Blogger Widgets

Total Page visits

Tuesday, August 13, 2013

தலைவா விமர்சனம்

மும்பையை கதைக்களமாக எடுத்துக் கொண்டாலே தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு நினைவில் தோன்றுவது “ டான் “ கதைகள் தான். நாயகனில் தொடங்கி, பாட்ஷா விட்ட வழியில் கஜேந்திரா, ஜனா இப்படி பல படங்கள் மும்பை சுற்றிய கதைக்களத்துடன் கதாநாயகனை மும்பைக்கே பெரிய சூரனாக சித்தரித்தது. ஒரு பொழுதில் பல படங்கள் சரமாறியாக இதே கதைக்களத்துடன் வெளிவந்தது, இப்போது விடப்பட்ட நீண்ட இடைவெளியில் “ தலைவா“ கோல் எடுக்கப்பார்த்துள்ளது .

மும்பை தாராவியில் வாழும் தமிழர்களுக்கு பிரச்னை, அநியாயத்தை தட்டி கேட்க்கும் நடிகராக விஜய்யின் அப்பா. அங்குள்ள மக்களுக்கு கதிரவனாக திகழ்கிறார்,  மனைவி ரேகா. கணவன் உயிர் காக்க குண்டடிகளை தாங்கி  இறக்கிறார். வழக்கமான புளித்துப் போன ப்ளாஷ்‌பேக். தன்னுடன் இருந்தால் தன் மகனும் அழிவான் என்ற எண்ணத்தில் விஜய்யின் அப்பா, மகனை நாசருடன் அனுப்பி வைக்க, ஆஸ்திரேலியாவில் வாட்டர் கம்பெனி முதலாளியாக விஜய் வளருகிறார். ‘தமிழ் பசங்க‘ என்ற குழு வைத்து ஆஸ்திரேலியாவில் குத்தாட்டம் போட்டு கலக்கி எடுக்கிறார்.

அமலாபால் மீது காதலில் விழும் விஜய், ஒரு சூழலில் இந்தியாவிற்கு வரும் நிர்பந்தம் எழ, சொல்லாமல் ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்புகிறார். விஜய் இந்தியாவிற்கு வருகை தர, அவரது அப்பா கொலை செய்யப்படுகிறார். ‘ தேவர் மகன் ‘ கமலை போல் கடமைகளை எடுக்க வேண்டிய சூழல் விஜய்க்கு. தன் அப்பாவின் இடத்தை நிரப்ப, மக்களுக்கு நம்பிக்கை தர விஜய் கையில் கத்தி எடுக்கிறார். விஜய் எடுத்த கத்தி மக்களை காப்பதும், பழி தீர்ப்பதும் தான் இரண்டாம் பாதியின் கதை.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் விஜய் அமர்க்களமாக தெரிகிறார். பாடல்களிலும், சண்டைக் காட்சிகளிலும், மௌன பார்வைகளிலும் விஜய் சிக்ஸர் அடிக்கிறார். ‘ஜெய்ஹிந்த்‘ படத்து ரஞ்சிதா மாறி அமலாபாலுக்கு பெரிய ரோல். வெறும் அழகுப் பதுமையாக வளம் வராமல் ரீவால்வேர் ரீடாவாக உருமாறி இருக்கிறார். பொன்வண்ணன், சுப்பு அருணாசலம், ஒய்.ஜி.மகேந்திரன், உள்ளிட்டோரும் விஜய் கதாப்பாத்திரத்துக்கு பில்ட்டப் ஏற்றி விடுகின்றனர்.  விஜய், சந்தானம் கதாபாத்திரங்கள் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் ரொம்ப மிகைப்படுத்தி காட்டபட்டிருக்கு.

படத்தின் ரசிக்கத் தக்க அம்சங்கள் என்றால் விஜய்யின் நடிப்பு, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, சந்தானத்தின் ஒன் லைனெர்ஸ், வாங்கண்ணா வணக்கங்கனா பாடல்.

படத்தில் சலிப்பை தரும் அம்சங்கள் : புளித்துப் போன திரைக்கதை இடைவேளைக்கு பிறகு கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை, நீளமாக டல்லாக பயணிக்கும் திரைக்கதை தொய்வு. ‘ ஐ எம் வெயிட்டிங் ‘, ‘ ஐ எம் பாக் ‘ இப்படி சின்ன வசனங்களுக்கு சரியான மவுசு இருக்கும் காலத்தில் ‘இது ஒரு வழி பாதை‘, ‘கத்தி எடுத்தா ஒன்னு காக்கும் இல்ல அழிக்கும்‘ இப்படி ஒரே பழைய கொட்டாவி வசனங்கள், அதுவும் ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் தேய்ந்த ரெகார்டர் போல் திரைக்கதையில் பயணிக்க செய்த விதம் வெறுப்பை தருகின்றது .    

எப்போதும் இந்தி, மலையாளம், இங்கிலீஷ் படங்களிருந்து கதையை டிப்பி காப்பி செய்யும் இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘பிரான்சிஸ் கொப்போலா’ இயக்கிய ‘காட் ஃபாதர் ‘ படத்திலிருந்து சுடப் பார்த்திருக்கிறார். என்ன பரிதாபம் என்றால் இதே டெம்ப்லேட்டில் நாயகன், தேவர் மகன், ஹிந்தியில் சர்கார், சர்கார் ராஜ் இப்படி பல படங்கள் வந்துவிட்டது. கிளாஸ் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இயக்குனர் ஏ.எல்.விஜய் கிளாசிக் படத்திலிருந்து சுட்டு விட்டார். கதை, திரைக்கதையும் எழுதினால் தான் இயக்குனர் என்ற விதி உள்ளதா என்ன??  என்றால் அப்போது திரையுலகில் கதையாசிரியர் எதற்கு??

பாட்ஷா, நாயகன், தேவர் மகன் முதலிய படங்களை பார்க்காதவர்களால் ‘தலைவா’வை ரசித்து பார்க்க முடியும். ஆதிபகவன், மதுரை சம்பவம் பார்க்காதவர்கள் திரைக்கதையில் வரும் ட்விஸ்ட்களை புதுமையாக உணர்வர்.

மொத்தத்தில் : ஊரார் வீட்டு தோட்டத்து காய்கறியில் சமைக்கப்பட்ட கூட்டு ‘தலைவா‘. விஜய்யின் அமைதியான அழகான நடிப்பு ரசிகர்களை ஈர்க்கும், ஏ.எல்.விஜய்யின் இயக்கம் தாலாட்டாய் உறங்க வைக்கும்.

No comments: