Blogger Widgets

Total Page visits

Monday, May 18, 2015

அத்தியாயம் 13- பொறுப்பே பிரதானம்

நேர்முகத்தேர்வு என்ற வார்த்தையை சற்றே மாற்றி, நேர் முக்கியத் தேர்வு என்று தலைப்பிடக் காரணமே, ஒவ்வொரு நேர்முகத் தேர்வின் போதும், உள்ளே செல்லும் நபர் , 'எப்படியாவது' தேர்வு நடத்தும் அதிகாரியின் மனதில் இடம் பிடித்துவிடவேண்டும் என்று நினைப்பதும், அது முடியாமல் போனால், 'அந்த Interview எடுத்த ஆள் சரியில்லை' என்று குறைகூறுவதும் நடக்கும். 

அல்லது வேலை கிடைத்துவிட்டால், 'எனக்கு இந்த மாதிரி interview எல்லாம் ஜுஜுபி' என்று தன் திறமைக்கு மட்டுமே வேலை கிடைத்துவிட்டதாக நினைப்பதும் – இரண்டு விளைவுகளை உருவாக்கும். 

முதலாமவர், அடுத்தவரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு , தன் மேல் என்ன தவறு என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதே சமயத்தில், இரண்டாமவர், தனக்கு போதுமான அளவுக்குத் திறமை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, உண்மையில் அன்றுதான் அவர் கடைசியாகத் திறமையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் அளவுக்கு சொதப்பிவிடவும் கூடாது. இதில் நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் கத்தி மேல் நடக்கும் வேலை! சரியான ஆளைத் தேர்ந்தெடுத்தாரோ பிழைத்தார்… !! இல்லையென்றால்.. பிழை ஆகிவிடுவார். ஆக, ஒரு நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது என்று உண்மையில் சரியாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார்ப் போல் தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் கில்லாடிகளாக வலம் வருகிறார்கள். 
 
ஆக, ஒரு ஊழியராக வருபவரின் நிறை குறைகளை இருபுறமும் தெரிந்து கொள்ளும் ஒரு சரியான கருவியாக நேர்முகத்தேர்வு இருப்பதால்தான் அதன் முக்கியத்துவம் உணர்ந்து நேர் முக்கியத் தேர்வு என்றோம்.

இதை ஏன் இந்த 13 வது அத்தியாயத்தில் விளக்கவேண்டும் என்று தோன்றும். இங்குதான் நாம் அடுத்துப் பார்க்கப் போகும் குணம் ஒளிந்திருக்கிறது. ஒரு ஆள், ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது, நான்கைந்து பேர் ஒரு வேலையைச் செய்து அதில் தவறு நிகழ்ந்துவிட்டால், அனிச்சையாக வரும் பதில்  'என் மேல தப்பில்லை' என்பதுதான்!

அதாவது, நியாயமாக யார்மேல் தவறு என்று ஆராய்ந்து அதனைச் சரிசெய்வது ஒரு விதம்! மொத்தத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது வாருங்கள் . தீர்வைக் கண்டறிந்து சரி செய்வோம் என்று நினைப்பது இன்னொரு விதம். அதை விட்டுவிட்டு, என் மேல் தவறே இல்லை என்று எல்லாருமே ஒதுங்கினால், என்ன ஆகும்? தவறு தானாகவே நிகழ்ந்துவிட்டதா என்று பிரச்னை வேறு கோணத்தில் பயணிக்கும்.

இதை உணர்த்தத்தான், அந்த நேர்முகத்தேர்வு உதாரணம் சொன்னேன். நான் நன்றாகத்தான் பதிலளித்தேன். ஆனால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஒரு முன்முடிவை எடுத்துவிட்டால், நேர்முகத் தேர்வு மட்டுமல்ல. வாழ்வில் எதிலுமே அந்த நபர் கற்றுக்கொள்வது நின்றுவிடும். அப்படியானால், நேர் முக்கியத் தேர்வுக்குத் தேவையான அடுத்த குணம் என்ன?

பொறுப்புணர்ச்சி !!

பொதுவாக நிறுவனங்களில், ஒரு வேலையில் ,பிரச்னை என்று வரும்போது, 

நான் பாக்கலை சார்!
என் வேலை இல்லை சார்!
அவர் பாக்குறாரேன்னு விட்டுட்டேன் மேடம்!
கம்ப்யூட்டர்தான் ஏதோ மிஸ்டேக்!
நான் தப்புப் பண்ண வாய்ப்பே இல்லை!
அடுத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?
என் லெவல் வரைக்கும் கரெக்டா இருக்கு பாருங்க!

இப்படிக் காரணங்களை அடுக்க மட்டும் எந்த ஊழியரும் மறப்பதே இல்லை. ஆனால், ஒரு நிறுவனம் என்பது அப்படி அல்ல..! நீங்கள் உள்ளே நுழைந்தவுடனேயே உங்கள் ஊதிய மீட்டர் ஓடத் துவங்கிவிடும்.. ஆனால் அவர்களது வேலை மீட்டர்?
 
இங்கு பல்வேறு நிறுவனங்களில் நடக்கும் கூத்து என்னவென்றால், மேலதிகாரி இருந்தால், ஒருமாதிரியும், அவர் இல்லாவிட்டால் வேறொரு மாதிரியும்தான் ஊழியர்கள் நடந்துகொள்கிறார்கள். அமீபாவாகத் தெரியும் இந்த பிரச்னைதான் அனகோண்டாவாக மாறி நிறுவனத்தையே விழுங்கிவிடும்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே

என்று திரமூலரின் திருமந்திரத்தில் ஒரு பாடல் வரும். அதன்படி, நம்மைக் கண்காணிக்க யாருமே இல்லை என்றுதான் நாம் பல தவறுகளைச் செய்கிறோம். ஆனால், கண்காணிப்பவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்று உணர்ந்தவர்கள் தவறு செய்யமாட்டார்கள்.  இதனை நான் நிறுவனத்துக்கும் உரித்தாக்குகிறேன்.

நம்மைப் பார்க்க யாருமே இல்லை என்ற நேரத்திலும், சரியாக நடந்துகொண்டால் போதும்.

ஒரு போக்குவரத்து சிக்னல், இரவு இரண்டு மணி, நாம் மட்டும் வாகனத்தில் செல்கிறோம். நம் வழியில் சிகப்பு விழுந்திருக்கிறது. அதனை மதித்து நிற்பதுதான் பொறுப்புணர்ச்சி!

இங்கு குப்பைப் போடாதீர்கள் என்ற பொது இடத்தை மதித்து , அப்போது சாப்பிட ஆரம்பித்த சாக்லேட் பேப்பரை , குப்பைத்தொட்டியைத் தேடிப் போய்ப் போட்டுவிட்டு வந்தால், அதன் பெயர் பொறுப்புணர்ச்சி!

அப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சி இருக்கிறதா என்று நேர்முகத்தேர்வில் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் ? 

ஒரு வாரம் நேரம் இருக்கிறது. சிந்திக்கலாம்...

No comments: