Blogger Widgets

Total Page visits

Friday, June 20, 2014

பெயரில்தான் எல்லாம் இருக்கிறது

'பெயரில் என்ன இருக்கிறது?' என்று கேட்டார் ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். ஆனால் பலரும் பெயரில்தான் எல்லாமே இருக்கிறது என்பதுபோல் குழந்தை பிறப்பதற்கு முன்பே என்ன பெயர் வைக்கலாம் என்று வீட்டில் பட்டிமன்றமே நடத்துகிறார்கள்.

ஒரு காலத்தில் குழந்தைக்கு ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரையோ, அக்குழந்தையின் தாத்தா அல்லது பாட்டியின் பெயரையோ சூட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் பெரியவர்களின் பெயரைச் சூட்டினால் குழந்தையை பெயர் சொல்லிக் கூப்பிட முடியாது, திட்ட முடியாது என்பதனால் பேபி, பாப்பா, அம்பி என்றெல்லாம் செல்லப் பெயரிட்டு, பிறகு அந்தப் பெயரே நிலைத்து விடுவதும் உண்டு.

அந்தந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த திரைப்பட நடிகர், நடிகைகளின் பெயர்கள் சூட்டப்பட்ட காலமும் ஒன்று உண்டு. இப்பொழுது இருக்கவே இருக்கிறது இணையதளம். வலை வீசி நல்ல பெயரைத் தேடிக்கொள்ளலாம். ஆனால் என்னதான் கஷ்டப்பட்டு பெற்றோர் குழந்தைகளுக்குப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்தாலும் அவர்கள் பெரியவர்களான பிறகு, தங்களுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

நியூமராலஜியில் நம்பிக்கை உள்ளவர்கள் பெயர்களின் "ஸ்பெல்லிங்' ராசியானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களைப் பொருத்தவரையில் ஆண், பெண் இரு பாலருக்குமே ஒரே மாதிரியான பெயர்களே சூட்டப்படுகின்றன. பெண்ணென்றால் அத்துடன் கெளர் என்ற வார்த்தையும் ஆண் என்றால் சிங் என்ற சொல்லும் இணைக்கப்படும்.

இதற்கான காரணம், சீக்கியர்கள் குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயரைத் தங்களது புனித நூலான குருகிரந்த சாகிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு அந்த நூலைத் திறந்து தாங்கள் கை வைக்கும் இடத்தில் எந்தப் பெயர் உள்ளதோ அந்தப் பெயரையே தெய்வத்தின் ஆணையாக ஏற்றுக் கொண்டு தங்கள் குழந்தைக்குச் சூட்டி விடுவார்கள்.

பொதுவாக, திருமணத்திற்குப் பிறகு பல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு உண்டு. சில பெண்கள் விஷயத்தில் புகுந்த வீட்டினர் பெண்ணின் பெயர் பிடிக்கவில்லை என்று சொல்லி பெயரை மாற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்துவார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் பெயருடன் கணவனின் பெயரை இணைத்துக் கொள்வது காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது சில பெண்களுக்கு மிகப் பெரிய அடையாளப் பிரச்னையை உருவாக்குகிறது.

ஒரு பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு சிறந்த பாடகியாகவோ, எழுத்தாளராகவோ, ஆராய்ச்சியாளராகவோ தங்களுடைய கன்னிப் பருவப் பெயரிலேயே பிரபலமாகி இருக்கலாம். திருமணத்திற்குப் பிறகு கணவனின் பெயரை இணைத்துக் கொள்வதால் இவரேதான் அவர் என்று பலருக்குப் புரியாது.

சமீப காலத்தில் இந்தப் பிரச்னைக்கு ஒரு புதிய தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பெயருடன் தந்தையின் பெயர், கணவனின் பெயர் இரண்டையுமே இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம், பிரியங்கா காந்தி வதேரா, ஐஸ்வர்யா ராய் பச்சன், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் போன்றோர். இன்றைய தலைமுறைப் பெண்கள் கணவனை பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அல்லது செல்லப் பெயரிட்டு காதல் மொழி பேசுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்துப் பெண்கள் கணவன் பெயரை உச்சரிக்கக்கூட மாட்டார்கள்.

கணவனின் பெயர் உள்ள யாரையாவது பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால்கூட, "நான் அந்தப் பெயரைச் சொல்ல மாட்டேனே', "அவர் வந்திருக்கிறார்' என்று சுற்றி வளைத்துச் சொல்வதைப் புரிந்து கொள்வதற்குள் நமக்குத் தலையைச் சுற்றும்.

வட இந்தியாவில், குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஆண்கள் தங்களது மனைவியைப் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டார்கள் "ஆஷா கீ மா', "முன்னா கீ மா' என்று தங்களது மூத்த குழந்தைகளின் பெயரைச் சொல்லி "அவனுடைய அம்மா', "அவளுடைய அம்மா' என்றுதான் அழைப்பார்கள். இவர்களெல்லாம் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவோ அல்லது குழந்தையே இல்லையென்றால் எப்படி அழைப்பார்கள் என்பது தெரியவில்லை.

இன்றும் இந்த நாட்டில் எத்தனையோ குடும்பப் பெண்கள் தங்களுடைய பெயரே வெளி உலகிற்குத் தெரியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "முத்துசாமி வீட்டம்மா', "ஆறுமுகம் பெஞ்சாதி', "சுப்பையா சம்சாரம்' போன்று கணவனின் பெயரை வைத்தே அறியப்படும், அழைக்கப்படும், அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு தங்கள் சொந்தப் பெயரை மட்டுமல்ல, தங்களின் சுயத்தையே இழந்து போய் நிற்கிறார்கள் இந்தப் பெண்மணிகள்.

Thanks dinamani 

No comments: