Blogger Widgets

Total Page visits

163728

Thursday, May 21, 2015

என்று தீரும் பொறியாளர்களின் கண்ணீர்?

நாட்டில் கல்வியின் நிலை உயர்ந்திருப்பதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால், கொடுமை என்னவெனில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் நிலை உயரவில்லை. கல்வி தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் தரம் உயரவில்லை. அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் தரம் அடிமட்டமாக இருக்கிறது. 

அரசாங்கம் ஒரு குழு அமைத்து, தமிழகத்தில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தரத்தை முறையாக ஆராயும் பட்சத்தில் (நேர்மையாக),  500-ல் 50 கூட மிஞ்சாது என்பது மிகுந்த வேதனைக்குரிய, மறுக்க முடியாத உண்மை. மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி பணம் சேமிக்கும் கஜானாவாக மட்டுமே செயல்படுகின்றன கல்லூரிகள். ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்குகிறது அரசு. ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் முதலாம் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் மாணவர்கள், கல்லூரியின் செயல்பாடுகளால் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. 

அத்தகைய மாணவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் பாதியைக்கூட கல்லூரி விரிவுரையாளர்களால் பூர்த்திசெய்ய முடிவதில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள்தானே!

''ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளிவரும் பொறியாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர் களிடம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான தகுதி இருப்பதில்லை" என்கிறது அந்த நிறுவனங் களின் அறிக்கை. அப்படி வெளிவரும் 80 சதவீதம் பேரும், சில மாதங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டு நிறுவனங்களின் வாசல்களில் குடியிருந்து, தகுதியற்றவர்கள் எனக்கூறி துரத்தப் படுகின்றனர். அவ்வாறு துரத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்களின்  அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் எம்.இ அல்லது எம்.டெக் மேற்படிப்பில் சேருவதுதான். காரணம், இரண்டு வருட படிப்பை முடித்துவிட்டால், ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதுதான். சேர்ந்தவுடன் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். இது போதாதா..? ஒருசிலர் இதில் விதிவிலக்கு. பள்ளிப்பிராயத்திலிருந்தே விரிவுரையாளர் பணியை விரும்பி பயின்று விரிவுரையாளர்களாக ஆகிறார்கள்.

இன்று பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்(!) வாத்தியார்களில் பெரும்பான்மை யானவர்களின் கதை இதுவாகவே இருக்கும். நிறுவனங்களால் பொறியாளராகப் பணிபுரிய தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி புதிய திறமையான பொறியாளர்களை உருவாக்குவார்கள்? 

இது 'விரிவுரையாளர்' என்ற பெயரில் அடுத்தவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் செயல்தானே?. ஒருவர் 10 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார், அந்த 10 பேர் சில வருடங்களில் 100 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார்கள். இதற்கொரு முடிவே இல்லையா? இதையெல்லாம் யார் கேட்பது?

அந்தக் காலத்தில் ஆசிரியராக சேவைபுரிய ஆசைப்பட்டு, லட்சியமாகக்கொண்டு ஆசிரியர்களாக சேவை புரிந்தவர்களே அதிகம். ஆனால் இன்று, வேறு வழியில்லாமல், எளிமையான வழி என்று ஆசிரியப் பணி யைத் தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். இது பொறியியல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
இதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், ஒவ்வொரு வருடமும் கவுன்சிலிங்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீட்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக 'வருத்தம் கொள்கிறது' அண்ணா பல்கலைக்கழகம். 

பொறியாளர்களின் எதிர்காலம் குறித்த இந்த பிரச்னையில் அரசு கவனம் செலுத்தவேண்டியது அவசியம்!

-கே.பி. மதிவாணன் B.E. 

இந்த பதிவு விகடனில் 20/05/2015 இல் பதிவு செய்யப்பட்டது, தகவலை விகடனில் படிக்க இங்கு சொடுக்கவும்.   

No comments: