Blogger Widgets

Total Page visits

Monday, May 6, 2013

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

"கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்குவதற்கு தடையில்லை' என, சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பளித்தது. அணு மின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் துவங்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டன. அணு மின் நிலையம் இயங்க தயாரான நிலையில், கூடங்குளம் பகுதியில், சிலர், கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்; தொடர் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தின. ஐகோர்ட்டிலும், அணு மின் நிலையம் செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பல மனுக்களை தாக்கல் செய்தன.


இவற்றில், "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் நிர்வாகி, சுந்தரராஜன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "நிபுணர்கள் அடங்கிய குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை வெளிப்படையாக ஆய்வு செய்யவும், பொது மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும். புதிதாக சுற்றுப்புறச் சூழல் ஆய்வு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதல் இல்லாமல், அணு மின் நிலையம் இயங்கக் கூடாது என, உத்தர விட வேண்டும்' எனக் கூறப்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மீறல் இல்லை: இம்மனுக்களை விசாரித்த கோர்ட் நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்', இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும் போது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முறைகள் எதுவும் மீறப்படவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை, அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், மத்திய அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுப்புறச் சூழலை பேண, தேவைப்படும் போது, அதிகாரிகளால் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. இந்த வாரியமும், மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நன்றாக பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகள் எல்லாம் தன்னிச்சையானது என, கருதுவதற்கு முகாந்திரமில்லை. கூடங்குளம் பகுதிக்காக, 500 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வெளியேற்றப்படும் மாசின் தரத்தை பேணுதல், சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, ஒழுங்குமுறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில், அவ்வப்போது, முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துவதற்கு, திருநெல்வேலி கலெக்டர் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவற்றை நடத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பரிந்துரைத்தது போல், அந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்தது.

மனு விபரம்: இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட தடை கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது. ஆனால், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல் படுத்தாமலேயே, மின் உற்பத்தியை துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள அணுக்கழிவுகளை எங்கு கொட்டுவது, இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, என்பது பற்றிய விவரங்கள் தெளிவு படுத்தப்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விவாதம், கடந்த மூன்று மாதங்களாக நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த 17 அம்ச பரிந்துரைகளை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய நிபுணர்கள் குழு வழங்கியுள்ளது. இவற்றை நிறைவேற்ற 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும். இயற்கை சீற்றம், பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்ப தடையில்லை என உத்தரவிட்டதுடன், தீர்ப்பை ஒத்திவைத்தது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை அளித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை தாங்கள் மதிப்பதாகவும், அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் ஒரே விதமான கருத்துக்களையே தெரிவிப்பதாகவும் கூறினர். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் கருதுவதால், அணுமின் நிலையம் செயல்பட தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

 இந்த தகவல் தினமலர் வலை பக்கத்தில் இருந்து பகிரபடுகிறது

No comments: