Blogger Widgets

Total Page visits

Wednesday, October 2, 2013

விலை வாசி உயர்வை சமாளிக்க...

ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் வெளிக் காரணிகளில் விலைவாசி உயர்வும் முக்கியமானதாகும். எப்போதும் இருக்கும் செலவுகளையே சமாளிக்க பல குடும்பங்கள் அல்லல்படும் போது இந்த விலை வாசி உயர்வு அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடுகிறது.

அதனை சமாளிக்க ஒரு சில வழிமுறைகளை நாம் கையாளலாம்.

சிறிய சேமிப்பு

திடீரென ஏற்படும் விலை வாசி உயர்வை சமாளிக்க ஒவ்வொரு குடும்பமும், ஒரு சிறு தொகையை சேமிப்பாக வைக்கலாம். காய்கறி, மளிகை, மின்சாரம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகையை ஒதுக்குவது போல, சேமிப்புக்கு என்று அவரவர்களால் முடிந்த தொகையை சேமித்து வைக்கலாம். திடீரென இதில் ஏதாவது ஒன்றின் விலை திடீரென உயரும் போது, இந்த சேமிப்புத் தொகையில் இருந்து எடுத்து பயன்படுத்தலாம். இதனால், குடும்பத்தின் மாதச் செலவு பெரிதாக பாதிக்காது.

தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்

சில மாதங்களில் குறிப்பாக கோடை காலத்தில் மின்சார கட்டணம் அதிகரிக்கும். சில மாதங்களில் காய்கறிகளின் விலை அதிகரிக்கும். விடுமுறை காலத்தில் உறவினர்கள் வீடுகளுக்கு வந்து செல்லும் போது மளிகைக்கான தேவை அதிகரிக்கும். இதுபோலவே, விலை வாசி உயர்வும். இதனை சமாளிக்க தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். ஒரு பொருளை வாங்கும் போது, அது உங்களுக்குத் தேவையா அல்லது உங்களுக்குப் பிடித்ததா என்று கேள்வி எழுப்புங்கள். தேவை என்றால் வாங்குங்கள். பிடித்தது என்றால் அதனை தள்ளிப்போடுங்கள். கடைக்குச் செல்லும் போது தேவையான பொருட்களை வீட்டிலேயே பட்டியலிடுங்கள். அதை மட்டும் வாங்கி வாருங்கள். இதனால் தேவையற்றப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கலாம்.

தேவையான செலவுகளை குறைக்கலாம்

தேவையான செலவுகளை எவ்வாறு குறைக்க முடியும் என்று கேட்கலாம். மனமிருந்தால் மர்கமுண்டு. அதுபோல, சின்ன சின்ன செலவுகளைக் கூட கவனத்தோடு கையாண்டால் குறைக்க முடியும். செல்போன், இன்டர்நெட், கேபிள் கட்டணங்களுக்கான சேவைகளை கவனத்தோடு ஆராய்ந்து, அதில் மிகக் குறைந்த கட்டணத்தில் உள்ள சேவையை பெற்று அந்த செலவைக் குறைக்கலாம். மின்சாரத்தை சிக்கனமாகக் கையாண்டு மின்சார செலவைக் குறைக்கலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மோட்டருக்கான மின் கட்டணத்தை குறைக்கலாம். அருகில் உள்ள கடைகளுக்கோ, கோயில்களுக்கோ செல்லும் போது வண்டியில் செல்லாமல் நடந்து செல்வதால் பெட்ரோல் செலவைக் குறைக்கலாம்.

வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகள்

செலவுகள் எப்போதுமே அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். குறையப்போவதில்லை. ஆனால், அதற்கேற்ப நமது வருமானம் அதிகரிக்காது. எனவே, நமது வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்மணிகள் வீட்டில் இருந்தவாறே கைத்தொழில் ஏதேனும் ஒன்றை செய்து உங்களது பொன்னான நேரத்தை சம்பாதிக்க பயன்படுத்த வேண்டும். தையல், டியுஷன், பொருட்களை வாங்கி விற்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். அதுபோல, வேலைக்குச் செல்வோரும், கூடுதலாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்து அது மிகச் சிறிய தொகையாக இருந்தாலும், சம்பாதிக்க முயற்சிக்கலாம். அது உங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையலாம். இதுபோல உங்களது வருமானத்தைப் பெருக்க வழிகளை செய்ய வேண்டியதும் அவசியம்.

No comments: