Blogger Widgets

Total Page visits

Wednesday, November 20, 2013

மனம் ஒப்பவில்லை!

தனது 200ஆவது டெஸ்ட் பந்தய விளையாட்டை முடித்த கையோடு ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, அவரது சாதனைகளைப் பாராட்டும் விதத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருதான "பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு.

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் சரித்திரத்திலும் அழியாப் பெயரும் பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. முதன் முதலாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நூறு முறை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. 17 தடவை டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை சச்சினுடையது. 62 முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்ட பெருமை சச்சினுடையது. டெஸ்ட் பந்தயங்களில் உலகிலேயே மிக அதிகமான ரன்களை (15,921) எடுத்த பெருமை சச்சினுடையது. ஒருநாள் கிரிக்கெட் பந்தயங்களில் மிக அதிகமான ரன்களை (18,426) எடுத்த பெருமை சச்சினுடையது. டெஸ்ட் போட்டிகளிலும் (51), ஒருநாள் போட்டிகளிலும் (49) மிக அதிகமாக சதமடித்த பெருமை சச்சினுடையது. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளைப் பட்டியலிடுவதாக இருந்தால் ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும்.

24 ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200ஆவது டெஸ்ட் ஆட்டத்தை முடித்த கையோடு, ஓய்வு பெறுவதாக அறிவித்தது பாராட்டுக்குரியது. இந்த சாதனையை எட்ட வேண்டும் என்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபிறகும் சௌரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்தர் சேவாக், அனில் கும்ப்ளே, மகேந்திரசிங் தோனி ஆகியோரின் குழுவில் அவர் தொடர்ந்து ஆடி வந்தார். நினைத்ததை சாதிக்கவும் செய்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் என்கிற முறையில் சச்சினின் விடாமுயற்சி, சாதனை புரிய வேண்டும் என்கிற முனைப்பு, அற்புதமான விளையாட்டு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காக, அவருக்கு 1994இல் அவரது கிரிக்கெட் சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வழங்கப்பட்டபோதும், 1998இல் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ராஜீவ்காந்தி "கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டபோதும், 1999இல் பத்மஸ்ரீ விருது தரப்பட்ட போதும், 2008இல் பத்ம விபூஷண் கொடுக்கப்பட்டபோதும், ஏன், அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதும் கரவொலி எழுப்பி மகிழ்ந்ததுபோல, "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பாராட்டி மகிழ மனம் ஒப்பவில்லை.

"பாரத ரத்னா' விருது என்பது சாதனைகளுக்காக வழங்கப்படும் விருது அல்ல. சாதனையாளர்களின் சமுதாயப் பங்களிப்புக்காக வழங்கப்படும் விருது. அன்னை தெரசாவுடையது சாதனையல்ல, சேவை. "இசைக் குயில்' எம்.எஸ். சுப்புலட்சுமி தலைசிறந்த கர்நாடக இசைக்கலைஞர் என்பதற்காக விருது வழங்கப்படவில்லை. எத்தனை எத்தனையோ சமுதாய நல, மக்கள் நல்வாழ்வு முயற்சிகளுக்குத் தனது இசையின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், அரசுக்கும் நிதி வசூலித்துக் கொடுத்த சேவைக்கு வழங்கப்பட்ட விருது. காமராஜுக்கும், எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் அரசியல் காரணங்களுக்காக விருது வழங்கப்பட்டது என்று சிலர் குறை கூறினாலும், அவர்கள் இறந்தும் பலரது மனதில் வாழ்கிறார்கள் என்பதால், அவர்களுக்குத் தரப்பட்ட விருதில் நியாயம் இருக்கிறது. அவர்களது சமுதாயப் பங்களிப்பை காலம் வழி மொழிந்திருக்கிறது.

சர்தார் வல்லபபாய் படேல் மறைந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் காலமாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகும்தான் நிஜமாகவே சமுதாயப் பங்களிப்பு நல்கிய அந்தப் பெருந்தகைகளுக்கு உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கருக்கு அவரது 200ஆவது டெஸ்ட் சாதனை முடிந்ததும் இந்த விருதை 40 வயதிலேயே வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதற்காக, விருதுக்கான நிபந்தனைகளே தளர்த்தப்பட்டிருக்கிறதே, அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சச்சின் டெண்டுல்கர் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருந்து சம்பாதித்தார். கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தார். உலக அரங்கில் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தார். அதெல்லாம் சரி, இவரது சமுதாயப் பங்களிப்பு என்ன? இவரால் பல இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது என்பது "பாரத ரத்னா' விருது அளித்து கௌரவிக்கப்பட வேண்டிய தகுதியா, என்ன?

தகுதியற்றவர்களுக்காகத் தேவையற்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கப் போகிறது. "பாரத ரத்னா'வின் மரியாதை குறையப் போகிறது. சச்சினின் விளையாட்டு சாதனைகளைப் பாராட்டும் அதே நேரத்தில், "பாரத ரத்னா' விருதுக்காக அவரை பாராட்ட மனம் ஒப்பவில்லை.

No comments: