Blogger Widgets

Total Page visits

Wednesday, November 6, 2013

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்

வருங்காலத்தைப் பற்றிய பயமே நிகழ்காலத்தின் செயல்பாடுகளுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பயம் அதிகமாகும்பொழுது ஒரு சிலருக்கு உற்சாகம் வரும், ஒரு சிலருக்கு கவலைகளும், பயங்களும் அதிகமாகும். உற்சாகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கவலைகள் அதிகமாகிறவர்களுக்கு வாழ்க்கை துன்பத்தின் பாதையிலேயே நடைபோடும்.

நம் மகிழ்ச்சி, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும். நமது கவலை உடன் இருப்பவர்களுக்கும் கவலையையும், தளர்வையும் ஏற்படுத்தும். ஒரு மனிதனிடமிருந்து பரவும் தொற்றுநோயைப் போன்றது இது. நம்மிடமிருந்து தொற்றுவது நன்மைகளும், மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

பள்ளி செல்லும் வயதில் வெள்ளிக்கிழமை மாலையில் ஏற்பட ஆரம்பிக்கும் உற்சாகம் திங்கள் கிழமை காலையில் மறைந்து விடுகிறது. கல்லூரிக் காலத்தில் விடுமுறைகளில் உற்சாகம் குறைந்து கல்லூரி நாட்களில் உற்சாகம் அதிகரிக்கிறது. வேலை தேடும் காலங்களில் மிகுந்த ஆவலுடன் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நாட்களும், முதல் நாள் வேலைக்கு செல்லும் நாளும் உற்சாகம் மிகுந்தது.

உற்சாகங்கள் வயதிற்கு தகுந்தவாறும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் மாறுகிறது. ஆனாலும் ஒரு சில நாட்களைத் தவிர பெரும்பாலும் மனம் உற்சாகத்துடன் நம்மை இயங்க வைப்பதில்லை. சூழ்நிலைகள்தான் உற்சாகத்தை தருகின்றதே தவிர, நம் மனது தானாக உற்சாகத்தை உருவாக்குவதில்லை.

மனிதன் பிறந்தது முதல் ஏதோ ஒன்றை தேடி அலைவதற்கே வாழும் காலங்கள் சரியாகிவிடுகிறது. எப்போதும் இருக்கும் இந்தத் தேடலில் உற்சாகத்தை உறங்க வைத்துவிடுகிறோம். தேடல் எந்த அளவுக்கு அவசியமோ, அதே போன்று உற்சாகமும் அவசியம். உற்சாகம் இருந்தால்தான் தேடல் நிறைவு பெறும்.

உற்சாகம் என்பது ஏதோ ஒன்றை சார்ந்தது அல்ல, ஒன்றிலிருந்து மற்றொன்று என விரியும் சங்கிலித் தொடரின் இறுதியே உற்சாகமாகும். மனம்தான் உற்சாகம் என்று பலரும் நினைக்கின்றனர், மனம் ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும் அதன் தொடர்ச்சியாக உடல் நலம், எண்ணங்கள், செயல்பாடுகள் என தொடரும் அது ஒரு சங்கிலித் தொடர்.

சத்தான உணவுகள்

உடல் நலத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். உடல் நலத்திற்கு சத்தான உணவுகள் அவசியம். சத்தில்லாத உணவுகள் உடலின் செயல்பாட்டை மந்தமாக்குகிறது. மந்தமான உடல் சிந்தனையிலும் மந்தத்தை உருவாக்குகிறது. சத்தான சரிவிகித உணவு உடல் நலத்தையும், சுறுசுறுப்பையும் தருகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்றவுடன் மணிக்கணக்காக செய்யும் உடற்பயிற்சி என்றோ, எடைகளை தூக்கி கடுமையாக செய்யும் உடற்பயிற்சி என்றோ நினைக்க வேண்டாம், கால் மணி நேர பயிற்சியே போதும். உடற்பயிற்சியே செய்யாமல் இருக்கும் நிலையில் 15 நிமிடம் என்பது போதுமானது. 15 நிமிடத்தில் என்ன செய்வது? கைகள், கால்கள், தலை, இடுப்பு, முதுகு, விரல்கள் என உடலின் அனைத்து பாகங்களையும் "ஸ்ட்ரெச்சிங்" என்று சொல்லக்கூடிய சோம்பல் முறிக்கும் பயிற்சியை செய்யுங்கள்.

நடை பழகுங்கள்

எங்களுக்குத் தான் நடக்கத் தெரியுமே என்கிறீர்களா? நடக்கத் தெரியும் என்றாலும் நாம் நடப்பதற்கு ஆவல் கொள்வது இல்லை, அதுவும் குறிப்பாக காலை நேரத்தில். காலையில் அதிக தூரம் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு 15 நிமிடம் நடந்தாலே போதும். காலை நேரத்தில் உற்சாகமாக செயல்படும் ஒவ்வோருவரின் உற்சாகமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

இயற்கையை ரசியுங்கள்

இயற்கையை ரசிக்க தொலை தூரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. நகரத்தில் வாழ்ந்தாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளையும் இயற்கையின் துணையோடுதான் கழிக்கிறோம். ஆனால் அதை நாம் உணர்வதில்லை என்பது உண்மையிலும் உண்மை. காலை நேரத்தின் பனியையும், தென்றலையும், வெயிலையும், அமைதியையும், சாலையின் அழகையும் உணர்வதற்கு ஒரு சில நிமிடங்கள் போதும்.

நகர வாழ்க்கையின் இரவில் நிலவை, நட்சத்திரங்களை எத்தனை பேர் பார்த்திருப்போம். ஒரு மூன்று நிமிடம் ஒதுக்கி வானத்தை ஆராயுங்கள் அது கொடுக்கும் அடுத்த நாளுக்கான உற்சாகத்தை.

இருக்கும் இடத்தில் மனதை செலுத்துங்கள்

தண்ணீரானது அது இருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. அது போன்று பள்ளியில், கல்லூரியில் இருக்கும்போது பாடங்களை பற்றியும், விளையாட்டு மைதானத்தில் விளையாட்டும், சாப்பிடும் பொழுது சாப்பாட்டிலும், படுக்கையில் தூக்கத்தை மட்டுமே நினையுங்கள். சிந்தனைகள் இருக்கும் இடத்திற்கு சம்பந்தமில்லாமல் விலகிச் செல்லும்பொழுது பதட்டங்களும், கவலைகளும் அதிகமாக வாப்பிருக்கிறது. எனவே மனதை திசை திருப்பி கொண்டு செல்லாதீர்கள்.

நேர்மறையாக எண்ணுங்கள்

இந்த உலகம் நன்மைகளாலும், தீமைகளாலும் நிரம்பி இருக்கிறது. நமக்குத் தேவையானவற்றை நாம் தான் தேடிப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வசந்த காலமும், இலையுதிர் காலமும், பனிக் காலமும், மழைக்காலமும், வேனிற் காலமும் நிரந்தரமாக இருப்பதில்லை. வருடம் முழுவதும் மாறி மாறி வருகின்றது. அதே போன்றுதான் பிரச்சனைகளும், மகிழ்ச்சியும். பிரச்சனைகளை எண்ணி அதிகம் கவலை கொள்வது, அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்துமே தவிர உற்சாகத்தை தராது. இவற்றை கடந்து விடலாம் அல்லது இது கடந்து போகும் என்று எந்த நிலையிலும் நினையுங்கள்.

நம்மை நாமே மாற்ற முயன்றாலும், மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிட வாய்ப்புகள் குறைவு. பருகப் பருக பாலும் புளிக்கும் என்பது பழமொழி; எனவே தினந்தோறும் நிகழ்வுகளை தனதாக்கிக் கொண்டால் தான் நீடித்த உற்சாகம் தனதாகும்.

No comments: