Blogger Widgets

Total Page visits

Monday, April 28, 2014

ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகள்

தமிழ்நாடு விவசாயத்தையே பெரும்பாலும் சார்ந்துள்ள மாநிலமாகும். இங்கு இரு வழிகளில் சாகுபடி நடக்கிறது. ஆறு, ஏரிகள், கால்வாய்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் நடக்கிறது. இந்த வசதி இல்லாத விவசாயிகள், பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்யவேண்டிய நிலை உள்ளது. முன்பெல்லாம் விவசாயிகள் கிணறு தோண்டியே தங்கள் நிலங்களில் சாகுபடி செய்து வந்தனர். கிணறுகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் கீழே போய்விட்டது. 30 அடி, 40 அடி ஆழத்தில் இருந்த நீர்மட்டம், இப்போதெல்லாம் பல இடங்களில் 500 அடி, 600 அடிக்கு கீழே போய்விட்டது.

இதுபோன்ற இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டித்தான் தண்ணீர் எடுக்கவேண்டிய நிலை தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுவிட்டது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், கட்டிட வேலைகளுக்கும் சரி, வீடுகளுக்கும் சரி, இப்போது ஆழ்குழாய் கிணறுகள் மூலமே தண்ணீர் எடுத்துவருகிறார்கள். சில நேரம் ஆழ்குழாய் கிணறு ஒரு இடத்தில் 400 அடிக்கு தோண்டப்பட்டு, பக்கத்தில் ஒருவர் 500 அடிக்கு தோண்டிவிட்டால், இந்த கிணற்றில் தண்ணீர் இருக்காது. அந்த நிலையில், இதை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்தில் 500 அடி அல்லது அதற்கு மேலேயே தோண்டச்சென்றுவிடுகிறார்கள். இத்தகைய ஆழ்குழாய் கிணறுகளில் சரியான பாதுகாப்பு இல்லாததால், இத்தகைய கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது. கடாந்த 10 நாட்களில் மட்டும் 3 சம்பவங்கள் நடந்துவிட்டன. விழுப்புரம் மாவட்டம், தியாகதுருவம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தில் கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை சரியாக மூடாததால் அதில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை மதுமிதாவும், திருவண்ணாமலை மாவட்டம், பொன்னகர் பகுதியில் இதேபோல கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறு சரியாக மூடப்படாததால், அதில் தவறி விழுந்த 1½ வயது சிறுவன் சுஜித்தும் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரி கிராமத்தில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் ஹர்ஷன் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மதுரை டி.வி.எஸ். சமுதாய கல்லூரியைச்சேர்ந்த மணிகண்டன் கண்டுபிடித்த ரோபோ மூலம் உயிர் பிழைத்தான்.

இனிமேலும், இப்படி ஒரு சோக சம்பவம் நடக்கக்கூடாது. ஆழ்குழாய் கிணறுகளைத்தோண்டும் பணிகளைச்செய்யும் கம்பெனிதான், அந்த ஆழ்குழாய்கிணறுகள் தோண்டி முடிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான பாதுகாப்புக்கான முழுபொறுப்பையும் ஏற்கவேண்டும். உடனடியாக அரசு தமிழ்நாட்டில் எத்தனை ஆழ்குழாய் கிணறுகள் பயன்பாட்டில் இருக்கின்றன?, எத்தனை கிணறுகள் பயன் இல்லாமல் அப்படியே விட்டுவிடப்பட்டுள்ளன என்று பார்த்து, பாதுகாப்பாக அனைத்து ஆழ்குழாய்கிணறுகளும் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும். உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. இதன்படி, ஆழ்குழாய் கிணறுகளைத்தோண்டவோ, பழுதுபார்க்கவோ விரும்பினால் 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி அமைப்புகள், நிலத்தடி நீர் துறை, பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் கம்பெனிகள் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளிடம் பதிவு செய்யவேண்டும். அந்த இடத்தில் நில உரிமையாளர் பெயர், அந்த கிணறு தோண்டும் பணியைச் செய்யும் கம்பெனி பெயர் கொண்ட போர்டு வைக்கப்பட வேண்டும். ஆழ்குழாய் கிணற்றைச் சுற்றிலும் .30 மீட்டர் உயரத்துக்கு தரைக்கு மேலும், கீழும் சிமெண்டு சுவர்கள் எழுப்பப்பட வேண்டும். இரும்பு மூடியால் மூடப்பட வேண்டும். வேலை முடிந்தவுடன் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் நன்றாக மூடப்படவேண்டும். கைவிடப்பட்டுள்ள ஆழ்குழாய் மணல் போன்ற பொருட்களால் நன்றாக நிரப்பப்படவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் பற்றிய தரைமட்டம் வரை சரியாக நிரப்பப்பட்டு, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெறவேண்டும். அந்த வழிமுறைகளை அரசு உடனடியாக உத்தரவாக பிறப்பித்து, இதை மீறுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், மீட்பு நடவடிக்கைக்கான புதிய தொழில்நுட்பங்களை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், அறிவியல் நிபுணர்களும் கண்டுபிடிக்க வேண்டும். மதுரை மணிகண்டன் கண்டுபிடித்த ரோபோவை இன்னும் நவீனப்படுத்தி பயன்படுத்தவும் பரிசீலிக்கவேண்டும்.

நன்றி: தினத்தந்தி

No comments: