Blogger Widgets

Total Page visits

Saturday, July 26, 2014

ஆட்குறைப்பு பேரங்கள்

கண்ணாடியும், பளிங்குக் கல்லுமாய்ப் பளபளக்கும் கட்டிடங்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சவால் விடும் வசதிகள். படித்து முடிக்கும் முன்பாகவே, காம்பஸில் தேடி வந்து வேலை தரும் கம்பெனிகள். கை நிறையச் சம்பளம். நாம் கும்மிடிப்பூண்டி போவதுபோல், அடிக்கடி அமெரிக்கா பயணம். வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு சாஃப்ட்வேர் கம்பெனிகள், பி.பி.ஓக்கள், பூலோக சொர்க்கங்கள்.

இந்த சொர்க்கங்களுக்கு இன்னொரு சோகப் பக்கம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? தலைக்கு மேல் எப்போதும், ஒரு கத்தி தொங்கும் – வேலை எப்போதும் பறிக்கப்படலாம். அமெரிக்காவில் மிகப் பரவலாக இருக்கும் Hire and fire policy நம் நாட்டுக்கும் வந்துவிட்டது. அதாவது, வேலை நிரந்தரம் கிடையாது. பிஸினஸ் நன்றாக ஓடுகிறதா, ஆயிரக்கணக்கில் ஆட்களை எடுப்பார்கள். பிஸினஸ் சரிகிறதா, வீட்டுக்கு அனுப்புவார்கள்.

சாஃப்ட்வேர், பி.பி.ஓ கம்பெனிகள் மட்டுமல்ல, எல்லாத் துறை நிறுவனங் களும், பிஸினஸ் சறுக்கும்போது ஆட்குறைப்பைத்தான் ஒரே வழியாக வைத்திருக்கிறார்கள். திடீரென வேலைகளை இழக்கும் போது, தொழிலாளிகளின் உள்ளங் களும், வருங்கால வாழ்க்கையும் சிதறிப்போகின்றன. ஊழியர்கள் மனம் காயப்படாமல், அவர்களுடைய வருங்கால வாழ்க்கை அதிகம் பாதிக்கப் படாமல் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அதே வேளையில், நிறுவனத்தின் லாபத்திலும் அதிக சேதம் ஏற்படக்கூடாது. இது எப்படி முடியும்? போகாத ஊருக்கு வழி கேட்பது போல் இருக்கிறது என்று எல்லோரும் நினைப்போம். இல்லை, இது முடியும் என்று நிரூபிக்கிறது, டாடா ஸ்டீல் கம்பெனியின் அனுபவம். 1990 – களில் இந்திய இரும்பு உருக்குத் தொழில், மிகவும் பின் தங்கிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. ஜப்பான் நாட்டில் ஒரு தொழிலாளியின் சராசரி தயாரிப்பு ஆண்டுக்கு 602 டன்கள். கொரியாவில் 420 டன்கள், பிரேசில் நாட்டில் 218 டன்கள், டாடா ஸ்டீலில் வெறும் 57 டன்கள்.


1992 – இல் டாடா ஸ்டீல் மேனேஜிங் டைரக்டராக டாக்டர் இரானி பதவி ஏற்றார். இந்தியா தன் வாணிபக் கதவுகளை வெளி உலகத்துக்குத் திறக்கத் தொடங்கியிருந்த நேரம். கம்பெனி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை இரானி உணர்ந்தார்.

அவர் சொன்னார், “இன்றைய யுத்தங்களை மகாபாரத ஆயுதங்களால் ஜெயிக்க முடியாது. உலகளாவிய போட்டியை சமாளிக்க டாடா ஸ்டீலுக்கு இரண்டே இரண்டு வழிகள்தாம் – நவீன தொழில்நுட்ப உற்பத்தி முறையைப் பின்பற்றவேண்டும், தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைக்கவேண்டும். இல்லாவிட்டால், பாரம்பரியம் மிக்க இந்தக் கம்பெனி அழிந்தே போய்விடும்.”

டாடா ஸ்டீலின் முக்கிய தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் நகரத்தில் இருக்கிறது. 1992 – இல், இங்கே, 78,300 பேர் வேலை பார்த்தார்கள். குறைந்தபட்சம் 30,000 பேரை வீட்டுக்கு அனுப்பவேண்டும். கம்பெனியின் பல்வேறு இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன, நிறுவனம் இருக்கும் நெருக்கடி நிலையை விளக்கின, 30,000 பேரை வேலையிலிருந்து நீக்கவேண்டிய கட்டாயத்தை விளக்கின.

யூனியன் – மேனேஜ்மென்ட் பேச்சு வார்த்தைகள் தொடங்கின. முதல் இரண்டு, மூன்று சுற்றுக்கள் – கம்பெனி நிர்வாகிகள் ஏன் 30,000 பேரை வேலை நீக்கம் செய்யவேண்டுமென்பதை நியாயப்படுத்தினார்கள். “ஏன் தொழிலாளி அடிமடியில் கை வைக்கிறீர்கள்? கம்பெனியில் ஏராளமான விரயச் செலவு நடக்கிறது. அதைக் கட்டுப்படுத்துங்கள்” என்று யூனியன் தலைவர்கள் புள்ளி விவரங்களை அடுக்கினார்கள். பேச்சு வார்த்தைகளில் இழுபறி.

நிர்வாகம் இப்போது, இரண்டு ஆலோசனைகளை முன்வைத்தது. கட்டாய வேலை நீக்கம் கிடையாது; விருப்பமாக வேலையை விட்டுப் போகிறவர்கள் மட்டுமே போனால் போதும். இரண்டாம் ஆலோசனை, நஷ்ட ஈடு தொடர்பானது.

அன்றைய தொழிலாளர் நலச் சட்டங்களின்படி, ஒருவரைப் பணி நீக்கம் செய்தால், பிராவிடண்ட் பண்ட் தவிர, அவருக்கு நிவாரணத் தொகை தர வேண்டும். இந்தத் தொகை, அவர் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு மாதச் சம்பளம் என்று கணக்கிடப்படும். சட்டம் நிர்ணயித்த இந்தத் தொகையைத் தருவதாக, டாடா ஸ்டீல் நிர்வாகம் சொன்னது. சுமார் 1000 தொழிலாளிகள் இதை ஏற்றுக்கொண்டார்கள். வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டார்கள்.

நிர்வாகத்தின் இலக்கு 30,000 பேர். சென்றவர்களோ 1,000 பேர். என்ன செய்யலாம்? தொழிலாளிகளுக்கு அதிர்ச்சி தர முடிவெடுத்தார்கள். யூனியனை அடுத்த சுற்றுப் பேச்சுக் களுக்கு அழைத்தார்கள். முதல் முயற்சி பலிக்காத மேனேஜ்மென்ட் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று யூனியன் எதிர்பார்த்தது.

“முதலாளியா, தொழிலாளியா? ஒரு கை பார்த்து விடுவோம்” என்று வேலை நிறுத்தத் துக்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியது. தொழிலாளிகளின் மனங் களில் பயம், நிர்வாகம் தொழிற் சாலையை மூடிவிட்டால் என்ன செய்வது? அவர்கள் குடும்பத்தோடு வசித்தது கம்பெனி குடியிருப்புகளில். தொழிற்சாலையை மூடினால், வீடுகளையும் காலி பண்ணவேண்டும்.

பேச்சு வார்த்தைகள் தொடங்கின. மேனேஜ்மென்ட் பிரதிநிதி தங்கள் ஆலோசனைகளை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, யூனியன் தலைவர்களுக்கும், தொழிலாளர் பிரதிநிதி களுக்கும் தாங்கள் கேட்பதை நம்பமுடியவில்லை. அப்படி என்ன தந்தது நிர்வாகம்?

வேலை நீக்கம் செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சம்பளத்தின் 150 சதவிகிதத் தொகை, அவர்கள் ஓய்வுபெறும் 55 வயதுவரை வழங்கப்படும். அதாவது, வேலைக்கு வராமலே 50 சதவிகித அதிக ஊதியம்! பானர்ஜி என்பவர் தன் 20 – ம் வயதில் டாடா ஸ்டீலில் வேலைக்குச் சேர்ந்தார். இன்று அவர் வயது 40, மாதச் சம்பளம் 8000 ரூபாய். தொழிலாளர் சட்டப்படி, அவருக்குக் கிடைக்கவேண்டிய தொகை 8000 x 20 = 1,60,000 ரூபாய்.

டாடா ஸ்டீலின் புதிய திட்டப்படி, அவருக்கு மாதம் 12,000 ரூபாய் வீதம், அவருடைய 55 வயதுவரை, அதாவது இன்னும் 15 வருடங்களுக்கு மாதாமாதம் கிடைக்கும். அடுத்த 180 மாதங்களில், கம்பெனி அவருக்குக் கொடுக்கப்போகும் தொகை 12,000 x 180 = 21,60,000 ரூபாய். 20 லட்சம் ரூபாய் அதிகம். பானர்ஜி பிற கம்பெனிகளில் தாராளமாக வேலைக்குப் போகலாம்.

அப்போதும், மாதத் தொகை தொடரும். ஒருவேளை பானர்ஜி இறந்துவிட்டால், இந்தப் பணம் அவர் குடும்பத்துக்குத் தரப்படும். ஊரைவிட்டுப் போகிறவர்கள், புதிய இடங்களில் வீடுகள் வாங்க 3 லட்சம் வட்டியில்லாக் கடன் வேலையை விட்டாலும், தொழிலா ளிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் டாடா ஆஸ்பத்திரியில் குறைந்த செலவில் சிகிச்சை. டாடா ஆஸ்பத்திரியைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் 3 லட்ச மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி.

ஆமாம், டாடா ஸ்டீல் நிர்வாகம் தொழிலாளர்களுக்குத் தந்தது வெறும் அதிர்ச்சியல்ல, ஆனந்த அதிர்ச்சி! அடுத்த ஆறு ஆண்டுகளில் 30,300 பேர் விருப்ப ஓய்வு வாங்கிப்போனார்கள். பிற கம்பெனிகளும், ஊடகங்களும், டாடா ஸ்டீல் மாபெரும் தவறு செய்துவிட்டதாகக் கேலி செய்தார்கள். ஆனால், வரவு செலவுக் கணக்குகள் இரானியின் தீர்க்கதரிசனம் எத்தனை சரியானது என்பதை நிரூபித்தன.

டீலை வெற்றிகரமாக முடித்தார் இரானி. பேச்சு வார்த்தைகளில் அவர் கண்ட வெற்றியின் ரகசியங்கள் – 30,000 பேரைக் குறைக்கவேண்டும் என்னும் இலக்கில் தெளிவு, உறுதி, தொழிலாளர் நலம் காக்கவேண்டும் என்னும் நேர்மையான கொள்கை, பிரச்சினையைப் பல கோணங்களிலிருந்து ஆழமாக ஆராய்ந்த கடும் முயற்சி, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிறவிடாமல் அடக்கிவாசித்த யுக்தி, அவர்கள் நினைத்துப்பார்த்தேயிராத சலுகைகள் தந்த பரந்த மனம். டீல்களில் ஜெயிக்க நம் எல்லோருக்கும் ஒரு பாடம்.

பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி: கல்வித்தரம், தரச்சான்றுதான் மூல காரணம்

கடந்த ஆண்டு மொத்தம் 1.05 லட்சம் பொறியியல் கல்லூரி இடங் கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன. இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் அதிக மாகும் என்றே தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் முடியவிருக்கும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, மொத்தம் எத்தனை இடங்கள் காலியாக இருக்கும் என்று உத்தேசமாகக்கூட கூறமுடியாத நிலையில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளனர்.

குறைந்தபட்சம் 100 கல்லூரி களுக்கு கணிசமான எண்ணிக் கையில் மாணவர்கள் வரவே இல்லை என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. பொறியி யல் கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பது புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்கிறது. ஆரம்பத்தில் மிகவும் குறைவாக இருந்த காலியிடங் கள் எண்ணிக்கை இப்போது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 572 பொறியியல் கல்லூரிகள் மாண வர்களைச் சேர்த்துக்கொண்டன. சில கல்லூரிகளில் 12க்கும் குறைவான மாணவர்களே சேர்ந் தனர். தொழில்நுட்பக் கல்விக் கான அனைத்திந்திய கவுன்சில்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

‘‘கல்லூரிகளுக்கு அங்கீ காரம் வழங்கும் நடைமுறை பெயரளவுக்குத்தான் கடைப் பிடிக்கப்படுகிறது, எனவே தகுதி யற்ற கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என்கிறார் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ். வைத்யசுப்ரமணியம். "சுமாரான அடித்தளக் கட்டமைப்பு வசதிகளையும், கற்பித்தலில் அதிக அனுபவமோ, திறமையோ இல்லாத ஆசிரியர்களையும் கொண்ட கல்லூரிகளால் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. வேலைக்கே வைத்துக் கொள்ளமுடியாத பட்டதாரி களைத்தான் இந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் அனுப்பிக்கொண் டேயிருக்கும்" என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

தரம் குறைந்த கல்லூரிகளால், மாணவர்களால் வேலைதேட முடிய வில்லை என்பதற்கு சமீபத் திய ஒரு சம்பவமே நல்ல உதார ணம். அண்ணா பல்கலைக்கழகம் நிறுவிய 'பல்கலைக்கழகம் - தொழில்துறை கூட்டுச் செயல் பாட்டுப் பிரிவு' என்ற அமைப்பு மொத்தம் 24,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சியை அளித்தது. ஆனால் அவர்களில் 2,600 பேர் மட்டுமே வேலை பெற்றனர். அது பயிற்சியில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை யில் சுமார் 11% தான்.

ஆனால் இந்த மையத்தின் இயக் குநரான டி. தியாகராஜன் இதை ஏற்க வில்லை. எந்த பல்கலைக்கழக வளாகத்தில் வேலைக்கு ஆள் எடுத் தாலும் அதிகபட்சம் 10% முதல் 15% வரையில்தான் ஆட்களைத் தேர்வு செய்வார்கள் என்கிறார்.

மற்றொரு பிரச்சினை, கல்லூரி களுக்குத் தரச்சான்று அளிப்பது. கல்லூரிகளின் கட்டிடம், ஆசிரியர்கள், நிர்வாகிகள் எண் ணிக்கை, மொத்தமுள்ள துறைகள், ஆய்வுக்கூடங்கள், நூலக வசதி, உயர் கல்விக்கு அவசியப்படும் இதர வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி அவர் களுடைய கல்வி அனுபவம், பட்டங்கள், ஆய்வு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரியும் தரப் படுத்தப்படுகின்றன. கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வில் அடைந்த தேர்ச்சி, அவர்கள் பெற்ற பல்கலைக்கழக சான்றிதழ் கள், ரேங்க், பரிசுகள் ஆகிய வற்றின் அடிப்படையிலும் தரச் சான்றுகள் தரப்படுகின்றன. இந்த தரச்சான்றை வழங்க தேசிய வாரியமும் இருக்கிறது. இதுவரை யில் மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகளில் 20% கல்லூரிகள் மட்டுமே இந்தச் சான்றிதழ் பெற முன்வந்துள்ளன என்று கல்வி ஆலோசகர் மூர்த்தி செல்வகுமரன் தெரிவிக்கிறார்.

அமைச்சரின் ஒப்புதல்

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை (2014) ஒற்றைச் சாளர முறையில் மூன்றில் ஒரு பங்கு இடம் காலியாக இருக்கிறது என்பதை உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் ஒப்புக்கொள்கிறார்.

"திங்கள்கிழமை வரையில் மொத்தம் 5,255 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்க ளில் 3,479 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு வந்து இடங்களைப் பெற்றனர். 1,776 இடங்கள் நிரப்பப் படவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பலர் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கலாம். சிலர் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் இடம் பெற்று அவர்கள் விரும் பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்திருக்க லாம்" என்கிறார் அமைச்சர்.

தமிழ்நாட்டில் உள்ள 572 பொறியி யல் கல்லூரிகளில் (2013-14 நிலவரப்படி) மொத்த இடங்கள் 2.88 லட்சம். இவற்றில் 1.82 லட்சம் இடங்கள் அரசினால் ஒதுக்கப் படுபவை. சில கல்லூரி நிர்வாகங் களே தங்களுடைய இடங்களிலும் ஒரு பகுதியை அரசிடமே ஒப்படைத்துவிட்டதால் இந்த எண் ணிக்கை 2.11 லட்சமாகிவிட்டது. ஆனால் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1.69 லட்சம்தான். எனவே குறைந்தபட்சம் 42,000 இருக்கைகள் இந்த ஆண்டு நிரப்பப் படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி திஹிந்து  

Wednesday, July 16, 2014

20%க்கும் குறைவான பொறியியல் மாணவர்களே மென்பொருள் பணிக்கு தகுதி: ஆய்வறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் படித்து வெளிவரும் 6 லட்சம் பொறியியல் பட்டதாரிகளில், 20% அளவிற்கும் குறைவானவர்களே, மென்பொருள் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
பொறியியல் பட்டதாரிகளுக்கான  Aspiring Minds என்ற தேசிய வேலை வாய்ப்பு அறிக்கை இந்த தகவலை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: படித்து வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளில், வெறும் 18.43% பேர் மட்டுமே, மென்பொருள்(software) துறையில் பணி வாய்ப்புகளை பெறுகிறார்களாம்.

இந்தியாவெங்கும் பரந்து விரிந்துள்ள பொறியியல் கல்லூரிகளில், தேர்வு செய்யப்பட்ட 520க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படித்து முடித்த 1.20 லட்சம் பொறியியல் பட்டதாரிகளிடம் ஆய்வுசெய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த 2013ம் ஆண்டில் தங்களின் படிப்பை நிறைவு செய்தவர்கள்.
இந்த 1.20 லட்சம் பேரில், 91.82% பேருக்கு, புரோகிராமிங் மற்றும் அல்கோரிதம் திறமைகள் குறைவாகவும், 71.23% பேருக்கு, மென்திறன்கள் மற்றும் அறிவுத்திறன்கள் குறைவாகவும், 60% பேருக்கு துறைசார்ந்த அறிவு குறைவாகவும், 73.63% பேருக்கு ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் குறைவாகவும், 57.96% பேருக்கு பகுப்பாய்வு மற்றும் மதிப்பிடும் திறன்கள் குறைவாகவும் இருப்பதாக அந்த ஆய்வு விரிவாக தெரிவிக்கிறது.
பொறியியல் மாணவர்களுக்கான குறைந்த பணி வாய்ப்புகள் எனும் நிலை, நாட்டின் மோசமான கல்வித் தரத்தையும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு உயர்திறன் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுவதையும் குறிக்கிறது. இதனால், நாட்டில் மிகப்பெரிய திறன் இடைவெளி ஏற்படுகிறது.
கார்பரேட் நிறுவனங்கள், ஒரு பட்டதாரியை பணியமர்த்தும்போது, அவர் தேவையான அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்கிறாரா என்பதைத்தான் பார்க்கின்றன. பணியில் சேர்த்த பின்னர், அவருக்கு பெரியளவில் பயிற்சிக் கொடுக்க அவை விரும்புவதில்லை. எனவே, தேவைப்படக்கூடிய அடிப்படைத் திறன்களைக்கூட பெற்றிராத பட்டதாரிகள், ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படுகிறார்கள்.
இந்த அறிக்கையில் இன்னொரு முக்கிய அம்சமும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள், தங்களுக்கான ஊழியர்களை தேர்வுசெய்கையில், எது புகழ்வாய்ந்த கல்லூரி அல்லது கல்வி நிறுவனம் என்பதைப் பார்த்து, அந்தக் கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனத்தை மட்டுமே நாடிச் செல்கின்றன.
இதனால், அந்தளவுக்கு பெயர் பெற்றிராத, பல சாதாரண கல்வி நிறுவனங்களில் படிக்கும் பல திறமையான மாணவர்களை அந்த நிறுவனங்கள் இழந்து விடுகின்றன. இது நமது சமூகத்தின் ஒரு போக்காக உள்ளது. இதன்மூலம், சுமார் 70% மனித ஆற்றல் இழக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Resume Shortlist செய்யப்படும்போதே, ஒரு விண்ணப்பதாரர் படித்த கல்வி நிறுவனத்தின் brand -க்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்தளவுக்கு பெயர் தெரியாத கல்லூரியில் படித்த ஒரு பட்டதாரியின் விண்ணப்பம், அடிப்படை நிலையிலேயே நிராகரிக்கப்பட்டு விடுகிறது.
இதன்மூலம், ஒரு பிரபலமடையாத கல்லூரியில் படித்த ஒரு மாணவர், தனது பணிக்குத் தேவையான அடிப்படைத் திறன்கள், துறை அறிவு மற்றும் மொழியறிவு ஆகியவற்றை சரியான அளவில் பெற்றிருந்தாலும்கூட, அவர் தனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறார்.
அவரால், விரும்பிய நிறுவனத்தில் பணியைப் பெற முடிவதில்லை. அப்படியே, அவருக்கு பணி வாய்ப்பு சில நிறுவனங்களில் கிடைத்தாலும், அவர் பெறும் சம்பளம், பெயர்பெற்ற கல்லூரியில் படித்த பட்டதாரிகள் பெறும் சம்பளத்தைவிட குறைவாகவே அமைகிறது. இதுதான் உண்மை நிலை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர் 

Thursday, July 10, 2014

முன்னுதாரணமான முடிவு!

