Blogger Widgets

Total Page visits

Tuesday, October 29, 2013

வாழ்ந்து பாருங்கள்!

ஆரோக்கியத்தை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் அன்றாட சந்தோஷத்தை சாட்டிலைட் சானல்களிலும் அடகு வைத்துவிட்ட இன்றைய சமூகம் நிழலைத் தொடரும் நிஜமாக இருக்கிறது.

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தாலும் குழந்தைப் பிறப்பில் எப்போதும் ஏற்றத்துடன்தான் இருக்கிறது. விஞ்ஞானம் இன்று ஒவ்வொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து விட்டுதான் குழந்தையை வெளியில் எடுக்கிறது.

ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம் புகட்டப்படுகின்றன என்பது புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாக சமூகத்தில் ஆகிக் கொண்டிருக்கிறது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைப்படத்திற்காக தற்கொலை செய்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

பகட்டுப் படிப்பு, 12 மணி நேர அலுவல், கைபேசிக் காதல், கணிப்பொறி ஜாதகம் பார்த்து கல்யாணம் என இன்றைய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பணம் சம்பாதிக்கப் போய் நோய் பெற்று, நோயைத் தீர்க்கப் பணம் கொடுத்து என இன்றைய மனிதன் வேலைகளின் விளைவால் இறுதியில் கடன்பட்டே நிற்கிறான். இந்த மாதிரி சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமை கண்ணீரைத் தாண்டிய கொடுமை. 20 வருடங்கள் முன்பு வரை என் அம்மா, என் நண்பனின் அம்மா எல்லோரும் பல குழந்தைகளைப் பெற்று எடுத்தவர்கள். அத்தனையும் சுகப் பிரசவம். இன்று என் சகோதரியின் தோழிகளுக்காட்டும், நண்பர்களின் சகோதரிகளுக்காகட்டும் எனக்குத் தெரிந்த வரையில் சுகப் பிரசவம் என்பதே இல்லை.

ஏவுகணைகளைச் செவ்வாய்க்கு அனுப்பத் தெரிந்த இன்றைய விஞ்ஞானத்திற்கு ஒரு சிசுவை கர்ப்பத்திலிருந்து சுக முறையில் எடுக்கத் தெரியவில்லை. நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது என்பது அடுத்தடுத்த நோய்களுக்கு நாம் எடுத்து வைக்கும் படிக்கட்டு என்று சொன்னால் அது மிகையல்ல.

துரித உணவுகள் தமிழனின் சரிதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. நோய்களுக்குத் தீர்வு மருந்தல்ல. நோயாளியின் நடத்தை. குழந்தையின் பிறப்புக்கு தாய் கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய, குழந்தையின் பிறப்புக்கு தாய்க்கே கருவி தேவைப்படக் கூடாது. கர்ப்பத்தில் அவளுக்கு வேண்டிய முக்கிய மருத்துவம் ஆரோக்கியம் மட்டுமே. உடலுழைப்பு, தியானம், சக்தியிழக்காத காய்கறிகள், பழங்கள், கீரை இவையே வயிற்றிலிருக்கும் சிசுவை வலிமையானதாக்கும். எதையும் சுலபமாக அணுகும் மனம், சிரித்துப் பேசும் குணம் இவையிருந்தாலே நிச்சயமாக ஒரு பெண்ணால் சுகப் பிரசவம் என்னும் சிகரத்தை அடைய முடியும்.

இதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களின் உடம்பில் சுகப் பிரசவம் நிகழ வாய்ப்பில்லாத பல சிக்கல் நிலைகள் இருக்கலாம். அது வேறு. ஆனால், நம்மேல் நமக்கில்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும்?

உடற்பயிற்சிக் கூடம் சென்று உடம்பைக் குறைக்க நாம் மாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயார். ஆனால் ஒரு காசு செலவில்லாமல் ஒரு மணி நேரம் மைதானத்தில் தொடர்ந்து ஓடினால் சில மாதங்களில் உடம்பின் அத்தனைக் கொழுப்பும் இறங்கி அது நாம் இட்டக் கட்டளையை செய்யும். ஆனால், பகட்டாய் வாழ விரும்பும் மனிதன் அதை விரும்புவதில்லை.

பெண்களே! மாற்றுங்கள். நம்பிக்கை ஊசியை உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவிலும் ஏற்றுங்கள். உங்கள் உடற்பயிற்சியை துவங்குங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது அது இருக்கட்டும்.

நீரால் குளிக்கும் முன் வேர்வையால் உடல் கசடுகளைக் கழுவுங்கள். சிரித்து பேசுங்கள். ஓய்வு நேரத்தில் சோம்பேறியாக இருக்காமல் விளையாடியே பொழுதைப் பொன்னாக்குங்கள்.

கீரை, கேழ்வரகு, கம்பு, சோளம் - நம் உடல் நல வரலாறு. கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் இருந்து ஒதுக்காதீர்கள்.

அது உங்கள் கேச நிறத்தையும், பற்களையும் உங்களிலிருந்து ஒதுக்கி விடும். யோகம் வாழ்வின் முக்கிய ஆதாரம். வாழும் முறையை கற்றுக் கொண்டு நடக்காதீர்கள். நடந்து நடந்து கற்றுக் கொள்ளுங்கள்.

No comments: