Blogger Widgets

Total Page visits

Friday, September 27, 2013

குலையலாமா குடும்ப அமைப்பு?

நமது தமிழ்நாடு 1,30,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பையும் 7 கோடியே 21 லட்சம் மக்கள் தொகையையும் கொண்டது. தமிழ்நாட்டின் அடிப்படை ஆதாரமாக இருப்பது சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள்தான். மிக முக்கியமான இந்த அடிப்படையைச் சிதைக்கும் ஆபத்துகளை யாரும் இப்போது அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை; குடும்பம் எனும் அமைப்பின் தேவை அழுத்தமாக உணரப்படவும் இல்லை.

மேலை நாடுகளுக்கும் நமது நாட்டுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு, நாம் குடும்பத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம்தான். மேலை நாடுகளில் தனி மனிதர்களே முதன்மையானவர்கள். ஆனால், நம்முடைய சமூகம் அப்படி அல்ல. பாரம்பரியமாகவே நமது குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை கொண்டு வாழ நாம் கற்றிருக்கிறோம்.

உலகின் பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம் முதன்மையானதாக இல்லை. ஆனால் வெளிநாடுகளில் சம்பாதித்து, தன் நாட்டிற்கு பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர்கள் நமது இந்தியர்கள்தான். 2010-ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பிய பணம் மூன்று லட்சம் கோடி ரூபாய் என்கிறது புள்ளிவிவரம். இது அரசாங்கம் நீட்டி முழக்கும் நேரடி அன்னிய முதலீடுகளைவிட அதிகமானதாகும்.

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை'

என குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இப்படி, காலம் காலமாக நாட்டின் வளமாகவும், அடிப்படையாகவும் இருந்துவரும் குடும்ப அமைப்பு முறை தற்போது பெரும் ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது.

சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப்படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும் குடும்பம்தான். குடும்பத்தை எதற்காக இயற்கையான அமைப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அது காலம் காலமாக இருக்கிறது. அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்தே குடும்பம் இருக்கிறது.

சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், சமூக ஒற்றுமை என எல்லாமும் குடும்பத்தினால்தான் கற்பிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பணம், பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான தேவைகளை குடும்பம்தான் நிறைவு செய்கிறது. குறிப்பாக குழந்தைகளும், முதியோரும் குடும்பத்தின் ஆதரவில்தான் வாழ்கிறார்கள்.

பொருளாதார உற்பத்திக்கு அடிப்படையாக இருப்பது குடும்பம்தான். வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்குவதில் குடும்பங்கள்தான் முன்னிலையில் உள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் இடமும் குடும்பம்தான். எனவே நாட்டின் ஒட்டுமொத்த பொளாதாரமும் குடும்பத்தையே மையமாக வைத்தே இயங்குகிறது.

உலக அமைதி, வறுமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என நல்ல இலக்கு எதை எடுத்துக் கொண்டாலும் அதன் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம்தான்.

1948-ஆம் ஆண்டு உலகம் ஏற்றுக்கொண்ட முக்கியமான மனித உரிமை ஆவணமான பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) குடும்பத்தின் தேவையை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. குடும்பம் என்பது இயற்கையான மற்றும் சமூகத்தின் அடிப்படைக் குழுவாக இருக்கிறது; அரசாலும் சமூகத்தாலும் பாதுகாக்கப்படும் உரிமையை குடும்பம் பெற்றிருக்கிறது ('The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State') என்று கூறியுள்ளது.

குழந்தை வளர்ப்பும், கல்வியும் பெருமளவுக்கு குடும்பத்தின் பணிகளாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்த முதல் பத்தாண்டுகளில் எல்லோருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்கிற அரசியல் சாசனக் கடமையை இன்று வரை அரசாங்கங்கள் தவறவிட்டு வரும் நிலையில், குடும்பங்களே அந்தக் கடமையை சுமந்து வருகின்றன. மேலை நாடுகளில் இதுபோன்ற பொறுப்புகளை பெருமளவுக்கு அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன.

குழந்தைகளின் கல்விக்காக செலவிடுதல் மட்டுமின்றி, அவர்களை பொறுப்பாக கவனித்து கல்வி கற்பிப்பதிலும், அவர்களது திறனை வளர்ப்பதிலும் குடும்பத்தினர் பெரும் பங்கினை ஆற்றுகின்றனர். எனவே, தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் குடும்பமே பெரும் பொறுப்பை வகிக்கிறது எனக் கொள்ளலாம்.

மருத்துவத்திற்காக குடும்பங்களே அதிகம் செலவிடுகின்றன. இந்தியாவில் மருத்துவத்திற்காக செலவிடப்படும் பணத்தில் 90 விழுக்காட்டிற்கு மேல் குடும்பத்தின் செலவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மருத்துவ செலவுகள் அரசின் கடமையாக இருக்கும்போது, நம் நாட்டில் அது குடும்பத்தின் கடமையாக விடப்பட்டுள்ளது.

இப்படியாக கல்வியிலும் மருத்துவத்திலும் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் இங்கு குடும்பங்களே சுமக்கின்றன. குடும்ப அமைப்பு சிதையுமானால் இவை எல்லாம் அரசின் பொறுப்பாக மாறும். அத்தகைய பொறுப்புகளை ஏற்கும் நிலையில் நம்முடைய அரசுகள் இல்லை.

இங்கு பொருளாதாரம், சமூக வாழ்க்கை, பாதுகாப்பு, பண்பாடு எல்லாமும் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடும்ப அமைப்பின் அச்சாணியாக இருப்பது திருமணம். எனவே, திருமணத்தை இரு நபர்களின் தனிப்பட்ட விடயமாக மட்டுமே பார்க்க முடியாது.

அண்மைக் காலங்களில் மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்ற பாலியல் சுதந்திரம், திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களை ஊக்குவித்தல் என்பன தமிழ்நாட்டில் பேசப்படுவதன் வாயிலாக குடும்ப அமைப்புக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (Organisation for Economic Co-operation and Development) 34 முன்னேறிய நாடுகள் இணைந்துள்ளன. ஓ.இ.சி.டி நாடுகள் எனப்படும் இந்த நாடுகள் பெரும்பாலான பாலியல் சுதந்திரக் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. குடும்பத்தை விட தனி நபர்களின் மகிழ்ச்சி முக்கியம் என கருதும் இந்த நாடுகளில் குடும்பங்களின் அழிவால் நேர்ந்துள்ள கேடுகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க முடியும்.

ஓ.இ.சி.டி நாடுகளில் 25 முதல் 49 வயதுள்ள பெண்களில் 20 விழுக்காட்டினர் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதையே நாகரிகம் என்று கருதுவதால் இப்போக்கு நேர்ந்துள்ளது. இந்த நாடுகளில் திருமணங்கள் நடைபெறும் அளவு குறைந்து விட்டது. எத்தனை திருமணங்கள் நடக்கின்றனவோ, அதற்கு இணையான அளவில் விவாகரத்துகள் நடப்பதும் இயல்பானதாகிவிட்டது. ஆக, திருமணமான கணவன் - மனைவி கடைசி வரை இணைந்து வாழ்வது அங்கு அரிதான ஒன்றாகிவிட்டது.

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதும் அந்த நாடுகளில் இயல்பானதாக ஆகிவிட்டது. வாரக் கடைசி நாள்களில் மட்டும் சேர்ந்து இருப்போம் - ஆனால் தனித்தனி வீடுகளில் வாழ்வோம் - என்கிற வகையில் திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறை அங்கெல்லாம் மிக அதிகமாக உள்ளது. இதனால் திருமண பந்தத்திற்கு வெளியே குழந்தை பெறும் அளவு மிக அதிகமாகிவிட்டது.

ஓ.இ.சி.டி நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் திருமணம் செய்யாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளின் அளவு 1980-ஆம் ஆண்டில் 11 விழுக்காடாக இருந்தது. இது 2007-ஆம் ஆண்டில் 33 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ஒற்றைப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, திருமணம் செய்யாத பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, தாயோ தந்தையோ வேறொருவரைத் திருமணம் செய்வதால் மாற்றுப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது போன்ற துயரம் மிகுந்த மனச்சூழலில் குழந்தைகள் வளரும் போக்கு அங்கு அதிகமாகிவிட்டது.

தனது இயற்கையான பெற்றோருடன் வாழும் குழந்தைகள் மற்ற மாணவர்களைவிட அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர். நல்ல வேலைகளில் அமர்கின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் இவர்களிடம் குறைவாகவே இருக்கிறது. திருமண பந்தத்திற்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் இந்த விடயங்களில் கணிசமாக மாறுகின்றனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவிடும் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் பணத்தில் முக்கால் பங்கு ஒற்றைப் பெற்றோருக்கும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோருக்கும் செலவிடப்படுகிறது.
அதாவது மேலை நாடுகளின் அரசாங்கத்தின் மிகப்பெரிய செலவு என்பது குடும்ப அமைப்பு மற்றும் திருமணத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சமாளிக்கவே செலவிடப்படுகிறது.

குடும்பம், திருமணம், பாலியல் உரிமை போன்ற விடயங்களில் மேலை நாடுகள் என்னென்ன தவறுகளைச் செய்தனவோ, அதே தவறுகளை நாம் செய்துவிடக் கூடாது.

காதல் திருமணங்களை எதிர்க்கக் கூடாதுதான். ஆனால் காதல் என்கிற பெயரில் சிறுவர், சிறுமிகளின் வாழ்க்கை சீரழிந்து போவதையும் அனுமதிக்கக் கூடாது.

பதின்வயது எனப்படுகிற 20 வயதுக்கும் கீழான காலம் மனித வாழ்வில் மிக முக்கியமான காலம் ஆகும். குழந்தைகள் அமைப்பான யூனிசெப் இதனை "வாய்ப்புகளின் காலம்" என அழைக்கிறது. ஏனெனில் இந்த வயதுதான் கல்வி, தொழில் திறமைகள் போன்ற எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொள்ளும் வயதாகும்.

"ஹார்மோன் இம்பேலன்ஸ்" எனப்படும் வகையில் மனம் எளிதில் அலைபாய்ந்து தடம்மாறும் வயதாகவும் பதின்வயது இருக்கிறது. எனவே, அவர்கள் வாழ்வில் வழிதவறிப் போய்விடாமல் காக்கும் கடமை சமூகத்திற்கு உண்டு.

குடும்ப வன்முறை, பெற்றோர், கணவன், உறவினர் என சொந்தங்களினால் மனித உரிமை மீறல்கள் நடப்பது - என குடும்பம் என்கிற அமைப்புக்குள் இருக்கின்ற கேடுகள் களையப்பட வேண்டும். ஆனால், அதற்காக அந்த அமைப்பையே சிதையச் செய்யும் காரியங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்வது பெருங் கேடுகளையே விளைவிக்கும்.

காதல், திருமணம், தலைமுறையினருக்கு இடையேயான உறவு, குழந்தைகள் மற்றும் முதியோரின் நலன், சமூக உறவுகள், பண்பாடு என பல நிலைகளிலும் குடும்ப அமைப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

குடும்பம், அரசுக்கு முந்தையது; அரசை விட மேலானது; இயற்கையானது. குடும்ப அமைப்பை அழியாமல் காப்பாற்றி அடிப்படை மனித உரிமைகளையும், ஜனநாயகப் பண்பையும் போற்றி வளர்ப்பதில் குடும்பங்கள் முக்கிய பங்கினை ஆற்ற அனைவரும் வழிவகுக்க வேண்டும். இதுவே இன்றைய உடனடித் தேவையாகும்.

கட்டுரையாளர்: நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி.

No comments: