Blogger Widgets

Total Page visits

Thursday, May 28, 2015

ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்? 5 காரணங்கள்!



டந்து முடிந்த கல்வி மன்ற தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த இன்ஜினியரிங் படிப்பு படு தோல்வி அடைந்தது. எதிர் கட்சியாக இருந்த கலை மற்றும் அறிவியல் படிப்பு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்று பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பெற்ற இன்ஜினியரிங், எதிர் கட்சியாகும் தகுதியையும் இழந்தது. இன்ஜினியரிங்கின் இந்த தோல்விக்கு வேலையின்மை, தரமற்ற கல்லூரிகள் போன்ற காரணங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தி அலையே காரணம் என்று கூறப்படுகிறது.


இதுதான் இந்த ஆண்டு உயர் கல்வி பயில இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலை. ஏன் இன்ஜினியரிங் படிக்கக் கூடாது? என்று கேட்டால் இந்த இரண்டு காரணங்களை மட்டுமே கூற முடியும். ஆனால், ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற கேட்டால் 5 காரணங்களை முன்வைக்க முடியும்.

சிக்கல்களை தீர்க்கும் திறன்:


பொறியியலின் அடிப்படை கணிதம். எந்த துறையாக இருந்தாலும் சரி மாணவர்கள் கொஞ்சம் அதிகமாக கணக்கோடு விளையாட வேண்டியிருக்கும். நான்கு ஆண்டு படிப்பில் பொறியியலுக்குத் தேவையான அடிப்படை கணிதத்திலிருந்து துறை சார்ந்த பாடங்கள் வரை கணக்கு போடுவதில் தேர்ந்த அறிவுடையவர்களாக முடியும். கணிதத்தை விட மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி இருக்கிறது. இந்த அறிவு தொழில் நுட்பம் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் அளவுக்கு மாணவர்களின் திறமையை வளர்க்கிறது. இதனை 'ப்ராப்ளம் சால்விங் நேச்சர்' ( Problem solving nature) என்று கூறுவார்கள்.



இண்டர்வியூவில் ஆப்டிட்ய்யூட் என்ற எழுத்துத் தேர்வு பகுதி இடம் பெறுவதன் முக்கிய காரணமே, மாணவர்களின் 'ப்ராப்ளம் சால்விங்' திறனை அறியத்தான். இது மாணவர்களின் திறனை அறிய முக்கிய கூராக கருதப்படுகிறது. பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை செய்யும் ஒருவருக்கு, இத்திறன் அதிகமாக இருக்கும். வேலையில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வரும் சிக்கல்களை தீர்ப்பதிலும் இவர்களுக்கான திறன் சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறலாம்.



வேலைக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும் பொறியியல்...

முடிவெடுத்தல்:


இன்ஜினியரிங் படிப்பதால் ஒரு மாணவனுக்கு வாழ்கையில் முக்கியமான தகுதியான டிசிஷன் மேக் திறன் அதிகரிக்கும். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவும் நம் வாழ்க்கையின் பாதையையே மாற்றக் கூடியதாக இருக்கும். இதேதான் இன்ஜினியரிங்குக்கும். பிரச்னை என்ன என்பதை கண்டரிய Problem solving nature தேவை என்றால், அதற்கான சரியான தீர்வை தேர்ந்தெடுப்பதில் உதவுவது டிசிஷன் மேக்கிங் திறன். உலகில் பலரால் எடுக்கப்பட்ட சில நல்ல முடிவுகளே, முன்னேற்றத்துக்கான பாதையாக இருப்பதை நாம் காணலாம்.



வேலையில் ஒருவர் எடுக்கும் முடிவு அந்த நிறுவனத்தை உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம் அல்லது பதாளத்திலும் தள்ளலாம். ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றால் நாலாபக்கமும் நம் மூளை செயல்பட வேண்டும். முடிவெடுப்பதையே வேலையாகக் கொண்ட ஒரு நல்ல இன்ஜினியர், முடிவெடுப்பதில் தேர்ந்தவராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. வேலையில் முடிவெடுத்து பழகிய ஒருவர், வெளியுலகில்  எடுக்கும் முடிவும், நாலாபக்கமும் யோசித்து தீர்க்கமான முடிவாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம்.



இன்ஜினியரிங் - படிப்பு அல்ல பழக்கம்

க்ரியேட்டிவிட்டி:


ஒரு கணினி திரைக்குள் உலகைக் கொண்டு வருவது ஒரு இன்ஜினியரால் மட்டும்தான் முடியும். அன்றாடம் நம் வீடு முதல் ஸ்பேஸ் வரை பயன்படுத்தும் பல தொழில் நுட்பங்கள் எதார்த்தத்தை தாண்டிய சிந்தனைகளின் உருவாக்கமே. ஒரு தொழில் நுட்பத்தைப் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்ட ஒருவரால்தான் அதை முழுமையாக பயன்படுத்துவதற்கான வழிகளையும் வகுக்க முடியும். ஒரு இசை அமைப்பாளரால் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்ட்டத்தை இயக்க முடியுமே தவிர அதை உருவாக்க முடியாது. ஆனால், இசை பயிற்சி இல்லாத ஒரு இன்ஜினியரால் அதை உருவாக்க முடியும். நாளை செவ்வாய் கிரகத்துல இடம் வாங்கி வீடு கட்டனும்னாலும் நீங்க ஒரு இன்ஜினியராதான் பிடிக்கனும்.



இன்ஜினியருக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்.



சிறந்த தொழில் முனைவோர்:



இ-ஷாப்பிங் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனங்கள் ஃப்லிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல். பல ஆயிரம் கோடிகளில் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனங்களை தொடங்கியவர்கள் பொறியியல் பட்டதாரிகள். இன்னும் உங்கள் ஊரில், தெருவில் ஒரே ஒரு கம்ப்யூட்டரை வைத்து சம்பாத்தித்து வரும் இன்ஜினியர்கள் ஏராளம். எம்.பி.ஏ. படித்தால் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும் என்பதில்லை. பொறியியல் படித்த ஒருவரால்தான், தன் தயாரிப்பு எப்படி பயன்படும், எங்கே யாரிடம் விற்பது என்று தெரியும். மத்திய அரசு கூறிவரும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முக்கிய பங்கு இன்றைய இன்ஜினியர்களோடதாகத்தான் இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.



தன் கையே தனக்குதவி

வேலை வாய்ப்பு:


தம்பி என்னப்பா படிக்கப் போற? இன்ஜி... சொல்லி முடிக்குறதுக்குள்ள 'அது படிச்சா வேலை கிடைக்காதாம்ல' என்று யாராது சொன்னா, தயவு செஞ்சு அதை நம்பாதீங்க. உலக அளவுல 2020-ம் ஆண்டில் பணியாளர்களுக்கான தேவை 2 பில்லியனாக இருக்கும் என்கிறது 'நாஸ்காம்' . அப்போ ஏன் பொறியியல் மாணவர்கள் வேலை இல்லாம இருக்காங்கனு நீங்க கேள்வி கேக்கலாம். வேலை வாய்ப்பு இருக்கு. அதுக்கு ஏத்த திறமையான படித்த பட்டதாரிகள் இல்லை என்பதுதான் உண்மை. வருஷா வருஷம் வெளிநாட்டு நிறுவனங்களால், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு இந்தியர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கபடுவது எல்லோரும் அறிந்த விஷயம். வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் எல்லா பொறியியல் பட்டதாரிக்கும் வேலை உறுதி.



சொல்லக் கூடாதது - வேலை இல்லை



சொல்ல வேண்டியது - இன்ஜினியரிங் நல்லது



குறிப்பு:



மற்ற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த திறமைகள் இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால், நல்ல இன்ஜினியருக்கு இந்த திறமைகள் நிச்சயம் இருக்கும்.



மேலே குறிப்பிட்டுள்ள ஐந்தும் யாருக்கு பொருந்தும்?.



1. ஆர்வத்தோடு படிக்கும் மாணவர்களுக்கு



2. நல்ல கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு (குறிப்புக்குள்ள ஒரு குறிப்பு: முழுமையான ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கல்லூரியின் தரம் ஒரு பொருட்டல்ல)



-ரெ.சு.வெங்கடேஷ்

இந்த பதிவு விகடனில் 28/05/2015 இல் பதிவு செய்யப்பட்டது

Thursday, May 21, 2015

என்று தீரும் பொறியாளர்களின் கண்ணீர்?

நாட்டில் கல்வியின் நிலை உயர்ந்திருப்பதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால், கொடுமை என்னவெனில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் நிலை உயரவில்லை. கல்வி தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் தரம் உயரவில்லை. அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் தரம் அடிமட்டமாக இருக்கிறது. 

அரசாங்கம் ஒரு குழு அமைத்து, தமிழகத்தில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தரத்தை முறையாக ஆராயும் பட்சத்தில் (நேர்மையாக),  500-ல் 50 கூட மிஞ்சாது என்பது மிகுந்த வேதனைக்குரிய, மறுக்க முடியாத உண்மை. மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி பணம் சேமிக்கும் கஜானாவாக மட்டுமே செயல்படுகின்றன கல்லூரிகள். ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்குகிறது அரசு. ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் முதலாம் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் மாணவர்கள், கல்லூரியின் செயல்பாடுகளால் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. 

அத்தகைய மாணவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் பாதியைக்கூட கல்லூரி விரிவுரையாளர்களால் பூர்த்திசெய்ய முடிவதில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள்தானே!

''ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளிவரும் பொறியாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர் களிடம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான தகுதி இருப்பதில்லை" என்கிறது அந்த நிறுவனங் களின் அறிக்கை. அப்படி வெளிவரும் 80 சதவீதம் பேரும், சில மாதங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டு நிறுவனங்களின் வாசல்களில் குடியிருந்து, தகுதியற்றவர்கள் எனக்கூறி துரத்தப் படுகின்றனர். அவ்வாறு துரத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்களின்  அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் எம்.இ அல்லது எம்.டெக் மேற்படிப்பில் சேருவதுதான். காரணம், இரண்டு வருட படிப்பை முடித்துவிட்டால், ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதுதான். சேர்ந்தவுடன் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். இது போதாதா..? ஒருசிலர் இதில் விதிவிலக்கு. பள்ளிப்பிராயத்திலிருந்தே விரிவுரையாளர் பணியை விரும்பி பயின்று விரிவுரையாளர்களாக ஆகிறார்கள்.

இன்று பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்(!) வாத்தியார்களில் பெரும்பான்மை யானவர்களின் கதை இதுவாகவே இருக்கும். நிறுவனங்களால் பொறியாளராகப் பணிபுரிய தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி புதிய திறமையான பொறியாளர்களை உருவாக்குவார்கள்? 

இது 'விரிவுரையாளர்' என்ற பெயரில் அடுத்தவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் செயல்தானே?. ஒருவர் 10 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார், அந்த 10 பேர் சில வருடங்களில் 100 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார்கள். இதற்கொரு முடிவே இல்லையா? இதையெல்லாம் யார் கேட்பது?

அந்தக் காலத்தில் ஆசிரியராக சேவைபுரிய ஆசைப்பட்டு, லட்சியமாகக்கொண்டு ஆசிரியர்களாக சேவை புரிந்தவர்களே அதிகம். ஆனால் இன்று, வேறு வழியில்லாமல், எளிமையான வழி என்று ஆசிரியப் பணி யைத் தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். இது பொறியியல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
இதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், ஒவ்வொரு வருடமும் கவுன்சிலிங்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீட்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக 'வருத்தம் கொள்கிறது' அண்ணா பல்கலைக்கழகம். 

பொறியாளர்களின் எதிர்காலம் குறித்த இந்த பிரச்னையில் அரசு கவனம் செலுத்தவேண்டியது அவசியம்!

-கே.பி. மதிவாணன் B.E. 

இந்த பதிவு விகடனில் 20/05/2015 இல் பதிவு செய்யப்பட்டது, தகவலை விகடனில் படிக்க இங்கு சொடுக்கவும்.   

Monday, May 18, 2015

அத்தியாயம் 13- பொறுப்பே பிரதானம்

நேர்முகத்தேர்வு என்ற வார்த்தையை சற்றே மாற்றி, நேர் முக்கியத் தேர்வு என்று தலைப்பிடக் காரணமே, ஒவ்வொரு நேர்முகத் தேர்வின் போதும், உள்ளே செல்லும் நபர் , 'எப்படியாவது' தேர்வு நடத்தும் அதிகாரியின் மனதில் இடம் பிடித்துவிடவேண்டும் என்று நினைப்பதும், அது முடியாமல் போனால், 'அந்த Interview எடுத்த ஆள் சரியில்லை' என்று குறைகூறுவதும் நடக்கும். 

அல்லது வேலை கிடைத்துவிட்டால், 'எனக்கு இந்த மாதிரி interview எல்லாம் ஜுஜுபி' என்று தன் திறமைக்கு மட்டுமே வேலை கிடைத்துவிட்டதாக நினைப்பதும் – இரண்டு விளைவுகளை உருவாக்கும். 

முதலாமவர், அடுத்தவரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு , தன் மேல் என்ன தவறு என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதே சமயத்தில், இரண்டாமவர், தனக்கு போதுமான அளவுக்குத் திறமை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, உண்மையில் அன்றுதான் அவர் கடைசியாகத் திறமையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் அளவுக்கு சொதப்பிவிடவும் கூடாது. இதில் நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் கத்தி மேல் நடக்கும் வேலை! சரியான ஆளைத் தேர்ந்தெடுத்தாரோ பிழைத்தார்… !! இல்லையென்றால்.. பிழை ஆகிவிடுவார். ஆக, ஒரு நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது என்று உண்மையில் சரியாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார்ப் போல் தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் கில்லாடிகளாக வலம் வருகிறார்கள். 
 
ஆக, ஒரு ஊழியராக வருபவரின் நிறை குறைகளை இருபுறமும் தெரிந்து கொள்ளும் ஒரு சரியான கருவியாக நேர்முகத்தேர்வு இருப்பதால்தான் அதன் முக்கியத்துவம் உணர்ந்து நேர் முக்கியத் தேர்வு என்றோம்.

இதை ஏன் இந்த 13 வது அத்தியாயத்தில் விளக்கவேண்டும் என்று தோன்றும். இங்குதான் நாம் அடுத்துப் பார்க்கப் போகும் குணம் ஒளிந்திருக்கிறது. ஒரு ஆள், ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது, நான்கைந்து பேர் ஒரு வேலையைச் செய்து அதில் தவறு நிகழ்ந்துவிட்டால், அனிச்சையாக வரும் பதில்  'என் மேல தப்பில்லை' என்பதுதான்!

அதாவது, நியாயமாக யார்மேல் தவறு என்று ஆராய்ந்து அதனைச் சரிசெய்வது ஒரு விதம்! மொத்தத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது வாருங்கள் . தீர்வைக் கண்டறிந்து சரி செய்வோம் என்று நினைப்பது இன்னொரு விதம். அதை விட்டுவிட்டு, என் மேல் தவறே இல்லை என்று எல்லாருமே ஒதுங்கினால், என்ன ஆகும்? தவறு தானாகவே நிகழ்ந்துவிட்டதா என்று பிரச்னை வேறு கோணத்தில் பயணிக்கும்.

இதை உணர்த்தத்தான், அந்த நேர்முகத்தேர்வு உதாரணம் சொன்னேன். நான் நன்றாகத்தான் பதிலளித்தேன். ஆனால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஒரு முன்முடிவை எடுத்துவிட்டால், நேர்முகத் தேர்வு மட்டுமல்ல. வாழ்வில் எதிலுமே அந்த நபர் கற்றுக்கொள்வது நின்றுவிடும். அப்படியானால், நேர் முக்கியத் தேர்வுக்குத் தேவையான அடுத்த குணம் என்ன?

பொறுப்புணர்ச்சி !!

பொதுவாக நிறுவனங்களில், ஒரு வேலையில் ,பிரச்னை என்று வரும்போது, 

நான் பாக்கலை சார்!
என் வேலை இல்லை சார்!
அவர் பாக்குறாரேன்னு விட்டுட்டேன் மேடம்!
கம்ப்யூட்டர்தான் ஏதோ மிஸ்டேக்!
நான் தப்புப் பண்ண வாய்ப்பே இல்லை!
அடுத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?
என் லெவல் வரைக்கும் கரெக்டா இருக்கு பாருங்க!

இப்படிக் காரணங்களை அடுக்க மட்டும் எந்த ஊழியரும் மறப்பதே இல்லை. ஆனால், ஒரு நிறுவனம் என்பது அப்படி அல்ல..! நீங்கள் உள்ளே நுழைந்தவுடனேயே உங்கள் ஊதிய மீட்டர் ஓடத் துவங்கிவிடும்.. ஆனால் அவர்களது வேலை மீட்டர்?
 
இங்கு பல்வேறு நிறுவனங்களில் நடக்கும் கூத்து என்னவென்றால், மேலதிகாரி இருந்தால், ஒருமாதிரியும், அவர் இல்லாவிட்டால் வேறொரு மாதிரியும்தான் ஊழியர்கள் நடந்துகொள்கிறார்கள். அமீபாவாகத் தெரியும் இந்த பிரச்னைதான் அனகோண்டாவாக மாறி நிறுவனத்தையே விழுங்கிவிடும்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே

என்று திரமூலரின் திருமந்திரத்தில் ஒரு பாடல் வரும். அதன்படி, நம்மைக் கண்காணிக்க யாருமே இல்லை என்றுதான் நாம் பல தவறுகளைச் செய்கிறோம். ஆனால், கண்காணிப்பவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்று உணர்ந்தவர்கள் தவறு செய்யமாட்டார்கள்.  இதனை நான் நிறுவனத்துக்கும் உரித்தாக்குகிறேன்.

நம்மைப் பார்க்க யாருமே இல்லை என்ற நேரத்திலும், சரியாக நடந்துகொண்டால் போதும்.

ஒரு போக்குவரத்து சிக்னல், இரவு இரண்டு மணி, நாம் மட்டும் வாகனத்தில் செல்கிறோம். நம் வழியில் சிகப்பு விழுந்திருக்கிறது. அதனை மதித்து நிற்பதுதான் பொறுப்புணர்ச்சி!

இங்கு குப்பைப் போடாதீர்கள் என்ற பொது இடத்தை மதித்து , அப்போது சாப்பிட ஆரம்பித்த சாக்லேட் பேப்பரை , குப்பைத்தொட்டியைத் தேடிப் போய்ப் போட்டுவிட்டு வந்தால், அதன் பெயர் பொறுப்புணர்ச்சி!

அப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சி இருக்கிறதா என்று நேர்முகத்தேர்வில் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் ? 

ஒரு வாரம் நேரம் இருக்கிறது. சிந்திக்கலாம்...

அத்தியாயம் 12 - தீர்வின் வாசல்

இன்றைய நிர்வாகச் சூழலில் Problem Solving Skill என்பது மிக மிக அத்தியாவசியமானதாகிவிட்டது. முன்பெல்லாம், ஒரு மேலதிகாரி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று கீழுள்ளவர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், இன்றோ, அனைவருமே, அனைத்துப் பிரச்னைகளையும் கையாள வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஏனெனில் இன்றைய யுகத்தில், மனிதவளம்தான், Money தரும் வளம் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.

பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் இயல்பிலேயே இருந்தாலும், நம் சுற்றுச் சூழலும், குடும்பமும் அந்தக் குணத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும், நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போதோ, அல்லது அங்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்ட பிறகோ, ஒரு சிறு பதட்டம் வரும். அதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் கூட பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை அறிந்து கொள்ளலாம்.
 

பொதுவாகவே, தினமும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அதைத் தீர்த்துக் கொண்டே வருவதால், அந்தத் திறன் அதிகமாகத் தெரியும். ஆக, பிரச்னையைத் தீர்க்கும் திறன் என்பது பிறவிக் குணம் அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் அது எல்லாப் பிரச்னைக்கும், ஒரே மாதிரி தீர்வாகவும் இருந்து விடக்கூடாது.

ராக்கெட் ஏவும் வேலைக்குச் சேர்ந்தாராம் மொக்கைச்சாமி! அன்று அனுப்ப வேண்டிய ராக்கெட் கவுண்ட் டவுன் டைம் முடிந்தும் கிளம்பவே இல்லை! உடனே இவர் சென்றார். ராக்கெட்டை சாய்க்கச் சொன்னார். அதன் இடுப்புப் பகுதியில் ஒரு உதை விட்டார். இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க! என்றார். எல்லா விஞ்ஞானிகளும் அதிர்ச்சியாக.. என் ஸ்கூட்டரையே இப்படித்தான் நான் ஸ்டார்ட் பண்ணுவேன். ராக்கெட் எம்மாத்திரம்! என்றார்.

ஆக, ஸ்டார்ட் ஆகாத எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுதான் என்ற மன நிலையும் ஆபத்தானது. ஆனால், எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு ஒரு விஞ்ஞானரீதியான, உளவியல் ரீதியான முறை ஒன்று இருக்கிறது என்று பார்த்தோம். அதற்கு டாப் என்ற பெயரும் கண்டோம்.

அதை எப்படிப் பயன்படுத்துவது?

THINK ON PAPER என்றாலே, எண்ணங்களைக் காகிதத்தில் கொண்டு வருவது தான்..நாம் நினைப்பது எல்லாவற்றையும் காகிதத்தில் கொண்டு வந்தால் சரியாகிவிடுமா? என்றால்,.. இல்லை. நாம் எப்படி நினைக்கிறோம் என்பதையும் நாம்தான் வடிவமைக்கவேண்டும்.

அதற்குத்தான், இதில் நாம் ஒரு முறையைக் கையாளப்போகிறோம்.

ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ! கீழ்க்கண்ட செயல்களை வரிசைப் படிச் செய்யுங்கள் !

  1. உங்களுக்கு இருக்கும் தலையாய பிரச்னைகள் மூன்றை வரிசையாக எழுதுங்கள்!

  2. அதனை, இப்போது முக்கியத்துவ அடிப்படையில் - அதாவது, எந்தப் பிரச்னையை உடனே தீர்க்கவேண்டும் என்ற வகையில் - வரிசைப்படுத்தி, அதில் தேர்வான முதல் பிரச்னையை மீண்டும் கீழே எழுதுங்கள்.

  3. இந்தப் பிரச்னை ஏன் ஏற்பட்டது என்று எழுதுங்கள்.

  4. எதற்காக இது பிரச்னையாகக் கருதப்படுகிறது என்று எழுதுங்கள். இது இப்படியே போனால் என்ன ஆகும் என்று எழுதுங்கள்.

  5. எப்படி இது ஆரம்பித்தது என்று குறிப்பிடுங்கள்.

  6. எங்கு தவறு நடந்திருக்கும் என்று சிந்தித்து அதையும் எழுதுங்கள்.

  7. யார் காரணம் என்று குறிப்பிடுங்கள்.

  8. எப்படித் தீர்ப்பது, தீர்வுக்குப் பிறகு கிடைக்க இருக்கும் பலனை எழுதுங்கள்.

  9. மனதில் தோன்றும் அத்தனைத் தீர்வுகளையும் வரிசையாக எழுத ஆரம்பியுங்கள்.

  10. அவற்றில் முக்கியமாகவும், சரி வரக் கூடியதாகவும் கருதப்படும் 3 தீர்வுகளை மீண்டும் எடுத்து எழுதுங்கள்.

  11. மூன்றையும் ஆராய்ந்து, அவற்றில் ஏதாவது ஒரு தீர்வை “இதைத் தவிர வேறுவழியில்லை” என்ற வகையில் தேர்ந்தெடுங்கள்.

  12. அதுதான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு!

இப்படித்தான் TOP வேலை செய்கிறது.
 
இதனை நடைமுறையில் செய்துப் பார்த்தால், உண்மையிலேயே சிறப்பான தீர்வை அடைந்துவிடலாம். பொதுவாக பிரச்னைகளைப் பற்றி சிந்திப்பதில் செலவழிக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குகூட, இதனைச் செய்துப் பார்க்க ஆகாது.

மேற்கண்ட பயிற்சியை எந்தப் பிரச்னைக்கு வேண்டுமானாலும் செய்துபாருங்கள்.

ஒரு சில சுவாரஸ்யங்கள் நிகழும். யார் காரணம் என்ற கேள்விக்கு பெரும்பாலோருக்கு “நான்தான்” என்று பதில் வரும்.

நீங்கள் கண்ட தீர்வை விட சிறந்த தீர்வு இருக்கவே முடியாது என்று வந்து நிற்கும். ஏனெனில், உங்கள் பிரச்னையில், அனைத்துச் சூழலும், அதன் தன்மையும், அதன் வீரியமும், அது ஏற்படுத்தப் போகும் தாக்கமும் அறிந்தவர் நீங்களாக மட்டும்தான் இருப்பீர்கள்.

சரி..பிரச்னையைத் தீர்க்கும் சூட்சுமம் தெரிந்து கொண்டாகிவிட்டது. இத்தோடு நேர்முகத் தேர்வில் விட்டு விடுவார்களா? என்றால், இப்போது பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறோம் என்பதுதான் உண்மை…

மீதிக் கிணறை வரும் வாரங்களில் தாண்டுவோம்.