Blogger Widgets

Total Page visits

Wednesday, October 2, 2013

குடும்பத்தோடு ஒன்றி வாழுங்கள்

பிள்ளைகள் தற்போதெல்லாம் நன்கு படித்துவிட்டு நல்ல வேலைக்கு சென்றதுமே குடும்பத்தில் இருந்து சற்று விலகி வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். சில பிள்ளைகள் தங்களது உண்மையான சம்பளம் எவ்வளவு என்று கூட பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்.

பிள்ளைகள் பிறந்தது முதல் வளர்த்து படிக்க வைத்து நல்ல பணியில் சேரும் வரை அனைத்து செலவுகளையும் பெற்றோர் பார்த்து பார்த்து செய்யும் போது, அவர்களது உண்மையான சம்பளம் என்ன என்று சில பெற்றோர் அவர்களது நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள நேரிடுகிறது.

இது, கூட்டுக் குடும்பங்களாக இருந்து தனிக் குடும்பங்களாக மாறியதன் பின் விளைவுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எவ்வாறு ஒரு மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக சுதந்திரமாக வாழ நாம் ஆசைப்பட்டோமோ, அதுபோல, பெற்றோரிடம் இருந்து பிரிந்து அவர்களது இஷ்டப்படி வாழ நமது பிள்ளைகளும் பிரியப்படுகிறார்கள்.

கணவரோ, மனைவியோ இருவருமே அவர்களது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். அதுபோல, மனைவியின் குடும்பத்தோடும் நல்ல முறையில் பழக வேண்டும். மனைவியையும் அவளது தாய், தந்தை வீட்டுக்குச் செல்லவும், அவர்களது சகோதர, சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

சில மனைவிகள் தங்களது குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு, கணவரின் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். அவ்வாறு இல்லாமல், பெண்கள் தங்களுக்கு உள்ள சமூக அக்கறையை கருத்தில் கொண்டு கணவரது பெற்றோரையும் தம் பெற்றோர் போல காக்க வேண்டும். தனிக் குடும்பங்களாகப் பிரிந்தாலும், சில நல்ல, கெட்ட காரியங்களுக்கு ஒன்று கூடி, சகோதரத்துவத்தை நிலைநாட்டினால், நமது பிள்ளைகளுக்கும் குடும்பங்கள் மீதான ஒரு நம்பிக்கை மற்றும் பற்றுதல் ஏற்படும்.

அவர்களைப் பற்றிய அக்கறை பெற்றோருக்கு மட்டும் அல்லாமல், அவரது சித்தப்பா, பெரியப்பா, அத்தை மாமாக்களுக்கும் உள்ளது என்பது அவர்களை குடும்பத்தில் இருந்த விலகிச் செல்ல விடாமல் தடுக்கும்.

எனவே, கூட்டுக் குடும்ப முறையை மறந்து விட்ட பலரும், தனிக் குடும்பங்களையாவது குடும்பங்களாக வைக்க போராடுவோம். குடும்பங்களாக இருப்போம்.. இதில் பெண்களின் பங்கு அதிகம் என்பதை நினைவில் வைப்போம்.

No comments: