Blogger Widgets

Total Page visits

Monday, March 4, 2013

ஆசிரியர் - மாணவர், பெற்றோர் - குழந்தைகள் உறவுகள் மேம்பட...


 அடிப்படைப் பண்புகளைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் பண்பாளர்களாக உருவாக முடியும்.

இன்றைய நிலையில் திரைப்படங்கள் குழந்தைகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களை நலர்வழியில் வாழப் பழக்குதல் அவசியம்.

குடும்பச் சூழல்: குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக இருத்தல் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்புடன் நடந்து கொள்வதோடு அவர்களை அன்புடன் நடத்தவும் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் குழந்தைகள் முன்னர் சண்டையிடுதல் கூடாது. அவ்வாறு சண்டையிட்டால் பெற்றோர் குழந்தைகளிடையே நல்லுறவு ஏற்படாது பகைவளரும், தங்களின் குறைகளைக் குழந்தைகள் முன்பு கூறுதல் கூடாது.

அப்போதுதான் குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் குறித்து நன்மதிப்பு ஏற்படும்.

அன்பு காட்டல்

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் முழுமையான அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றன. அன்பும் பாசமும் கிடைக்கப்பெறாத நிலையில் தவறான வழிக்குச் செல்கின்றனர். நல்ல அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்ல பண்பாளர்களாக உருவாகின்றனர். அது கிடைக்கப்பெறாத நிலையில் குழந்தைகள் முரட்டுத்தரமாக மாறும் நிலை ஏற்படுகிறது. தங்களிடம் அன்புடன் நடந்து கொள்ளும் பெற்றோரையே குழந்தைகள் விரும்பும், இதனால் பெற்றோர் குழந்தைகள் உறவு மேம்பாடடையும்.

குழந்தைகளைத் தனித்துச் செயல்படவிடுதல்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணிவிடக் கூடாது. தற்காலத்தில் குழந்தைகள் மிகவும் அறிவுக் கூர்மை உடையவர்களாக விளங்குகின்றனர். குழந்தைகள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகின்றனர். குழந்தைகளைத் தனித்துச் செயல்பட விடுதல் வேண்டும். அவர்களுக்குப் பெற்றோர்கள் நல்ல அறிவுரைகளை வேண்டுமானால் வழங்கலாம். அதனால் குழந்தைகளுக்கும் பேற்றோர்களுக்கும் நல்லுறவு ஏற்படுவதோடு குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையும் ஏற்படும். குழந்தைகளின் வேலைகளை அவர்களே செய்யப்பழக்கப்படுத்த வேண்டும். அவர்களே சிறந்த பெற்றோர் ஆவர்.

பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை திணித்தல் கூடாது

குழந்தைகள் விருப்பதிற்கிணங்க அவர்கள் விரும்பியதை பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தல் வேண்டும். குழந்தைகளிடம் அன்பு காட்டி நிறையச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடுதல் கூடாது. மேலும் தாங்கள் விரும்பியதைக் குழந்தைகள் செய்ய வேண்டும் எனத் தங்களின் ஆசைகளைக் குழந்தைகள் மீது திணிப்பதும் அவர்களைக் கட்டாயப்படுத்துவதும் கூடாது. குழந்தைகள் விருப்பத்திற்கு உடை உள்ளிட்டவற்றை வாங்க பெற்றோர்கள் அவர்களுக்கு உதவிடல் வேண்டும்.

அவ்வாறு செய்வதால் பெற்றோர் குழந்தை உறவு நன்கு வலுப்பெறும். மேலும் கல்விகற்கும் விருப்பத்தில் அவர்கள் விரும்பியதையே தேர்வு செய்திட அனுமதித்தல் வேண்டும். இதைத்தான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து குழந்தைகளை வற்புறுத்துவதால் மாணவப் பருவம் குழந்தைகளுக்கு வேதனை நிறைந்ததாக மாறுகிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தைகள் தங்களின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்றும் பெற்றோரையே மிகவும் நேசிக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் தோழனாக இருத்தல் வேண்டும்.

பெற்றோர்கள் நல்ல ஆலோசகர்களாக இருத்தல் வேண்டும்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆணையிடுபவராக இருத்தல் கூடாது, மாறாக அன்பு, பாசம் காட்டிப் பழகுதல் வேண்டும். அவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்வதற்கு நல்ல ஆலோசகராகப் பெற்றோர்கள் இருக்க வேண்டும். நல்ல ஆலோசகராக இருந்து வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது பெற்றோர் குழந்தைகளிடையே உறவு மேம்படும்.

நல்ல சூழலை உருவாக்குதல்

சூழ்நிலையே மனிதனை உருவாக்குகிறது. குழந்தைகள் நல்லவராவதும் தீயவராவது அன்னை வளர்ப்பினிலே. என்பர். நல்ல சூழல்கள் நற்குணங்களமையப் பெற்ற நல்ல பண்பாளர்களை உருவாக்குகிறது என்றார் அறிஞர் எமர்சன். நல்ல சூழலில் வளரும் குழந்தைகள் தான் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடித்தரும். அதனால் குழந்தைகள் நல்ல முறையில் வளர பெற்றோர்கள் நற்சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் இறுதிவரை தமது பெற்றோருடன் நல்லுறவு கொண்டு வாழ்வர்.

சந்தேகித்தல் கூடாது

சந்தேகம் வாழ்வின் சந்தோஷத்தைக் கெடுக்கும் என்பர். குழந்தைகளின் செயல்களைச் சந்தேகத்துடன் பார்த்தல் கூடாது. அவ்வாறு செய்யும் பெற்றோரைக் குழந்தைகள் வெறுத்து ஒதுக்கும். குழந்தைகளின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களின் செயல்பாடுகளுக்குப் பெற்றோர்கள் அறிவுரைகளைக் கூறி உதவியாக இருத்தல் வேண்டும்.

பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல்

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று இன்றைய சூழலில் பெற்றோர்கள் நினைக்கின்றனர். மேலும் பொறுப்பாக நடந்து கொள்ளத் தெரியாது என்றும் அவர்கள் எதனையும் செம்மையாகச் செய்யமாட்டார்கள் என்று கருதுகின்றனர்.

அது தவறாகும். குழந்தைகளுக்குச் சிறிய சிறிய பொறுப்புக்களைக் கொடுத்தல் வேண்டும் அவ்வாறு கொடுத்தால்தான் குழந்தைகளுக்கு எந்தச் செயலை எப்படிச் செய்தால் நலம் பயக்கும் என்றறிந்து கொள்வர். பொறுப்புக்கள் அளிக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் உயர்ந்து நிற்பர். எதிர்காலத்தில் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காத நற்குடிமகனாகவும் உயர்வர்.

குழந்தைகளுடனான பெற்றோரின் உறவும் உயரும். மேலும் குடும்பப் பிரச்சினைகளைக் குழந்தைகளுக்குத் தெரியாமல் வளர்க்கக் கூடாது. குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைக் குழந்தைகளிடம் பேச வேண்டும். ->யி!x குழந்தைகள் பொறுப்புள்ளவர்களாக மாறுவதுடன் பெற்றோர்களின் இன்பதுன்பத்தில் பங்கேற்று இறுதிவரைப் பெற்றோருடனான உறவைப் பேணுவர்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக் கூடாது

மற்ற குழந்தைகளோடு பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது. அது மட்டுமின்றி தங்களுடைய குழந்தையின் சகோதர சகோதரி களுடனோ கூட இவ்விதம் ஒப்பிட்டுப் பேசுதல் கூடாது. இது குழந்தைகள் மனதில் அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக பொறாமை எண்ணத்தை உருவாக்கும், மேலும் குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மை வளர இடம் கொடுத்துவிடும்.

மற்றவர்களுடன் ஒப்படும்போது போட்டி மனப்பான்மை ஏற்பட்டு குழந்தைகள் வளர்ந்த பின் பெற்றோரைத் தூக்கி ஏறிந்து விடுகிறார்கள். ஆகவே தங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகளை ஒப்பிடும் வழக்கத்தைக் கைவிட்டு குழந்தைகளிடையே நல்லுறவை மேம்பாடடையச் செய்தல் வேண்டும்.

மாணவப் பருவத்தில் சரியான உறவு வேண்டும்

குழந்தைகளின் மீது பெற்றோர்கள் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். எனினும், மாணவப் பருவத்தில் பெற்றோர் குழந்தைகள் உறவு வலுவுடையதாக அமைதல் வேண்டும். குழந்தைகள் படிக்கும் போது பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பது தவறு, அவர்களுக்கு வகையறிந்து உதவ வேண்டும், இதனையே, “அவனைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்று புறநானூறும்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்” என்று திருக்குறளும் நவில்கின்றன.

மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்கிறார்களா? அவர்களுடைய கல்வித்தரம் எவ்வாறு உள்ளது? என்பதையெல்லாம் கண்காணித்து அவர்களுக்கு வேண்டுவன கொடுத்து அவர்களின் கல்விக்கு உதவவேண்டும்.

