Blogger Widgets

Total Page visits

Monday, May 18, 2015

அத்தியாயம் 10 - தீர்வுத் திறன்

பட்டப்படிப்பு முடித்துவிட்டேன். கல்வியறிவு இருக்கிறது. முறையாக ஒரு சுய விவரம் (ரெஸ்யூமே) இருக்கிறது. கவனம் இருக்கிறது. கற்பனை வளத்துக்கும் பஞ்சமில்லை. இன்னும் எனக்கு வேலை கொடுக்க என்னதான் பிரச்னை? என்று ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் நபர் கேட்டால், என் பதில் இப்படித்தான் இருக்கும்.
பிரச்னைதான் பிரச்னை!
புரியவில்லை என்றால், பிரச்னைகளை எப்படி அணுகுகிறார்கள்? எப்படித் தீர்க்க முயல்கிறார்கள் என்பதுதான், அடுத்தகட்டமாகத் தேவைப்படும் திறன். அதாவது, PROBLEM SOLVING SKILL.
வேலை பார்க்கும் இடத்தில் என்ன மாதிரியான பிரச்னை வந்துவிடப் போகிறது? அதனைத் தீர்க்க என்ன புதிதாக ஒரு திறன் தேவைப்படப் போகிறது? என்று கொஞ்சம் கண்டுகொள்ளாமல்தான் இருப்போம். ஆனால், ஆழ்ந்து பார்க்கும்போதுதான், விஷயம் விளங்கும்.
ஏனெனில், அடிப்படையாகவே எல்லா நிறுவனங்களுமே பிரச்னைகளை அடிப்படையாக வைத்துத்தான் இயங்குகின்றன. பிறரின் பிரச்னையைச் சரி செய்வதுதான் ஏறத்தாழ எல்லாத் தொழில்களின் அஸ்திவாரம். அதாவது, வாடிக்கையாளருக்கு ஒரு பிரச்னை. அதனைச் சரி செய்வதுதான் அந்த நிறுவனத்தின் தொழில்.



உலகச் செய்திகளை வீட்டுக்குள்ளேயே தெரிந்துகொள்ள முடியவில்லையே என்ற பிரச்னை – தினசரி செய்தித்தாள் என்பது தீர்வு!

துணிகளைத் துவைக்க கை வலிக்கிறது என்பது பிரச்னை – வாஷிங் மெஷின் என்பது தீர்வு!
உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வை பார்க்கமுடியவில்லையே என்பது பிரச்னை – தொலைக்காட்சி என்பது தீர்வு!
அழுக்குப் போக, நுரை வரக் குளிக்க முடியவில்லையே என்பது பிரச்னை – சோப் என்பது தீர்வு!
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக்கு வேகமாகக் செல்ல முடியாதது பிரச்னை – மோட்டார் வாகனங்கள் தீர்வு!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதன்படி, ஒரு பிரச்னைக்குத் தீர்வாகத்தான் நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு, அன்றாடம் வேலையில் வரும் பிரச்னையைத் தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறே இல்லையே?

பொதுவாக, ஒரு நிறுவனத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு சேவை செய்யும்போது, அதில் ஒரு பிரச்னை வந்தால், அதனை எப்படித் தீர்க்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதில், நிறுவனத்தின் நன்மதிப்பு உயர வேண்டும். நேரம், பணம், உழைப்பு ஆகியவற்றை மிச்சப்படுத்த வேண்டும். பிரச்னைகளை வேறு ஒரு கோணத்தில் அணுகி, தீர்வுடன் வரும் சாமர்த்தியம் வேண்டும்.
சரத்குமார் இரு வேடங்களில் நடித்த ‘ஐயா’ திரைப்படத்தில், ஒரு கிராமத்து ஏரியைத் தூர் வார 37 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், செய்ய இயலாது என்று அரசு சொல்லிவிடும். அது ஒரு பிரச்னையாக நிற்கும். அதனை மிகவும் எளிய முறையில், எதற்கு என்ன செலவழித்தால், எப்படி வருமானம் ஈட்டினால், கிராம மக்களே அந்த ஏரியைத் தூர் வார முடியும் என்று தீர்வு சொல்வார் சரத்குமார். அதில், பிரச்னையை எல்லாக் கோணத்திலும் அலசிய புத்திசாலித்தனம் தெரியும்.



பொதுவாக, நேர்முகத் தேர்வில், ஒரு நபரிடம் கேள்வி கேட்கும்போது, அவரது தீர்வு காணும் திறனைச் சோதிக்க, கற்பனையாகச் சில கேள்விகள் கேட்பார்கள். உதாரணமாக…

அது ஒரு குறுகலான மலைப்பாதை. இரு புறமும் பாறைகள். ஒருநாள், ஒரு பெரிய பாறை உருண்டு அந்தப் பாதையில் விழுந்துவிட்டது. நீங்கள் அதனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும். கிரேன் போன்றவற்றைக் கொண்டுவர இயலாது. வெடி வைத்துத் தகர்க்க முடியாது. நேரமும் குறைவுதான்.. என்ன செய்வீர்கள்.?
அடுத்ததாக,
ஒருநாளில் 35,000 சோப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளிவரும் சோப்புப் பெட்டிகளில், பரவலாக, பல சோப்புப் பெட்டிகளுக்குள் சோப்பு இல்லாமல், கவர் மட்டும் வருவதாகப் புகார் எழுகிறது. அந்தத் தொழிற்சாலையில் சோதிக்கும்போது, சோப்புகளை கவர்களுக்குள் போட்டு சீல் செய்யும் இடத்தில், அந்தக் கவருக்குள் சோப்பு இருக்கிறதா என்பதை ஆராயும் வழிமுறை இல்லை என்று தெரியவருகிறது. அதாவது, அங்கிருந்து செல்லும் எல்லா சோப்புப் பெட்டிகளிலும் சோப்பு இருக்க வேண்டும். வெற்றுக் கவராக ஒரு பெட்டிகூடச் செல்லக் கூடாது. இதற்கு நீங்கள் எப்படித் தீர்வளிப்பீர்கள்?
இதுபோன்று எண்ணற்ற கேள்விகள் உள்ளன. இதற்கான தீர்வுகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கிறோம்? எந்த விதத்தில் அதற்கு பதில் சொல்ல முனைகிறோம்? எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறோம்? என்பது போன்ற பல விவரங்கள் பார்க்கப்படும்.
சில நேரங்களில், பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகச் சொல்லும் தீர்வுகளே பிரச்னையாகிவிடக்கூடாது.
அதாவது, அவசரமாக விக்கல் எடுக்கிறது என்பது பிரச்னை. அதற்குத் தீர்வாக, அருகில் இருக்கும் விஷத்தை எடுத்துக் குடித்துவிடுவது!
இப்போது, தீர்வு இன்னொரு பிரச்னையை உருவாக்கிவிடும். விஷம் குடித்தால் விக்கல் நின்றுவிடும். ஆனால், விஷம் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்குமே?
அப்படித்தான், சில பிரச்னைகளுக்குத் தீர்வு யோசிக்கும்போது, தவறு செய்துவிடுகிறார்கள்!
சரி! பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது? அது என்னிடம் எப்படி இருக்கிறது என்பதை எப்படி அளப்பது?
அதற்குமுன், நான் கேட்ட இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வை சிந்தித்து வையுங்கள். அடுத்த வாரம் சந்திக்கலாம்!

No comments: