Blogger Widgets

Total Page visits

Tuesday, February 19, 2013

ஆசிரியர் - மாணவர் உறவு எந்தளவு முக்கியமானது?

நமது பள்ளி கல்வி முறையில் ஆசிரியர்-மாணவர் உறவுமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொதுவாக நாம் ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் நடத்தும் பாடத்தை வெறுப்போம். ஒரு ஆசிரியரை விரும்பினால் அவர் நடத்தும் பாடத்தையும் விரும்புவோம்.

பொதுவாக இன்றைய நிலையில், பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குழு மனப்பான்மையின் அடிப்படையில் ஆசிரியர்களை வெறுக்கும் மனோபாவம் மாணவர்களிடம் உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் எப்படி நம்மை விரும்புவார்? நமது படிப்பு விஷயத்தில் எப்படி தனிப்பட்ட அக்கறை செலுத்துவார்? என்பதை யோசிக்க வேண்டும்.

ஒரு ஆசிரியரை அறிந்துகொள்வதானது, ஒரு மாணவர் என்ற முறையில் நமக்கு பெரும் துணைபுரியும். ஒவ்வொரு ஆசிரியரும் மனிதர்தான். அந்தவகையில் அவருக்கும் விருப்பு-வெறுப்புகள் உண்டு. எனவே ஒரு நல்ல மாணவர் அந்தவகை உளவியலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியருடன் நல்ல உறவை பேணுவதானது, அவர் உங்களுடன் உண்மையிலேயே ஒரு நண்பராக நடந்துகொள்வது வரை இருக்கிறது. இதன்மூலம் அவர் உங்கள் விஷயத்தில் தீவிர அக்கறை செலுத்துவார்.

இதன்மூலம் நீங்கள் பாடவிஷயத்தில் நல்ல புலமையை பெறமுடியும். அதற்கு அந்த ஆசிரியர் எவ்வளவு வேண்டுமானாலும் உதவுவார். உங்களின் சந்தேகங்களை எந்த தயக்கமும், பயமும் இன்றி கேட்கலாம். மேலும் பாடம் சம்பந்தமாக உங்களின் அறிவு மற்றும் செயல்பாடுகள் பற்றி உண்மையான மற்றும் ஆழமான மதிப்பீடுகளை ஆசிரியர் உங்களுக்கு வழங்கி, உங்களின் உண்மைநிலைப் பற்றி உங்களுக்கு புரியவைப்பார்.

ஆசிரியரிடம் நல்ல உறவை பேணும் மாணவர், பாடம் சம்பந்தமான பிரச்சினைகள் மட்டுமின்றி சில தனிப்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்து அதற்கான அக்கறையுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். ஆசிரியருடன் நல்ல உறவை பேணுவதென்பது, அவரிடம் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்வது என்றில்லை. அவரை சரியாகப் புரிந்து, அவரின் அன்பையும், ஆதரவையும் பெற்று நம் நிலையை வளப்படுத்திக் கொள்வதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியுள்ளது.

No comments: