Blogger Widgets

Total Page visits

Saturday, January 31, 2015

பொறியியல் பட்டதாரிகளின் மறுபக்கம்!

டி.என்.பி.எஸ்.சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்திய குரூப் இரண்டு மற்றும் வி.ஏ.ஒ தேர்வு முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. குரூப் இரண்டு நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் வென்றவர்களில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரிகள் என்பது பத்திரிகைகளில் காணக் கிடைத்த முக்கியச் செய்தி. 

இது சாதாரண செய்தியாக கடந்து செல்லக்கூடியது அல்ல..டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் என்றால் தேர்வான மொத்த பேரில் எத்தனை பேர் பொறியியல் முடித்தவர்கள் இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ள முடியும். இதற்கு என்ன காரணம்? எதனால் இந்த நிலை? பொறியியல் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா? அல்லது பொறியியல் துறையில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததாலா?  டி.சி.எஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சமீபத்திய ஆட்குறைப்பினால் ஏற்பட்ட முன்னெச்சரிக்கையா? போட்டித் தேர்வுகளின் மீதான ஆர்வமா? அல்லது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவா?  அதுபற்றிய ஒரு அலசல் இங்கே...

ஒரு காலத்தில் பொறியியல் துறையானது வசதியானவர்கள் மட்டுமே படிக்கக் கூடியதாகவும்..ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவும் இருந்து வந்தது.கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொழிற்கல்வி மேற்படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரும் கல்விப்புரட்சியாக பார்க்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெரும் சறுக்கலையும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என யாரும் அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை..

அப்படியென்ன சறுக்கல்? என்கிறீர்களா... பிளஸ் டூ தேர்வில் ஐம்பது சதவிகித மதிப்பெண் இருந்தால்போதும் பொறியியல் படித்து விடலாம் என்ற நிலை..அரசின் வங்கிக்கடன் சலுகைகள்..உச்சத்தில் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை..எம்.என்.சி கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மற்ற துறைகளில் பத்தாண்டுகளில் காணும் வளர்ச்சியை ஒரே ஆண்டில் அடைந்து விடலாம் என்ற பேராசை பலரை பொறியியல் கல்வி பக்கம் இழுத்துச் சென்றது. இதன் விளைவால் மாணவர்கள் பயன்பெற்றார்களோ இல்லையோ  புற்றீசல்களைபோல புதிய பொறியியல் கல்லூரிகள் முளைக்கத் தொடங்கின..தமிழகத்தில் மட்டும் ஐநூறுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள்..இவற்றுள் பெரும்பாலானவை புறநகருக்கு அப்பால் ஒரு பொட்டல் காட்டில் இரண்டு அடுக்குகளைக்கொண்ட நான்கு கட்டிடங்களையும் நாற்பது கணினிகளையும் ஒரு நூலகத்தையும்..தரமற்ற பேராசிரியர்கள் அல்லது அதே கல்லூரியில் படித்து வேலை கிடைக்காமல் அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியாக பணியாற்றும் ஆசிரியர்களையும் கொண்டவை..

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் அற்ற சரியான வாளாகம் கூட கட்டப்படாத இக்கல்லூரிகளில் வளாக நேர்முகத்தேர்வு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தகைய கல்லூரிகள் கல்வித்தந்தைகளின் ‘கல்லா’வை நிரப்பப் பயன்பட்டதே தவிர கல்லூரி மாணவர்களின் கண்ணீரை துடைக்க கடைசி வரை பயன்படவே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பொறியியல் பட்டதாரிகளின் மறுபக்கம்

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொறியியல் முடித்தவர்களில் 70 சதவீதத்தினர் கிராமப்புற மாணவர்களே. “உங்கள் பிள்ளைக்கு வளமான எதிர்காலம் அமைத்துத் தருகிறோம்..படித்து முடித்தவுடன் வேலை நிச்சயம்..வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும்” போன்ற மாய வார்த்தைகளினால் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளாகி விட்டனர் பல அப்பாவி பெற்றோர்கள். இது ஒருபுறம் என்றால் மாணவர்களின் நிலையோ இதைவிட பரிதாபம்.

வேலை தேடி அலைந்து அலைந்து வேலை கிடைக்காமல் இப்போதைக்கு இதை செய்வோம் என நகரத்தின் ஓரத்தில் நான்கைந்து நண்பர்களை கொண்ட சிறு அறையில் இருந்து கொண்டு, வெறும் ஐயாயிரம் ருபாய் சம்பளத்தில் மிச்சம் பிடித்து வாழும் பொறியியல் படித்த ரகுவரன்கள் நிறைய பேர் நம் தமிழ்நாட்டில் உண்டு. சுரேஷ் டெண்டுல்கருக்கோ, சி. ரங்கராஜனுக்கோ வேண்டுமானால் மாதம் ருபாய் ஐயாயிரம் போதுமானதாக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு பணம் அனுப்பவோ..வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவோ இவர்களுக்கு அந்த பணம் போதவே போதாது.

ஏளனப் பேச்சுக்கள்

நெருக்கும் வங்கிகள் ஒருபுறமும்..மகனின் அல்லது மகளின் வருமானத்தை எதிர்பார்க்கும் பெற்றோர் மறுபுறமுமாக எப்போது வீட்டிற்கு அனுப்பப்படுவோம் என்கிற நிரந்தரமில்லாத வேலையும், குறைந்த சம்பளம் தரும் அயர்ச்சியுமாக ஒரு அசாதாரண சூழ்நிலையில் ஒரு பொறியாளன் போட்டித்தேர்வாளனாக மாற்றப்படுகிறான். உண்மையில் பெற்றோர்களும் இச்சமூகமும் பொறியாளர்கள் போட்டித் தேர்வர்களாக ஆவதை எளிதில் அங்கீகரிப்பதில்லை. ஏளனப்பேச்சுகளும் அவமானங்களும்தான் அவர்களை முதலில் வரவேற்கும் வரவேற்புப் பலகைகள்.

 டி.என்.பி.எஸ்.சி. என்ற கலங்கரை விளக்கம்
அதையும் தாண்டி கடந்த மூன்று நான்கு வருடங்களாக பொறியியல் பட்டம் பெற்ற பெரும்பகுதியினர்
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி துணை கலெக்டர் முதல் இளநிலை உதவியாளர் வரை பல்வேறு நிலைகளில் மனநிறைவோடு பணியாற்றி வருகின்றனர். தேர்வுகளை விரைவாக நடத்தினாலும் முடிவுகளை வெளியிடுவதில் தேர்வாணையம் செய்யும் காலதாமதம் போட்டிதேர்வர்களிடையே சில நேரங்களில் சோர்வைத் தந்தாலும் கூட தற்போதைய நிலையில் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்வது டி.என்.பி.எஸ்.சி என்றால் அது மிகையல்ல.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு தொழிற்கல்வி படித்தோருக்கு தகுதி இல்லை என பின்பற்றப்படும் கொள்கைகளில் விலக்கு அளிக்கும் பட்சத்தில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகளின் வாழ்கையில் விளக்கேற்றி வைத்த புண்ணியமும் டி.என்.பி.எஸ்.சி க்கு கிடைக்கும். வருங்காலத்தில் இன்னும் நிறைய பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் போட்டித் தேர்வில் இன்னும் பலத்த போட்டி நிலவும்.

எனவே கடின உழைப்பும், தொடர்ச்சியான தயாரிப்பும் அவசியம். அரசு வேலையானது சமூக அந்தஸ்தையும் மற்றவருக்கு சேவை செய்திடும் நல்வாய்ப்பையும் கொடுப்பதால் கனவுகளைத் துரத்திப் பிடிக்க இப்போதே தயாராகுங்கள் தோழர்களே!

-மஹபூப்ஜான் ஹுசைன்
  காரிமங்கலம் 

Friday, January 30, 2015

“ஐ.டி. யில் எப்பவும் எதுவும் நடக்கலாம்!”

த்தனை அவநம்பிக்கை செய்திகளுக்கு இடையில், அது ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்று. ஐ.டி துறைகளில் கொத்துக்கொத்தாக நடக்கும் ஆள்குறைப்புக்குப் பலியான ஊழியர்களில் இவரும் ஒருவர். பிற துறைகளைப்போல தொழிற்சங்கச் சட்டங்களின் பாதுகாப்பு இல்லாமல் தவித்து, தத்தளித்துக்கொண்டிருந்தனர் வேலை இழந்த ஐ.டி துறைப் பணியாளர்கள். அவர்களிடையே, 'தங்களுக்கு நடந்தது அநீதி’ என நியாயம் கேட்டு நீதிமன்றம் நாடிய வெகுசிலரில் இவரும் ஒருவர். 'ஏன் இவரை வேலையில் இருந்து விலக்கினீர்கள்?’ என்ற நீதிமன்ற கேள்விக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க, இவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.
இந்திய ஐ.டி நிறுவனங்கள் இடையே 'அரசாங்க அந்தஸ்துடன்’ விளங்கும் அந்த நிறுவனத்தில் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார் அந்தப் பெண். அவர்... ரேகா. நான்கு பெண்களைக் கொண்ட நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் இருந்து வந்த ரேகா, ஐ.டி துறை ஊழியர்கள் இடையே விதைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் பிரமாண்டமானது. தன் எதிர்கால நலன் கருதி புகைப்படம் தவிர்த்துவிட்டுப் பேசினார்...
''திருவாரூர் பக்கத்துல கோட்டூர் கிராமம் எனக்கு. என் அப்பா, ஓய்வுபெற்ற கல்வித் துறை ஊழியர். அம்மா, கிராமத்து அப்பாவி. வசதியும் இல்லாம, வறுமையும் இல்லாம ஒரு மாதிரியான  பட்ஜெட் குடும்பம் எங்களோடது. எனக்கு மூணு அக்கா. நான்தான் கடைக்குட்டி. செல்லமா வளர்ந்தேன். பி.எஸ்சி., முடிச்சுட்டு கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர்ல வேலைக்குப் போயிட்டு இருந்தேன். மூணு அக்காக்களை மாதிரி நானும் ஸ்கூல் டீச்சர் வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டார் அப்பா. ஆனா எனக்கு, சென்னையில ஏதாவது ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கணும்னு கனவு. என்னை சென்னைக்குத் தனியா அனுப்ப, அப்பா ரொம்பப் பயந்தார். அவரை ஒருமாதிரி சமாதானப்படுத்திட்டு, ஒரு தோழியோட சென்னைக்கு வந்து ஹாஸ்டல்ல தங்கி வேலை தேட ஆரம்பிச்சேன்.
ஆழ்வார்பேட்டையில் சின்ன கம்பெனியில் வேலை கிடைச்சது. சம்பளம் ரொம்பக் கம்மி. இருந்தாலும் இங்கே கிடைக்கிற அனுபவத்தை வெச்சு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துடணும்னு முடிவெடுத்தேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு, பெங்களூருல ஓரளவுக்குப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைச்சது.
அங்கே நான் வேலைக்குச் சேர்ந்த சமயம்தான், இந்திய ஐ.டி துறையில் 'ரிசஷன்’ உச்சம். அப்போ புதுசா சேர்ந்த எங்களை அது பாதிக்கலை. ஆனா, நிறுவனத்தின் டாப் லெவல் ஆட்களை அது பாதிச்சது. எனக்கு அப்பவே ஐ.டி துறை மேல் இருந்த ஆசை, பிரமிப்பு, நம்பிக்கை எல்லாமே போயிடுச்சு. வெளிநாடுகள்ல 60 வயசுக்குப் பிறகும்கூட 'டெவலப்பர்’ங்கிற பொறுப்பில் வேலை செய்யலாம். ஆனா, இந்தியாவில் அப்படி இல்லை. ஓய்வு வயசுக்கு முன்னாடியே கம்பெனி உங்களைத் துரத்த முயற்சிக்கும். அப்போதைய நிலைமைக்கு ஐ.டி துறையில் வேலை செய்றவங்களோட 'எக்ஸ்பையரி காலம் 10 வருஷம்’னு தெரிஞ்சுக்கிட்டேன். வீட்ல நாலு பெண் பிள்ளைங்கிறதால, எங்களை வளர்க்க அப்பா அவ்வளவு சிரமப்பட்டார். யாரோட  உதவியும் இல்லாம எங்க எல்லாரையும் படிக்கவெச்சு ஆளாக்கினார். அவரை நிம்மதியா வெச்சுக்கணும்னுதான் சம்பளம் நிறையக் கிடைக்கிற ஐ.டி வேலைக்குப் போனேன். அப்படி இருக்கிறப்ப திடீர்னு 'வேலை போயிருச்சு’னு போய் நிக்கக் கூடாதுனு மட்டும் நினைச்சுக்கிட்டேன். அப்போதான் ஆனந்த அதிர்ச்சியா ஐ.பி.எம்-ல வேலை கிடைச்சது. எம்.என்.சி-க்களில் ஐ.பி.எம்-தான் டாப். ஆறு மாசம் பெங்களூரு ஐ.பி.எம்-ல வேலை பார்த்துட்டு, சென்னைக்கு டிரான்ஸ்ஃபர்ல வந்துட்டேன்.

2009-ல் கல்யாணம். கணவருக்கும் ஐ.டி துறையில்தான் வேலை. அப்போதான் இப்போ வேலை பார்த்துட்டு இருக்கிற நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். இந்திய ஐ.டி துறைகளில் அதிகபட்சப் பணிப் பாதுகாப்பு இந்த நிறுவனத்தில்தான் இருக்கு என்பது எல்லோரின் நம்பிக்கை. ஆரம்பத்தில் எல்லாம் நல்லாதான் இருந்தது. எனக்குக் கொடுத்த வேலைகளைச் சரியா செஞ்சேன். கொடுத்த டார்கெட் எல்லாம் பக்காவா முடிச்சேன். வேலைக்குச் சேர்ந்த எட்டு மாசத்துல என்  முதல் புராஜெக்ட் முடிஞ்சது. அடுத்த புராஜெக்ட்டுக்காகக் காத்திருந்தேன். புது புராஜெக்ட் கிடைச்ச சமயம், நான் கர்ப்பமா இருந்தேன். அதனால ஆறு மாசம் 'பிரசவக் கால விடுப்பு’ எடுத்தேன். அந்த விடுமுறை முடிஞ்சு, திரும்பவும் வேலையில சேர்ந்து ஆறு மாசம் புராஜெக்ட்ல தீவிரமா வேலை பார்த்தேன். அப்போ திடீர்னு (டிசம்பர் மாசம்) என்னை வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க.''
''பணி நீக்கத்துக்கு என்ன காரணம் சொன்னார்கள்?''
''காரணமே தெரியலையே! நான் நீதிமன்றத்துக்கே போனேன். 'புராஜெக்ட் கிடைச்ச சமயம் பிரசவ விடுப்பு எடுத்ததுதான் காரணமா?’னு கேட்டேன். 'அப்படி இல்லை. நிறுவனத்தின் தேவைக்கு உங்க திறமைகள் பொருந்தலை’னு மட்டும் சொன்னாங்க. 'நம்ம நிறுவனத்துலயும் லே ஆஃப் ஆரம்பிச்சிருச்சு. சிலரை வெளியே அனுப்பிருவாங்க’னு சக ஊழியர்கள் பேசிக்கிட்டப்ப, 'நாம ஒழுங்காத்தானே வேலை பார்த்துட்டு இருக்கோம். நமக்கு எதுவும் பிரச்னை இருக்காது’னு நினைச்சேன். என் சீனியர்களும் என்கிட்ட சகஜமாத்தான்  பேசிட்டு இருந்தாங்க. அதனால், நான் எந்தப் பதற்றமும் இல்லாம இருந்தேன்.
ஒருநாள் மதியம் சாப்பிட்டு கேபினுக்குள் நுழைஞ்சேன். அப்பதான் என்னை நிறுவனத்துல இருந்து வெளியேத்துறதா மெயில் மூலம் தகவல் வந்தது. என் புராஜெக்ட் 2015-ம் ஆண்டு டிசம்பர்லதான் முடியுது. ஆனா, 2014 டிசம்பரோடு என் வேலைக் காலத்தை சுருக்கிட்டாங்க. என்ன நடக்குது, இப்போ என்ன செய்யுறதுனு தெரியாம, குழப்பத்துல திகைச்சு நின்னுட்டு இருந்தேன். வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் பேச அனுமதிக்கும் 'வி.பி.என்’ டோக்கனை என்கிட்ட இருந்து புராஜெக்ட் லீடர் வாங்கிவெச்சுக்கிட்டார். யோசிக்கக்கூட நேரம் தரலை. 'கேபினைவிட்டு வெளியே வாங்க. இதைப் பத்தி பேசலாம்’னு சொன்னாங்க. 'என் கணவர்கிட்ட பேச செல்போன் வேணும். ஹேண்ட்பேக் எடுத்துக்கிறேன்’னு சொன்னேன். 'வெளியே வந்து பேசலாம். இப்பவே வெளியே வாங்க’னு என்னைப் பிடிச்சுத் தள்ளாத குறையா வெளியே அனுப்பினாங்க. அப்போ நான் ரெண்டாவது முறை கர்ப்பமா இருந்தேன். ரெண்டு மாசம்'' குரல் தழுதழுக்க, சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார்.
''சரி... என்னை வேலையைவிட்டு அனுப்ப முடிவெடுத்துட்டாங்க. ஆனா, ஏதோ மன்னிக்க முடியாத தப்பு பண்ண மாதிரி என்னை நடத்தின விதம்தான், என்னை ரொம்பப் பாதிச்சது. 'என்னை ஏன் அனுப்பணும்?’னு கேட்டா, 'அது நிர்வாக முடிவு. எங்களால ஒண்ணும் பண்ண முடியாது’னு எல்லாரும் சொன்னாங்க.  அந்த நிமிஷம் நான் அனுபவிச்ச வேதனை இருக்கே... நரகம்! வீட்டுச் செலவுகளை எப்படிச் சமாளிக்கிறது, அப்பா, அம்மா, மாமனார், மாமியாரை எப்படிக் கவனிச்சுக்கப்போறோம், பிரசவக் கால செலவுகளுக்கு என்ன பண்றதுனு... ஏகப்பட்ட குழப்பங்கள்!
கொஞ்சம் நிதானமா யோசிச்சப்ப, 'நிறுவனத்துல நாம எந்தத் தப்பும் பண்ணலை. ஏன் நம்ம
 உரிமையை விட்டுக்கொடுக்கணும்?’னு தோணுச்சு. அதே சமயம், தனி மனுஷியா என்ன பண்ண முடியும்னு தயக்கமாகவும் இருந்தது. அப்பத்தான் ஐ.டி நிறுவன லே ஆஃப்களை எதிர்த்துப் போராடும் திமிஜிணி (திஷீக்ஷீuனீ யீஷீக்ஷீ மிஜி ணினீஜீறீஷீஹ்மீமீs) அமைப்பு பத்திக் கேள்விப்பட்டேன். 'சும்மா பேசிப் பார்க்கலாம்’னு அந்த அமைப்பைத் தொடர்புகொண்டேன். அங்கே என்னை மாதிரியே பாதிக்கப்பட்டிருந்த பலரும் இருந்தாங்க. சட்டரீதியா இந்த விஷயத்தை அணுகலாம்னு முடிவெடுத்தப்ப, பலரும் பயந்தாங்க. காரணம், வழக்கு போடுற ஊழியர்களை, நிறுவனங்கள் 'ப்ளாக் லிஸ்ட்’ பண்ணிட்டா, அவங்க எதிர்காலமே  அவ்ளோதான். வேற எந்த நிறுவனத்திலும்கூட அவங்களை வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க.  ஆனா, நான் என் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு போட்டேன்.

'ரெண்டு மாசக் கர்ப்பிணியை நாங்கள் வேலையைவிட்டு நீக்க மாட்டோம்’னு நிறுவனத் தரப்பில் சொல்லிட்டாங்க. இப்போ அந்த வேலை எனக்குத் திரும்பக் கிடைச்சிருச்சு!''

''ஐ.டி ஊழியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?''
''ஐ.டி வேலை நிரந்தரம் இல்லைனு பொதுப்படையா சொல்ல முடியாது. ஆனா, எப்பவும் எதுவும் நடக்கலாம். அது யாருக்கும் நடக்கலாம்னு மட்டும் மனசுல வெச்சுக்கங்க!''  
நா.இள.அறவாழி
ஓவியம்: ஹாசிப்கான்

விகடனில் 29-01-2015 அன்று வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Sunday, January 25, 2015

'எதிர்காலத்தில் இண்டர்நெட் காணாமல் போகும்!'

ணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார்.

ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , 'டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம்' எனும் தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்கிமிட்டிடம் , எதிர்காலத்தில் இணையம் எப்படி இருக்கும்? என்று கேட்கப்பட்டது.

இணையம் மறைந்து போய்விடும் என்று சொல்வேன் என்று இதற்கு பதில் சொன்ன ஸ்கிமிட், மேலும் கூறுகையில், "எண்ணற்ற ஐபி முகவரிகள் உருவாகி இருக்கும். எண்ணற்ற சாதனங்கள், சென்சார்க்ள், நீங்கள் அணிந்திருக்கும் சாதனங்கள் என எல்லாமே அவற்றை நீங்கள் உணராத அளவுக்கு இருக்கும்.

இந்த சாதனங்கள் எல்லாம் உங்களுடனேயே எல்லா நேரங்களிலும் இருக்கும்.

கற்பனை செய்து பாருங்கள்... நீங்கள் ஒரு அறைக்குள் நுழைகிறீர்கள். அந்த அறை உங்களை உணர்ந்து கொள்கிறது. உங்கள் அனுமதியுடன் அறையில் உள்ள பொருட்களுடன் நீங்கள் தொடர்பு கொள்கிறீர்கள். இது போன்ற சூழல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். மிகவும் பிரத்யேகமான, தனிப்பட்ட தன்மை கொண்ட சுவாரஸ்யமான உலகம் உருவாகலாம்.

இது போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் புதிய அலை வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற கவலையே வேண்டாம்"  என்றார். 

இதே விவாதத்தில் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்கும் கலந்து கொண்டு பேசினார். அவரும் தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புக்ளை உருவாக்கும் அழிக்காது என்று கூறினார்.

இணையம் மக்களின் குரலாக இருப்பதாக கூறிய அவர்,  வரும் காலத்தில் இணையத்தால் ,மேலும் மாற்றங்கள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

யாஹூ நிறுவன தலைமை அதிகாரி மரிசா மெயர் பேசும்போது,  தனிப்பட்ட இணையம் மேம்பட்டதாக இருக்கும் என்றும், பயனாளிகள் தங்கள் தகவல்களை தாங்களே கட்டுப்படுத்தும் நிலை வரும் என்றும்   கூறினார்.

Monday, January 19, 2015

கேமரா எமன்கள்!

பிரசாத்தும் சரண்யாவும் கல்லூரியில் படிக்கும்போதே காதலிக்க ஆரம்பித்தவர்கள். படிப்பு முடிந்தவுடன் இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் ஆடம்பரமாகத் திருமணம் நடைபெற்றது. தங்களின் முதலிரவை ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில்தான் நடத்த வேண்டும் என்பது, திருமணத்துக்கு முன்பே அவர்கள் இருவரும் ஆவலுடன் எடுத்த முடிவு. அதன்படி, ஹைதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் முதலிரவைக் கொண்டாடினர். ஒன்றரை மாதங்கள் கழிந்த நிலையில், அந்த புதுமணத் தம்பதியரை பேரதிர்ச்சி ஒன்று தாக்கியது. அவர்களின் முதலிரவு காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருந்தது. உடனடியாக, காவல் துறையில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட நட்சத்திர விடுதியின் மேலாளர் உள்ளிட்ட அனைவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பிரசாத்  சரண்யா முதலிரவு கொண்டாடிய அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று முழுமையாக ஆய்வு செய்தனர். ஆனால், எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. கடைசியாக சந்தேகம் வந்து ஏ.சியைக் கழற்றிப் பார்த்தபோது, அதற்குள் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். ஆனால், அது பற்றி விடுதி நிர்வாகிகள் யாருக்கும் தெரியவில்லை. ஏ.சி சர்வீஸ் பொறுப்பாளராக இருந்த இளைஞரைப் பிடித்து உலுக்கியவுடன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். போலீஸார் அவனை கைதுசெய்து தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, அந்த விடுதியில் தங்கிய ஏராளமான ஜோடிகளின் அந்தரங்க உறவுகளைப் படம் பிடித்து விற்பனை செய்ததாக உண்மைகளைக் கக்கினான்.
செல்போன் கேமராக்களும் ரகசிய கேமராக்களும் மலிவாகக் கிடைக்கிற சூழலில், தனிமனிதர்களின் சுதந்திரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. நட்சத்திர விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் உள்ள விடுதிகளுக்குள் அச்சமின்றி நுழைய முடியவில்லை. துணிக்கடைகளில்கூட ஆடைகள் அணிந்து பார்க்கும் டிரையல் ரூம்கள் பாதுகாப்பானவை என்பதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. பிரபலமான ஒரு நடிகையின் குளியல் காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டனர் சிலர். அதைப்போல முன்னாள் கதாநாயகி ஒருவர், வெளியூர் படப்பிடிப்பில் ஆடைமாற்றும்போது திருட்டுத்தனமாக அதை வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டனர். பிரபலங்கள் அல்லாத பல அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்களும் அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடும் அயோக்கியத்தனம் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகின்றன.
''சி.சி.டி.வி எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள், ஸ்பை கேமரா எனப்படும் உளவு பார்க்கப் பயன்படுத்தப்படும் கேமராக்கள் என விதவிதமான நவீன கேமராக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. மலிவான விலையிலும் அவை கிடைக்கின்றன. ஒருபுறம், அவை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், மற்றொரு புறத்தில் தனிமனிதர்களின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. நமக்கு சம்பந்தமே இல்லாத யாரோ சிலருடைய பார்வையின் ஊடுருவலில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். எங்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவிட்டது. எனவே, அதைப் புரிந்து கொண்டு நாம்தான் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்' என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை பேராசிரியர் ஜெய்சங்கர்.
யாருக்கும் தெரியாமல் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் ரகசிய இடங்களில் ஒளித்து வைத்து, தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கங்களை படம் பிடிப்பவை ரகசியக் கேமராக்கள். இது சட்டவிரோதமானது. பிறரை உளவு பார்ப்பதற்காகவோ, சிலரின் வக்கிர நோக்கங்களுக்காகவோ இந்த ரகசியக் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றை எல்லாம் தடுப்பதற்கு நம் நாட்டில் போதிய சட்டங்கள் உள்ளனவா? அடுத்த இதழில்...

தூணிலும் துரும்பிலும்!
எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் படம் பிடிக்கிற திறன்கொண்டவை 'ஸ்பை’ கேமராக்கள். அது இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதிலே இரண்டு வகைக்கள் இருக்கின்றன. வயர்ட் மற்றும் வயர்லெஸ். தற்போது பெரும்பாலும் வயர்லெஸ் ஸ்பை கேமராக்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பேனா, கண்ணாடி, சாவிக்கொத்து, கைக்கடிகாரம், செல்போன் சார்ஜர், பூ ஜாடி, கால்குலேட்டர், டீ.வி ரிமோட், இடுப்பு பெல்ட், சட்டை பொத்தான், கழுத்துப் பட்டை, விளையாட்டுப் பொம்மைகள், ப்ளக் பாயின்ட், விளக்குகள், தொப்பி, டீ ஷர்ட், எம்.பி 3 பிளேயர், பாத்ரூம் ஃபிட்டிங்ஸ், புத்தகம், ஏர் ப்யூரிஃபையர், ஏ.சி, போட்டோ ஃப்ரேம் போன்ற பொருட்களில் மறைத்து வைத்து துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.

வீட்டுக்குள் வில்லங்கம்!
ஒரு சூயிங்கம் பாக்கெட்டில் வைத்து ரகசியமாக வீடியோ பதிவு செய்யக்கூடிய குட்டி கேமராக்கள் நம் நாட்டில் எல்லா பெருநகரங்களிலும் கிடைக்கின்றன. அந்தக் குட்டி கேமராக்கள், ஆறு மணிநேரம் வரை வீடியோ பதிவு செய்யக்கூடியவை. தங்கள் குடும்ப உறவுகளை கண்காணிப்பதற்காகவும் இந்த கேமராக்களை பலர் வாங்கிச் செல்கின்றனர். ''பேனா வடிவில் உள்ள கேமரா, முன்பு 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. இப்போது, 10 மடங்கு அளவுக்கு அதன் விலை குறைந்துவிட்டது. மிகவும் எளிதாகவும் அதைக் கையாள முடியும்' என்று நம்மிடம் சொன்னார் சென்னையைச் சேர்ந்த மின்னணு பொருட்கள் வியாபாரி ஒருவர்.

போனில் 'அது’ வேண்டாம்!
இளம் காதலர்கள் தனிமையில் இருக்கும்போது, முத்தமிட்டுக்கொள்வது உள்ளிட்ட இன்ப தருணங்களை தங்களின் செல்போன் கேமராவில் ஆர்வத்துடன் பதிவு செய்கிறார்கள். அதைப்போல, கணவனும் மனைவியும் தங்களுடைய அந்தரங்க உறவுகளை செல்போன் கேமராவில் பதிவு செய்துகொள்கிறார்கள். புகைப்படங்களாக, வீடியோவாக எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து கிளுகிளுப்பு அடைகின்றனர். பின்னர், எச்சரிக்கையுடன் அந்தக் காட்சிகளை செல்போன் கேமராவில் இருந்து அழித்துவிடுகின்றனர். ஆனால், படங்களை அழித்துவிட்டோம் என்று யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த செல்போன் பழுதாகிவிட்டால், பழுதை நீக்குவதற்காக மொபைல் ரிப்பேர் கடைகளில் கொடுப்போம். அழிக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை மீட்பதற்கான ரெக்கவரி சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி, நம்மால் அழிக்கப்பட்ட எல்லா படங்களையும் எடுத்துவிடுவார்கள். அதுபோல, மொபைல் கடைகளில் மீட்கப்பட்டு இன்டர்நெட் மூலம் பரவிய அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. அது தெரியவந்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. எனவே, இப்படி படம்பிடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

இப்படிச் செய்யுங்க!
துணிக் கடைகளில் உடைமாற்றும் அறைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் பெரிய கண்ணாடிகள் இருக்கும். அந்தக் கண்ணாடிகளின் பின்புறத்தில் ரகசியக் கேமராக்கள் இருக்கலாம். அந்த வகை கண்ணாடிகளுக்கு ரிஃப்ளெக்டிங் கிளாஸ் (Reflecting Glass) என்று பெயர்.
இதைக் கண்டுபிடிப்பதற்கு பிரத்யேகக் கருவிகள் உண்டு. அடிக்கடி நட்சத்திர விடுதிகளில் தங்கும் பிரபலங்கள், அத்தகையக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். லேசர் ஹிட்டன் கேமரா டிடெக்டர் (Laser hidden canera detector), வயர்லெஸ் கேமரா ஹன்ட்டர் (Wireless camera hunter) என்று அழைக்கப்படும் அந்தக் கருவிகள் பெரும்பாலும் டெல்லியில் மட்டுமே கிடைக்கின்றன. அதன் விலை சுமாராக 15 ஆயிரம். ஓர் அறையில் எந்த இடத்தில் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும், இந்தக் கருவிகளின் மூலமாக கண்டுபிடித்துவிட முடியும்.
வெளியிடங்களுக்குச் செல்லும்போது, சிறிய டார்ச் விளக்கு ஒன்றை கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற கண்ணாடிகளில் டார்ச் விளக்கால் அடித்துப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்குள் ஒளி ஊடுருவவில்லை என்றால் அது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடி. ஒளி ஊடுருவினால் அது ரிஃப்ளெக்டிங் கிளாஸ்.
உடை மாற்றும் அறைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் உள்ள கண்ணாடிகளை நம்முடைய விரலை வைத்தும் சோதித்துப் பார்க்கலாம். கண்ணாடி மீது உங்கள் ஆள்காட்டி விரலை வையுங்கள். விரலின் நுனிக்கும் கண்ணாடியில் தெரிகிற அந்த விரல் பிம்பத்தின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும். நுணுக்கமாகப் பார்த்தால் அதை கவனிக்க முடியும். அப்படியான இடைவெளி இருந்தால், அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. நம் ஆள்காட்டி விரலுக்கும் கண்ணாடியில் தெரியும் பிம்ப விரலுக்கும் இடைவெளி தெரியவில்லை என்றால், அது ரிஃப்ளெக்டிங் வகை கண்ணாடி.
அறையின் வெளிச்சம் உள்ளே வராத அளவுக்கு கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட வேண்டும். பிறகு, உங்கள் செல்போன் கேமராவை ஆன் செய்யுங்கள். சாதாரணமாக புகைப்படம் எடுக்கும்போது வெளிப்படும் 'ஃப்ளாஷ்’ வெளிச்சத்தை அணைத்துவிட்டு, அந்த அறையில் உள்ள நான்கு புறங்களின் சுவர்களையும் சுவற்றில் உள்ள அலங்காரப் பொருட்களையும் வரிசையாகப் புகைப்படம் எடுங்கள். பின்னர் அந்தப் படங்களை ஆராயும்போது ஊசிமுனை அளவுள்ள ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தாலும், இருட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிகப்பு நிறப் புள்ளிகளாகத் தெரியும். அதை வைத்தே உங்கள் அறையினுள் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
ஸ்பெஷல் பிராஞ்ச்,விகடன் 
விகடனில் 17-01-2015 அன்று வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Tuesday, January 6, 2015

முடிவுக்கு வருகிறதா ஐ.டி. நிறுவனங்களின் பொற்காலம்?

தொண்ணூறுகளின் இறுதியில் இந்தியா முழுவதும் ஐ.டி. என்ற வார்த்தை லட்சோப லட்சம் இளைஞர்களையும்,  இளம்பெண்களையும் மயக்கிய வார்த்தை.
வெளிநாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் வங்கிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் நிழல் உலகம் இந்தியாவில் குறிப்பாக தமிழகம்,கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில் உருவாகின. டாடா கன்சல்டன்சி,இன்போசிஸ்,விப்ரோ,ஐ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள்  இதற்கு  நிலம் தேர்வு செய்து, கட்டடம் கட்டி, ஆட்களை அமர்த்தி வெள்ளைக்கார மனிதர்களின் "வெள்ளை நிழல்களை" வார்த்தெடுத்தன.
இந்த வெள்ளை நிழல்களான நம்மூர் ஆண்கள், பெண்களுக்கு அவ்வளவு மரியாதை.. மதிப்பு. எங்கு நோக்கினும் ஐ.டி. பொறியியல் படிக்க, தனியார் பொறியியல் கல்லூரிகளில் அலை மோதுபவரை காணா தவர்கள்   யாரும் இல்லை. ஒரு மிகப் பெரிய சமுதாய வளர்ச்சியை பொருளாதார அளவில் உருவாக்கிய இந்த ஐ.டி. துறை, ஏறத்தாழ 15 ஆண்டுகளில் யாரை ஏற்றி உயர்த்தியதோ அவர்களை தெருப் புழுதியில் வீசி உள்ளது என்ற யதார்த்த உண்மையைக் கண்டு இளைய சமுதாயம் திகிலடித்துக் கிடக்கிறது.
சமீப காலமாக ஐ.டி. நிறுவனங்களைப் பற்றி  வருகிற செய்திகள் உண்மையாகவே இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறோமா என்று ஐ.டி. பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

முழுக்க வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்கள் இவை என்றாலும், இந்திய தொழிலாளர்கள் அந்நிய நாட்டின் கொள்கைகளால் வதைபடுவதுதான் கொடுமையானதாக உள்ளது. மென்பொருள் நிறுவனங்களின்  கட்டாய பணிநீக்க  விவகாரத்தை வேடிக்கைப் பார்க்கமால், அதில் தலையிட்டு   மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் குரல்கள் பல தரப்பில் இருந்தும் எழ ஆரம்பித்துள்ளன.

இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காமல் மென்பொருள் நிறுவனங்கள், 8 முதல் 12  ஆண்டு காலம் பணியாற்றியவர்களை திறன் குறைந்தவர்கள்  ( non-performers) என்று கூறி மேற்கொண்டுள்ள  பணியாளர் ( layoffs ) வெளியேற்றம் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். (Tata Consultancy Services) தான் அதிக எண்ணிக்கையிலானவர்களை நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மொத்தம் 25,000 பேர்களை  பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை முதல் "தவணையாக" வெளியேற்றி விட்டது. மீதமுள்ளவர்களை அடுத்த மாத இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்ப டி.சி.எஸ். முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல், ஐ.பி.எம். நிறுவனம் இந்தியாவில் 2500 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இன்னும் பல நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்களை வெளியில் தெரியாமல் வேலைநீக்கம் செய்து வருகின்றன.

வேலை நீக்கப்படும் பொறியாளர்கள் அனைவரும் 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இடைநிலை மற்றும் முதுநிலை ஊழியர்கள். மென்பொருள் நிறுவனங்களில் முதுநிலை பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதாலும், குறைந்த ஊதியம் பெறத் தயாராக உள்ள இளைஞர்களைத்  தான் மென்பொருள் நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும் என்பதாலும் இது போன்று செயல்படுகின்றன இந்த "வெள்ளைக்கார நிறுவனங்கள்".
பணி நீக்கப்பட்டவர்கள்  வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேருவது மிகவும் கடினம். 30 வயதைக் கடந்து ஏராளமான குடும்பப் பொறுப்புகளுடனும், பொருளாதார சுமைகளுடனும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் திடீரென பணி நீக்கப்பட்டால் அவர்களின் எதிர்காலம் நரகமாகிவிடும் என்பதுதான் யதார்த்தம். அத்துடன் வெளியேற்றும் பணியாளர்களையும் சும்மா அனுப்பாமல், திறன் குறைந்தவர்கள்   ( non-performers)  என்ற முத்திரை குத்தி அனுப்பினால் வேறு நிறுவனங்களில் எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? என்று குமுறுகிறார்கள் இந்த ஐடி பணியாளர்கள். 

பணியாளர்களை பணியில் அமர்த்தும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதைப் போலவே, பணியிலிருந்து ஒருவரை நீக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உள்ளன. அதேபோல், ஒருவரை பணியிலிருந்து நீக்கவும் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், எந்தக்  காரணமும் இல்லாமல், எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் ஒரு மணி நேர இடைவெளியில் வேலையை விட்டு வெளியில் போகும்படி ஆணையிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத டி.சி.எஸ். நிர்வாகம், "இவையெல்லாம் சாதாரணம்; சில நேரங்களில் கட்டாய வேலை நீக்கம் செய்துதான் ஆக வேண்டும். ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை" என்று கூறி வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சியிருக்கிறது.

அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும்; அவர்களை நீக்கி விட்டால்
அவர்கள் ஒருவருக்கு தரும் ஊதியத்தில் மூன்று நான்கு பேரை பணியில் அமர்த்திக்கொள்ள முடியும் என்ற முழுக்க முழுக்க வணிக அடிப்படையிலான காரணத்தின் அடிப்படையில்தான் 25,000 மூத்த பணியாளர்களை டி.சி.எஸ். நிர்வாகம் பணிநீக்கம் செய்து வருகிறது. வயது ஆவது என்பது அந்த ஊழியர்களின் குற்றமா என்ன? அவர்களின் இளமையை தாங்கள் பணியாற்றிய நிறுவனத்திற்கே தாரை  வார்த்தவர்கள்  தானே. இந்தச் செயல் சமூக அமைதிக்கு கெடுதலை விளைவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.   

அதேநேரத்தில், 55,000 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்பதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு மிக மிக ஆபத்தானது.

ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அதே போல அதே வழியில் பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டுள்ளதால் சுமார்  2,000 பேர் வேலை இழந்துள்ளனர். இது வெறும் வேலை இழப்பு அல்ல. ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கை இழப்பு. 

மென்பொருள் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருதி ஒதுங்கியிருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையே. 

சமூகத்தின் செல்லப் பிள்ளைகளாக அந்நிய நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய இந்த ஐ.டி. தலைமுறை, இப்போது கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. பல ஆயிரம் குடும்பங்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்தது உண்மை  என்றால்  இப்படி திடீர் என்று பொற்காலத்தை பறித்துக் கொண்டுள்ளதும் கண்ணில் விழுந்த ஊசி தரும் வலியை உணரத்தான் வைக்கிறது.

அரசு தன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது.
- தேவராஜன்

Friday, January 2, 2015

தோனி ஓய்வு! கற்றுதரும் 5 மேலாண்மைப் பாடங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மேலாண்மைத் தத்துவங்களோடு அடிக்கடி ஒப்பிடப்படும் தோனியின் தலைமையைப்போல, அவரது ஓய்வும் மேலாண்மைப் பாடங்களோடு ஒத்துப்போகிறது. அவை, என்னென்ன என்பதைப் பார்ப்போம்!



1.நிர்வாகத்தில் தலைவரது முக்கியமான வேலையாகக் கருதப்படுவது நிர்வாகத்தை லாபகரமாக இயங்கவைப்பது மட்டுமல்ல, நிர்வாகத்தைத் தனக்குப் பின் தனக்கு நிகரான ஓர் ஆளிடம் ஒப்படைப்பது மற்றும் அவரை அந்த நிலைக்குத் தயார் செய்வது. திடீரென ஒருநாள் ஓய்வை அறிவித்தால் அதனைச் சமாளிக்கச் சரியான மாற்று நபரை அடையாளம் கண்டு வைத்திருப்பது. இதனைத்தான் தோனியும் செய்திருக்கிறார். தனதுஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த சரியான நபராக கோலியை அடையாளம் கண்டிருப்பது தொடங்கி, அவரது பேட்டிங் பாதிக்கப்படுகிறதா என்பதை இடையிடையே கோலிக்கு அளித்துச் சோதித்தும் பார்த்துள்ளார். அந்தப் போட்டிகளில் கோலியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் அவர், சரியான நபராக கோலியைத் தேர்ந்தெடுத்தது சிறந்த தலைவனுக்கு உரிய அடையாளத்தைக் காட்டுகிறது.

2.ஒரு விஷயத்தில் தன்னைவிடச் சிறப்பான நபர் வழி நடத்த இருக்கும்போது வீம்புக்கு என்று அந்த இடத்தில் இருக்காமல், தகுதியானவரை அந்தப் பணியில் நியமித்துவிட்டு, தனக்கு நன்றாகத் தெரியும் அடுத்த வேலையைக் கவனிப்பது நிர்வாகத்தில் மிக முக்கியமான பண்பாகக் கருதப்படுகிறது. அதனைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த முடியாமல் சிக்கிக்கொண்டு ஒருநாள் போட்டிகளிலும் கவனத்தைச் சிதறவிட வேண்டாம் என்று அவரது சிறந்த களமான ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார்.

3.அலுவலகத்தில் வயதானாலும் நன்றாகச் செயல்படுபவர்களும் இருப்பார்கள். அதேசமயம், வயதான காரணத்தால் நன்றாகச் செயல்பட முடியாமல் ஓய்வு காலம் வரை சரியாகப் பணி செய்ய முடியாமல் தவிக்கும் நபர்கள் நல்ல நிலையில் இருக்கும்போதே விருப்ப ஓய்வு பெறுவது உண்டு. அதைத்தான் தோனியும் செய்துள்ளார். 42 வயது வரை டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு நடுவே, 33 வயதில் ஓய்வை அறிவிக்கும் துணிச்சல் தோனியைத் தவிர யாருக்கும் இருக்காது.

4.நிதி மேலாண்மையில் போர்ட்ஃபோலியோ மேலாண்மை என்ற பிரிவு இருக்கும். அதில் தனக்கு லாபம் தரும் பிரிவுகளில் முதலீட்டை அதிகரித்தும், லாபம் தராத அல்லது அந்த முதலீடு பற்றிய போதிய அறிவு இல்லாத பிரிவுகளில் சிறந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்யமாட்டார்கள். அதேபோல் 15:1 என்ற விகிதத்தில் தோல்வியைத் தந்த டெஸ்ட் போட்டிகளைத் தவிர்த்து 50 சதவிகித வெற்றிகளையும், உலகக் கோப்பை போட்டிகளில் லாபம் தந்த ஒருநாள், டி20 போட்டிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது போர்ட்ஃபோலியோ மேலாண்மையுடன் ஒப்பிட வைக்கிறது.

5.நிர்வாகத்தின் அதிகபட்ச பதவிகளான சிஇஓ போன்ற பதவிகளில் இருக்கும் நபர், ஒருபோதும் தன்னைக் கீழிறக்கி அடுத்த நிலைகளில் உள்ள இடத்தில் வேலை செய்யமாட்டார் அப்படியே செய்தாலும் அது சிறப்பானதாக இருக்காது. அப்படி இருக்கும்போது வேலையில் அழுத்தம் உண்டாகி சிறப்பாகச் செயல்படாத நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதைத்தான் தோனியும் செய்திருக்கிறார். இப்படிச் செய்வது ஒரு விளையாட்டு வீரராக தவறு என பலர் கூறினாலும், மேலாண்மையில் ஒரு தலைவனுக்குரிய முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று.

வெற்றி, தோல்வி அனைத்திலும் ஒரே மனோபாவத்தை வெளிப்படுத்தும் கேப்டன் தோனி, தனது ஆட்டம், ஓய்வு இரண்டையுமே கூலாக அறிவித்து மிஸ்டர் கூல் என்பதை நிரூபித்துள்ளார்.

- ச.ஸ்ரீராம்.

Thursday, January 1, 2015

நல்ல பேச்சே நமது மூச்சு

அலுவலகம் என்பது தொழிற்சாலையோ பொது நிறுவனமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில், நிதித் துறை, மனிதவளத் துறை, தொழில் துறை, எனப் பல துறைகள் இருக்கும். அவர்களுடன் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை மட்டும் பாதிக்கப்போவதில்லை. பலருடைய எதிர்காலமும் அதைச் சார்ந்திருக்கும்.



நம்முடன் பணிபுரியும் சகநண்பர்களுடனும் மேலதிகாரிகளுடனும், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களுடனும் நல்ல பெயர் எடுக்கவும், நல்ல உறவுகளை வைத்துக்கொள்ளவும் தொடர்புடைய பேச்சுத் திறன் மிகவும் முக்கியம்.

இதற்கு முக்கிய அடிப்படை நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக நீங்களே புரிந்து கொள்ளுவதும், மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதும்தான்.

மொழியின் முக்கியத்துவம்

பொதுவாகத் தொடர்புடைய பேச்சுக்கு மொழி ஒரு சாதனமாகிறது. சிலர் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படலாம். வெளிநாட்டு அதிகாரிகளோடு தொடர்புகொள்ள நேரிடலாம். நாம் பேசுகிற மொழி அவர்களுக்கோ, இல்லை அவர்கள் பேசுகிற மொழி நமக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்கு ஒரே தீர்வு ஆங்கிலம்தான்.

பெரும்பாலான இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. தெரிந்தாலும் மற்றவர்கள் முன்னால் பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவது என்றாலே நல்ல இலக்கணம் தேவை என்று நினைக்கிறார்கள்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தாய் மொழியைத் தவறாகப் பேசுவதுதான் தவறு. ஆங்கிலத்தில், தொடக்கத்தில் தவறாகப் பேசித் தவறுகளைத் திருத்திக்கொண்டு பயிற்சி செய்து பின் ஆங்கிலத்தில் ஆளுமை வளர்த்துக் கொள்ளலாம். மொழி என்பது ஒரு சாதனமே. அதைப் பேச்சாக மாற்றி, தொடர்பு கொள்ளும்போது நல்ல உறவு உண்டாகும்.

நம் தாய்மொழி நமக்கு உயர்வானதுதான். ஆனாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. நீங்கள் மொழிப்பற்று உடையவராக இருந்தால் உங்களுக்கு நான் யதார்த்தமாகச் சொல்வது “ஆங்கிலத்தைப் பேச்சில் வையுங்கள். தமிழை மூச்சில் வையுங்கள்.”

இப்போதிலிருந்தே சிறிது சிறிதாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தொடங்குங்கள். மற்றவர்களுடைய மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவரின் மொழியில் பேசினால் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கூர்ந்து கவனித்தல்

அடுத்தவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தல் அவசியம். அந்தக் கவனம் நம் வேலையைத் திறம்படச் செய்ய உதவும். செய்யப்போகிற வேலையில் நல்ல தெளிவு கிடைக்கும். சந்தேகத்தில் செய்கிற வேலை பல பிரச்சினைகளை உண்டு பண்ணிவிடும். நமக்குப் புரிந்துவிட்டதுபோலத் தீர்மானம் செய்துகொண்டு செய்யும் வேலையில் தவறு ஏற்பட்டால், உறவுகள் முறிந்து நம் எதிர்காலம் பாதிக்கும்.

அலுவலகத்தில், கம்யூனிகேஷன் என்பது மேலதிகாரிகளிடமிருந்து கீழ் மட்டத்துக்கும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்துக்கும் நடக்கும். நீங்கள் ஒருவேளை மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளைப் பெறலாம். சில சமயத்தில் உங்களுக்குக் கீழுள்ளவர்களுக்கு உத்தரவுகளையோ அறிவுரைகளையோ சொல்லலாம். பொதுவாக, நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் மனதில் கொள்ள வேண்டியவை:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

#அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பேச நினைப்பது.

#அடுத்தவர்களைக் கடிந்துவிடுவோமோ என்று நினைப்பது.

#அலுவலக நிர்ப்பந்தங்களோ , நம்முடைய கலாச்சாரப் பாதிப்போ நம்மைத் தாக்கி, அதனால் நினைத்ததைப் பேச முடியாமல் இருப்பது.

#எதைப் பேச நினைத்தாலும் நான் இதைச் சொல்லட்டுமா என்று பயத்துடன் பேசுவது.

இந்த உணர்ச்சிகளை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது?

அலுவலகத்தில் உங்கள் உணர்வுகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களை யாராவது புண்படுத்திவிட்டார்களா அல்லது ஏதாவது தர்மசங்கடமா அல்லது கோபமா?
#எதுவாக இருந்தாலும் இரண்டொரு வார்த்தைகளில் முடித்து விடுங்கள். குறிப்பிட்ட எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துங்கள்.

#உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காதீர்கள்.

#பேசுவதற்கான நல்ல இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுங்கள்.

#நான்தான் தவறு செய்து விட்டேன், நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற தொனியில் பேசுங்கள்.

பொதுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை,

#ஒருவரிடம் பேசத் தொடங்கும் முன் நம்முடைய எண்ணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

#எதைப் பற்றிப் பேசப் போகிறோம். ஒரு திட்டத்தைப் பற்றியா அல்லது வெறும் சந்திப்பா அல்லது யாரிடமாவது தனியாகப் பேசப் போகிறோமா என்பது மனதில் தெளிவாக இருக்கட்டும்.

#நம்பிக்கையுடன் பேசுங்கள்.

#உங்களுடைய குரலும் தொனியும் ஏற்ற இறக்கங்களோடு, பேசுகின்ற பொருளுக்கு ஏற்றாற்போல இருக்கட்டும்.

#உண்மையைப் பேசுங்கள். உங்களுடைய பேச்சு நேர்மையானதாக இருக்கட்டும். எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நேர்மையாக வெளிப்படுத்துங்கள்.

#ஒரு விஷயத்தைப் பிடிக்காமல் செய்வது, வேண்டாம் என்று சொல்வது எனக்கு உடன்பாடு இல்லை, என்று சொல்வதில் தவறில்லை. “நாம் கேட்டால், நமக்குத் தெரியவில்லை என்று நினைத்துவிடுவார்களோ அல்லது பிறர் கோபப்படுவார்களோ” என்று நினைத்து விடாதீர்கள்.

#மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்.

#நான் என்ற ஈகோவை விட்டுத் தள்ளுங்கள்.

இதைக் கவனத்தில் கொண்டால் உங்களின் பணியிடத்தில் உங்களின் பேச்சு சிறப்பானதாக மதிக்கப்படும்.