மாணவப் பருவத்தில் தமது பெற்றோர்கள் தமது உதவிய உதவிகளை மனதில் குழந்தைகள் வைத்திருக்கும். பெற்றோர்கள் மீது மரியாதை கொள்ளும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மாணவப் பருவத்தில் சரியான உறவை அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வயதான காலத்தில் குழந்தைகள் பெற்றோரைப் புறக்கணிப்பர், பயத்தின் மூலமும் குழந்தைகளுடன் உறவினை ஏற்படுத்துதல் கூடாது. அது மகிழ்ச்சியற்ற வாழ்வை உருவாக்கும் என்பர் உளநல மருத்துவர்கள்.

குழந்தைகளின் பிரச்சினைகளைக் கேட்டறிதல்

பள்ளியிலும், வெளியிலும் பல்வேறு வகையில் தாக்குறும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை யாரிடமாவது கூற வேண்டும் என நினைக்கும். குழந்தைகள் தமது பெற்றோரையே முதலில் அதற்குத் தேர்ந்தெடுக்கும், குழந்தைகள் தங்களுடைய பிரச்சினைகளைக் கூறும்போது பெற்றோர் அக்கறையுடன் அதனைக் கேட்டு அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களுக்கு உதவவேண்டும்.

இவ்வாறு செய்தால் குழந்தைகள் பெற்றோரை பலமடங்கு மதித்துப் போற்றுவர். இதற்கு மாறாக அவர்களது பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமலிருந்தால் குழந்தைகள் தவறானவர்களின் வழிகாட்டலுக்குச் சென்றுவிடுவர். பெற்றோருக்கும் மாரியாதை தரமாட்டார்கள், அதனால் குழந்தைகள் தங்களின் பிரச்சினைகளைக் கூறும்போது காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.

குழந்தைகளைப் பாராட்டுதல் வேண்டும்

பாராட்டை விரும்பாதோர் உலகில் இல்லை எனலாம். ஒவ்வொருவரும் பாராட்டத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது மனித உறவை மேம்படுத்த உதவும் என்பர் அறிஞர். குழந்தைகள் நல்லன செய்யும் போது அவர்களைப் பாராட்டுதல் வேண்டும். பாராட்டினால் குழந்தை கெட்டுவிடும் எனத் தவறாகச் சிலர் நினைக்கின்றனர். பாராட்டு செடிகளுக்கு விடும் நீரைப் போன்றது. குழந்தைகளைப் பாராட்டும் நேரத்தில் பாராட்டி னால் அது அவர்களின் ஆற்றலை வளர்க்கும். குழந்தைகளும் தங்களது பெற்றோரை நன்கு மதிக்கும், உறவும் மேம்படும்.

உளவியல் அறிஞர்களின் கருத்துக்கள்

குழந்தைகளை ஆராய்ந்து பெற்றோர் குழந்தைகளின் உறவு மேம்பட சில காரணிகளை உளவியல் அறிஞர்கள் கூறுவதிலிருந்து சுட்டிக்காட்டலாம். அவ்விதம் நடப்பின் பெற்றோர்- குழந்தைகள் உறவு மேம்படுவது டன் பயனுள்ளதாகவும் மாறும்.

1. குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்து அவர்களைக் கண்காணித்தல் வேண்டும்.

2. குழந்தைக்கு உரியதை வாங்கிக் கொடுத்துவிட்டு அதனைச் சொல்லிக் காட்டக்கூடாது.

3. குழந்தைக்கு இடம், பொருள், காலம் அறிந்து செயல்பட எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.

4. சகோதர, சகோதரியை பாராட்டி குழந்தைகளைக் குறைகூறக் கூடாது.

5. பெற்றோர் குழந்தைகளின் சிறிய தவறைப் பெரிதுபடுத்திப் பேசுதல் கூடாது.

6. சக்திக்கும் மீறி பெற்றோர்கள் எதையும் குழந்தைகளுக்குச் செய்தல் நலம் பயக்காது.

7. தாய், தந்தை மனவேற்றுமைகளைக் குழந்தைகள் முன் காட்டலாகாது.

8. பெற்றோர்கள் தம் உணர்வுகளைக் குழந்தைகள் மீது காட்டக் கூடாது.

9. குழந்தைகளிடம் பெற்றோர்கள் அன்பு, கண்டிப்பு, பாசம் காட்டிப் பழகுதல் வேண்டும்.

இவ்வாறு செய்தால் குழந்தைகள்- பெற்றோர்கள் இடையே உறவு மேம்படும்.

No comments: