Blogger Widgets

Total Page visits

Thursday, October 8, 2015

எத்திக்கல் ஹேக்கிங் - படிப்பது தப்பில்லையே!

குறை கண்டு பிடிக்காமல் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழணும் என்று பெற்றோர் சொல்லி வளர்ப்பது வழக்கம். ஆனால் ஆன்லைனில் பல சமூக வலைத்தளங்களில் இருக்கும் கோளாறுகளை, கண்டுபிடித்து  தருகிறார்  “ஆனந்த பிரகாஷ்”, இதனை வெற்றிகரமான ஒரு தொழிலாகவும் செய்து வருகிறார்.


குறுக்கு வழி வேண்டாம், நேர்மையான  வழி தான் சரி எல்லாம் பழைய லாஜிக்.



“களவும் கற்று மற” னு சொல்லியிருப்பது போல இன்று எப்படி எல்லாம்  இணையத்தை தவறாகப் பயன்படுத்தினால், பிரச்னை வரக்கூடும் என்று யோசித்து அதனை, முன்னாடியே  தடுக்கத் தான் ஆனந்த் போன்றவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.




முதன் முதலில்  வீட்டில் இணைய வசதி கிடைத்ததும்,  சில சாமர்த்தியமான வழிகளை பயன்படுத்தி செலவே இல்லாமல் இணையத்தை பயன்படுத்த கற்றுக் கொண்டார்.  (அடடே நமக்கும் சொல்லி கொடுக்கலாமே ! நெட்பேக் போட்டு கட்டுபடியாகல ) சில மாதங்களில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டது, அப்போது தான் அவருக்கு புரிந்தது இணையத்தை எவ்வளவு பேர் தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்று.

என்ஜினியரிங்  படிப்பின்  போதும் காலேஜ் வட்டாரத்தில் இவர் மிக பிரபலம். நன்றாகப் படிப்பதனால் அல்ல, வை ஃபை கட்டுப்பாடு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதால். இப்படி ஆன்லைனில் வல்லவனாக இருந்தாலும், பாடங்களில் கவனம் செலுத்த வில்லை. கண்டிப்பாக கேம்பஸ் பிளேஸ்மெண்ட்டில் வேலை கிடைக்காது என்றாயிற்று. 


ஃபேஸ்புக்கில் இருக்கும் கோளாறுகளை கண்டுபிடிப்போருக்கு அந்த நிறுவனம் பரிசு அறிவித்தது. முதன் முதலாக இவர் கண்டுபிடித்தது ஆன்லைனில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் யுக்தி . சேட் ஆஃப் செய்து வைத்திருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதை சுட்டி காட்டினார். 500 டாலர்கள் பரிசு தொகையாக பெற்றார். அன்று தொடங்கியது இந்த குறை காணும் படலம். 80 பக்கங்களை  ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்திருக்கிறார்.




தன்னிடம் உள்ள திறமையை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். கர்கான் நகர சைபர் க்ரைம் துறையுடன் இணைந்து பல ஆன்லைன் கிரிமினல்களை பிடிக்க உதவியுள்ளார்.



சமீபத்தில் பிரபல உணவகம் சார்ந்த ஆப் சொமேடோ வில் 62 மில்லியன் நபர்களின் கணக்குகள் பாதுகாப்பில்லாமல் இருப்பதை சுட்டி காட்டினார். ஆனால் இந்திய நிறுவனங்கள் பலவும் சைபர் பாதுகாப்பை தீவிரமாக எடுத்து கொள்வதில்லை.

ஹேக்கர்ஸ் அனைவரும் தவறான செயல்களுக்காக ஹேக் செய்வதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசு தொகையும் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கும் போது, இந்தியா நிறுவனங்களான   'ஓலா' போன்றவை இவர்களை குற்றவாளியாகவே பார்க்கிறது.


`ஓலா` வில் இருக்கும் பெரும் பாதுகாப்பு பிரச்சனையை சுட்டி காட்டிய  ஷுபம் பரமஹம்சா எனும் இளைஞர்களுக்கு மிக கடுமையாகவே அந்த நிறுவனம் பதிலளித்திருந்தது.

கிரெடிட் கார்ட் விவரங்கள்,  வவுச்சர் எண்களும் மிக எளிமையாக பெற முடியும் என காண்பித்துள்ளனர். மூன்றே நிமிடங்களில் இதனை செய்து முடித்ததாக கூறி அந்த வீடியோவை பதிவு செய்தனர்.
ஹேக்கர் என்பதையே திருட்டு கும்பல் போல சித்தரிக்கும் சினிமாவிற்கும் இதனில் பங்கு உண்டு. த்திக்கல் ஹேக்கிங்  என்ற படிப்பே உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகமே இணையத்தில் இயங்கும் காலத்தில் இது போன்ற படிப்புகளை தேர்ந்தெடுப்போருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


 ஐ.மா.கிருத்திகா
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

பொறியியல் இனி மெல்ல சாகும்!

பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் விதிமுறைகளை குறித்து தான் இன்று சமூக வலைதளங்கள் எங்கும் பேச்சு. ஆனால் இந்த விதிமுறைகள் எதுவும் இன்று நேற்று முளைத்தவை அல்ல. அப்படி இருக்கும் போது திடீரென்று எதற்காக இதற்கு எதிரான போராட்டம் என்ற் கேள்வி கட்டாயம் நம் மனதில் எழும்.

இன்று பலரின் போராட்டம்  ஒரு ஸ்டேட்டஸில் ஆரம்பித்து, சில பல கமெண்ட் சண்டைகளில் முடிந்து விடுகிறது. சமூக வலைதளங்களின்  பேராற்றலுக்கு இதுவே சான்று. போராட சாலைகளில் இறங்க வேண்டாம், மறியல் வேண்டாம், தடியடி வேண்டாம். ஒரு ஸ்மார்ட்ஃபோன் போதும் இருந்த இடத்திலேயே உலகை மாற்றலாம்.

ஒரு காலத்தில், ஊர் உலகமே சென்று பொறியியல் கல்லூரிகளில் விழுந்தது, ஆனால் இன்று நிலைமை தலைகீழ். ஒவ்வொரு கல்லூரியை மற்றொன்றை தாண்டி முன்னேற கையில் எடுத்துகொண்ட ஆயுதம் தான் பரீட்சை முடிவுகள். மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்பதை மறந்து, அவர்களை புத்தகங்களை மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றவே விழைந்தனர்.


இதற்காக கொண்டு வந்த கட்டுபாடுகளும் விதிமுறைகளும் கல்லூரியை சிறையாக மாற்றியது. ஆனாலும் பெற்றோர் முந்தி அடித்து தங்கள் பிள்ளைகளை எப்படியாவது லட்சங்களை கொட்டியாவது அங்கே சேர்த்து விட துடிக்கிறார்கள். நல்ல வேலை 100 % பிளேஸ்மெண்ட் என கல்லூரிகள் போடும் வலைகளில் சிக்குவது ஒன்றும் அறியாத கிராமப்புற பெற்றோர் மட்டும் அல்ல. கண்டிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் வரும் என நம்பும் அனைத்து பெற்றோர்களும் தான்.

அது தான் இந்த கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாகிவிடுகிறது, கண்டிப்புக்கு இவர்கள் கொடுக்கும் வரையறைகளில் தான் பிரச்சனை.  அந்த பட்டியல் அனைவரும் அறிந்ததே, ஆனால் இத்தகைய ஹிட்லர் ஆட்சி இருந்தால் தான் மாணவர்கள் படிப்பார்கள் என்பதில் துளியும் உண்மை இல்லை.
கல்லூரி காலம் பல வகையான அனுபவங்களை கற்று தர வேண்டும், அவற்றை புத்தகங்களுக்குள் அடக்குவது தற்காலிகமான நல்ல மதிப்பெண்களை தந்தாலும், காலப்போக்கில் அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் நிராகரிக்கும் நிலைக்கே கொண்டு செல்கிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 600,000  பொறியியலாளர்கள் வெளி வருகிறார்கள் , ஆனால் இவர்கள் ஒரு சொற்ப அளவிலான மாணவர்களே வேலை வாய்ப்புகளுக்கு தயாராக இருக்கின்றனர். பி.பி ஓ வில் கூட நல்ல வேலைகளுக்கு  11.5 % பொறியியலாளர்களே தகுதி பெறுகிறார்கள். பல மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது சிக்கலாக இருப்பதால், இந்த வேலை வாய்ப்பு  பறி போகிறது.

முழுமையான கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டும் அல்ல, வெளியுலக அனுபவங்களிலும் தான். எத்தனையோ படிப்புகள் இருக்க பொறியியலிலும், மருத்துவத்திலும் நாம் ஆட்டு மந்தை போல விழுவதால் தான் இந்த நிலை. ஏ. ஐ. சி. டி. ஈ. எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றம், இளங்கலை பொறியியல் சேர்க்கையை 40 % குறைக்க முடிவு எடுத்து உள்ளது. ஐ.ஐ.டி, பி. ஐ.டி. எஸ் போன்ற பெரிய கல்லூரிகளை தவிற மற்ற பல கல்லூரிகளில் இருந்து வேலைக்கு எடுக்கப்படும் மாணவர்கள் தகுதியற்று இருக்கின்றனர். 
நாஸ்காம்  2011 இல் நடத்திய ஆராய்ச்சியின் படி 17.5 % மாணவர்கள் மட்டுமே சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்ய தகுதி பெற்றிருந்ததாக கூறுகிறது. ஆசிரியர், மற்றும் கல்லூரியின் தரத்தை உயர்த்தவே இந்த முடிவு.

சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டிய மாணவர்களை சமூக வலைத்தளங்களையே பயன்படுத்த கூடாது என தடுத்து, எடுத்ததற்கெல்லாம்  அபராதம் விதித்து, உடை , சிகை,பேச்சு என எந்த வித சுதந்திரமும் இல்லாமல். நான்கு சுவர்களுக்குள் பாடம் நடத்தி, அப்படி என்ன  கல்வியை கொடுத்த விட முடியும்?
மாணவர்களும் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

ஐ.மா.கிருத்திகா
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.