Blogger Widgets

Total Page visits

Thursday, August 15, 2013

'தலைவா' : இதுவரை நடந்ததென்ன? - ஒரு 'ரியர் மிரர்' பார்வை

'நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது' என்பார்கள் கிராமத்தில்.அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த 'பலி நேரம்' இப்போதுதான் வந்திருக்கிறது.

நடிகர் விஜய்யின் 'தலைவா' திரைப்படம் துவங்கப்பட்ட போது கூட எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. ஆனால் ரிலீசுக்கு நெருங்குகிற நாளில்தான் குழப்பமும், கூத்தும்! ஒரு தலைவன் யாராலும் உருவாக்கப்படுதில்லை, அவன் தானாக உருவாகிறான் என்கிற கருத்தை மையமாக கொண்ட பட(மா)ம் இது. மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். பிரபல சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்திருக்கிறார்.

தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்டாலும் அவ்வப்போது 'சுறா' புட்டையும் விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து அதிர வைப்பார் விஜய். நஷ்டத்தை திருப்பிக் கொடு என்கிற கோஷம் சில காலம் கேட்கும். அதற்கப்புறமும் விஜய் படம் ரிலீசாகிற நேரத்தில் கோடிகளை வைத்துக் கொண்டு ஆலாய் பறப்பார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும். அதுதான் விஜய் படங்களின் கவர்ச்சி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'துப்பாக்கி' வசூல் மழையை கொட்டிய காரணத்தால் 'தலைவா' ரிலீசுக்காக காத்துக்கிடந்தார்கள் சினிமா வியாபாரிகள்.

விஜய் படங்களால் கோடி கோடியாக சம்பாதித்த அதே தியேட்டர்காரர்கள்தான் இப்போது விஜய் படத்தை வெளியிட மாட்டோம் என்று கொடி பிடிக்கிறார்கள். அப்படியென்றால்...? இந்த சந்தேகத்திற்கு இறக்கை முளைத்து நாலா திசையிலும் பறந்து கொண்டிருக்கிறது. உண்மையான விடைதான் யாருக்குமே தெரியவில்லை.

இம்மாதம் 9 ந் தேதி படம் வெளியாவதாக நாள் குறித்து அதற்கான விளம்பரங்களும் வந்து கொண்டிருந்த நிலையில் 7 ந் தேதி பிற்பகல் 'தலைவா' படத்தின் டிக்கெட் முன்பதிவை நிறுத்தி அதிர்ச்சியளித்தது தியேட்டர் நிர்வாகம். அதற்கு காரணம் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் 'தலைவா படத்தை திரையிட வேண்டாம். அப்படி திரையிட்டால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும்' என்று திரையரங்கங்களுக்கு அறிவுறுத்தினார்கள். நேரம் செல்ல செல்ல படம் வெளியாகுமா என்கிற பரபரப்பு நிலவியது.

இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படுவது ஒரு மொட்டை கடிதம்தான். சென்னையிலிருக்கும் ஒரு தியேட்டருக்கு வந்த அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்கள்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். 'தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களிடம் அட்டை பூச்சியை போல பணத்தை சுரண்டி வரி ஏய்ப்பு செய்து சேர்த்து வைத்த கறுப்பு பணத்தில் கறுப்பு பண முதலையான பாரிவேந்தன் தலைவா படத்தை 70 கோடியில் எடுத்துள்ளான். இது யார் பணம்? முழுக்க முழுக்க ஓடுக்கப்பட்ட மாணவர்களிடம் சுரண்டப்பட்ட பணம்'.

'இந்த படத்துக்கு ரூ 20 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அரசுக்கு கணக்கு காட்டிய பணம் எவ்வளவு? பாரிவேந்தன், பூரிவேந்தன் என நக்கலடித்த விஜய் ரூ20 கோடி சம்பளம் கொடுக்கிறான் என்றவுடன் அதே பூரிவேந்தனிடம் சரணடைந்த மர்மம் என்ன?'

'மாணவர்களிடம் சுரண்டும் போக்கை தடை செய்ய வேறு வழியில்லை. இந்த படத்தை திரையிட முடிவு செய்த நீயும் ஒரு கறுப்பு பண முதலை என்பது நாட்டுக்கே தெரியும். படத்தை திரையிட்டால் தியேட்டரில் அல்லது உன்னுடைய வீட்டில் வெடிகுண்டு வைப்பதை தவிர வேறு வழியில்லை. வெடிக்கப் போகும் குண்டு எதிர்காலத்தில் பண முதலைகளுக்கு வைக்கப்போகும் ஆப்பாக இருக்கும். நீ போலீசுக்கு போனாலும் இதை தடுக்க முடியாது. உன்னுடைய நடவடிக்கைகளை பின் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தலைவா படத்தை வெளியிட்டு உன் தலையை இழந்து விடாதே. இறுதி எச்சரிக்கை. இப்படிக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை' என்று முடிகிறது அந்த கடிதம்.

இதையடுத்து பிலிம்சேம்பரில் கூடிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினரும் தயாரிப்பு தரப்பும் கூடி பேசினர். பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனதே தவிர ஒரு முடிவுக்கு வரவில்லை. கூட்டத்தை மறுநாள் தள்ளி வைத்து விட்டு கிளம்பினார்கள். அதே நேரத்தில் இன்னொரு ஆறுதல் செய்தி தயாரிப்பு தரப்புக்கு கிடைத்தது. ஒரு வார காலமாக தலைவா படத்தை பார்க்க வருவதாக கூறிக் கொண்டே இருந்த வரிவிலக்கு குழுவினர் 8 ந் தேதி காலை பதினொரு மணிக்கு படம் பார்க்க வருவதாக உத்தரவாதம் கொடுத்தார்கள். அதன்படி காலை பதினொரு மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகிலிருக்கும் ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் தலைவா திரையிடப்பட்டது.

தயாரிப்பாளர் தாணு, டைரக்டர் விஜய்யின் அப்பா ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் இவர்களை வரவேற்றார்கள். இந்த நேரத்தில் 'நிமிர்ந்து நில்' படத்திற்காக டப்பிங் பேசுவதற்காக அங்கு வந்திருந்தார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இவரும் தாணுவும் வெகுநேரம் தனியே சென்று பேசிக் கொண்டிருக்க, படம் முடிந்து வெளியே வந்த வரிவிலக்கு குழுவினர் எவ்வித உத்தரவாதமும் கொடுக்காமல் அவரவர் காரில் ஏறி சென்றுவிட்டார்கள். தனியாக நின்று கொண்டிருந்த ஏ.எல்.அழகப்பனை சூழ்ந்து கொண்டது மீடியா. 'படம் கண்டிப்பா ரிலீஸ் ஆகும். அதுக்கான பேச்சு வார்த்தைகள் நல்லபடியா போயிட்டு இருக்கு' என்று கூறிவிட்டு அவரும் பறந்தார்.

இங்கு வரிவிலக்கு ஷோ நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொடநாட்டில் இருந்தார்கள் நடிகர் விஜய்யும், டைரக்டர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ்ஜெயினும். ஆனால் அவர்கள் முதல்வரை சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இவர்கள் திருப்பி அனுப்பட்ட விஷயம் அன்று மாலை நடந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க கூட்டத்தில் வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. 'அரசுக்கும் உங்களுக்கும் இடையிலான சச்சரவை நீக்கிவிட்டு வந்தால் படத்தை ரிலீஸ் செய்கிறோம்' என்று வாய்மொழியாக பேச ஆரம்பித்தார்கள் சங்கத்தினர். அதற்கு அடையாளமாக நாங்கள் கருதுவது வரிவிக்கு வழங்கப்பட்ட சான்றுதான் என்றும் அவர்கள் கூறினார்கள். இறுதியாக 'நாளைக்கு படம் ரிலீஸ் இல்லை' என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது திரையரங்க உரிமையாளர் சங்கம்.

இதற்கிடையில் கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பும் போது வழியில் கோயமுத்துரிலேயே தங்கிவிட்டார் நடிகர் விஜய் மட்டும். 'நீங்க போங்க. நான் பிறகு வர்றேன்' என்று அவர் கூறிவிட வேறு வழியில்லாமல் அரை மனசோடு சென்னை திரும்பினார்கள் டைரக்டர் விஜய்யும் சந்திரபிரகாஷ் ஜெயினும்.

அன்றிரவே தமிழக அமைச்சர்கள் சுமார் ஏழு பேருக்கு சத்யம் திரையரங்கில் தலைவா திரையிடப்பட்டதாம். இவர்களுடன் உளவுத்துறை அதிகாரிகளும் படம் பார்த்தாக தகவல்.

இவ்வளவு கோபத்தை அரசு விஜய் மீதும், அவரது படத்தின் மீதும் காட்டுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஆங்காங்கே மூக்கை நுழைத்தால் கிடைக்கிற தகவல்கள் அடேயப்பா ரகம். முதலில் இந்த படத்தில் வைக்கப்பட்டிருக்கும் வசனங்கள்தான் என்றார்கள். டான்ஸ் ஆடும் விஜய்யை பார்த்து, 'இப்படி ஆடிகிட்டு இருந்தவங்கதான் முதல்வரா ஆகியிருக்காங்க. நீ அவங்களை விட நல்லா ஆடுற. நீயும் முதல்வராகலாம்' என்று ஒரு டயலாக் பேசுகிறாராம் சந்தானம். அரசு தரும் இலவசங்களை ஒரு காட்சியில் கிண்டல் அடிக்கிறார்களாம் இருவரும்.

இப்படியெல்லாம் சொல்லப்பட்டாலும், படத்தில் விஜய் முதல்வராகிற காட்சி ஒன்றும் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் வெளிநாட்டில் 'தலைவா' ரிலீஸ் ஆகிவிட்டதால் இப்படத்தின் விமர்சனங்கள் இணையதளங்களில் வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் எந்த விமர்சகரும் விஜய் சி.எம் ஆவது மாதிரி காட்சி இருப்பதாகவோ, சந்தானம் சொல்கிற டயாலாக்குகள் இருப்பதாகவோ எழுதவேயில்லை. எனவே அரசுக்கு தலைவலி தருகிற மாதிரி படத்தில் எதுவும் இருப்பது மாதிரியும் தெரியவில்லை.

பிறகு ஏன்?

நாம் கேள்விப்பட்ட வரையில் விஜய் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் படமான ஜில்லாவை ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். அதற்கப்புறம் விஜய் கால்ஷீட் கொடுத்திருப்பது அரசு தலைமைக்கு பிடிக்காத சேனல் ஒன்றுக்குதானாம். அதுமட்டுமல்ல, முதலில் தலைவாவை விலை பேசியதும் அரசுக்கு நெருக்கமான சேனலுக்குதான். ஏனோ படம் அவர்களுக்கு தரப்படவில்லை. மாறாக அதே பிடிக்காத சேனலுக்குதான் போய் சேர்ந்திருக்கிறது.

முக்கிய குறிப்பு & விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாவட்ட மற்றும் கிளை மன்றங்களுக்கு அவசரம் அவசரமாக ஒரு குறிப்பு போயிருக்கிறது. அதில், இனிமேல் விஜய் பெயரை போஸ்டர்களில் அச்சடிக்கும் போது 'இளையதளபதி' என்று மட்டும் போடவும். வருங்கால முதல்வரே, நாளைய நம்பிக்கை நட்சத்திரமே என்றெல்லாம் அச்சடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

இந்த ஒரு வார பரபரப்பு விஜய்க்கு இரண்டு விஷயத்தை கற்றுக் கொடுத்திருக்கும். ஒன்று நாற்காலிக்கு ஆசைப்பட்டால் ஆணி கிழிச்சாலும் அசரக்கூடாது. அல்லது நாற்காலிக்கே ஆசைப்படக் கூடாது.

விஜய் சாய்ஸ் எதுவோ?  

No comments: