Blogger Widgets

Total Page visits

Wednesday, November 6, 2013

வேண்டாத அழைப்புகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அத்தியாவசியமானவையாக நேற்று வரை கருதப்பட்டன. ஆனால் இன்று அவற்றைத் தாண்டி மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படுவது செல்போன்தான். செல் இல்லாதவர் செல்லாதவர் என்றே கூறலாம்.

ஒரே செல்போனில் இரு சிம்கார்டுகளை பயன்படுத்தும் நவீன வசதிகளும் வந்துள்ளன. இந்த செல்போன்கள் எந்த அளவுக்கு தகவல் பரிமாற்றத்துக்கு உபயோகமாகிறதோ அதே அளவுக்கு இவற்றால் பல்வேறு பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பணம் மற்றும் நேரம் வீணாவதோடு பல்வேறு தொல்லைகளும் வருகின்றன.

ஆரம்ப காலங்களில் குறுந்தகவல்களில் பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்தன. ஒரு சில நிறுவனங்களில் குறுந்தகவல்களுக்கு பதில் அளித்தால் அவர்கள் தொடர்ந்து பாடல்கள், ஜோக், படம் அனுப்புவது போன்ற வசதியையும் அளித்து அதற்கு கட்டணமும் வசூலித்தனர். தொடர்ந்து குறுந்தகவல்கள் வந்ததால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேவையில்லாத குறுந்தகவல்கள் வருவதைத் தடுக்கும் விதத்தில் குறுந்தகவல்களைத் தடுக்க வழிமுறைகள் செய்யப்பட்டன. 

அதற்கு அடுத்தபடியாக கணினியில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் செல்போன்களுக்கு வரத்தொடங்கின. அந்த அழைப்புகளை ஆன் செய்தால் கணினியில் பதிவு செய்யப்பட்ட குரல் பேசும். அதில் பல திரைப்பட பாடல்கள் ஒலிக்கும்.  இந்தப் பாடலை உங்கள் செல்போனின் ரிங்டோனாக வைத்துக் கொள்ள இந்த எண்ணை அழுத்துங்கள் என அந்தக் குரல் வழிகாட்டும். அதனைப் பதிவு செய்தால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் அவர்கள் நிர்ணயித்துள்ள தொகை பிடித்தம் செய்யப்படும்.  இவ்வாறான செல்போன் அழைப்புகளால் வாடிக்கையாளர்கள் பணச் செலவு உள்பட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள்.

தற்போது பல்வேறு செல்போன் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அந்தந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுடைய செல்போன் எண்களின் பட்டியலை விலை கொடுத்து வாங்கி, அதன் மூலம் தங்களுடைய பொருள்கள் சம்பந்தமாகவும், சேவை சம்பந்தமான விவரங்களையும் குறிப்பிட்ட நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் ஆண் அல்லது பெண் செல்போன் வாடிக்கையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விளக்கி பேசுவார்கள்.

அந்த வாடிக்கையாளர் தன்னுடைய பணியிலோ, பயணத்திலோ, அலுவல் ரீதியான கூட்டத்திலோ இருக்கும் நேரத்தில் அவருடைய செல்போனுக்கு அழைப்பு வரும்.  அந்த வாடிக்கையாளரின் நிலைமையை சற்றும் அறியாமல் மறுமுனையில் வளவளவென பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

செல்போனை துண்டிக்க நினைத்தாலும், விடாமல் அவர்கள் பேசுவர். அவர்கள் சொன்ன பேச்சை நம்பி, தங்களது வங்கிக் கணக்கை சொல்லி கிரெடிட் கார்டு போன்ற வசதிகளைப் பெறுவோரும், அவர்கள் அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டங்களில் சேருவோரும் தங்களது பணத்தை இழப்பதுதான் மிச்சம்!

இந்தப் பிரச்னையாவது பரவாயில்லை. சிலருக்கு அவர் எந்த ஒரு நிறுவனத்தின் திட்டத்திலும் உறுப்பினராக ஆகாதபோதே பணம் மட்டும் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்தவர்கள் எவர் என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் செல்போன் நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களின் பட்டியலை விலைக்கு விற்பதுதான். அதனால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள்தான்.

பணி நேரத்தில் அநாவசியமான செல்போன் அழைப்புகளால், கால விரயம், பண விரயம் என பல்வேறு இன்னல்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளாகின்றனர். இவ்வாறு விளம்பர அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டால் திரும்பத்திரும்ப போன் செய்து தொல்லை கொடுக்கின்றனர். ஒரு முறை பதில் அளித்துவிட்டுஅடுத்த முறை அந்த அழைப்பை ஆன் செய்யாமல் விட்டுவிட்டால், வேறு எண்ணில் தொடர்பு கொள்கின்றனர். குறிப்பிட்ட அந்த எண் அழைப்பு வந்தால் அதைத் தடுக்கும் முறைகள் இருந்து அதைப் பயன்படுத்தினாலும் வேறு எண்கள் மூலம் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வளவு தொல்லைகளையும் சகித்துக்கொண்டு தங்களுடைய பணத்தையும் செலவு செய்து நிறுவனங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் இளிச்சவாயர்களாகவும், பணம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரங்களாகவும் வாடிக்கையாளர்கள் கருதப்படுகின்றனர். இவ்வாறான தொல்லை தரும் அழைப்புகள் சம்பந்தமாக வாடிக்கையாளர்கள் எவருக்கும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக நேரமில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அவர்களுக்குள்ளேயே பல பிரச்னைகள். அதனால் இத்தகைய தொல்லைகளை தொடர்ந்து சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர்.

வாடிக்கையாளருக்கு அறிவிக்காமல் அவருடைய எண்ணை மூன்றாம் நபருக்கு பணம் பெற்றுக் கொண்டு அளிப்பது குற்றமே. முதலில் இதைத் தடுக்க வேண்டும்.  அப்போதுதான் செல்போன் வாடிக்கையாளர் இத்தகைய தொல்லைகளில் இருந்து தப்புவார்கள்.

No comments: