Blogger Widgets

Total Page visits

Sunday, September 15, 2013

சட்டத்தைத் திருத்துங்கள்!

கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, தில்லி துணை மருத்துவ மாணவி, ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் கொலையான சம்பவம் இந்தியா முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல தரப்புகளிலும் எதிர்வினைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இளம் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது சிறார் நீதிமன்றம்.

நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், இத்தனை விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்குக் காரணம், இது விரைவு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது என்பது மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது என்பதால்தான்!

வழக்கு விசாரணை மிக விரைவாக நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டதில் பலருக்கும் மகிழ்ச்சி என்றாலும்கூட, இளம் குற்றவாளிக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கியிருப்பது, கொலையான மாணவியின் குடும்பத்தார் மட்டுமின்றி, பலரும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

இளம் குற்றவாளி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நாளில் அவரது வயது பதினேழரை ஆண்டுகள். 18 வயதுக்கு குறைந்தவர்கள் அனைவரும் சிறார்கள் என்று சட்டம் சொல்கிறது. ஆகவேதான் இந்த இளம் குற்றவாளியை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியதாயிற்று. தற்போது வழங்கப்பட்டுள்ள தண்டனையான மூன்று ஆண்டுகள் என்பது சிறார் நீதிமன்றம், இளம் குற்றவாளிகளுக்கு அளிக்கும் அதிகபட்ச தண்டனை! அதிலும் இப்போதே எட்டு மாதங்கள் சிறையில் முடிந்து விட்டது.

சிறார்களுக்கான சிறையில் இந்தக் குற்றவாளி மிக நல்லவராக நடந்துகொண்டால், தண்டனை குறைக்கப்படும் என்று அவரது வழக்குரைஞர் சொல்கிறார். ஆகவே, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் விடுதலை பெறுவது என்பதுகூட சாத்தியம்தான்.

18 வயது பூர்த்தி அடைய 6 மாதங்கள் இருக்கின்றன என்பதனாலேயே இந்த இளம் குற்றவாளியை, சிறுவனாகக் கருதி, சிறார் நீதிமன்றத்தில் விசாரித்து, மிக சிறிய அளவிலான தண்டனையை வழங்குவது சரியானதுதானா? இந்தக் குற்றவாளி செய்துள்ள குற்றம், ஒரு சிறுவன் செய்யக்கூடியதா? மாணவியை வல்லுறவு கொண்டதோடு, இரும்புக் கம்பியால் அடிவயிறைத் தாக்கியவரும் இவரே என்று கூறப்படுகிறது. இவரது செய்கை ஒரு சிறுவனுக்கு உரியதா?

தில்லி மாணவி வழக்கில் மட்டுமல்ல, தற்போது மும்பை புறநகர்ப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் புகைப்படக்கலைஞர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் ஒருவர் 18 வயது நிரம்பாதவர். அவரையும் சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிப்பார்கள். அவருக்கும் அதிகளவு தண்டனையாக மூன்று ஆண்டுகள்தான் வழங்கப்படும். அவரும் சிறையில் நன்னடத்தை காரணமாக விரைவிலேயே வெளியே வந்துவிடுவார். இது எந்த வகையில் நியாயம்?

சிறார்கள் விவரம் தெரியாமல், அல்லது விளைவுகளை அறியாமல் செய்த குற்றங்களுக்காக, பெரியவர்களுக்கு வழங்கப்படும் அதே தண்டனையை வழங்குவது கூடாது என்ற நல்லெண்ணத்தினால் சிறார் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. சிறைக்கூடம்போல இல்லாத வகையில் சீர்திருத்தப்பள்ளி அமைக்கப்பட்டது. ஆனால், செய்யும் குற்றம் இத்தகையது எனத் தெரிந்தே அதில் ஈடுபடுபவர், 18 வயது நிரம்பவில்லை என்பதற்காக மட்டும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தித் தப்பித்துவிடுவது முறைதானா?

அண்மைக்காலமாக, பாலியல் அத்துமீறல், வன்கொடுமை, வல்லுறவு வழக்குகளில் சம்பந்தப்படும் பலரும் 18 வயது நிரம்பாதவர்களாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இந்நிலையில், 18 வயது நிரம்பாதவர் சிறார் என்கிற வரன்முறை எந்தெந்த வழக்குகளில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

18 வயது நிரம்பாதவர் சிறார் என்று கருத வேண்டிய கட்டாயம் இன்றைய வாழ்க்கைச்சூழலில் மிகச் சில நேர்வுகளில் இன்னமும் இருக்கவே செய்கிறது.
இளவயது திருமணங்களைத் தடுத்து நிறுத்த இந்த வரன்முறை அவசியம். மணமகள் 18 வயது பூர்த்தியாகவில்லை என்றால், அவரைச் சிறாராகக் கருதலாம். திருமண ஏற்பாடு செய்த தந்தை, மணமகன் வீட்டாரைக் கைது செய்து வழக்கு தொடுக்கலாம். வங்கிக் கணக்குகளில், சொத்து நிர்வாகத்தில் மேஜர் என்ற தகுதியைப் பெறுவதற்கும், கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெறுவதற்கும் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவசியமானது.

சிறு திருட்டில் ஈடுபடுவோர் 18 வயது நிரம்பாதவர் என்றால், அவரை சிறாராகக் கருதி, தண்டனையைக் குறைத்து வழங்குவதில் பாதகம் இல்லை. சில நேரங்களில் சிறார்கள் கொலை செய்வதும்கூட நடக்கிறது. அவை மிக மிக அரிது. அதையும்கூட அறியாப்பருவம் என்று கருத இடமுண்டு. ஆனால் வல்லுறவை அறியாப்பருவக் குற்றமாக கருதவே முடியாது.

இணையதளம், திரைப்படம், செல்போன், தொலைக்காட்சி, வணிக விளம்பரங்கள் என எல்லாமும் பாலியல் உணர்வுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்க, சிறார்கள் எந்தத் தடையும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க, வல்லுறவு வழக்குகளிலும்கூட 18 வயதுவரை சிறுவன் என சொல்லிக்கொண்டிருப்பது சரியல்ல.

"18 வயது நிரம்பாத பெண், தனது சுயவிருப்புடன் ஒரு ஆணின் உடல்இச்சைக்காக இணக்கம் தெரிவித்திருந்தாலும்கூட, அவள் சிறார் என்ற நிலையைக் கடக்கவில்லை என்பதால், அந்த ஆண் அவரை வல்லுறவு கொண்டதாகவே பொருள்; அதற்கான தண்டனையை விதிக்கலாம்' என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் விளக்கம் தந்தது.

அதேபோன்று, 18 வயது நிரம்பாத ஆண், வல்லுறவில் ஈடுபட்டால், அவரை சிறுவனாகக் கருத வேண்டியதில்லை என்றும் வழக்கமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னைக்கும் ஒரு முடிவு கட்டவேண்டும். விளக்கம் தர வேண்டும்.

No comments: