Blogger Widgets

Total Page visits

Tuesday, June 23, 2015

அத்தியாயம் 18-நெருக்கடியில் நீங்கள் யார்?

முடிவெடுக்கும் திறனை ஆராய்ந்து பார்க்க, ரயில் வரும் கேள்வியைப் பார்த்தோம்.
ஒரு கிராமம், இரண்டு இரயில் பாதைகள். ஒன்று 15 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லை. இன்னொன்றில் தினமும் மாலை 4 மணிக்கு ரயில் வரும். அப்படி ஒரு நாள், பயன்பாட்டுத் தடத்தில் 10 குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஒரு குழந்தை மட்டும் பழைய தடத்தில் விளையாடுகிறது. ரயில் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள்தான் நிலைய அதிகாரி. ரயிலின் பாதையை மாற்றும் லீவர் உங்கள் கையில்… ரயில் பழைய பாதையில் செல்லுமா? தினசரி செல்லும் பாதையில் செல்லுமா? குழந்தைகளைக் காக்க, என்ன முடிவெடுப்பீர்கள்?
இந்தக் கேள்வி கேட்கப்படும்போது பெரும்பான்மையானோர் ஒரே முடிவைத்தான் எடுப்பார்கள்.
ரயிலை பழைய பாதைக்குத் திருப்பிவிடுவது! ஏனெனில், அதில்தான் ஒரு குழந்தை மட்டும் விளையாடிக்கொண்டிருக்கிறது. மற்ற 9 குழந்தைகளும் காப்பாற்றப்படும் என்று சிந்தித்தோம் என்று பதில் வரும்.
இதைத்தான் Emotional Decision Making என்று சொல்கிறோம். அதாவது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது…
ஆனால், சரியான முடிவு இது இல்லை.
இந்த ரயில் பிரச்னையை இன்னும் ஆழமாக அணுகினால் போதும். நீங்கள் ஸ்டேஷன் மாஸ்டராக இருக்கும்பட்சத்தில், முதலில், ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்று முடிவெடுப்பீர்கள். ஏனெனில், ரயில் ஒவ்வொரு நாளும் 4 மணிக்கு வரும் என்று தெரிந்துதான் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும். ஆகவே, ரயில் அருகில் வரும்போது, ஆண்டாண்டு காலமாக, பயன்படுத்தாமல் இருக்கும் பாதையில் சென்று நின்றுகொள்ளலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும்.
ஒரு குழந்தை மட்டும் பழைய பாதைக்குச் சென்றிருக்கும்பட்சத்தில், அது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், நாம் குழந்தைகளுக்கு வழிகாட்ட விரும்பினால், அந்த பழைய பாதையை நோக்கி போகச் சொல்லிவிட்டு பேசாமல் இருக்கலாம்.
இப்போது, ரயில் அதன் பாதையில் வரும். குழந்தைகள் பழைய பாதையில் நிற்பார்கள். ரயில் அதன்போக்கில் சென்றுவிடும்.
ஆனால், நன்மை செய்கிறேன் பேர்வழி என்று பழைய பாதைக்கு ரயிலை திருப்பிவிட்டால் என்ன ஆகும்?
15 ஆண்டுகளாகப் பயன்படுத்தாத பாதை, - அப்படியெனில் அது பராமரிப்பே இல்லாமல்தான் இருந்திருக்கும். வேகமாக ரயில் அதன் மீது வரும்போது என்னவேண்டுமானாலும் ஆகலாம். அந்த வகையில் திடீரென்று அந்தப் பழைய தண்டவாளம் உளுத்துப்போய் இருந்து, ரயிலின் பாரம் தாங்காமல் உடைந்துவிட்டால் என்ன ஆகும்? மிகப்பெரிய விபத்து ஏற்படும். அந்த ஒரு குழந்தையோடு சேர்த்து, ரயிலில் பயணிக்கும் 1500 பயணிகளின் உயிருக்கும் ஆபத்து நேரிடும்.
மேலும், இன்னொரு பிரச்னையும் உண்டு. ரயில் அருகில் வந்துவிட்டது என்று தெரிந்ததும், விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் பழைய பாதையை நோக்கிப்போனால் என்ன ஆகும்? யாருமே மிஞ்சமாட்டார்கள்.
ஆக, ஸ்டேஷன் மாஸ்டரான நீங்கள் உணர்ச்சிவசத்தால் எடுக்கும் முடிவு, பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்கும்.
அப்படியெனில், அனைத்தையும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து முடிவெடுப்பதற்கு என்ன பெயர்?
Rational Decision Making – விழிப்புணர்வுடன், தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவெடுத்தால் போதும். அனைவரது வாயிலிருந்தும் ‘வாவ்’ நிச்சயம்!
ஆக, முடிவெடுப்பதிலும் ஒரு சரியான அணுகுமுறை தேவை என்பது புரிந்துகொள்ளலாம். ஏனெனில், பல நேரங்களில், நிறுவனங்களுக்கு அப்படிப்பட்ட திடீர், அதிரடி முடிவுகளை எடுக்கவேண்டி நேரிடும். அதனை எடுக்கவைப்பது அங்கு வேலை பார்க்கும் நீங்கள்தான் என்றால், அந்த முடிவை எடுத்ததே நாம்தான் என்று ஆகிவிடும். அந்த அடிப்படையில், ஒரு பிரச்னை ஏற்படும்போது எப்படி முடிவெடுக்கிறோம் என்று நிறுவனம் நம்மை எடைபோட்டுப் பார்க்கும்.
அதை நெருக்கடி நிலைச் சிந்தனை என்று தமிழில் சொல்லலாம். ஆங்கிலத்தில் CRITICAL THINKING என்கிறார்கள்.
மேற்கண்ட ரயில் கதை ஒரு நெருக்கடி நிலை முடிவெடுக்கும் திறனைச் சோதிக்கும் முயற்சிதான்! நிதானமாக அமர்ந்து, டீ குடித்துக்கொண்டே முடிவெடுக்க முடியாத நிகழ்வுகள் நம் நிறுவன வேலை வாழ்வில் அடிக்கடி நிகழும். அதில் எடுக்கும் பல தவறான முடிவுகள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை படைத்தவை! அது நடக்காமல் இருக்கத்தான் நிறுவனங்கள் கொஞ்சம் கூர்மதியுடன் அப்படிப்பட்ட சரியான சிந்தனை உள்ள மனிதர்களை வேலைக்கு அமர்த்த முயற்சிக்கின்றன. 
நமக்கும் வாழ்வில், பல தருணங்களில், நெருக்கடி நிலை முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அதனை நாம் உணர்ச்சிவசப்பட்டு அணுகினோமா? அறிவுப்பூர்வமாக அணுகினோமா? என்பதை வைத்தே அதன் விளைவு என்ன ஆகியிருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக, உணர்ச்சிவசப்பட்டு எடுத்த எல்லா முடிவுகளின் விளைவும் தவறாகத்தான் போயிருக்கும். அறிவுப்பூர்வ முடிவுகளின் விளைவுகள் நிச்சயம் முழுத் தவறாகப் போயிருக்க வாய்ப்பில்லை.
ஒரு காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்வில் எடுத்த நெருக்கடி நிலை முடிவுகளைப் பட்டியலிடுங்கள். அதில் நீங்கள் எடுத்த அதிகபட்ச முடிவுகள் உணர்வு சார்ந்திருந்தால், உங்கள் முடிவெடுக்கும் திறனை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கும்.
எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் பெரிய கடனாளி ஆகிவிட்டார். கடனை அடைக்க முடியாமல்போன தருணத்தில், கடன் கொடுத்த ஒருவர் வீட்டு வாசலில் வந்து சத்தம் போட்டுச் செல்லவும், என்ன செய்வதென்று தெரியாமல், அன்று இரவே விஷம் வாங்கிவந்து, உணவில் கலந்து மனைவி, பிள்ளைகளுக்குக் கொடுக்கும் முடிவுடன் கடைசியாக குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறார்.
அதற்குப்பிறகு நடந்ததுதான் அவரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது.
என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

அத்தியாயம் 17-சாதுர்யம் சாதிக்கும்

நண்பர் என்பவர் எனக்கு ஒரு சிந்தனைப் பகிர்தலுக்குத்தான். அவரது ஆசாபாசங்களும், என்னுடையதும் வேறாயிருக்கலாம். ஒன்றாயிருந்தாலும் தவறில்லை. ஆனால், என்ன துறை எடுப்பது என்று இருவருமே தனித்தனியே சிந்தித்து, தன் பலம், பலவீனங்களை அலசி, அதன்படி முடிவெடுத்திருந்தால், வாழ்க வாழ்கவென்று வாழ்த்தலாம்.ஆனால், பொதுவாக என்ன நடந்துவிடுகிறது என்றால், ‘செந்தில், இன்ஜினீயரிங்கில் என்ன படிக்கலாம்னு இருக்க?’ என்று கேட்டால்,
சந்துரு மெக் படிக்கலாம்னு சொல்றான். அதுலதான் நல்ல ஸ்கோப் இருக்காம்!’
‘ஓ, அப்படியா? சந்துரு, இதை எதை வச்சு சொல்றானாம்?’
‘அவன் எதிர்வீட்டு பையன் பிரபுன்னு இருக்கான். அவன் அதான் எடுக்கப்போறானாம். அதனால சொல்றான். ஏன்னா, பிரபு ப்ளஸ்டூல 1175  மார்க் எடுத்திருக்கான்’
பிரபுவிடம் கேட்டால்,
‘எங்க அப்பா சொன்னாங்க!’
அவனது அப்பாவிடம் கேட்டால்,
‘சார், நான் ஒரு ஆட்டோமொபைல் கம்பெனில வேலை பாக்குறேன். அதே கம்பெனியில் என் பையனுக்கு என்னால இன்ஜினீயர் வேலை வாங்கிடமுடியும். அதனாலதான் சொன்னேன். மேலும், என் ஃப்ரெண்டு
வேலு, டெய்லி பேப்பர் படிக்கிறவர்! அவர்தான் சொன்னார். இப்போ கம்ப்யூட்டரெல்லாம் வேஸ்டாம்! அப்புறம், மெடிக்கல் படிக்கவைக்க காசு அதிகமா செலவாகும். மேலும் MBBS மட்டும் படிச்சா போதாது. ஏதாவது Speciality MD வேற படிக்கணும். பாவம் பையன் 26 வயசுலதான் வேலைக்குப் போகமுடியும். அதான் இந்த முடிவெடுத்தேன்’.
அந்த பேப்பர் படிக்கும் நபரைக் கேட்டால் இப்படிச் சொல்லுவார்.
‘மெக்கானிக்கல் படிச்சா, ஒரு மெக்கானிக் ஷெட்டாவது வச்சு பொழச்சுக்கலாம்ல சார்! அதான் சொன்னேன்’.
ஆக மொத்தத்தில், வேலுவின் கும்மாங்குன்ஸான கணிப்புதான், செந்திலை இயந்திரவியல் எடுக்கவைத்திருக்கிறது. ஆனால், ஆழமாகச் சோதித்துப் பார்த்தால், செந்திலுக்கு நன்றாக எழுதவும், பேசவும் வரும். அவன் ஜர்னலிஸம் படித்தால், பெரிய ஆளாக வாய்ப்பு இருக்கிறது.
‘நண்பன்’ படத்தில் விஜய் போகிறபோக்கில் அழகாகச் சொல்லுவார். ‘இவன் காதலிக்கிறது ஃபோட்டோகிராபிய, கல்யாணம் பண்ணிக்கிட்டது
இன்ஜினீயரிங்கை!’
அப்படி, தன் விருப்பத்திலேயே இல்லாமல், யாரோ ஒருவரின் திருப்திக்காகவோ, தன்னால் முடிவெடுக்க முடியாமலோ ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தவர்களை, நிறுவனங்கள் அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலையில் தக்கவைத்துக்கொள்வதே கடினம் என்று எண்ணி, அவர்களை  ‘வேண்டாம்’ என்று நாசூக்காகவோ, நறுக்கென்றோ சொல்லிவிடும்.
உண்மையிலேயே நண்பன் சொன்னதை நம்பி, கண்ணை மூடிக்கொண்டு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், சேர்ந்த பிறகாவது அதனை நேசிக்கத் துவங்கியிருந்தால், நான்கு ஆண்டுகளில் அதன் மீது ஒரு பிடிமானம் வந்து, நேர்முகத் தேர்வை மிகவும் தைரியமாக எதிர்கொள்ளலாம். அந்த நேரத்தில் நண்பர் எந்தத் துறை? ஏன்? என்று கேட்கப்படும்போது, சாதுரியமாகப் பதில் சொல்லலாம்.
‘என்னால் உடனடியாக முடிவெடுக்கமுடியாமல், இன்ஜினீயரிங் எடுத்தேன்.
ஆனால், இப்போது அந்த முடிவை சரி என்று நிரூபிக்க என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன்’.
இந்தப் பதிலில் நேர்மையும் உறுதியும் ஒருங்கே தென்படுவதால், நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
அல்லது, நண்பன் வேறு துறையில் இருக்கிறான். நான் வேறு துறையில் இருக்கிறேன் என்று சொன்னால், ஏன் அந்த முடிவெடுத்தீர்கள்? என்று அடுத்த கேள்வி வந்து விழும். அப்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
என் நண்பனும் நானும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டுள்ளோம். அவனுக்கு எது சரியாக இருக்கும் என்று நான் சொன்னேன். அதுவே அவன் மனதிலும் இருந்தது. அதேபோல் நான் எதைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவன் சொன்னான். அதன்படி முடிவெடுத்தோம் என்று யதார்த்தமாகப் பதில் சொன்னால், சிறப்பாக இருக்கும். நமது முடிவெடுக்கும் திறனை வைத்துத்தான், நம்மைத் தேர்ந்தெடுப்பதா  வேண்டாமா என்று  நிறுவனம் முடிவெடுக்கும். அதைக் கண்டறியத்தான் முன் அத்தியாயங்களில் பேசப்பட்ட கேள்விகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்பார்கள்.
சில முடிவெடுத்தல் தொடர்பான கேள்விகள் கதைபோல ஆரம்பித்து, எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்கப்படும்.அது ஒரு கிராமத்து ரயில்வே ஸ்டேஷன். அதில் மொத்தமே இரண்டு ரயில் பாதைகள்தான் இருக்கின்றன. ஒன்று 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவே இல்லை. இன்னொன்றில், காலை 8 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஒருநாளைக்கு 2 முறை ரயில் வந்து செல்லும். 
அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 3:59 மணி. பள்ளி செல்லும் சிறுவர்கள் பத்து பேர், ரயில் வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரே ஒரு குட்டிப் பையன் மட்டும் ரயில் வராத தண்டவாளத்தில் சென்று விளையாடுகிறான். மற்ற அனைவரும், பயன்படுத்தப்படும் தண்டவாளத்தில் விளையாடுகிறார்கள்.ரயில் வரும் சத்தம் கேட்கிறது.
நீங்கள்தான் ஸ்டேஷன் மாஸ்டர்! உங்களுக்கு அங்கு இருக்கும் இரண்டு வழித்தடங்களில் ஏதாவது ஒன்றில் ரயிலைச் செல்லவைக்கும் அதிகாரம் இருக்கிறது. அதாவது, உங்களால் ரயிலின் பாதையை அந்த இடத்தில் மாற்றமுடியும். அந்த லீவர் உங்களிடம்தான் உள்ளது. அதிகபட்ச குழந்தைகள், ரயில் வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு குழந்தை பயன்படுத்தமுடியாத, பழைய தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆக, புதிய ட்ராக்கில் ரயில் வந்தால் 9 குழந்தைகள் பலியாவார்கள். பழைய ட்ராக்கில் சென்றால் ஒரு குழந்தை பலியாகும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது.
உங்கள் முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.
1. லீவரை பயன்படுத்தி, ட்ராக்கை மாற்றி பழமையான பயன்படுத்தாத தண்டவாளம் வழியே ரயிலை போகச் செய்வேன்…
2. லீவரை மாற்றாமல் வேறு ஏதாவது உபாயம் செய்வேன்…
இதில்தான், நிறுவனம் வேலைக்கு எதிர்பார்க்கும் அடுத்த தகுதியும் ஒளிந்திருக்கிறது.
இதில் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?

அத்தியாயம் 16-முடிவே முழுமை

வ்வொரு நாளும், பல்வேறு தருணங்களில் நாம் வெவ்வேறு முடிவுகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அந்த முடிவுகளை ஒரு வரிசைப்படுத்திப்பார்த்தால், அதன் விளைவுகளில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்று பார்க்கலாம்.
ஆனால், ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிட்டு அதனால் ஏற்படும் விளைவுக்கு மட்டும் நான் பொறுப்பல்ல என்ற நினைப்புதான் மிகவும் ஆபத்தானது. அல்லது, எடுத்த முடிவால் ஏற்பட்ட எதிர் விளைவை நினைத்து வருந்திக்கொண்டே இருப்பதும், அதனால், இனி இதுபோன்ற முடிவே எடுக்கக்கூடாது என்று முடிவெடுப்பதும் அடுத்த கட்டத் தவறுகள்.
உதாரணமாக, ஒரு தூரத்து ஊருக்குச் செல்லவேண்டும். பஸ்ஸில் போகலாமா? இரயிலில் போகலாமா? என்று குழப்பம். பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பஸ்ஸில் போகலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். பஸ் மிகமிகத் தாமதமாகக் கிளம்புகிறது. மழை வேறு பெய்கிறது. நீங்கள் போகவேண்டியது 8 மணி நேரப்பயணம். பஸ் ஒழுகுகிறது. திண்டாடிப்போகிறீர்கள். போய் இறங்கும்போதும் கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஆகியிருக்கிறது. கோபம் கோபமாக வரும்.
இதுக்குத்தான் நான் பஸ்ஸிலேயே போகவேண்டாம்னு நினைச்சேன் என்று சொல்வீர்கள். அல்லது, உங்கள் கூட வந்தவர்கள் தோழர், மனைவி, உறவு என்று யாராக இருந்தாலும் அவர்களது தூண்டுதல்தான் காரணம் என்று அவர்கள் மீது குறை சொல்வோம். பிறகு, அடுத்தமுறை எதில் போவது என்று முடிவெடுக்க வேண்டி வரும்போது, பஸ்ஸில் போன பிரச்னை நினைவுக்கு வந்து, இனிமேல் பஸ்ஸிலேயே போகவேண்டாம் என்று முடிவுக்கு வருவோம். ஆனால், இதுவும் ஒரு முடிவாக ஆகிவிடும்.
ஆனால், இப்படி யோசிக்கலாம்.! முதலில் இரயிலிலா? பஸ்ஸிலா? என்று முடிவெடுக்கும்போதே, தட்பவெப்ப நிலையையும் கணக்கில் எடுத்துகொண்டிருக்கலாம். எந்த பஸ்ஸில் போகப்போகிறோம்? அதனைப்பற்றி ஏற்கனவே சென்றவர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்த்திருக்கலாம். அதனையும் மீறி, நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் நடக்கும்போது, இயல்பாக எதிர்கொள்ளலாம். ஆனால், நாம் எடுத்த முடிவு நம்மீது திணிக்கப்பட்டது என்றோ, இனிமேல் இதுபோன்ற முடிவே எடுக்கக்கூடாது என்றோ பொத்தாம் பொதுவாக அடுத்த முடிவெடுத்தால், அது புத்திசாலித்தனமாக இருக்காது.  அதாவது, ஏன் பஸ்ஸில் போகவேண்டும் என்பதற்கு ஒரு சரியான, புத்திசாலித்தனமான காரணம் இருந்தால், பின்னர் வரும் பிரச்னைகளும் உங்களுக்கு அடுத்து முடிவெடுக்கும்போது கணக்கில் கொள்ளவேண்டிய காரணிகளுக்குள் வந்துவிடும்.
நிறுவனங்கள், நம்மிடம் முடிவெடுப்பதில் புத்திசாலித்தனத்தையும், ஆய்வுத்திறனையும், கவனித்தலையும் எதிர்பார்க்கின்றன. காரணங்களையோ, கவலைகளையோ அல்ல!  ஆக, முடிவெடுத்து, அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமது முடிவெடுக்கும் திறன் வளரும்.


ஒரு நேர்முகத்தேர்வில், பங்கேற்பாளரின் முடிவெடுக்கும் திறனை எப்படி எடைபோடுவார்கள்?
முடிவெடுக்கும் திறனை அளக்கும் கேள்விகள் இப்படித்தான் இருக்கும்!
ஏன் பொறியியலில் எலக்ட்ரானிக்ஸை எடுத்தீங்க?
பனிரெண்டாம் வகுப்பில் ஏன் இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தீங்க?
உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் என்ன படிச்சார் ?
ஃபைனல் இயரில் அந்தப் பிராஜக்ட் எடுக்கணும்னு ஏன் முடிவெடுத்தீங்க?
அந்தக் காலேஜில் ஏன் சேர்ந்தீங்க?
கலை, அறிவியலில் ஏன் உங்களுக்கு பயோ டெக்னாலஜி மேல் ஆர்வம் வந்தது?
இந்தக் கேள்விகளை, ஏதோ நம் படிப்பு பற்றி அக்கறையுடன் விசாரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு,
வேற டிப்பார்ட்மெண்ட்டே கிடைக்கலை சார்! 
எலக்ட்ரானிக்ஸ் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்னு சொன்னாங்க!
எங்க அண்ணன் கம்பெல் பண்ணினான்.
என் க்ளோஸ் ஃப்ரெண்டும் நானும் ஒண்ணாத்தான் கோர்ஸ் தேர்ந்தெடுத்தோம்.
நாங்க தேர்ந்தெடுக்கலை சார். அந்தப் பிராஜக்ட்தான் கரெக்டா ரிசல்ட் வந்தது. மேலும், வேற எதை யோசிச்சாலும், அதை யாராவது செஞ்சிருந்தாங்க!
அந்தக் காலேஜ்தான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அல்லது  அந்தக் காலேஜ்தான் சிட்டில இருந்தது.
பயோ டெக்னாலஜி புது டிப்பார்ட்மெண்ட், அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு ஃப்ரெண்டெல்லாம் சொன்னாங்க !
மேற்கண்ட பதில்கள் எல்லாம், இந்த முடிவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ நடந்தேறிவிட்டது என்று சொல்வதையே பிரதிபலிக்கிறது. இப்படி பதில்சொன்னாலே, நம்ம ஆளுக்கு முடிவெடுக்கத் தெரியாது என்று நிறுவனத்துக்குத் தானாகத் தெரிந்துவிடும்.
ஆக, மேற்கண்ட கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லலாம்.?
பதில்கள் தானாக வரவேண்டும். இருந்தாலும் கீழ்க்கண்ட விபரங்களை மனதில் வைத்துக்கொள்வதுதான் நல்லது!
எலக்ட்ரானிக்ஸ் என்பது அழியாத துறை, அதில் இன்னும் முன்னேற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ரேடியோவாக இருந்தாலும் சரி! இனி வரப்போகும் ரோபோக்களாக இருந்தாலும் சரி! எலக்ட்ரானிக்ஸ் என்பது நிரந்தரமாக இருக்கும். மேலும் எனக்கு சிறுவயதில் இருந்தே, எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் மீது மிகவும் ஆர்வம் அதிகம். ஆகவே எனக்குப் பிடித்த, அழியாத துறையை எடுத்தால், என் எதிர்காலம் வளமாக இருக்கும் என்று யோசித்து இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் போதும்!
நிறுவனம் அசந்துவிடும். உங்கள் முடிவெடுக்கும் திறன் மேல் நம்பிக்கை வந்துவிடும். இதுபோல்தான் நண்பர் பற்றிய கேள்வியும்.! அதில், ஒரு விபரம் அடங்கியிருக்கிறது. நீங்கள் நண்பரைப் பின்பற்றுகிறீர்களா? அல்லது அவர் உங்களைப் பின்பற்றுகிறாரா என்ற விபரமும் வந்துவிடும். ஏனெனில், அவர் உங்களைப் பின்பற்றியிருந்தால், அது நிறுவனத்துக்குப் பிரச்னையே இல்லை. பழக்கத்துக்காகப் படித்தேன் என்று சொல்வதை எந்த நிறுவனமும் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே இந்தப் பதிலில் இன்னும் கவனம் தேவை!
என்ன பதில் சொல்லலாம் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.!

அத்தியாயம் 15- முடிவெடுக்க…முடிவு முக்கியம்

பொறுப்பாக இரண்டு வாரங்களாக நேர்முக்கியத்தேர்வுக்கு பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்று புரிந்தாலும், இந்தத் தொடரை பொறுப்பாகப் படித்துவரும் நண்பர்களுக்கு நன்றியுடன், அடுத்த எதிர்பார்ப்பை அலசுவோம். நிறுவனம் நடத்துவதில் இருக்கும் இன்னொரு சிக்கல், ஊழியர்கள் இரண்டுவிதமாகச் செயல்படும் மனநிலைதான்.! அதாவது தனக்கு எல்லாம் தெரியும். தானே எல்லா வேலையும் செய்துவிடலாம் என்று கொஞ்சம் அதீதமாக நம்பி, 10% சதவீத வெற்றியையும் 90% சொதப்பலையும் நிர்வாகத்துக்குப் பரிசளிக்கும் ஆட்கள் முதல் ரகம்!

எதுக்கு வம்பு? என்ற ஒரே தாரக மந்திரத்துடன், எதை எடுத்தாலும், எங்க சாரைத்தான் கேக்கணும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு, தன்னால் எந்த ஒரு செயலும் நடக்காதமாதிரி செயல்பட்டு, வெற்றியோ, சொதப்பலோ எதையுமே நிறுவனத்துக்குப் பரிசளிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் நபர்கள் இரண்டாம் ரகம்.!

இதில் எது நல்லது என்று கேட்டால்…, இரண்டுமே தவறு என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில், ஒரு நிறுவனத் தலைவர் தனக்கான ஊழியர்களை ஒவ்வொரு துறைக்கும் நியமிப்பதே, அந்தந்தத் துறையில் அனைத்து வேலைகளையும் அவர்கள் பார்த்து, தன்னிடம் பதில் சொல்வார்கள். அந்தத்துறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் நிதி, செயல்பாடு , முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம் என்று நம்பித்தான்!

ஆனால், மேலே கண்ட இருவிதமான நபர்களும் நிறைய குடைச்சலைக் கொடுக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள்.



ஆக, நேர்முகத்தேர்வில், இத்தனை கட்டங்களைத் தாண்டிய ஒரு இளைஞனை / ஞியை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்போவது அவர்களது முடிவெடுக்கும் திறன்தான்.. இந்த நேரத்தில்தான், இந்த ஆள் நமக்கு ஊழியராக வேண்டுமா, வேண்டாமா என்று நிறுவனம் முடிவெடுக்கும்.

நாலு வாரத்துக்கு முன்னாடிதானே, தீர்வுத் திறன்கிறதைப் பார்த்தோம், அதுவும் முடிவு எடுப்பதுதானே என்று உடனே தோன்றும். அதில்தான் சில வித்தியாசங்களை நாம் உணரவேண்டும். தீர்வு என்பது சிந்தனையின் முடிவு. ஆனால் முடிவெடுப்பது, செயல்வடிவத்தின் வாசல்!

தீர்வுத் திறன் என்பது ஒரு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கு அறிவும், பெட்டியைவிட்டுச் சிந்திக்கும் ஆற்றலும் தேவை! ஆனால், முடிவெடுக்கும் திறனுக்கு தீர்வுத்திறனுடன் சேர்ந்து,  கால் கிலோ தைரியம், கால் கிலோ பொறுப்புணர்வும் தேவை!

முடிவெடுக்கும் திறன் என்பது இரண்டுவிதமாக வேலையில் வெளிப்படும்.

நமது மேலதிகாரி அன்று வரவில்லை. அவரது அனைத்து தகவல் தொடர்புகளும் Not Reachable ல் இருக்கிறது. ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம். இன்று ஏதாவது முடிவு எடுக்கவில்லை என்றால், அது அவ்வளவுதான் என்ற நிலை! அந்தச் சூழலில், தீர்வு என்னவென்று தெரிந்தும், மேலதிகாரியின் அனுமதி இன்றி அதனை செயல்படுத்த தைரியமும், அப்படி எடுத்த முடிவால், ஏதேனும் பிரச்னை வந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வுடன் சேர்ந்து இருந்தால், சரியோ, தவறோ - அந்தச் சூழலை ஒரு சரியான ஊழியன் சிறப்பாகக் கடந்துவிடுவான்.

இரண்டாவது விதம் என்னவென்றால், மேலதிகாரி ஊரில்தான் இருக்கிறார். ஒரு முடிவை எடுக்கிறார். ஆனால், அவர் எடுக்கும் முடிவில் தவறு இருக்கலாம் என்று பல்வேறு காரணிகள்மூலமாக, ஊழியருக்குத் தெரியவருகிறது. உடனே

'எக்கேடாவது கெடட்டும்'

'சொன்னா, கேக்கவா போறாரு!'

'அதிகப்பிரசங்கி, முந்திரிக்கொட்டைன்னு திட்டிட்டா?'

'நாம அவசரக்குடுக்கையா முடிவை மாத்திச் சொல்லி, ஏதாவது பிரச்னை ஆகிட்டா?'

'நாம சொல்ற முடிவு சரியா இருந்தா என்ன கிரீடமா குடுக்கப்போறாங்க?' என்று பல்வேறு சிந்தனைகள் ஓடி, உண்மையில் நமக்குத்தோன்றிய -உணர்வை,- முடிவெடுக்கும் திறனை ஒடுக்கிவிடும்.

இதனை எப்படி வளர்த்துக்கொள்வது என்று பார்த்தால், பெரிய சூத்திரம் எதுவும் இல்லை.

ஒவ்வொரு நாளும் நாம் குறைந்தபட்சம் 26 முடிவுகளை எடுப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது.




வீட்டில் காஃபி, டீ, ஹார்லிக்ஸ், க்ரீன் டீ போன்ற அனைத்து பானங்களும் கிடைக்கும்.  எதைக் கேட்கிறோமோ அதைத்  தருவார்கள் என்றால், , ஒருநாள் காஃபி கொடுக்கச் சொல்வோம். அன்றைய தினம் ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசும்போது, க்ரீன் டீயின் சிறப்பையும், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் பற்றி அவர் சிலாகித்தால், நாம் கொஞ்சம் குழம்பி அடுத்த நாள் காலையில் நம் வாயிலிருந்து 'எனக்கு க்ரீன் டீ' என்று வந்து விழும்..

இதுதான் துவக்கம். அதற்கு முன்னால், அலாரம் அடித்தவுடன்,  எழுந்திருக்க வேண்டாம் என்று எடுக்கும் முடிவாகட்டும்,

இந்த உடையை அணிவது.?

கிளம்பும் நேரத்தை நிர்ணயிப்பது,.

பைக்கா?, காரா?, பஸ்ஸா?.

காலை டிஃபனுக்கு இட்லியா? சப்பாத்தியா?

குறுக்கு வழியிலா? மெயின் ரோட்டிலா?

மேனேஜர் கண்ணில் படுவதா? வேண்டாமா?

முதலில் எந்த வேலையைப் பார்ப்பது?

போன்ற சின்னச்சின்ன கேள்விகளுக்கு விடையாக எடுக்கும் முடிவுகள்தான் அன்றைய நாளின் போக்கைத் தீர்மானிக்கின்றன. ஒரு சிலர் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அன்று எடுத்த முடிவுதான் என் வாழ்க்கையையே மாற்றியது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். உண்மைதான்! வேலைக்குச் சேரும் ஊழியர் உண்மையில் முடிவெடுக்கும் திறனுடன் இருக்கிறாரா என்று நிறுவனம் அறிந்துகொண்டால்தான், அவரை சேர்த்துக்கொள்ளவேண்டுமா இல்லையா என்று முடிவெடுக்க முடியும்.

அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதை எப்படி வளர்த்துக்கொள்வது? அடுத்த வாரம் முடிவெடுப்போம்.

அத்தியாயம் 14-பொறுப்பு எனும் கலை!

ஒரு நிறுவனம், தனக்கு எந்த நிலையில், எந்தப் பதவியில் ஊழியர்கள் தேவை என்றாலும், அவர்களிடத்தில் அடிப்படையாக பொறுப்புணர்வை எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், ஒரு நிறுவனத்தின் தலைவரே அனைத்து வேலைகளையும் செய்யமுடியாது என்பதால்தான் ஊழியர்களை நியமிக்கிறார்கள். அவர்களும் எனக்கென்ன என்று இருந்தால், அந்த ஊழியரை நியமித்ததே தனது குற்றமோ என்று நிறுவனம் பொறுப்பாகச் சிந்திக்கத் துவங்கிவிடும்.

ஆக, வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போதே, ஓரளவாவது பொறுப்பானவரா என்று பார்ப்பார்கள். அதைச் சோதிக்கும்முன், உண்மையில் பொறுப்பு என்பது எப்படியெல்லாம் வெளிப்படும் என்று புரிந்துகொள்வோம்.

ஒரு செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதனை முடிப்பதோ, தீர்வு காண்பதோ – எதுவாக இருந்தாலும் – நான் செய்கிறேன்; இந்த வேலையை முடிப்பது என் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்ளுதல் முதல் வகை! - உதாரணமாக, பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, மாணவர்களை ஒருங்கிணைத்து, பஸ்ஸுக்குத் திரும்ப அழைத்து வருவது உன் பொறுப்பு என்று ஒரு பையனை நியமிப்பார்கள். அவனும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால், அவன் முதல் வகைப் பொறுப்பில் வருகிறான். ‘நான் சொல்றதை பசங்க கேக்கமாட்டாங்க சார். வேற யாரையாவது போடுங்க’ என்று ஒதுங்கும் மாணவன், தானாக தனக்கு வந்த பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறான்.

அடுத்தது, எந்த இடத்துக்குச் சென்றாலும், அந்த இடம் நம்முடையது என்ற சொந்தநிலை உணர்வுடன், அங்கு இருக்கும் தவறுகளையோ, சூழலையோ சரி செய்வதுதான் அடுத்த வகைப் பொறுப்பு! குறைந்தபட்சம், அதைச் சரி செய்யக் கோரிக்கை அல்லது ஆலோசனையாவது முன்வைக்கலாம். இதில், அங்கு இருக்கும் நல்லவற்றைப் பாராட்டுவதும் அடங்கும்! உதாரணமாக, நிறைய திரைப்படங்களில் வந்த காட்சிதான்! கேலண்டரில் சரியான தேதியைக் கிழிப்பது, சிதறிக் கிடக்கும் செய்தித்தாள்களை ஒழுங்குபடுத்துவது, நமக்கு சரி எனப் படுவதை வெட்கப்படாமல் செய்வது, அருகில் இருப்பவர் குப்பை போட்டால், அதனை எடுத்துச்சென்று அதற்கான தொட்டியில் போடுவது, தேவையில்லாமல் ஓடும் மின்விசிறியை நிறுத்துவது என்று இயல்பாகச் செய்தல் இந்தவகைப் பொறுப்பு! ஆனால், இதில் நடித்தால் பத்து நிமிடங்களில் பல் இளித்துவிடும். இயல்பாக மாற்றிக்கொள்ளுதல் நலம். இதனை வீட்டில்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனக்கென்ன என்று வீட்டில் இருப்பவர்களை, வெளியில் பொறுப்பானவர்கள் என்று ஒருபோதும் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஏன்? அவர்கள் மனசாட்சியே எதிரில் நின்று கெக்கேபிக்கே என்று சிரிக்கும்.

மூன்றாவது வகைப் பொறுப்புணர்வு என்பது, தவறுகளை ஏற்றுக்கொள்வது. 

இந்தப் பொறுப்புணர்வுதான், இந்தக் காலகட்டத்தில் குடிதண்ணீர்போல மிகவும் அரிதாகிவிட்டது.  ஒரு தவறு நடந்துவிட்டது. ஆமாம். நாம்தான் இதற்குப் பொறுப்பு. என்ன செய்வது என்று ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருவோம். அதனைச் சரி செய்ய முயலுவோம் என்று எண்ணுபவரை நிறுவனம் ஏற்றுக்கொண்டுவிடும். ஆனால், தான் தவறே செய்யவில்லை, அல்லது அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று மொக்கையான லாஜிக்குடன் வாதாடுபவர்களை - அவர்கள் மீதுதான் தவறு என்று – நிரூபிக்கும்வரை நிறுவனமோ, மேலதிகாரியோ ஓயமாட்டார். இதில் சம்பந்தப்பட்ட நபருக்குப் பெரிய பிரச்னையே தடுப்பாட்டம் ஆடுவதே முதல் வேலையாகிவிடும். அதாவது இந்தத் தவறுக்கு தான் பொறுப்பில்லை என்று நிரூபிக்கத்தான் அதிக நேரம் செலவிடுவார். அப்புறம் எங்கே அவர் தீர்வு கண்டுபிடிப்பது? அனைத்து நிறுவனங்களும் இவர்களைத்தான் டேஞ்சர் ஸோனில் கொண்டு நிறுத்தும்.

அப்படியெனில், முதல் இரண்டு வகைப் பொறுப்புகளைவிட, மூன்றாம் வகைப் பொறுப்பைத்தான் நிறுவனம் உற்று நோக்கும். அப்படியெனில், இதனை எப்படிக் கண்டறிவார்கள்? ஏனெனில், முதல் இரண்டு பொறுப்புணர்வாவது ஏதாவது ஒரு செயலில் வெளிப்பட்டுவிடும். 

இதற்குத்தான் நிறுவனங்கள் சந்தேகம் வராத, இயல்பான கேள்விகளை வீசுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்துக்கு, ஒரு பொறுப்பான வேலைக்கு விண்ணப்பித்து, ஒரு இளைஞன் நேர்முகத் தேர்வுக்கு வந்தான். அப்போது, நானும் அந்த நிறுவன அதிபருடன் உடன் இருந்தேன். 
 
அவனது பொறியியல் படிப்பின் 3-வது மற்றும் 4-வது செமஸ்டர் மதிப்பெண்கள் மிகவும் குறைந்திருந்தது. (பொதுவாகவே கொஞ்சம் பொறுப்புக் குறைவான மாணவர்கள், பொறியியல் பட்டத்தின் இரண்டாம் ஆண்டில் கொஞ்சம் ஜாலியாக இருந்துவிடுவார்கள். பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, விட்டதைப் பிடிக்கலாம் என்ற எண்ணம்) அதைக் குறிப்பிட்டு அவர் கேட்டார்.

‘ஏன் இந்த ரெண்டு செமஸ்டர் மட்டும் மார்க் குறைஞ்சிருக்கு?’

‘மூணாவது செமஸ்டர் எக்ஸாம் அப்ப எங்க அக்காவுக்கு மேரேஜ் சார். அந்த வேலையா சுத்தவேண்டியதாயிடுச்சு! அதுல கொஞ்சம் படிக்கிறதுல கவனம் செலுத்த முடியலை சார்! எங்க அப்பாகிட்ட தலைதலையா அடிச்சுக்கிட்டேன். ரெண்டுமாசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்குங்கன்னு. கேக்கவே இல்லை. இப்போ அது ஒரு பெரிய இஷ்யூவா எனக்கு முன்னாடி நிக்கிது’ என்றான்.

‘ஓ… அப்படியா? அப்போ 4-வது செமஸ்டர்…?’  

‘அக்கா பிரக்னென்ட்டாயிட்டாங்க சார்! அவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டுப்போறது, கொண்டுவந்து விடறதுன்னே நேரம் போச்சு சார். சுத்தமாப் படிக்க முடியலை’ என்று லாஜிக் மீறாமல் காரணம் சொன்னான்.

ஆனால், ஒரு விவரத்தை நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைத்துவிட்டான். அந்த மாணவனின் ஊர் கோவில்பட்டி. அவன் கல்லூரி தஞ்சாவூரில்.

அதில்கூட சில லாஜிக் இருக்க வாய்ப்பிருந்ததால், அவர் என்னைப் பார்த்தார். என்னைப் பொறுத்தவரை, அவன் ‘இல்லை சார்! கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டேன்’ என்று சொல்லியிருந்தால், அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்று பட்டது. ஆகவே நான் ஒரே ஒரு அஸ்திரத்தை வீசினேன்.

‘You are appointed Mr……. உங்க அக்கா கல்யாண பத்திரிகையையும், ஆல்பத்தையும், உங்க அக்கா குழந்தையின் பர்த் சர்டிஃபிகேட்டையும் நிறுவனத்தில் காட்டிட்டு ஜாயின் பண்ணிக்குங்க!’

இன்றுவரை அந்த இளைஞன் திரும்ப வந்ததாகத் தெரியவில்லை.

Wednesday, June 3, 2015

ஐடி துறையைத் தேர்வு செய்யலாமா?

பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களின் முதல் சாய்ஸ்... ஐ.டி. துறை தான். ஆனால், இன்று, ஐ.டி. நிறுவனங்களில் லே ஆஃப், ஐ.டி. ஃபீல்டில் பிரஷர் அதிகம், வேலை கிடைத்தாலும் நிரந்தரமில்லை என்று பல பிரச்னைகள் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், ஐ.டி. கலாச்சாரம் என்று ஒரு தனி இனம் உருவாகி இருக்கிறது. ஏ.சி. அறை வேலை, ஆடம்பர வாழ்க்கை, கார், சொந்த ஃபிளாட், மால்களில் சினிமா மற்றும் ஷாப்பிங், வாரந்தோறும் பிக்னிக், வெளிநாட்டு புராஜெக்ட் பிளஸ் டூர், நாகரீக நட்பு வட்டம் என்று பளபள மாயை காட்டுகிறது.


அப்படி என்னதான் நடக்கிறது ஐ.டி. துறையில்...? விரிவாகச் சொல்கிறார் கல்வி ஆர்வலர் கிர்த்திகாதரன்.



‘‘கூகிள், அமேஸான் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏன் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து கேம்பஸில் ‘ஃப்ரெஷர்’களை எடுக்கிறார்கள்? அனுபவம் வாய்ந்த எத்தனையோ ஆயிரக்கணக்கான ஐ.டி. மக்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் எம்.எஸ். முடித்துவிட்டு வேலைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பிறகு ஏன் நம் பொறியியல் கல்லூரிகளில் ஆளெடுக்கின்றன நிறுவனங்கள்? அதேசமயம், திருநெல்வேலியில் இருக்கும் சாதாரண கல்லூரி கூட பெரிய நிறுவனத்துக்கு ஆள் அனுப்புகிறது. ஆனால் ‘பெரிய’ கல்லூரியில் படித்து பக்காவாக ஜி.பி.ஏ. வைத்திருந்தும், சிலருக்கு வேலை கிடைக்காமல் போகிறது.



இப்படி வெளியில் இருக்கும் நமக்கு ஆயிரம் கேள்விகள். ஏன், ஐ.டி. நிறுவனத்தில் இருக்கும் பலருக்கே கூட விடை தெரிவதில்லை. 10 வருடங்கள் கழித்து திடீரென்று லே ஆஃப் ஆகும்போது, ‘ஏன்? எதற்கு? நல்லாதானே வேலை செய்தோம்?’ என்று தோன்றும். எங்கு தவறு நடந்திருக்கிறது என்று யோசிப்பதற்குள் கார் கடன், வீட்டுக் கடன் என்று சுமைகள், ஆடம்பர வாழ்க்கை செலவுகளின் அழுத்தம், திரும்ப மீள முடியாத சுழலில்  சிக்கியிருப்போம்.



கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் துறைகளில் இன்றும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் தகுதி வாய்ந்தவர்களை தேடுவதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கின்றனர். இங்கோ, மாணவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் இந்தப் பிரச்னை உண்டு. என்றாலும் ஐ.டி. துறையில் இந்த இடைவெளி அதிகமாகவே இருக்கிறது.



அப்படி என்றால் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?



முதலில், கணினியில் ஆர்வம் இருக்கும்பட்சத்திலேயே அந்தக் கோர்ஸை தேர்வு செய்ய வேண்டும். இணைய ஆர்வம் என்பது வேறு, தொழில்நுட்பத்தில் ஆர்வம் என்பது வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். கோர்ஸில் சேர்ந்ததும், மனப்பாடம் செய்து மார்க் வாங்க நினைக்கக் கூடாது. நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களை, ‘புத்தகப் புழுவாக, வெளியுலகத்துக்குத் தகுந்தவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாதவராக இருப்பார்களோ?’ என்று இண்டர்வியூ செய்பவர்கள் சந்தேகத்தோடு அணுகுவார்கள். அதற்காக மதிப்பெண் தேவையில்லையா என்று கேட்கக் கூடாது. மதிப்பெண் தேவை. ஆனால், அது மட்டுமே தகுதிக் காரணி இல்லை. பெங்களூரு, மும்பை, டெல்லி மாணவர்கள், சென்னை மாணவர்களை பின்னுக்குத் தள்ளுவது இந்த விஷயத்தில்தான். அவர்கள் மதிப்பெண்களுக்கு படித்தாலும், துறை சார்ந்த எல்லா விஷயங்களையும் சுயமாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.



பொறியியலில் இரண்டு வகை இருக்கிறது. டெக்னிக்கல் எனப்படும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி தொடர்புடைய துறைகள். வெளிநாட்டில் எம்.எஸ். படிப்புகள் பல ஆராய்ச்சி தொடர்புடையதாகவே இருக்கும். முக்கியமாக பயோ டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் ஆராய்ச்சி பக்கம் மாணவர்கள் செல்கின்றனர். பயோ டெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்புகளை விட ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் வாய்ப்புகளே அதிகம். அதே சமயம் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு டெக்னிக்கல் அறிவு தேவை. எனவே, எந்த வழியில் செல்கிறோம் என்பது மிக முக்கியமானது.



இந்தக் காலத்தில் எல்லா மாணவர்களிடமும் லேப்டாப் இருக்கிறது. ஆனால், கேம்பசில் ஐ.டி., சி.எஸ். படித்த பல மாணவர்கள் ஒரு புரோகிராம் கூட எழுதத் தெரியாமல் இருக்கிறார்கள். ஒரளவுக்கு டெக்னிக்கல் விஷயம் தெரிந்தால் போதும்... கேம்பசில்  எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ், ஆங்கில அறிவு எல்லாம் மிகப்பெரிய நிறுவனத்துக்குத் தேவை. ஆனால், சிறிய ஐ.டி. நிறுவனங்கள் புரோகிராம் நன்றாக தெரிந்து, சொந்தமாக புராஜெக்ட் செய்திருந்தால், அரியர்ஸைக் கூட சில சமயங்களில் கவனிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தங்கள் வேலைக்குத் தகுதியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதேபோல, ஒரு மாணவர் ஆங்கில அறிவில் பிலோ ஆவரேஜாக இருந்தாலும், நெட்வொர்க்கிங்கில் அசத்துகிறார் என்றால், அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே விஷயங்கள் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

மாணவர்கள் மெருகேற வேண்டிய மூன்று விஷயங்கள்!


எதுவும் கற்றுகொள்ளாமல் வேலையில் சேரும் மாணவர்கள் நிறுவனங்கள் தயவில்தான் இருக்கவேண்டும். அவர்களாக கொடுப்பதுதான் சம்பளம். அதே சமயத்தில் முன்பே கற்றுக்கொண்டு நம் புரஃபைல் பலமாக இருக்கும்போது, நம் கையில் நம் வேலை இருக்கும். அதற்கு மூன்று விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.



முதலாவது, புரோகிராம் நன்றாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இங்கு மட்டும் இல்லை... அமெரிக்காவில் கூட புரோகிராமிங்-க்கு நல்ல மதிப்பு இருக்கிறது. கேம்பஸ் செல்லும் தேர்வாளர்களுக்கு, பல மாணவர்கள், ‘நான்கு வருடம் இவர்கள் என்னதான் படித்தார்கள்?’ என்ற சளிப்பைத் தருகிறார்கள். அந்தளவுக்கு, 70% ஐ.டி. மாணவர்களுக்கு புரோகிராமிங்கை முழுமையாக எழுதத் தெரிவதில்லை. தவிர, தங்களை நேர்த்தியாக வெளிப்படுத்திக்கொள்ளவும் தெரியவில்லை. 



மடியில் லேப்டாப், கையில் ஸ்மார்ட் ஃபோன், 3 ஜி நெட்வொர்க் வைத்துக்கொண்டு... நான்கு வருடம் படித்துவிட்டு ஒரு புரோகிராமிங் கூட செய்யத் தெரியவில்லையென்றால் என்ன செய்வது? எனவே, முதல் விஷயமாக ஒரு புரோகிராமிங் லாங்வேஜில் திறமை பெற்றிருக்க வேண்டும். அதில் எப்போதும் தேவை உண்டு. சோஷியல், மொபைல் துறைகளை விட குறிப்பாக அனலடிகள் மற்றும் ஈ-காமர்ஸ் எனப்படும் விற்பனைத் துறைகளில்  புரோகிராமருக்கு நல்ல வேலை கிடைக்கும். 



பழைய ஜாவா அல்லது சி என்று இல்லாமல் புதிதாக உள்ள பைதான், சி, ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ரூபி போன்றவைகளை கற்றுக்கொள்ளலாம். வெறும் மொழியாக கற்றுக்கொள்ளாமல் அதனை செம்மையாக கோட் செய்ய அல்காரிதம்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதனால், மெமரியை சரியான முறையில் பயன்படுத்தவும், கம்ப்யூட்டிங் சீராகச் செய்யவும் உதவும். பெரிய அளவில் பரிமாற்றம் நடக்கும்போது இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதுபோன்று நன்றாக தேர்ச்சி பெற்று இருப்பவர்களுக்கு ஸ்டார்ட் அப் மற்றும் இ காமர்ஸ் நிறுவனங்கள் 6 முதல் 12 லட்சம் வரை சம்பளம் கொடுத்து எடுத்துக்கொள்கிறார்கள்.



இரண்டாவது, கோடிங்கில் போட்டி வைக்கும் இணையப் பக்கத்தில் பயிற்சி பெற வேண்டும். அங்கு ஃபேஸ்புக் போல ஒரு புரொஃபைல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள முடியும். நிறைய விஷயங்கள் புரிபடும். அடுத்து ஹாகிங் (hack)  போட்டிகள், பயிற்சிகள் எல்லாம் இருக்கும். அதில் நமக்கு ரேங்கிங் கூட உண்டு. அதுவும் நமது புரொஃபைலுக்கு வலு சேர்க்கும். code chef, hake earth போன்ற இணையதளங்கள் இருக்கின்றன. தற்பொழுது பள்ளி மாணவர்கள் கூட பயிற்சி பெறுகிறார்கள்.



ஆன்லைன் டெஸ்டிங் வளர்ந்து வருவதால் மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் போன்றவை உலகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் உக்ரைன் மற்றும் புனேயில் இருந்து நேரடியாக மாணவர்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். சம்பளம், நூறு ஆயிரம் டாலர்கள் முதல் நூற்று ஐம்பது ஆயிரம் டாலர்கள் வரை.



மூன்றாவதாக, கணினியைப் பாடமாக படிக்கும் மாணவர்கள் சொந்தமாக ப்ளாக் வைத்துக் கொள்வது நல்லது. அதில் தீசிஸ் போல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுத ஆரம்பிக்க வேண்டும். அப்போதே நிறைய கற்றுக்கொள்ளவும் ஆரம்பிப்போம். இதெல்லாம் ஒரு மாணவரின் தகுதிக்கான மதிப்பு கூட்டல்கள்.

புராஜெக்டில் சுயம் அவசியம்! 


கேம்பஸில் தேர்வாளர்கள் ‘சிறப்பாக என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், பல மாணவர்களும் புராஜெக்ட்டை காட்டுவார்கள். பெரும்பாலும் அதை நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. வேறு சில விஷயங்களில் கலந்துக் கொண்டதாக மாணவர் தகவலில் இருக்கும். பார்த்தால் பத்து பேரோடு செய்து இருப்பார். பாதிக்கும் மேல் விஷயம் தெரிந்து இருக்காது. இதெல்லாம் தெரியும் என்று வெறும் லிஸ்ட் போடக் கற்றுக்கொள்ளக் கூடாது. நம் அறிவை மேம்படுத்த மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும்.



பெரும்பாலான மாணவர்கள் புராஜெக்ட் கூட சொந்தமாகச் செய்வதில்லை. பல கல்லூரிகளில் பேராசிரியர்கள், ‘புதிதாக வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு அவர்கள் லிஸ்ட்டில் இருக்கும் குறிப்பிட்ட புராஜெக்டை செய்யச் சொல்லி வலியுறுத்துவார்கள். இந்த மாதிரி நேரத்தில் மாணவர்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும். சொந்த ஐடியா புராஜெக்ட் மிக அவசியம்.



மாணவர்களுக்கு என்று தனியே சிந்திக்கும் திறன் அவசியம். முக்கியமாக ஐ.டி. துறையில் கண்டிப்பாக தேவை. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உள்ள மாணவர்களே வெற்றி பயணத்தில் மேலே செல்ல முடியும்.



எல்லா தளங்களிலும் முயற்சி அவசியம்!



இ-காமர்ஸ், ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தினம், தினம் ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்கள் களத்தில் குதிப்பதால், எக்கச்சக்க வேலை வாய்ப்புகள் உள்ள துறை இது. சிலர் சில துறைகளில் உள்ளே போனால் ஐ.டி.யில் வாய்ப்பு இருக்காது என்று ஒதுக்குவார்கள். எடுத்துக்காட்டாக, பாங்கிங் பகுதி என்றால், அதில் கணினி அறிவு பற்றிய அதிக விஷயங்கள் இல்லாவிடினும் பாங்கிங் பற்றி தேர்ச்சி அடைய முடியும். எல்லா இடங்களிலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பார்க்க வேண்டும். அப்படியே ஒதுக்கக் கூடாது.



முக்கால்வாசி மாணவர்கள் நான்கு வருடங்களில் பெரிதாக எதுவும் கற்றுக்கொள்வதில்லை. எனவே 21 வயதில் ஐ.டி. துறையில் நுழையும்போது நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எந்த இடத்துக்கும் பயணப்படத் தயாராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் வேலைபார்க்கப் போகும் துறை இது. முதல் ஐந்து வருடங்களை சோதனை முயற்சிகளுக்கு விடலாம். எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து கற்றுக் கொள்வது நல்லது.



அதற்காக அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டு இருந்தால் மதிப்பு இருக்காது. அதேசமயத்தில் ஒரே இடத்தில் இருந்தாலும் கற்றுக்கொள்ள வாய்ய்பு இருக்காது. அப்படி ஒரே இடத்தில் இருந்தால் வேலைக்கான தரத்தில் உயர்ந்து இருக்க வேண்டும். சிறு நிறுவனமோ, பெரிய நிறுவனமோ, கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வெளியே வந்து கற்றுக்கொண்டு வேலை செய்வது நல்லது. ஐந்து வருடங்கள் சோதனை முயற்சியாக எல்லாம் செய்தால் மார்கெட், துறை எல்லாம் புரிபட்டு நமக்கான இடத்தில் அமர்ந்து விடலாம்.



அப்படி பல வாசல்களில் ஒரு வாசல் உதாரணமாக, ஆப்பிள் மிளிஷி. அதில் ஆப் (App) செய்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே இரண்டு லட்சம் கிடைக்கும். மேலே செல்ல, செல்ல நல்ல வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதற்கு ஆப்பிள் ஃபோன் மற்றும் நூறு டாலர் முதலீடு வேண்டும். ஆனால், ஓபன் சோர்ஸ் எனப்படும் பல்வேறு தளங்களில் முதலீடு தேவைப்படாது. இப்படி நிறைய முயற்சி செய்து பார்க்கலாம். User Experience Design.UXD என்பது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை விட இன்னும் அதிக டெக்னிக்கல் துறை. இது தொழில்நுட்ப முடிவில் உபயோகிப்பாளரை கவர வேண்டும். ஐ-ஃபோன் போல இதற்கு சாப்ட்வேர்கள் தயாரிக்க வேண்டும். இதற்கும் தேவை இருக்கிறது.



டேட்டா சயன்டிஸ்ட் வாய்ப்புகளைப் பார்ப்போம். கணக்கு மற்றும் புள்ளியியலில் அதுவும் டாக்டரேட் வரை வாங்கியவர்களுக்கு அனாலிடிக்ஸ்-ல் நிறைய சாதிக்க இயலும். ஆனால் ஸி மற்றும் பைதான் மொழி தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நிறையத் தேவையும் இருக்கிறது. புள்ளியியல் டேட்டா மாதிரிகள் நன்றாகத் தயாரிக்கத் தெரிந்தால், 5 முதல் 6 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். வேறு எதுவுமே தேர்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஜாவா, சி யை ஒழுங்காக படித்து சொந்தமாக சில புராஜெக்டுகள் செய்து இருப்பதாக காட்டினால் கூட போதுமானது. அதற்கு இரண்டு முதல் நான்கு லட்சம் வரையே சம்பளமாக கிடைக்கும்.



அடுத்து ஓபன் சோர்ஸ். இது இலவசமாகக் கிடைப்பதால் மாணவர்கள் இணையம் மூலமாக வீட்டில் இருந்தோ, கல்லூரி லேபில் இருந்தோ தேர்ச்சி பெற முடியும். BIG DATA டெக்னாலஜி எனப்படும் ஹடூப் கூட இணையம் வழியாகக் கற்றுக் கொள்ள முடியும். எப்போதும் போல SAP BI படித்தவர்களுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. ஆனால், இது இலவசம் இல்லை என்பதால் மாணவர்கள் உள்ளே நுழைவது கடினமாக இருக்கிறது. தவிர, விலை அதிகமும் கூட.



மொத்தத்தில், மாணவர்கள் சர்வீஸ் நிறுவனங்களை விட, தயாரிப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதைத் தவிர சிறு நிறுவனங்களில் நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் மெக்கானிக்கல், சிவில் என்று இல்லாமல் பயோ படித்த மாணவர்களைக் கூட எடுக்கிறார்கள். எதற்காக? 



‘எங்களுக்குத் நிறைய தேவை இருக்கிறது. அதை ஈடுகட்ட வேறு துறை மாணவர்களை எடுக்கிறோம். அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுத்து சேர்த்துக் கொள்வோம். ஆனால், எந்தத் துறையாக இருந்தாலும் கல்லூரியில் எங்களுக்குத் தேவையான விஷயங்களோடு மாணவர்கள் இருப்பதில்லை. எனவே, எந்தத் துறையாக இருந்தாலும் நாங்கள் பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் காமன்சென்ஸ் எனப்படும் செயல்படும் அறிவு இருந்தால் போதும்... தேர்வு செய்துவிடுவோம்’ என்கிறார்கள்.



ஐ.டி. துறையிலும் கூட, தற்போது வேலைவாய்ப்பு இல்லை, டவுன் ஆகி இருக்கிறது என்பதை விட தகுதியானவர்கள் இல்லை என்பதே விஷயம். லே ஆஃப் என்பதெல்லாம் மிகச்சிறியதாக எங்கோ நடக்கும் விஷயங்கள். தகுதியையும், திறமையும் வளர்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு எங்கும் பிரச்னை இல்லை.



மாணவர்கள் டூ பட்டதாரிகள் டூ பணியாளர்கள்!



பொறியியல் பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் ஃப்ரெஷராகச் சேரும்பொழுது ஜாவா புரோகிராமிங் செய்ய ஆரம்பிப்பார்கள். நான்கு வருடம், சீனியர் போஸ்ட் கொடுப்பார்கள். ஆனால், அதேயே தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்கள். வளர்ச்சி தேவை. சரியான சமயத்தில் மாறுவதும் அவசியம். அதே சமயத்தில் கம்பெனி மாறிக் கொண்டே இருப்பதும் தவறு.



சில கம்பெனிகள் பெரிய கல்லூரிகளில் கொத்து, கொத்தாக மாணவர்களை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இன்னொரு பக்கம் அதே நிறுவனத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேறிக்கொண்டு இருப்பார்கள். ஏன் என்று நிறுவனம் பற்றிய ரிவியூ பார்த்தால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆனால், வேலை அழுத்தம் அதிகம் என்று சொல்லி இருப்பார்கள். பட்டதாரிகள் ஆரம்பக் கட்டத்தில் கூட உழைக்கத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஐ.டி. என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு ஏற்றார் போல தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம். ஐ.டி. படித்துவிட்டு புராஜெக்ட் இல்லாமல் பெஞ்சில் அமர்வது, லே ஆஃப் ஆவது, கேம்பஸில் தேர்வாகாமல் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.



எனவே, மாணவர்கள் எந்தத் துறையாக இருந்தாலும் தங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலமே சிறந்து விளங்க முடியும். கல்லூரி, ஆசிரியர்கள், துறைத்தேர்வு எல்லாம் ஓரளவுக்குத்தான். தற்போது கணினி பயன்பாடு எல்லா துறைகளிலும் நிறைந்துவிட்டதால், இன்னும் சில வருடங்களுக்கு ஐ.டி. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஜேஜே தான்!’’ - பாசிட்டிவ் செய்தி சொல்லி கை குலுக்கினார் கிர்த்திகாதரன்.



 - கே.அபிநயா
இந்த பதிவு விகடனில் 02/06/2015 இல் பதிவு செய்யப்பட்டது