Blogger Widgets

Total Page visits

Tuesday, October 29, 2013

காதலுக்கு மரியாதை!

இந்திய கலாசாரத்தைப்போல் வேறெங்கும் குடும்ப அமைப்புகளும், கணவன் - மனைவி உறவு முறைகளும், போற்றப்படவில்லை என்னும் எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. அதுவும் தற்போது நம்மில் சிலர் அமெரிக்கக் கலாசாரம் என்றாலே, "யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் எப்படியும் வாழலாம் என்பதே' என்றெண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த எண்ணத்தைத் தகர்த்தெறியும் வகையில் ஒரு வழக்கு அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தின் உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் முடிக்கப்பட்டது.

 ஷாஜகான் மட்டுமே மனைவிக்காக தாஜ்மஹால் கட்ட முடியும் என்பதையும், அமெரிக்காவில் குடும்ப அமைப்புகளுக்கும், அறம் சார்ந்த இல்லற வாழ்க்கைக்கும் மதிப்பில்லை என்னும் கருத்தியலையும், அந்த வழக்கு பொய்ப்பித்துக் காட்டியது. அந்த வழக்கின் சாராம்சம்: அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஸ்டீவென்சன். அந்நகரத்தில், பிராட் தெருவில், கதவு எண் 202-இல் தன் அன்பு மனைவி பாட்சி ரூத் டேவிஸ்-úஸாடு 35 ஆண்டுகளுக்கு மேலாக ஜேம்ஸ் டேவிஸ் என்பவர் வசித்தார். ஜேம்ஸ் டேவிஸ், தனது மனைவி பாட்சியை சந்தித்தபோது, அவருக்கு வயது 11. பாட்சிக்கு வயது ஏழு. அச்சந்திப்பிற்குப் பின், சில ஆண்டுகள் வளர்ந்த நட்பு, காதலாகி, கனிந்து, திருமணத்தில் முடிந்து, காதல் இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்த 48 ஆண்டு கால வாழ்க்கையில், அவ்விருவரும் 35 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த இல்லம் தான் அவ்வில்லம்
 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் நாள் பாட்சி ரூத் டேவிஸ் காலமானார். அவர் காலமாகும் முன், தன் கணவன் டேவிஸிடம், தான் காலமானபின் தன்னை அந்த வீட்டிலேயே புதைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். எனவே ஜேம், டேவிஸ், 2009 ஏப்ரல் 19-ஆம் நாள் ஸ்டீவென்சன் நகராட்சிக்கு ஒரு மனு செய்தார். அந்த மனுவைப் பரிசீலனை செய்யக் கோரி அந்நகராட்சியின் ஆட்சிமன்றக்குழு, அம்மாவட்டத்தினுடைய சுகாதாரத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியது.

 ஒருவரது வசிப்பிடத்திலிருந்து 35 அடியாவது கல்லறை பூமி தள்ளி இருக்க வேண்டுமென்ற காரணத்தால், ஜேம்ஸ் டேவிஸ் தன்னுடைய நுழைவாயில் மண்டபத்தை இடித்தார். அவரது மனுவைப் பரிசீலித்த மாவட்ட சுகாதாரத்துறை ஏப்ரல் 30-ஆம் நாள் "சுகாதாரத் துறையைப் பொறுத்த அளவில், அக்கல்லறையின் அமைவிடத்திற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை' என்று தெரிவித்தது.

 எனவே, ஸ்டீவென்சன் நகரின் நகராட்சிக்குழு, 2009 மே 14-ஆம் நாளன்று கூடி, அப்பொருள் பற்றி விவாதித்தது. சுகாதாரத் துறையினரிடமிருந்து எவ்விதமான மறுதலிப்பும் இல்லையென்ற போதிலும், அக்கம் பக்கம் குடியிருப்போரின் ஆட்சேபணைகள், அந்த இடத்தின் சொத்துகளின் சந்தை மதிப்பு குறையக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதித்த ஆட்சிமன்றக்குழு, அம்மனுவை நிராகரிப்பது என்று முடிவு செய்தது.

 இதைத்தவிர, ஜேம்ஸ் டேவிசின் காலத்திற்குப் பின்னால், ஒருவேளை அந்தக் கல்லறையைப் பராமரிக்கும் சுமை மாநகராட்சிக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் ஆட்சிமன்றக் குழுவினரிடம், மேயரால் தெரிவிக்கப்பட்டது. எனவே, மே 14, 2009 அன்று ஜேம்ஸ் டேவிசின் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சிக் குழுவினரின் தீர்மானத்தை முற்றிலும் புறக்கணித்து விட்டு, ஜேம்ஸ் டேவிஸ் 2009 மே 23-ஆம் நாள் தனது மனைவியின் உடலை தனது சொந்த வீட்டில் முகப்பு மண்டபம் இருந்த இடத்தில், வீட்டின் தோட்டத்திற்குள் புதைத்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன மாநகராட்சிக்குழு, ஜாக்சன் மாவட்டத்தின் உலா நடுவர் குழுவின் முன் (சர்க்யூட் கோர்ட்) ஒரு வழக்கைத் தொடுத்தது.

 அந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள், மாநகராட்சிக்குச் சாதகமாக ஒரு தீர்ப்பை வழங்கியது. தன்னுடைய சொந்தச்சொத்து என்பதாலேயே அச்சொத்தை இடுகாடாக மாற்றக்கூடிய அதிகாரம் சொத்தின் உரிமையாளருக்கு இல்லை என்றும், ஒட்டுமொத்த சமூக நலனைக் கருத்திற்கொண்டு நகராட்சிக்குழு எடுத்த முடிவு சரியானதென்றும் தீர்ப்பளித்த நீதிமன்றம், 30 நாள்களுக்குள் ஜேம்ஸ் டேவிஸ் தனது மனைவியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி முறையான இடுகாட்டில் புதைக்க வேண்டுமென்ற தீர்ப்பை வழங்கியது.

 அத்தீர்ப்பை எதிர்த்து ஜேம்ஸ் டேவிஸ் அலபாமா மாநிலத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம் மேல்முறையீட்டு மனுவை, "விசாரிக்கத் தகுதியற்ற மேல்முறையீடு' என்று கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வருடம் மே மாதம் 4-ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. உடனே, ஜேம்ஸ் டேவிஸ், அலபாமா மாநிலத்தின் உச்சநீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீட்டைத் தொடுத்தார்.  உச்சநீதிமன்றமும் அதை "விசாரிக்கத் தகுதியற்ற மேல்முறையீடு' என்று கூறி, 2013 அக்டோபர் 11-ஆம் நாளன்று தள்ளுபடி செய்தது. இத்தீர்ப்பைப் பற்றிய செய்திக் குறிப்பு, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அக்டோபர் 22-ஆம் நாள், ""வருவது வரட்டும் - வீட்டின் முகப்பு வெளியில்தான் மனைவிக்குக் கல்லறை'' என்ற தலைப்பில் சில சுவையான தகவல்களோடு வெளியானது.

பெருத்த பொருட்செலவிற்குப் பின், மூன்று  நீதிமன்றங்களில் தோல்வியைத் தழுவிய ஜேம்ஸ் டேவிஸ், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப்போல் ஒரு புது வழியைக் கையாள யோசித்திருக்கிறார். அவர் தனது மனைவியின் உடலை மாநகராட்சி அனுமதியோடு மின்சார எரியூட்டு மையத்தில் எரித்துவிட்டு, அதன் சாம்பலை ஒரு குடத்திலிட்டு, வீட்டிற்குள் அதே இடத்தில் புதைத்து விடலாம் என்றும், அப்படிச்செய்தால், நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பிரபல வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில், ஜேம்ஸ் டேவிஸ் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அந்த அறிவுரையைப்பரிசீலனை செய்யும்போது, ஜேம்ஸ் டேவிஸ் குறிப்பிட்டார்: ""உயிருடன் இருக்கும்போது எரியூட்டுவதைப் பற்றி என் மனைவி அச்சப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் தற்போது எரியூட்டுவது அவளுக்கு எந்த வலியையும் தராது என்று எண்ணுகிறேன்''.

 வழக்குரைஞர்கள்தான் நீதிமன்ற தீர்ப்பை முறியடிப்பதற்காக இப்படியொரு உத்தியை டேவிஸ்க்கு கொடுத்தார்கள் என்றால், இரண்டு பாதிரியார்கள் இன்னொரு விதமான உத்தியை அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவருடைய வீட்டை தேவாலயமாக மாற்றிவிட்டால், ஞானஸ்நானங்கள், திருமணங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள் அனைத்தையும் சட்டப்படி அந்த இடத்தில் செய்யும் உரிமை அவருக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

 தற்போது 74 வயதாகும் ஜேம்ஸ் டேவிஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே, தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஒரு குச்சியை நட்டு, அதில் ஒரு பலகையில் கீழ்க்கண்ட வாசகங்களை எழுதியிருந்தார்: "நான் அவளைத் தோண்டி எடுக்கப் போவதில்லை. அவளை அமைதியாக உறங்க விடுங்கள்'.
 2009 ஏப்ரல் 18 அன்று தன் மனைவி இறந்தது முதல் இன்றுவரை, தங்களது படுக்கை அறைக்கே போகாமல், டேவிஸ் தினமும் சாய்வு நாற்காலியிலேயே உறங்குகிறார். தனது வழக்கு விசாரணையில் இருந்தபோது, மாநகராட்சியின் முடிவை மாற்றும் எண்ணத்தில், டேவிஸ், மேயர் பதவிக்காக தேர்தலிலும் போட்டியிட்டுப் பார்த்தார்.

 நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், வருத்தத்தோடும், பெருமையோடும் டேவிஸ் சொன்னார்: "எங்களைப் போல் காதலர்கள் இதுவரை இருந்ததில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கவே படைக்கப்பட்டவர்கள்'. தன் மனைவியைப் புதைத்த இடத்திற்கு அருகிலேயே, ஜேம்ஸ் டேவிஸ், தனக்கும் ஒரு கல்லறையைத் தயாரித்து விட்டார்.

 தனது ஆட்சியின் ஆளுமைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் எங்கு வேண்டுமானாலும் தனது அன்பு மனைவியாகிய மும்தாஜுக்குக் கல்லறை கட்டும் அதிகாரம் ஷாஜகானுக்கு இருந்தது. எந்த மாநகராட்சியின் ஆட்சிமன்றக் குழுவும், ஷாஜகானுக்கு அன்று அனுமதி மறுத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி மறுத்திருந்தால், அந்த ஆட்சிமன்றக் குழு நீடித்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால், அப்படிப்பட்ட வாய்ப்போ, அதிகாரமோ, வசதியோ இல்லாத அலபாமா மாநிலத்தின், ஸ்டீவென்சன் நகரக் குடிமகனான ஜேம்ஸ் டேவிஸ் மறைந்து போன தனது காதல் மனைவிக்காக நடத்தும் போராட்டத்தை ஒப்பிடும்போது, மாமன்னன் ஷாஜகானும், தாஜ்மகாலும் அதற்கு முன்னே எம்மாத்திரம்!

இப்படிப்பட்ட ஷாஜகான்கள் இருப்பதால்தான் காதலுக்கு இன்றும் மரியாதை தரப்படுகிறது. 14லிலும், 24லிலும் இருப்பதல்ல காதல். 74லிலும் தொடரும் ஜேம்ஸ் டேவிஸின் காதலே உண்மையான காதல்!

கட்டுரையாளர்: நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.

No comments: