வீட்டிலும்
 சரி பணிமனையிலும் சரி உங்களுக்கு வேண்டியவற்றை மற்றவர்களைக் கொண்டு 
செய்விக்க வேண்டியது அவசியமாகிறது. உங்கள் சொற்படி மற்றவர்கள் கேட்டு உரிய 
பணிகளை அவர்களைக் கொண்டு செய்விக்க சில பண்புகள் உங்களுக்கு அவசியமாகின்றன.
 அப்பண்புகள் சில:
1. செவி கொடுத்தல்: மற்றவர்கள் பேசும்போது
 காது கொடுத்து அக்கறையுடன் கேளுங்கள். அவர்கள் பேசும் போது நீங்கள் என்ன 
பேசலாம என்பதில் அக்கறை செலுத்துவதைக் குறைத்து மற்றவர் உங்களுக்கு என்ன 
சொல்ல வருகிறார் என்பதை சரியாகக் கேட்டு அவர்களின் உள்கிடக்கையை அறிந்து 
கொள்ளுங்கள். மற்றவர்கள் சொல்பவற்றைக் கேட்டல் ஐந்து முக்கிய அம்சங்களை 
உள்ளடக்கியது. 1. கேட்டல், 2. புரிதல்,  3. மதிப்பிடல், 4. நினைவிற் 
கொள்ளல், 5. பதில் கூறல்/பதில் நடவடிக்கை எடுத்தல். தேவை ஏற்படும் போது 
நீங்கள் கேட்டவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செவி மடுப்பது 
மற்றவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களின் கடமையின் 
முக்கியத்துவத்தையும் உணர வைக்கும்.
2. மற்றவர்களுக்கு உதவுங்கள்:
 நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பணியில் உள்ள சிரமங்களைப் புரிந்து 
அதைச் சமாளிக்க நீங்கள் இட்ட பணியைச் செய்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். 
உங்களிடமிருந்து தங்களுக்கு உதவி கிடைக்கும் என நம்புபவர்களே உங்கள் 
தலைமையை ஏற்றுக் கொள்வார்கள். 
3. சொல்லுங்கள் கட்டளையிடாதீர்கள்:
 செய்ய வேண்டிய பணியின் முக்கியத்துவத்தையும் அதனால் செய்பவரும் நீங்களும் 
அடையும் நன்மைகளையும் சரியாக பணி கொடுப்பவருக்குப் புரிய வையுங்கள். 
கட்டளையிட்டால் அவர் யாருக்காகவோ தான் செய்வது போல உணர்வார். 
4. விருப்பங்களை உணர வையுங்கள்:
 செய்ய வேண்டிய பணியில் உங்களுக்கு உள்ள விருப்பத்தையும், பணி செய்பவர் 
மீது உங்களுக்கு இருக்கும் விருப்பத்தையும் சொல்லுவதுடன் பணி செய்பவருக்கு 
பணி மீது விருப்பம் வரச்செய்யுங்கள்.   
5. அடிக்கடி ஆச்சரியத்திற்கு உள்ளாக்குங்கள்:
 உங்களுக்காக பணிசெய்பவர்களை அடிக்கடி எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்து 
ஆச்சரியப் படுத்துங்கள். கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, மிகை ஊதியம்(போனஸ்),
 ஊதிய உயர்வு போன்றவற்றை பணியாளர் எதிரபார்பதற்கு முன்னர் கொடுத்து அவரை 
மகிழ்ச்சியில் திணறடியுங்கள். இது பணியிலும் உங்களிலும் ஒரு பிடிப்பை 
அவருக்கு ஏற்படுத்தும்.
6. அந்த இரண்டு மந்திரச் சொற்கள்:
 நன்றி, மன்னிக்கவும் இந்த இரண்டு வார்த்தைகளையும் தேவையான இடங்களில் 
தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதுவும் உங்கள் உண்மையான தூய்மையான மன 
நிலையில் இருந்து இந்த வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள்.
7. உங்கள் தன்னம்பிக்கையும் தீர்மானம் எடுக்கும் திறனும்:
 உங்கள் தன்னம்பிக்கையும் தீர்மானம் எடுக்கும் திறனும் உங்கள் பால் 
மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த இரண்டு திறனையும் 
வளர்த்துக் கொள்ளுங்கள்.
8. திருக்குறளை மறவாதே: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். இந்தக் குறலில் முக்கியமான சொல் இதனால் என்பதாகும் இந்தத் திருக்குறளுக்கு மூவர் விளக்கமளித்துள்ளனர்:
கலைஞர் உரை:
 ஒரு காரியத்தை ஒருவர் எப்படி  செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து 
பார்த்து, அதற்குப் பிறகு அந்தக்  காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மு.வ உரை: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். 
சாலமன் பாப்பையா உரை:இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும்  இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
இதனால்
 என்ற சொல்லிற்கு கலைஞர் உரையில் பொருள் கொடுக்கப்படவில்லை. மு. வரதராசனார்
 உரையில் இக்கருவியால் எனப்படுகிறது, பாப்பையா உரையில் ஆள்பலம். பொருள் 
பலம் இரண்டும் சொல்லப்பட்டுள்ளது. பணியை முடிக்கத் தேவையானவை பணி 
செய்பவருக்கு கொடுக்கப்படவேண்டும்
இந்த பதிவு ஒரு கவிஜனின்  உணர்வுகள் வேல் தர்மா  எனும் வலை பக்கத்தில் இருந்து பலரும் படித்து பயன் பெற இங்கு பகிரப்படுகிறது. வலைபக்கதிற்கான இணைப்பு தரப்பட்டு உள்ளது.     
 

No comments:
Post a Comment