நினைக்கிறோம்.
வேறு சிலருக்கோ, "சே, என்னடா வாழ்க்கை இது' என்ற சலிப்பு. வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறு கூறலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரே இவ்வாறு கூறுவது மிகவும் கவலையளிக்கிறது. 
பிரச்னையையே வாழ்க்கையாக எதிர்கொள்ளும் இளைஞன், நாளடைவில் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். அது அவனது எதிர்காலத்தையே பாழாக்குகிறது.
சிரிப்பை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏதாவது ஒரு விஷயத்தை மனதில்போட்டு குழப்பிக் கொள்கிறோம். சிரிப்பைத் துரத்தியடிக்கும் ஓர் ஆயுதமாக கவலை நம்முன் நிற்கிறது.
கவலைகளை மறப்பதற்கு இன்று பலரும் பல்வேறு வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர். அதில் ஒன்று யோகக் கலை. யோகக் கலையில் பல்வேறு ஆசனங்களைச் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது.
அதுபோல, தொடர்ந்து சில நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் மனசு லேசாகிறது. யோகா வகுப்புகளில் இது ஒரு பாடமாகவும் கற்றுத் தரப்படுகிறது.
கவலைகளை மறப்பதற்காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, சிரிப்பு மூட்டும் செய்திகளைக் கூறி மகிழ்கின்றனர்.
சிரிப்பு என்பது மனித குணநலன்களின் ஒன்று. சிரிப்பை நிர்ணயிப்பது மூளை. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன் சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது. ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான்.
நமது மனத்துக்குள் எழும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது சிரிப்பு. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். ஆனால், சிரிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.
சிரிப்பில் பல வகைகள் உள்ளன. புன் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு இப்படி. சிரிப்பு ஒருவரின் மனத்தையும், உடலையும் வலிமைப்படுத்தி, அவரைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
"நைட்ரஸ் ஆக்ûஸடு' என்ற ஒரு வேதிப்பொருளுக்கு "லாஃபிங் கேஸ்' (சிரிப்பு வாயு) என்று பெயர். இது ஒரு நிறமற்ற வாயு. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மருந்துகள் கைகொடுக்காத நிலையில், இந்த வாயு ஓர் அருமருந்தாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதாவது, மன அழுத்தத்துக்கு உள்ளானோருக்கு சிறந்த மருந்தாக விளங்குவது சிரிப்பு என்று தெரிவிக்கின்றனர்.
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பு நமது சிரிப்பில் நாம் நம்மைக் காண்போமே!

By பா.  ராஜா

Thursday, December 25, 2014

திறமையும் தகுதியும் நாம் என்றும் இடைவிடாது கூர் தீட்டி கொண்டே இருக்க வேண்டும்


அண்மையில் இணையத்தில் படித்த செய்தி, TCS நிறுவனம் வரலாறு காணாத வகையில் தன் ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.



தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை A ,B ,C , D மற்றும் E என்று தரம் பிரித்து வைத்து உள்ளது எனவும், A என்பது சிறந்த ஊழியர் என்றும் E என்பது போதிய அல்லது திறன் குறைந்த அல்லது திறனை வளர்த்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காத ஊழியர் எனவும் வகைபடுத்தி வைத்து உள்ளதாக தகவல் கூரப்படுகிறது. 

அப்படி வகைபடுத்தி உள்ள ஊழியர்களில் கடைசி இரண்டு பிரிவில் உள்ள D மற்றும் E பிரிவு ஊழியர்களை, எந்த ஒரு பணியும் ஒதுக்க படாமல் காத்து இருப்பு பட்டியலில் இருக்கும் ஊழியர்களையும் விடுவித்துக்கொள்ள இருபதாக தகவல் கசிந்து உள்ளது. 

இந்த தகவல் மென்பொருள் ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிக பெரிய சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது. மென்பொருள் நிறுவனங்களில் TCS நிறுவனம் வேலை பாதுகாப்பு உள்ள நிறுவனம் என்ற எண்ணம் இது வரை இருந்து வந்தது என்பது குறிப்பிடதக்கது.

TCS நிறுவனம் வரும் காலகட்டத்தில் (2014-2015) 55000+ புதிய ஊழியர்களை வேலைக்கு தேர்ந்து எடுக்க போவதாகவும் அறிவித்து உள்ளது குறிப்பிடதக்கது.. 

திறமையும் தகுதியும் நாம் என்றும் இடைவிடாது கூர் தீட்டி கொண்டே இருக்க வேண்டும் என்பது நன்கு புலப்படுகிறது. நாளைய பொறியாளர்கள் இதை மனதில் கொண்டு சவால்களை சமாளித்து வாழ்கையில் சிகரத்தை தொட தன அறிவு கூர்மையை நாளும் வளர்த்து கொள்ள முயற்சி எடுப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வோம். 


Sunday, December 21, 2014

நீங்கள் தள்ளுவண்டியா? இல்லை தானியங்கியா?

நேரத்திற்கு முடிக்க இயலாத வேலை கவலை தருவதாகவே அமைகிறது. சிறப்பாக வேலை பார்த்தால் சிறந்த வருமானத்தை, பாராட்டை வெகுமதியை அடையலாம். செயல்திறன் இன்மையோ, செயல்திறன் குறைபாடோ கெட்ட பெயரை மட்டுமே வெகுமதியாகப் பெற்றுத்தரும்.
முதலாளி இருக்கும்போது சிறப்பாகவும், முதலாளி இல்லாதபோது மோசமாகவும் செயல்படுவது அல்ல வேலை என்பது. ஒரே ஆள் இருவேறு நிறங்களைக் காட்டுவது சிறப்பாகாது.
சிக்கல் சிங்காரத்தை சமாளிப்பது எப்படி?
அடுத்த சிக்கல், பெரும்பாலான நிறுவனங்களில் புதிய ஊழியர்களை செயல்படவிடாமல் தடுப்பது நடக்கிறது. அவர்களிடம் நம்பிக்கையைக் குலைத்தல், ஒத்துழையாமை, குழப்பிவிடுதல், தவறாக வழிநடத்துதல் மற்றும் பொறாமையோடு நடந்து கொள்ளுதல் இவை எல்லாமே பணி ஒழுக்கத்தை தடுக்கிறது.
உங்கள் உடன் பணியாற்றுபவர்கள் இப்படி ‘சிக்கல்’ சிங்காரமா? அவர்களை எப்படி சமாளிப்பது? அது ஒரு கலை. பறவைகள் பலவிதம் என்பது போல மனிதர்களும் பலவிதம். நகர்ந்துகொண்டே இருப்பதுதான் நதிக்கு அழகு. பறந்துகொண்டே இருப்பதுதான் பறவைக்கு அழகு. விரிந்துகொண்டே இருப்பதுதான் அறிவுக்கு அழகு. அதுபோல வளர்ந்துகொண்டே இருப்பதுதான் வியாபாரத்திற்கு அழகு என்பதனை உணர்ந்து ஒவ்வொரு ஊழியரும் செயல்படும் போது அந்த நிறுவனம் மிகப்பெரிய உயரத்தை எட்டுகிறது.
விஷயம் கொடு, விஷம் மற்றும் விஷமம் தவிர் என்பது தாரக மந்திரமாக இருக்கட்டும். உழைப்பை அளித்தால் உயர்வைப்பெறலாம். களைப்பை அளித்தால் கஷ்டமே பெறலாம். குறிப்பாக தள்ளிப்போடுவதை தவிர்க்க வேண்டும். தள்ளிப் போடுவதால் தள்ளாமையே வரும். எது முக்கியமோ அதனை முதலில் செய்தல் வேண்டும். இலைபோட்ட பின் தானே சோறு...!
செய்யும் வேலையே வாழ்க்கை
நூறு சதவீதம் தமது செயல்திறனை வெளிக்காட்டாமல் இருப்பது தனிமனிதன், நிறுவனம் இரண்டையும் வீழ்த்துகிறது. நாம் செய்வது வேலையோ அல்லது ஊழியமோ அல்ல, நமது வாழ்க்கை என்ற எண்ணத்தோடு செயல்பட்டால் எவருமே வெற்றி பெறலாம்.
பணி வாழ்வில் சிறந்த உயரத்தைத்தொடுவதற்கு, தற்போது செய்யும் முறையைவிட வேறு ஏதாவது நல்லவழி இருக்கிறதா என்று ஆராய வேண்டும். நற்செயலுக்கு வெகுமதி நிச்சயம் என்பதில் என்ன சந்தேகம்? என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
வெற்றியின் இருப்பிடம்
மகிழ்ச்சியாக செய்யும் வேலை சிறப்பாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான பணியிடம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும்.
கடந்த காலம் என்பது சில சமயம் நினைத்துப்பார்த்து கற்றுக்கொள்ள உதவும். அது நிலைத்து நிற்கும் இடம் அல்ல. எதிர்காலம் என்பது நினைத்துப்பார்க்க முடியும் என்றாலும் ஏற்கனவே நடந்து விட்டது போன்ற அனுபவத்தை தந்துவிடாது. ஆனால் நிகழ்காலம் என்பது முயற்சியின் உறைவிடம் மட்டுமல்ல வெற்றியின் இருப்பிடம் கூடத்தான் என்பதை நினைவில்கொண்டு செயல்பட்டால் என்றுமே வெற்றிதான்.
இப்போது சொல்லுங்கள் பணி வாழ்வில் நீங்கள் தள்ளு வண்டியா? அல்லது தானியங்கியா?
-டாக்டர். பாலசாண்டில்யன்

Thursday, December 18, 2014

வீட்டிலிருந்து தொடங்குவோம்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், அவை மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதில்லை.
அதற்குக் காரணம், திட்டத்தின் முழு விவரமும் அவர்களுக்கு விளங்காததேயாகும். இதற்கு சமீபத்திய உதாரணம் "தூய்மை இந்தியா திட்டம்'.
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அமைப்புகளும், கட்சியினரும் கையில் துடைப்பத்துடன் அங்குமிங்கும் ஓடியாடி, பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தியா தூய்மையாகிவிடுமா?
இவர்கள் தூய்மைப்படுத்திய இடம், மறுநாளே குப்பைக்கூளமாகிவிடும். இதுபோன்ற திட்டங்கள் வெற்றிபெற மக்களின் தொடர் ஒத்துழைப்பும், பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை ஏதோ அரசியல்வாதியின் பேச்சாகவும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் கோஷமாகவும் மட்டும்தான் மக்கள் பார்க்கிறார்களே தவிர, இதில் நிறைந்திருக்கும் நாட்டின் நலனை யாரும் பார்ப்பதில்லை.
தன் வீட்டைத் தூய்மைப்படுத்தும் ஒருவர், வீட்டுக் குப்பையை வீட்டுக்கு வெளியே கொட்டுகிறார். அதைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.
தன் வீடு மட்டும்தான் தனக்குச் சொந்தம் என்ற சிந்தனையில், வீட்டுக்கு வெளியே இருக்கும் நாட்டை மறந்து குப்பைகளைக் கொட்டுகிறார்கள். தன் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு, தன் நாடும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வருவதில்லை.
நம் வீட்டுக்கு வெளியே இருப்பது நம் நாடுதான். நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, நாட்டை அசுத்தப்படுத்துகிறோம் என்ற எண்ணம் வருவதில்லை. காரணம், தன் வீடு வேறு, நாடு வேறு என்ற எண்ணமே.
தன் வீட்டைப் போலவே நாடும் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் உதிக்கவேண்டும்.
இந்தத் திட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வீட்டில் இருந்தும் தொடக்கப்பட்டிருக்க வேண்டும்.
முதலில் வீடு, பிறகு சுற்றுப்புறம், தெரு, கிராமம், நகரம் எனப் படிப்படியாக தூய்மை இந்தியா வளர வேண்டுமே தவிர, கட்சிக்காரர்களின் மூலமும், ஊடகங்களின் மூலமும் மட்டும் இது சாத்தியமல்ல.
நாட்டைத் தூய்மையாக்கும் திட்டத்துக்கு தெரு அளவில், வட்ட அளவில், மாவட்ட அளவில் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்களிடம் இந்தத் தூய்மைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மக்களை ஊக்குவித்து நாட்டைத் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக தங்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என விதி இயற்றலாம்.
இவ்வாறு செய்வதன்மூலம், ஓரிரு ஆண்டுகளில், இந்தத் தூய்மைச் சிந்தனை மக்களின் மனதில் வேரூன்றி, அது அவர்களின் இயல்பாக மாறி, துய்மையான இந்தியா தானாகவே மலர்ந்துவிடும்.
மேலோட்டமாகப் பார்த்தால் குப்பைக் கூளங்களை ஒழிப்பது மட்டும்தான் இத்திட்டத்தின் நோக்கம் என்று நமக்குத் தோன்றலாம்.
ஆனால், இத்திட்டத்தின் பின்புலமாக பல்வேறு சமுதாய நலன்கள் நிறைந்திருப்பது உற்றுநோக்கினால் புரியும்.
நாம் தினசரி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் ஆங்காங்கே வீசிவிடுவதால், அவை நிலத்தில் தங்கி, நிலத்தைப் பாழ்படுத்துவதோடு, மழைநீர் நிலத்துக்குள் போகவிடாமல் தடை செய்து, நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கிறது.
இதுபோன்ற குப்பைகளை இதற்கென நமது வீட்டருகே வரும் குப்பை வண்டிகளில் உள்ள மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளில் பிரித்துப் போடுவதன்மூலம் மண்ணுக்கும், நிலத்துக்கும் தீங்கு விளைவிக்கும் இத்தகைய பொருள்கள் பாதுகாப்பாக அழிக்கப்படுவதோடு, நம் மண்ணின் வளத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்கலாம்.
மேலும், இன்றைக்கு நம்மை அச்சுறுத்திவரும் பல்வேறு தொற்று நோய்களுக்கு முக்கியக் காரணமே தூய்மையற்ற சுற்றுப்புறமும், அதனால் பெருகும் கொசுக்களுமேயாகும்.
நாம் நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும்போது இத்தகைய நோய்கள் நம்மை நெருங்காது.
எனவே, தூய்மை இந்தியா திட்டமானது ஒரு ஆரோக்கியமான, வளமான இந்தியாவை அமைப்பதற்கான அடிக்கல் என்பதை நாம் உணர்ந்து, அதை செயல்படுத்தினால் உண்மையான "தூய்மை இந்தியா' நிச்சயமாக உருவாகும்.

By இராம. பரணீதரன்

பதினாறு படிக்கட்டுகள்

உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனினும், அவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் தொடர்ந்து கட்டுக்கோப்பான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றியடைகிறார்கள்.
இதுபற்றி ஆராய்ந்தவர், சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த பத்திரிகையாளரான நெப்போலியன் ஹில். இவர் தனது இளம் வயதில், அமெரிக்காவின் தொழிலதிபரான ஆண்ட்ரூ கார்னகி என்பவரை பேட்டி காணச் சென்றார்.
ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு கையில் காசில்லாத பெற்றோருடன் 1848-ஆம் ஆண்டு குடியேறி, 60-ஆவது வயதில் (1908) உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவானது எப்படி என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினார் பத்திரிகையாளர் ஹில்.
இந்தப் பத்திரிகையாளர் பிரபலமானவர் என்ற எண்ணம் தோன்றியதால், தனது முன்னேற்றம் பற்றிய எல்லா விஷயங்களையும் அவரிடம் எடுத்துரைத்தார் ஆண்ட்ரூ கார்னகி!
இந்த விவரங்களை புரிந்துகொண்ட பத்திரிகையாளர் ஹில், அது முதல் பல பணக்காரர்களைச் சந்தித்து, அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து "சிந்தியுங்கள் - பணக்காரர் ஆகுங்கள்' என்ற ஒரு புத்தகத்தை 1937-ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.
தாமஸ் ஆல்வா எடிஸன், ஹென்றி ஃபோர்டு போன்ற பெரும் தனவந்தர்களைச் சந்தித்த ஹில், ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் இதுபற்றிய கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
12 ஆண்டுகளில் வாழ்க்கையில் வெற்றியடைந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சாதாரண மக்கள் என்று சுமார் 12,000 பேரைச் சந்தித்துப் பேட்டி எடுத்து, அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் தெரிந்து கொண்ட ஹில், "வெற்றிக்குத் தேவையான 16 நெறிமுறைகள்' என்ற அட்டவணையைப் பிர
சுரித்தார்.
1. வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் தேவை. அதாவது, எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வாழ்க்கைப் பயணத்தை தொடர்வது, துடுப்பு இல்லாத ஒரு படகில் பயணம் செய்வது போன்றது.
2. திடமான குறிக்கோள் ஒன்று இருந்தால், அதை அடையும் தன்னம்பிக்கை உருவாகி விடும். தன்னம்பிக்கை உள்ள மனிதன் தன்னைத்தானே மிகவும் நம்புவான். தன்னம்பிக்கை உள்ள மனிதனை, அவனைச் சுற்றியுள்ளவர்களும் நம்புவார்கள்.
3. ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கும்போது தனது பணிகளை முடித்த பின், தான் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பவர்களுக்குப் பெரிய வெற்றி கிட்டும். அதை விடுத்து, தனது வேலையைச் செய்யாமல் டிமிக்கி கொடுத்து விட்டு, பேராசையுடன் அடுத்த வேலைகளில் திளைப்பது தோல்வியைத் தரும்.
4. கற்பனை சக்தியுடன் கூடிய சிந்தனைத் திறன் முன்னேற்றத்திற்கு அடிப்படை. 95 சதவீத மக்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றக் கனவும் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த 95 சதவீத மக்கள்தான் மற்றவர்களைப் பின்பற்றுபவர்களாக, சாதாரண வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
5. நீங்கள் சிறந்த பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெற்றிருக்கலாம். நிறையப் புத்தகங்களைப் படித்து அறிவைப் பெருக்கியிருக்கலாம். ஆனால், இந்த அறிவுக்குச் செயல்வடிவம் கொடுத்து சாதனைகளைச் செய்தால்தான் வெற்றி கிட்டும். இல்லையேல், இந்த அறிவைப் பெறாத சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரமே உங்களுக்குக் கிடைக்கும்.
6. நீங்கள் விரும்பியதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது.
7. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் குணாதிசயம் இல்லாத மனிதன், வாழ்க்கையில் வெற்றியடைந்ததே இல்லை. கோபம், திமிர் ஆகிய இரண்டு குணாதிசயங்களும் உங்களுக்கு எதிராகச் செயல்படும் குணங்கள்.
8. மற்றவர்களின் வெற்றியை முறியடித்து வாழ்க்கையில் உச்சிக்குச் சென்றுவிட்டவர்கள், அடுத்து தங்களையே போட்டியாளர்களாக உருவகப்படுத்திக் கொண்டு மேலும் முன்னேறுகிறார்கள்.
9. எல்லோராலும் விரும்பப்படும் குணம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கேட்காமலே எல்லோரும் உங்களுக்குத் தேவையான உதவியைச் செய்வார்கள்.
10. மற்றவர்கள் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதில் பொதிந்திருக்கும் உண்மை எது, பொய் எது என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள் விரைவில் வெற்றியடைவார்கள்.
11. குறிப்பிட்ட குறிக்கோள்களை நோக்கிப் பயணம் செய்பவர்கள், தேவையில்லாத விஷயங்களைத் தவிர்த்து விடுவார்கள்.
12. வெற்றியை நோக்கிப் பயணிப்பவர்கள், இடையில் வரும் சவால்களையும், எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சுவதில்லை.
13. தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், துவண்டு விடாமல் தோல்வியின் குணாதிசயங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் தோல்வியடையாமல் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
14. தங்களுடன் சேர்ந்து உழைப்பவர்களுக்கு அன்பான ஒத்துழைப்பு வழங்குவது, வெற்றிப் படிக்கட்டின் முக்கியமான அம்சம். அவ்வாறு செய்யாதவர்கள்தான் தோல்வியைத் தழுவிய ஆட்சியாளர்கள் முதல் சர்வாதிகாரிகள் வரை என்பது சரித்திரம் நமக்குத் தரும் பாடம்.
15. வெற்றியடைந்து, மிகப் பெரிய தனவந்தராக உருவான பின்பும் முயற்சியில் தொய்வு கூடாது. தொய்வு ஏற்பட்டால் தோல்வி நிச்சயம்.
16. மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்த வேண்டும். இதுவே வெற்றி ஏணியின் கடைசிப் படி.
இதுபோன்ற 16 வெற்றிப் படிக்கட்டுகளை உருவாக்கித் தந்த ஹில் எனும் அறிவுஜீவி, முதன்முதலாக 1908-ஆம் ஆண்டு சந்தித்த ஆண்ட்ரூ கார்னகிதான், அமெரிக்காவில் 19-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய வியாபார சாதனைகளைப் புரிந்து, தான் சம்பாதித்த செல்வத்தில் 90 சதவீதத்தை 1919-ஆம் ஆண்டில் நன்கொடையாக ஏழை - எளிய மக்களுக்காக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், 1848-ஆம் ஆண்டு தனது 13-ஆவது வயதில் ஏழை பெற்றோருடன் பிழைப்பு தேடி ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து, தபால், தந்திகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வேலையில் சேர்ந்து, பின் தனது 25-ஆவது வயதில் ரயில்கள், தரைவழிப் பாலங்கள், எண்ணெய்க் கிணறுகள் ஆகிய வியாபாரங்களில் புகுந்து பணம் சம்பாதித்தார்.
பணத்துடன் சேர்த்து நற்குணங்களையும், உதவும் கரங்களையும் கொண்ட கார்னகி போன்ற செல்வந்தர்கள், இப்போது மிகவும் குறைவு என்பதுதான் இன்றைய நிலைமை!
ஹில் விவரித்த 16 வெற்றிப் படிக்கட்டுகள் மிக தெளிவான, விரிவான நடைமுறையை வெளிப்படுத்தியபோதிலும், ஆண்ட்ரூ கார்னகி இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் என்ன குறிக்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுவது சுவையானது.
இது இன்றளவிலும் அமெரிக்காவில், "ஆண்ட்ரூ கார்னகியின் ஆணைகள்' என பெருமையுடன் கூறப்படுகின்றன. அதன்படி ஒரு வெற்றி பெறும் மனிதனின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் உண்டு:
  • முதல் பருவத்தில், தன்னால் முடியும் அளவிற்கு கல்வி கற்று தேர வேண்டும்.
  • இரண்டாவது பருவத்தில், தன்னால் முடிந்த அளவுக்கு செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
  • கடைசிப் பருவத்தில், தனது செல்வத்தை தரமான, தகுதியான நற்பணிகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி மரணமடைந்த ஆண்ட்ரூ கார்னகி, அதுவரையிலும் 480 கோடி டாலரை (இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 29 ஆயிரத்து 760 கோடி) தானம் செய்திருந்தார். அவர் இறந்த பின்னர் ஏழைகளுக்கும், வயோதிகர்களுக்கும் 3 கோடி டாலர் (ரூபாய் 186 கோடி) வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்.
இவரது வாழ்நாளில் இவர் செய்த முயற்சிகளினால் உருவான உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இன்றும் நம்மை திகைக்கச் செய்பவை.
பிட்ஸ்பெர்ஃக் நகரின் கார்னகி ஸ்டீல் கம்பெனி (பின்னர் இது யு.எஸ். ஸ்டீல் கம்பெனி என பெயர் மாற்றப்பட்டது), நிறைய நகரங்களில் முதன்முறையாக பொது நூலகங்கள், நியூயார்க் நகரில் பொதுமக்களின் உபயோகத்திற்கான "கார்னகி மண்டபம்', நியூயார்க்கில் கார்னகி உலக அமைதிக்கான மையம், கார்னகி விஞ்ஞான மையம், ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் கார்னகி மையம், உலகப் புகழ்வாய்ந்த கார்னகி மெல்லான் பல்கலைக்கழகம், கார்னகி மியூசியம் ஆகியவை இவரது சொந்த மேற்பார்வையில் உருவானவை!
நற்குணங்களுக்கும் பணச் சேர்க்கைக்கும் தொடர்பு உண்டு என நிரூபித்த கார்னகியின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, ஏழை நாடுகளின் இளம் தொழிலதிபர்களில் சிலருக்காவது இந்த குணங்களை முன்மாதிரியாக விட்டுச்சென்றிருந்தால் ஏழ்மையும் அறியாமையும் உலகிலிருந்து சீக்கிரம் அகலும் என்ற பேராசை நமக்கு உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை!

By என். முருகன்,ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

நடப்பது நன்மைக்கே

ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில், "யாமிருக்க நடை ஏன்?' என எழுதப்பட்ட வாக்கியம் கண்ணில்பட்டது. பக்தி மணம் கமழும் வாசகம் ஒன்றை அடியொற்றி, ஆட்டோ பயணத்துக்கேற்ப வாசகம் எழுதிக்கொண்ட அந்த ஓட்டுநரின் வார்த்தை ஜாலம் ரசிக்கவைத்தது.
சில மாதங்களுக்கு முன்புவரை ஆட்டோக்களில் எவ்வளவு பணம் கேட்பார்களோ என்ற பயத்துடனேதான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் கொஞ்சம் நிம்மதியுடன் ஏற முடிகிறது.
மேலும், ஏறக்குறைய ஆட்டோ கட்டணத்துக்கே அழைத்துச் செல்ல கால் டாக்ஸிகளும் வந்துவிட்டன. இதனால், இப்போதெல்லாம் அடிக்கடி கால் டாக்ஸியில், அதுவும் சில நேரங்களில் ஏசி கால் டாக்ஸியில் பயணம் செய்ய முடிகிறது.
எல்லோருமே நடக்கத் தொடங்கிவிட்டால் ஆட்டோ, கார், கால் டாக்ஸி என தங்கள் வாகனங்களை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் நிலை திண்டாட்டம்தான்.
இருந்தபோதிலும், ஆட்டோ, கார்களை மட்டுமல்லாமல், இருசக்கர வாகனங்களையும் அவசரத்துக்கோ, அத்தியாவசியத்துக்கோ மட்டும் பயன்படுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் முடிந்தவரை நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே சாமானிய மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு (பர்ஸூக்கும்) நல்லது.
பொதுவாக, உடல் நலத்துக்குத் தேவையானவற்றை நம்மைவிட்டுத் தள்ளிவைப்பதே பேஷன் என்றாகிவிட்டது. "ஊருடன் ஒத்துவாழ்' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், நாமும் சமுதாய ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து நடக்க வேண்டியதாகிவிடுகிறது.
உணவு, உடை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் நன்மை தருபவற்றைவிட, எது பாதகமானதோ அவற்றையே விரைந்து பின்பற்றி நடக்கப் பழகி விடுகிறோம்.
எண்ணெய்ப் பலகாரங்கள், துரித உணவு, எப்போதும் நொறுக்குத் தீனி, எதற்கெடுத்தாலும் குளிர்பானம் என, பெரியவர்கள் உண்பதைப் பார்த்து குழந்தைகளும் அதற்குப் பழகிவிடுகின்றனர். "அடிக்கடி நொறுக்குத் தீனி; ஆரோக்கியத்தை நொறுக்கும் தீனி' என்பதை நாம் எண்ணிப்பார்த்து நடப்பதில்லை.
இளமை முதலே சுறுசுறுப்பாக நடக்காமல், ஒரே இடத்தில் இருந்தே பழகிவிட்டால், முதுமையில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவமனையாய் தேடித்தேடி நடக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
அதற்காக, அசை போட்டுக் கொண்டோ, வயிறு புடைக்க உண்டு விட்டோ, காலைக் கடன்களைக் கழிக்காமலோ "கடனே' என நடைப் பயிற்சி மேற்கொள்வது தவறு. முறையான நடைப் பயிற்சியே நல்லது.
நடைப் பயிற்சிக்குச் செல்லும் பலர் தங்களது நாயைத் தங்களுடன் அழைத்துச் செல்வர். சிலர் தங்கள் மனைவியையோ அல்லது நண்பரையோ அழைத்துச் செல்வதுண்டு.
சில தனிமை விரும்பிகளோ தங்களது தொப்பையை மட்டுமே துணைக்கு அழைத்துச் செல்வதுண்டு. நாயும் நண்பர்களும் நாம் அழைத்தால்தான் வருவார்கள். தொப்பையோ அழைக்காமலே கூடவரும்; எது எப்படியாயினும் நடப்பது நல்லது.
நாள்தோறும் நடைப் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் வலிமை பெறுவதுடன் மனதுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது.
நாள்தோறும் இப்பயிற்சியில் ஈடுபட முடியாதவர்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் நடந்தால்கூட போதுமானது. ரத்த ஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்வடையும். அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. முதுகு நரம்புகள், எலும்புகள் உறுதிப்படுகின்றன. வயிற்றுத் தொப்பை குறைகிறது.
மாரடைப்பு வரும் அபாயமும், கெட்ட கொழுப்புத்திறனும் சர்க்கரையின் அளவும் குறையும். ஆழ்ந்த தூக்கம் வரும். நல்ல கண் பார்வை கிடைக்கும். எல்லாருமே நாள்தோறும் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடக்கலாம்.
காலாற நடப்பதில் இத்தனை நன்மைகள் கிடைக்கின்றன. இத்தனை விஷயங்களையும் பட்டியலிட்டு, நிபுணர்கள் உத்தரவாதம் அளித்த பிறகும் நடைப் பயிற்சியை தொடங்காமலிருக்கலாமா?
ஆனாலும், "நடப்பது நடக்கட்டும், நாம் ஏன் வீணாக நடக்க வேண்டும்' என எண்ணுவோரும் இல்லாமலில்லை. எதுவும் நடந்தபின்னர் நினைத்துத் தவிப்பதைவிட, முன்னெச்சரிக்கையுடன் நடக்கும் முன்பே உணர்ந்து "நடப்பதுதானே' நல்லது?

By மா. ஆறுமுககண்ணன்

Wednesday, December 10, 2014

ஆசிட்- முதலுதவி!

பெண்களைக் குற்றம் சொல்லாதீர்கள், உங்கள் வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைக்களைக் கண்டித்து வளருங்கள்' சுதந்திர தின விழா உரையில் நாட்டின் பிரதமர் உரைத்த வைர வரிகள் இது.டெல்லியில் பதின் பருவ பெண் மீது நடந்த பாலியல் வன்முறைக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்துவிட்டனர் என்று இந்தியாவின் சுற்றுலாத்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இந்தியாவில் நொடிக்கும் ஆறு பெண்கள் வதைக்கபடுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுவதாகத் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகின்றன. தமிழகத்தில் வினோதினி, வித்யா என்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது.

"நம் தெருவைச் சுத்தமாக வைத்துக்கொண்டால், இந்த நாடு தானாகச் சுத்தமாகும் என்பார்கள். அந்த வகையில் இனி, ஆசிட் வீச்சால் எந்தப் பெண்ணும் வாழ்க்கையை இழக்கக்கூடாது. இதற்கு அனைத்து இளைஞர்களும் ஒன்றுபட வேண்டும். இதுவே என் விருப்பம்" எனச் சமுகத்தின் மீதான அக்கறையோடு ஆரம்பிக்கிறார் ஒட்டுறுப்புச் சிகிச்சை நிபுணர் (Plastic Surgeon) வி.எஸ்.ராதா கிருஷ்ணன்.

"ஆசிட் வீசுபவருக்கு அந்த ஆசிட் தன்மையோ, அதன் பெயரோ கூடத் தெரியாது. சுற்றமும், தவறான நட்புமே அவர்களை இந்தக் கொடூரமான செயல் தூண்டுக்கிறது. அதிலும், பெரும்பானவர்கள் பயன்படுத்துவது பாத்ரூமிலும், கம்பெனிகளிலும் பயன்படுத்தும் ஆசிட் வகைக்களே. ஆசிட் மட்டும் அல்லாமல் அல்கலின் (alkaline) எனப்படும் கார வகைகளையும் பயன்படுத்துகின்றனர்.

சில ஆசிட், கார வகைகளின் வீரியம், மிகவும் அதிகம். பொதுவாகவே, இந்த ஆசிட் வகைகள் தோலில் பட்டால், தோலில் டெர்மிஸ் (termis) எனப்படும் சரும பகுதியைச் சேதப்படுத்தி, தோலில் இருக்கும் புரதம் முழுவதையும் உறிஞ்சிவிடும். இதனால், தோலில் சுருக்கங்கள் ஏற்படும்.மேலும் தோலைத் தாண்டி நரம்புகளைப் பாதிப்பதாலும் தீராத வலி ஏற்படும்.

இதில், நரம்புகள் பழுதடைந்தால் வலி அதிகம் இருக்காது. நரம்புகள் வெளியில் தெரிவது போன்ற நிலை வந்தால் அதன் வலி பயங்கரமாக இருக்கும். பொதுவாக எல்லாப் பிரச்னைகளுக்கும் முதலுதவி என்பது அந்த நோய் பெரிதாகாமல் வலியைக் குறைக்கவே உதவும். ஆனால், ஆசிட் வீச்சைப் பொறுத்தவரை செய்யும் முதலுதவியே 90 சதவிகித வீரியத்தைக் குறைத்துவிடும். கிட்டத்தட்ட இதை முதலுதவி என்பதைவிட 'டீரிட்மென்ட்' என்றே கூறலாம்" என்ற டாக்டர் ராதா கிருஷ்ணன், ஆசிட் பட்டவுடன் செய்ய வேண்டிய அவசர முதலுதவி குறித்து விளக்கினார். 

ஆசிட் வீசியவுடன் வீசிய பகுதியில் தண்ணீரை பாய்ச்ச வேண்டும். அது குளிர்ந்த நீராக இருந்தால் மிகவும் நல்லது. ஏனெனில் தண்ணீர் ஊற்றும் போது வலி தீவிரமாக இருக்கும். குளிர்ந்த நீர் இல்லாத பட்சத்தில், அதைத் தேடி அலையாமல் சாதாரண நீரையே ஊற்றலாம்.

எந்த அளவுக்கு வேகமாகச் செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு அதன் வீரியத்தைத் தவிர்க்கலாம். கிட்டதட்ட 90 சதவிகிதத்துக்கு மேல் அதன் விளைவைக் குறைக்கலாம்.

அமிலம் தவறி கண்களில் பட்டுவிட்டாலும், உடனடியாகக் கண்ணிலும் தண்ணீர் ஊற்றலாம். பிறகு, கண் மருத்துவரிடம் சென்று வைத்துப் பரிசோதித்துக் கொள்ளலாம்.

அமிலம் வாயில் சென்றாலும், மூச்சுக் குழாய்ப் பாதிக்கப்பட்டாலும் அதற்கான மருத்துவரை அணுக வேண்டும்.

அதேபோல், துணிகள் மீது ஆசிட் பட்டிருந்தால் உடனே அந்தத் துணியை மாற்றிவிடுவது அவசியம்.

அமிலம் தாக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு வருவதற்குள் அது அவர்களின் தோலை சேதமாக்கிவிடுகிறது. எனவே, சுற்றியிருப்பவர்கள் திறம்படச் செயல்பட்டால் ஆசிட் வீச்சால் ஏற்படும் பாதிப்பு குறையும்" என்றார்.

ஆசிட் வீச்சைத் தடுக்க வேண்டி போராடி வரும் சமூகச் சேவகி சுவர்ணலதா, "ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவரையும், அதை விற்பவரையும் அடுத்த நாளே தண்டிக்க வேண்டும். அவர்களுக்குச் சட்டம் என்கிற பெயரில் மிகக் குறைந்தபட்ச தண்டனையே தருகிறார்கள். தண்டனைக் அதிகரித்தால்தான் தவறுகள் குறையும். ஆனால், இங்குப் பாதிக்கப்பட்ட குடும்பம்தான் பெரிதாகத் தண்டனை அனுபவிக்கிறது. விநோதினியின் அம்மாகூடத் தற்கொலைச் செய்துகொண்டார். இதைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது.

பெண்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை வதைக்கக்கூடாது என்பதையும் பள்ளியில் இருந்தே கற்று தர வேண்டும். சிறு வயதிலிருந்தே இதைச் சொல்லி வளர்த்தால் ஆசிட் வீச்சு போன்ற வன்முறை குறையும். ஒவ்வொரு பெண்ணும் நம் சகோதரி, தாய் போன்றவள் என்று நம் வீட்டுக் குழந்தைகளிடம் முதலில் புரிய வைத்தாலே போதும். பெண்களின் மீதான வன்மத்தை வேரோடு அறுத்துவிடலாம்" என்கிறார்.

- கு.அஸ்வின்