இன்று நாடு தழுவிய அளவில் எல்லா அலுவலகங்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்னை- பணிக்கு மது அருந்தி விட்டு வரும் ஊழியர்கள். இதை எவ்வாறு தடுப்பது, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று பலரும் தயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ரயில்வே நிர்வாகம் துணிந்து புதிய கொள்கை முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் ரயில்வே சார்ந்த அமைப்புகளின் கருத்துக்கேட்புக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த கொள்கை முடிவின்படி, பணிக்கு வரும்போது ரயில்வே ஊழியர் அனைவரும் வாய்ஊது சோதனைக்கு (பிரீத் அனலைசர்) உட்பட்டாக வேண்டும்.
ரயில்ஓட்டுநர், ரயில்நிலைய அதிகாரி, சமிக்ஞைகள் மாற்றும் ஊழியர் போன்ற முக்கியமான, விபத்தில்லா சேவைக்கு அடிப்படையான ஊழியர்கள் இந்த சோதனைக்கு கட்டாயமாக உட்பட்டாக வேண்டும். இவர்களைத் தவிர, பாதுகாப்பான பயணத்துடன் தொடர்பு இல்லாத டிக்கெட் பரிசோதகர் போன்ற பணியாளர்களும், ரயில்வேயின் "மரியாதை மற்றும் கெளரவம் காக்க' இந்தச் சோதனைக்கு ஆட்பட்டாக வேண்டும் என்கிறது அக் கொள்கை முடிவு.
பாதுகாப்பான பயணத்துடன் தொடர்புடைய ரயில்வே ஊழியர், சமிக்ஞை தரும் ஊழியர் போன்றோர் ரத்தத்தில் 100 மில்லி லிட்டருக்கு 10 மில்லிகிராம் மது இருக்குமேயானால் அவர் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார். இந்த அளவு 21 மில்லிகிராமுக்கு அதிகமாக இருப்பின் அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்கிறது புதிய கொள்கை முடிவு.
இரண்டாவது முடிவுக்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொள்ளாது என்பதை இப்போதே சொல்லிவிடலாம். அவரை பணியிடை நீக்கம், அல்லது விடுப்பில் செல்லுமாறு சொல்வதே சரி என்று எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தொழிற்சங்கங்களுக்குப் பொதுமக்களின் பாதுகாப்பை விட அவர்களுக்கு சந்தா வழங்கும் ஊழியர்களின் நலன்தான் முக்கியம். தொழிற்சங்கங்கள் எதிர்த்தாலும் நிச்சயமாக, வாய்ஊது சோதனை என்பது ரயில்வே துறையில் அறிமுகம் செய்யப்பட்டாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
ஒரு ரயில் பெட்டியிலோ அல்லது பேருந்திலோ ஒரு குடிகாரர் சக பயணிகளுக்கு தொல்லையாக மாறுகிறார் எனும்போது, அவரை இறக்கிவிட டிக்கெட் பரிசோதகர், பேருந்து நடத்துநர் ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது. பயணிகளுக்கு ஒரு நியாயம், பயணிகளின் உயிருக்கு பொறுப்பேற்று பணியாற்ற வேண்டியவர்களுக்கு ஒரு நியாயமா? மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியவர்கள் மது அருந்தினால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுதானே முறை?
அண்மையில், மும்பை அருகே ஓடும் ரயிலிலிருந்து டிக்கெட் பரிசோதகரால் தள்ளிவிடப்பட்டதில் ஒரு பெண்மணி கீழே விழுந்து இறந்தார். இந்த சம்பவத்தின்போது அந்த டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் இருந்தார் என்கின்றன செய்திகள்.
சென்ற ஆண்டு பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் விருத்தாசலம் ரயில் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்தன.
இதற்கு, பணியாற்றிய ஊழியர்கள் போதையில் அந்த விடைத்தாள் கட்டுகளை கையாண்ட விதம்தான் காரணம்.
இந்திய ரயில்வே துறையில் விபத்துக் காலத்தில், தொடர்புடைய என்ஜின் டிரைவரை மட்டுமே ரத்தத்தில் மதுஅளவுச் சோதனைக்கு உட்படுத்தும் நிலைமை இருந்து வருகிறது. விபத்து நடந்தபிறகு இச்சோதனையால் என்ன பயன்? முதலிலேயே நடத்துவது என்கிற முடிவுக்கு ரயில்வே வந்திருப்பது பாராட்டுக்குரியது.
முதல் கட்டமாக, ரயில்வேயில் மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பு சார்ந்த அனைத்துத் துறைகளிலும் இத்தகைய மதுஅளவுச் சோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும். போக்குவரத்துத் துறையில் இது மிகமிக அவசியமானது.
சாலை விபத்துகளில் 99 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவதாலும்தான் ஏற்படுகின்றன. விபத்து நடந்த பிறகு, ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை என்று பொய்ச்சான்று காப்பீடு காரணங்களுக்காக பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பெறப்படுகிறது. ஆகையால், பெரும்பாலான விபத்துகளில் மது அருந்தியிருந்தார் என்கிற பதிவு இல்லாமலே போகிறது.
அரசே மதுபான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை. ரயில்வே எடுக்க இருக்கும் இந்த நல்ல முடிவு, மக்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய காவல்துறை உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இந்த முடிவுகளில் கடுமையான தண்டனை இருப்பதை தொழிலாளர்கள் நலன் என்ற பெயரில் யாரும் தடை செய்ய முற்படுதல் கூடாது. இந்த முடிவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெகு ஜன விரோதிகள்.

நன்றி தினமணி