Blogger Widgets

Total Page visits

Monday, April 29, 2013

உலகமே விலகினாலும் உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்

ஒரு மனிதன் உயர்வதற்கும், தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது. நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும். திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது.

நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
 
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம்.
மிகச்சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதைவெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் ஆக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான். 

அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதரர்கள் என்று தெரிந்த பிறகும் நட்பிற்காக தீமையின் பக்கம் போராடினான். தன் உயிரை விட்டான். ஆனால் அவனுக்குத்தான் பகவான் கிருஷ்ணர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினார்.

இன்று சமூகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும். இதை திரை துறையில் நீங்கள் அதிகமாக பார்க்கலாம். இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த ஷிழஜீவறயசலீ மென்பொருளான விண்டோஸ் என்னும் ஒபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசொப்ட(Microsoft)என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (Software ) நிறுவனத்தை உருவாக்க முடிந்தது.

இன்று உலகின் தலை சிறந்த ERP Software என்னும் அனைத்து விதமான தொழிற்சாலைகளையும் நிர்வகிக்கும் மிக சிறந்த மென்பொருளை வடிமைத்து உலக அளவில் முதன்மையாக விளங்கும் SAP (சேப்) என்னும் ஜெர்மனியை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஐந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். இன்று உலகின் அனைத்து ரக பெரிய நிறுவனங்களையும் சரியான முறையில் நிர்வகிப்பது இந்த மென்பொருள் தான். இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களையும் இயக்குவது SAP என்னும் மென்பொருள் தான்.

இந்தியாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது படிப்பு மற்றும் அயராத உழைப்பு காரணமாக முன்னேறி ஒரு இளைஞன் தனது அலுவலகத்தில் தன்னைப் போல் சிந்திக்கக் கூடிய எழு நண்பர்களை அரவணைத்து அனைவரது உழைப்பாலும் முயற்சியாலும் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினான். அந்த நிறுவனம் இன்று உலக பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். கல்லூரியில் நன்றாக படிக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் இன்போசிஸ் என்னும் நிறுவனத்திற்குள் நுழைவது ஒரு கனவாகும். இத்தகைய ஒரு சாதனை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஏழு நண்பர்களால் முடிந்தது.

இது தான் நட்பின் வலிமை.

இவ்வாறு நட்பினால் உயர்த்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தால் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்.

அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவிண்கண்
அல்லல் உழப்பதாம்நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி நல்ல வழியில் நடக்கச் செய்து அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

நண்பன் என்பவன் உங்களை தீமையான பாதைக்கு எப்போதும் அழைத்துச் செல்லமாட்டான். நீங்கள் அவனை எதாவது தீயதான செயல் செய்யலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி நல்லவழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் தீய பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.

பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு 90 சதவீதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும். அதாவது பத்தாம் வகுப்பு வரை மிக நன்றாக பள்ளியில் படித்த ஒரு மாணவன் புதிய பள்ளிக்கு செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களிடம் அந்த நல்ல மாணவன் நட்பு பாராட்டுகின்றான். அந்த நண்பர்கள் அவன் மீது ஏற்படுத்தும் தாக்கம் அவன் இரண்டு வருட பள்ளி படிப்பை நிர்ணயம் செய்கிறது. 

அதாவது அதுவரை கல்வியின் மேல் நாட்டம் கொண்ட ஒரு நல்ல மாணவனை மோசமான நட்பு வீண் பொழுதுபோக்கிலும், திரைப்படத்திலும் நாட்டம் ஏற்பட வைக்கிறது. அந்த வயதில் நட்பு மீது தான் அதிக மரியாதை இருக்கும் எனவே பல மாணவர்கள் கூடாத நட்பினால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும் வீணாக்கி விடும். ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியியளாளராகவோ வர வேண்டிய ஒரு மாணவனை தவறான நட்பு கடைசியில் மிக மோசமான நிலைமையில் கொண்டு சேர்த்து விடும்.

ஆனால் அதே நேரத்தில் நல்ல நண்பர்களை சேர்த்துக்கொண்டு அனைவரும் சேர்ந்து படித்து எல்லோரும் சந்தேகங்களை பரிமாறி படித்து மிக நல்ல மதிப்பெண் பெற்று மிக நல்ல கல்லூரியில் சேரும் பல நல்ல மாணவர்களை இப்போது நாம் பார்க்கலாம். மாணவர்களே உங்கள் நண்பனை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள் உங்கள் நல்ல உயர்ந்த இலட்சியத்தை ஊக்கப்படுத்தும் அதற்கு துணைப்புரியும் ஒருவனை நண்பனாக தேர்ந்தெடுங்கள். 

உங்களை ஊர் சுற்ற வைத்து, மது, புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமை ஆக்க வைக்கும் ஒருவனை மறந்தும் கூட உங்கள் நண்பனாக ஆக்கிவிடாதீர்கள்.உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வது எளிது. சிரிக்கும்போது மட்டும் உடன் இராமல் நீங்கள் அழும்போதும் ஆறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழிச் சொல்லை பாருங்கள்.

‘A real friend is one who walks in when the rest of the world walks out’

அதாவது உலகம் உங்களை விட்டு விலகும்போது எவன் ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.அரிஸ்டோடில் என்னும் உலகின் சிறந்த கிரேக்க தத்துவ ஞானி நட்பைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார்.

‘துன்பங்களின்போது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்’.கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்.

‘My best friend is the one who brings out the best in me’

எனது சிறந்த நண்பன் யார் என்றால் எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில்கொண்டு வருகின்றானோ அவனேயாவான்.இப்போது நாம் நட்பை தவறாக புரிந்துகொள்வதால் எவ்வாறு அவதியுருகிறோம் என்று பார்ப்போம்.நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகிவிடமாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர். 

அதற்கு காரணம் அவர்களுடன் பணிபுரியும் சிலரே. அதாவது இப்போது விருந்துகளில் மட்டும் குடிப்பதை என்று பெயர் வைத்து அழைக்கின்றனர். ஆனால் மது ஒரு போதைபொருள். அதை ஒரு முறை நீங்கள் சுவைத்துவிட்டால் அது தன் வேலையை காட்டிவிடும் எனவே நீங்கள் சிறிது காலம் விருந்துகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் ஆகபோகின்றீர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம்.

மீண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிகச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். உங்களை யாரிடமும் பழகவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.ஆனால் உங்கள் நலம் விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள். மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பாகுபடுத்துங்கள்.

பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடாதீர்கள். உங்கள் பணம், பதவி, சொத்து போகும் போது அவர்களும் சென்றிருப்பார்கள். உண்மையை சொல்லப்போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். ஆக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிகக் கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான நபர்கள் இன்று நிறையவே உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை. 

உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அது நூற்றில் பத்து, மிகுதி தொண்ணூறு சதவீதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள். ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.

எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருகிய நண்பர்களாக இருக்க முடியாது. அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல நாட்கள் ஆகும். 

ஆனால் எல்லா துன்பங்களிலும் தோள் கொடுத்து, இன்பங்களில் பங்குபற்றி, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாகப்படுத்தி, சந்தோஷத்தை அதிகப்படுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன். பணம் வரும் போது வருபவனும், பதவிக்காக உடன் இருப்பவனும் நண்பன் இல்லை. உண்மையான நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் தவறான நட்பு உங்களை அழித்து விடும்.

No comments: