Blogger Widgets

Total Page visits

Thursday, May 22, 2014

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள்: யூஜிசி அறிவிப்பு

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வெளியிட்டுள்ளது.
போலி பல்கலைகள் அதிக எண்ணிக்கையில் உத்திர பிரதேசத்தில் 9 என்ற அளவிலும், அதற்கடுத்து தில்லியில் 5 பல்கலையும் உள்ளன.
பிகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உள்பட 7 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
யூஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் விபரம்:
1. Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar.
2.Commercial University Ltd., Daryaganj, Delhi.
3. United Nations University, Delhi.
4.Vocational University, Delhi.
5. ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi - 110008.
6. Indian Institute of Science and Engineering, New Delhi.
7. Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum, Karnataka.
8. St. John's University, Kishanattam, Kerala.
9. Kesarwani Vidyapith, Jabalpur, Madhya Pradesh.
10. Raja Arabic University, Nagpur, Maharashtra.
11. D.D.B. Sanskrit University, Putur, Trichi, Tamil
12. Indian Institute of Alternative Medicine, Kolkatta.
13. Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP) Jagatpuri, Delhi.
14. Mahila Gram Vidyapith/Vishwavidyalaya, (Women's University) Prayag, Allahabad, Uttar Pradesh.
15. Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh.
16. National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh.
17. Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh.
18. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura, Uttar Pradesh.
19. Maharana Pratap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh, Uttar Pradesh.
20. Indraprastha Shiksha Parishad, Institutional Area,Khoda,Makanpur,Noida Phase-II, Uttar Pradesh.
21. Gurukul Vishwavidyala, Vridanvan, Uttar Pradesh.

2014ம் ஆண்டின் பிரபலமான பணிகள் எவை? - ஒரு அலசல்

எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில், பணி வாய்ப்புகளும் கூட, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பெரியளவில் மாற்றமடைந்து வருகின்றன.
இக்கட்டுரை, இந்த 2014ம் ஆண்டின் 5 முக்கிய பணிகள் பற்றி விவரிக்கிறது. அப்பணிகள், இந்தாண்டின் முதல் 5 பிரதான பணிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மார்க்கெட் ஆராய்ச்சி அனலிஸ்ட் மற்றும் மார்க்கெடிங் ஸ்பெஷலிஸ்ட்
இன்றைய நிலையில், பெரியளவில் திகழும் நுகர்வு கலாச்சாரத்தில், நுகர்வோரை சார்ந்த துறை அதிக முக்கியத்துவம் பெறுவதில் வியப்பேதும் இல்லை. அந்த வகையில், மேற்கண்ட பணிக்கான முக்கியத்துவம் கூடுதலாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நுகர்வோரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, சந்தையில் ஒரு பொருளுக்கான முக்கியத்துவம் அமைகிறது. அதனடிப்படையில், அதற்கான வழங்கல் மற்றும் போக்குவரத்து போன்றவை நிகழ்கின்றன.
மார்க்கெட் ஆராய்ச்சி அனலிஸ்டுகள் மற்றும் மார்க்கெடிங் ஸ்பெஷலிஸ்டுகள், நுகர்வோரின் மாறும் விருப்பங்கள் மற்றும் தேவைகளை பகுப்பாய்வு செய்து, அதற்கேற்ப வியூகங்களை அமைத்து, ஒரு பொருளின் விற்பனையை அதிகப்படுத்துகிறார்கள்.
Software Developer
அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளில், கணினி என்ற மந்திர சாதனத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், அதன் செயல்பாட்டிற்கான Software Developer -களின் முக்கியத்துவம் பெருமளவு அதிகரிக்கிறது.
ஒருவர் Software Developer  என்ற நிலையை அடைய விரும்பினால், அவர், B.Tech., Computer Application அல்லது MCA ஆகிய படிப்புகளில் ஒன்றை நிறைவுசெய்திருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்துறை பெரியளவில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம்
ஒவ்வொரு நாட்டிற்கும், ராணுவம் என்பது எந்த நிலையிலும் தவிர்க்கவே முடியாத ஒரு அம்சம். ராணுவத்தில், வீரர் பணிதான் என்றில்லை. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் சார்ந்து ஏராளமான பணி நிலைகள் உள்ளன. அவற்றில் சம்பளமும், சலுகைகளும் மிக அதிகம்.
இங்கே, பொருளாதார மந்தநிலையால் ஆள் குறைப்பு, வேலையின்மை உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் கிடையாது. 100% பணி உத்தரவாதம் உண்டு. எனவே, பாதுகாப்புத் துறையில், தனக்கு விருப்பமான பிரிவை தேர்ந்தெடுத்து, ஒருவர் தாராளமாக செல்லலாம்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
தொழில்நுட்பம் சார்ந்த உலகில், தவிர்க்கவே முடியாத அம்சங்களில் முக்கியமானது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். தொழில்நுட்பங்களுக்கு ஒரு அடிப்படையாக இத்துறை விளங்குகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியர்கள், பகுப்பாய்வு, வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் மெக்கானிக்கல் அமைப்புகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறான பணிகளை மேற்கொள்கிறார்கள். தற்போதைய நிலையில், இத்துறையில் 6% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உணவு சேவைகள்
உணவு இல்லையேல், இந்த உலகம் இல்லை. அனைவருமே, உணவுக்காகவே உழைக்கிறார்கள். ஆனால், விருந்தோம்பல் துறையில் பணிபுரிவது எப்படிப்பட்ட அனுபவத்தை தரும் என்பதை பார்க்க வேண்டும். விருந்தோம்பல் துறை என்பது, எப்போதுமே மவுசு குறையாத துறைகளில் ஒன்று. முக்கியமானதும்கூட.
வரும் நாட்களில், இத்துறையில் 12% வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது. சுற்றுலாத் துறையுடன் இத்துறை நெருங்கிய தொடர்புடையது. இது நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு துறையும்கூட. இத்துறையில் பல நிலைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. இதுஒரு பரந்து விரிந்த பெரிய துறையாகும்.

Wednesday, May 21, 2014

சிந்திக்க வேண்டிய தருணம்

ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி "நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?' என்பது. இதற்கு ஒவ்வொரு மாணவனும் மருத்துவர், ஆட்சியர், போலீஸ், ஆசிரியர், விஞ்ஞானி என விதவிதமாக பதில் கூறுவார்கள்.
ஆனால், இதே கேள்வியை பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்து வெளியே வரும் ஒரு மாணவனிடம் கேளுங்கள். "தெரியலை சார். ரிசல்ட் வந்தாதான் தெரியும்' என்பார். இன்றைய 90 விழுக்காடு சராசரி மாணவர்களின் பதில், கட்டாயமாக இப்படித்தான் இருக்கிறது.
ஏனெனில், சிறு வயதில் இருந்த தெளிவான சிந்தனை மற்றும் இலக்கு நோக்கிய பார்வை, காலம் செல்லச்செல்ல மங்கிவிடுகிறது. மதிப்பெண் ஆயிரத்துக்கு மேல் என்றால் பொறியியல் கல்லூரி, அதற்கும் குறைந்தால் கலை அறிவியல் கல்லூரி, அதற்கும் கீழே என்றால் ஏதேனும் பாலிடெக்னிக் கல்லூரி, வேறு வழியே இல்லையென்றால் ஏதாவதொரு வேலைக்குப் போக வேண்டியதுதான் என்பதே அவர்களின் சிந்தனையோட்டமாக இருக்கிறது.
படித்து முடித்துவிட்டு வரும் அனைவருக்கும் வேலை கிடைக்காமல் போவதில்லை. அந்தப் படிப்புக்குண்டான தகுதியை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்குத்தான் வேலை கிடைப்பதில்லை. கல்வியை வேலைக்குச் செல்லும் ஒரு "கேட் பாஸாக" பயன்படுத்தாமல், தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், ஆளுமைத் திறனைப் பெருக்கிக் கொள்ளவும் இவர்கள் தவறிவிடுகின்றனர்.
இதில், மாணவர்களை மட்டும் குறை சொல்வதற்கில்லை. மாணவர் எந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வமாக இருக்கிறார் எனக் கண்டறிந்து, அவர்களை அந்தத் துறையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தும் ஆசிரியர்களோ, பெற்றோரோ, வழிகாட்டிகளோ இன்று இல்லை.
இன்று இருப்பவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம், எந்தப் படிப்பு படித்தால் லட்சங்களில் ஊதியம் பெறலாம் என்பதைக் குறிவைத்தே இருக்கிறது. இதில் மாணவரின் விருப்பத்துக்கெல்லாம் இடமில்லை.
போதாத குறைக்கு, பிளஸ் 2 தேர்வு எழுதி முடிந்தவுடன் கல்வி வழிகாட்டி, எதிர்கால வழிகாட்டி என்ற பெயரில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் மாணவர்களைக் குழப்புகின்றனர்.
இந்தப் படிப்பு படித்தால் வெளிநாட்டில் வேலை, அந்தப் படிப்பு படித்தால் லட்சக்கணக்கில் ஊதியம் என மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் ஆசை வலையில் வீழத்தி, தங்கள் கல்லூரிச் சீட்டுகளை நிரப்பி, தங்களின் "ஆள் பிடிக்கும் தந்திரங்களால்' மாணவரை விருப்பம் இல்லாத துறையைத் தேர்ந்தெடுக்க வைத்து, ஆர்வமில்லாத கல்வி கற்க வைத்து, அவரின் வாழ்க்கையை வீணாக்கிவிடுகிறார்கள்.
அனைவருக்கும் நிறைய ஊதியம் வரும் படிப்பு படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறதேயொழிய, அந்தப் படிப்பு தனக்கு சரிப்பட்டு வருமா? தனது எதிர்காலத்துக்கு இதனால் பயன் இருக்குமா? என்ற சிந்தனை இருப்பதில்லை.
ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள மாணவரை மருத்துவராகவும், இசைத் துறையில் ஆர்வமுள்ளவரை பொறியாளராகவும் ஆக்குவதால் அவர்களால் தாங்கள் விரும்பிய துறையிலும் சாதிக்கவும் இயலாமல், தாங்கள் ஈடுபட்ட துறையிலும் சிறப்பாக பணியாற்றவும் முடியாமல் தடுமாற நேரிடுகிறது.
தன் குழந்தை வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என எண்ணும் ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தை விரும்பும் துறையில் அவரது கல்வியைத் தொடர அனுமதிக்கவேண்டும். அது கலைத் துறையாகவோ, விளையாட்டுத் துறையாகவோ, ஏன் அரசியலாகக்கூட இருக்கலாம்.
அதே நேரத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள இளைஞர்களும் இன்று இருக்கிறார்கள். மாணவர்களை அவர்களை விரும்பிய துறையில் ஈடுபடுத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் இரண்டாவது விருப்பத்தைக் கேட்டறிந்து அதில்கூட அவர்களை ஈடுபடுத்தலாம்.
ஆனால் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் பெற்றோரின் விருப்பத்துக்காகவும், நிறைய ஊதியம் பெற்றுத் தரும் படிப்பு என அவர்களை ஏதாவது ஒரு துறையில் ஈடுபடுத்தி, அவர்களின் வாழ்க்கையை வீணாக்கிவிடக் கூடாது என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது முக்கியமல்ல. தேர்தெடுத்த துறையில் எந்தளவுக்கு கடினமாக உழைத்து முன்னுக்கு வருகிறார் என்பதில் தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.
இதனைப் புரிந்து கொண்டு மாணவர்களும், பெற்றோரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது.

Wednesday, May 14, 2014

பொறியியலுக்கு அப்பால்...

பிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாண விகள் மாணவர்களை முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள் ஆக்குவது, பொறியியல் கல் லூரிகள் ஸ்பான்ஸர் நிகழ்ச்சிகள் வழங்குவது, பொறியியல் படித் தால் வேலை கிடைக்குமா என்று கேள்வி கேட்டு கட்டுரைகள் வருவது, பெற்றோர்கள் எல்லாம் படித்து விட்டு பணம் கொடுத்து இன்ஜினியரிங் சீட் வாங்குவது என எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
தமிழ் நாட்டின் default degree பொறியியல் படிப்பு என்றாகி விட்டது. அங்கு போய் வரிசையில் நிற்காதீர்கள் என்று அறைகூவல் விடுப்பது பலனளிக்காது. அதற்கு பதில் சில உபயோகமான தகவல்களை (survival tips) சொல்லித் தருதல் நல்லது எனப்படுகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கல்லூரிகளுக்கும் கூட இவை தேவை என்று நம்புகிறேன்.

முதலில் மாணவர்களுக்கு ...
“ட்ரிபிள் ஈ தான் பெஸ்ட், சிவில் சுமார்தான், பயோ டெக்னாலஜி கெத்து” என்று நண்பர்கள் பேச் சைக் கேட்காமல் எது உங்க ளுக்கு பிடிக்கிறதோ, எது உங்க ளால் நிச்சயம் அதிக சிரமம் இல்லாமல் படிக்க முடியுமோ அதைத் தேர்ந்தெடுங்கள். பிரிவு கள் பற்றிய சந்தேகங்களை பொறி யியல் ஆசிரியர்களிடம் அல்லது ஆலோசகர்களிடம் கேட்பது நல்லது.
பொறியியல் நிச்சயம் கடின உழைப்பைக் கேட்கும் படிப்பு. எல்லா பேப்பர்களையும் முதல் முயற்சியில் பாஸ் செய்வது மட்டுமல்ல, எல்லா பாடங்களின் சாரத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். இரண்டு வருடங்கள் எக்கச்சக்க டெஸ்டுகள் வைத்து பயிற்சித்த பிளஸ் டூ தேர்வு போல அல்ல இது. புரியாமல் படிக்கும் படிப்பு வேலைக்கான நேர்காணலில் கை கொடுக்காது.
கண்டிப்பாக உங்கள் சீனியர் களில் பலர் புரிந்து படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை சினேகம் பிடித்துக் கொண்டு அவர்கள் உதவி பெறுதல் நலம்.
பி.இ முடித்து விட்டு என் னென்ன செய்ய முடியும் என்பதை முதலிலிருந்தே அறிந்து கொள் ளுங்கள். கேம்பஸில் வேலை கிடைக்கும் என்ற ஒற்றை கிளிப் பேச்சு மந்திரத்தை மறத்தல் நல்லது. கேம்பஸ் பல வாய்ப்பு களில் ஒன்று என்று புரிந்து கொள்ளுங்கள்.
எவ்வளவு பிராக்டிகல் அனு பவம் கிடைக்குமோ அவ்வளவை யும் பெறுங்கள். இதற்காக நீங்கள் கொள்ளும் வலிகளும் செய்யும் தியாகங்களும் வீண் போகாது.
நிறைய மனிதர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களில் சிலர் உங்களுக்கு வருங்காலத்தில் நிச்சயம் உதவக்கூடும்.
அடுத்து பெற்றோர்களுக்கு...
பொறியியல் படிப்பில் பிள்ளையைச் சேர்த்தது உங்கள் மதிப்பை உங்கள் உறவு மற்றும் நட்பு வட்டத்தில் கூட்டும். “பிளஸ் டூ விற்கு எப்படி படுத்தினான். ஹப்பா..இனி ஃப்ரீ!” என்று இருக்காதீர்கள்.
நல்ல மார்க் வாங்கிய பலர் முதல் செமஸ்டரில் அரியர்ஸ் வைப்பார்கள். அதனால் தள்ளி இருந்து அவர்களைக் கவனிப்பது நல்லது. முக்கியமாக கிளாசுக்கு போகவில்லை, பரிட்சை எழுதவில்லை என்றால் தயக்கமில்லாமல் உங்களிடம் சொல்லும் அளவுக்கு உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கோர்ஸ் வாங்கிக் கொடுத்தது போல எப்படியாவது யாரையாவது பிடித்து நாளை வேலை வாங்கலாம் என்ற எண் ணத்தை உங்கள் பிள்ளைக்கு கொடுக்காதீர்கள். பாஸ் செய்வது முதல் வேலை வாங்குவது வரை எல்லாம் அவர்கள் முயற்சி சார்ந்தது என்று புரிய வையுங்கள்.
உங்கள் பிள்ளையின் நிஜ மான பலங்கள் என்ன என்று அறிந்து அதற்கேற்ப ஊக்குவியுங்கள். இந்த படிப்பிற்கு பின் சேர பொறியியல் சாராத பல படிப்பு களும் வேலைகளும் உள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது வருங்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை தெளிவு படுத்தும்.
கல்லூரியுடன் நல்ல உறவு முக்கியம். தள்ளி இருந்து பேணக் கற்றுக்கொள்ளுங்கள்.
கல்லூரிகளுக்கு...
கல்லூரி முதலாளிகள் மூலதனம் என்பது அறிவு சார்ந்தும் நடக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கட்டிடங்களையும் வாகனங்களையும் மாணவர்கள் படிப்பு முடிந்து கொண்டு செல்ல முடியாது. ஆனால் இங்கு கற்ற கல்வியும் அனுபவமும்தான் அவர்கள் கொண்டு செல்பவை. அதனால் கட்டுமான முதலீடுகள் செய்வதுடன் அறிவு சார்ந்த முதலீகள் மிக மிக அவசியம். குறிப்பாக தகுதியான ஆசிரியர் களை நல்ல சம்பளம், சுதந்திரம், சிறப்பு பயிற்சி, மேல் படிப்பு, நிறுவனப் பயிற்சி அளித்தல் அனைத்தும் மிக மிக அவசியம்.
நல்ல பணிச்சூழலை ஆசிரியர் களுக்கு அளித்து, அவர்களை பயம் இல்லாமல் வேலை செய்ய விட்டாலே அவர்களால் தங்களின் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும்.
எப்படியாவது கேம்பஸுக்கு ஹெச்.ஆரை கொண்டு வரணும் என்பதை முதல்வர்கள் கை விட்டு விட்டு, நம் வளாகத்தை நிறுவனங் கள் தேடி வரும் வண்ணம் மாணவர் களைத் தயார் செய்ய வேண்டும் என்று வைராக்கியம் எடுக்க வேண்டும்.
குறைந்த செலவில், குறுகிய காலத்தில், கடைசி ஆண்டில், வேலைத்திறன் பயிற்சிகள் அளிக்காமல், முதல் வருடம் தொடங்கி இறுதி ஆண்டு வரை தகுதியான வல்லுநர்கள் கொண்டு நடத்துதல் அவசியம்.
குறைந்தது 5 நிறுவனங் களுடனாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு அவர்களை உங்கள் பாடத்திட்டத்தில், பயிற்சியில் கை வைக்க இடம் கொடுங்கள்.
மாணவர்களையும் மாணவி களையும் பிரித்து பாதுகாப்பது தான் கட்டுப்பாடு என்ற கோட் பாட்டைத் தளர்த்தி, ஆரோக்கிய மான சூழல் உருவாக்கி அவர் களை நவீன பணியிடங்களுக்கு தயார்படுத்துங்கள். ஆசிரியர்கள் முதல் ஆயாக்கள் வரை உளவாளிகள் நியமித்து மோப்பம் பிடிக்காமல், மாணவர்களை மதிப்பாக நடத்துங்கள். அவர்கள் உங்கள்
நம்பிக்கையைக் காப்பாற்றுவார்கள்.
ஒரு சிறந்த வளாக வாழ்க் கையை அவர்களுக்கு அளியுங் கள். வெளியேறிய பிறகும் உங் களுடன் தொடர்பு கொள்ளத் துடிக்கும் ஆவலை ஏற்படுத்துங் கள். முன்னாள் மாணவர்கள் ,அவர்கள் படித்த கல்லூரிகளுக்கு நிறைய செய்யலாம்.
பொறியியல் கல்லூரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போல விஷன், மிஷன் தெரிந்து, தெளிந்து, பிரத்யேக ஹெச்.ஆர் நியமித்து, வியாபார வியூகம் அமைத்து, தங்கள் கல்லூரியின் போட்டியிடும் தன்மையை (Competitiveness) உணர்ந்து காலாண்டு திட்டங்கள் செயல்படுத்தி, நிர்வாகம்-ஆசிரியர்கள்- மாணவர்கள் ஒன்றி ணைந்து குழுவாக செயல்பட்டால் வெற்றி கொள்ளலாம். கல்வியும் தப்பிக்கும்.
பி.இ.க்கு பின் கார்ப்பரேட், வங்கி, ஐ.ஏ.எஸ், சொந்த தொழில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி என எது வேண்டுமானாலும் செய்யலாம்.
பொதுவாக, பிளஸ் டூவிற்கு பிறகு எதை தேர்ந்தெடுக்கலாம் என என்னிடம் சைக்கோமெட்ரிக் ஆய்விற்கும் ஆலோசனைக்கும் வருவார்கள். இனி, பொறியியல் படித்து விட்டு அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்டு வருவார்கள் என்று தோன்றுகிறது!
டாக்டர். ஆர். கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com

Thursday, May 1, 2014

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ... நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்... எங்கெங்கு காணினும் பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா? 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல.

பல லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள். யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா?
பொறியியல் மோகம்!

தமிழ்நாட்டில் மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள 4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில் வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின் றனர்.

இது தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களில், ஒரு தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ... அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர். பொருளாதாரரீதியாக நம்மைவிட வலுவாக உள்ள நாடு மற்றும் பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் நம்மைவிட பெரிய நாடு... இந்த இரண்டுக்கும் தேவைப்படுவதைவிட, நம் நாட்டுக்கு அதிக பொறியாளர்கள் தேவைப்படுகின்றனரா?

''உண்மையில் இப்படிப்பட்ட எந்தக் கணக்கும் இந்திய அரசிடம் இல்லை. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பொறியாளர்கள் தேவை எனக் கணக்கிட்டு அதற்கேற்ப கல்லூரிகளில் கல்வியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதைவிட அதிகமான இடங்களுக்கு அனுமதி தரக் கூடாது. ஆனால், இந்திய அரசிடமே அப்படி ஒரு கணக்கீடு இல்லை என்பதால், விருப்பம் போல கல்லூரிகளுக்கும் கல்வியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. விளைவு, பொறியியல் கல்லூரிகள் மழைக்கால ஈசல்களைப் போல பெருகியிருக்கின்றன'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும், சேவ்-தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன்.

எனவேதான் ஜனவரி - 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.8 கோடியாக அதிகரித்துள்ளது.

பெற்றோர்களின் சுமை!

வேலை கிடைக்கவில்லை என்பது மாணவர்களைவிட பெற்றோர்களுக்கே அதிக மன உளைச்சலைத் தருகிறது. ஏனெனில், அவர்கள்தான் சொத்துகளை விற்று, நகைகளை விற்று, சொந்த-பந்தங்களிடம் கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்கவைக்கின்றனர். படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும்; சம்பளம் கிடைக்கும்... அதைக்கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பொய்க்கும்போது யதார்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். கடன் மேல் கடன் வாங்கி ஓட்டாண்டியான குடும்பங்கள் எத்தனையோ. 'தொழிற்கல்வி’ என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் கல்வியைத் தொழிலாக நடத்த, தொழில் நடத்திய பல பெற்றோர்கள் சொத்துகளை இழந்து கடனாளிகளாக நிற்கின்றனர்.

இன்னொரு பக்கம் கல்விக் கடன். லட்சக்கணக்கான இளைஞர்கள், கல்லூரியைவிட்டு பொறியாளர்களாக மட்டும் வெளியேறவில்லை... கடன்காரர்களாகவும் வருகின்றனர். ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார். சொந்தக் குடிமக்களுக்குத் தரமான கல்வியை இலவசமாகத் தர வழியற்ற அரசு, லட்சக்கணக்கான நடுத்தரவர்க்கக் குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது எப்படி புரட்சிகரத் திட்டமாகும்? நாடு முழுவதும் புற்றீசல் போல திறக்கப்பட்டுள்ள தனியார் கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்தை உத்தரவாதப்படுத்தவே, இந்தக் கல்விக் கடன்கள் உதவுகின்றன. அந்தப் பக்கம் கடன் தந்துவிட்டு, இந்தப் பக்கம் அதைக் கல்வி வியாபாரிகளின் கல்லாவில் வாங்கிப் போடுகிறார்கள். ஆனால், மாணவர்களோ... படிப்பு முடிந்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும்.

''நான் திருப்பூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் பெற்றுதான் படித்தேன். ஒருமுறை நான் வங்கி சென்றிருந்தபோது ஒரு மாணவன், இரண்டாவது தவணை கல்விக் கடனைப் பெறுவதற்காகப் பெற்றோருடன் வங்கிக்கு வந்திருந்தான். அவனது தேர்வு மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த வங்கி மேலாளர், மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், அவனைக் கடுமையாகத் திட்டியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், ஆசிரியர் திட்டுவார், பெற்றோர் திட்டுவார்கள். ஆனால், ஒரு வங்கி மேலாளர் திட்டியதைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் தற்போது சென்னையில் பணிபுரியும் பாரதிதாசன்.

ஒரு பக்கம் குடும்பக் கடன், கல்விக் கடன், வேலை கிடைக்காத சூழல், குடும்பத்தின் நெருக்கடி... என்று படித்த இளைஞர்களின் மனம், பெரும் பாரத்தைச் சுமக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை ஒவ்வோர் ஆண்டும் பலவீனமாகி வருகிறது.

குறையும் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் வேலைவாய்ப்பு சதவிகிதம் 2004-2005ம் ஆண்டில் 42 சதவிகிதமாக இருந்தது. இது 2009-10ம் ஆண்டில் 36.5 சதவிகிதமாகவும், 2011-12ம் ஆண்டில் 35.4 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த          10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. மாறாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதாவது, தேவையைவிட அதிக உற்பத்தி. தேவைப்படாதபோது ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் பொருள் வீணாவது மட்டுமல்ல... அதை உருவாக்கச் செலவிடப்பட்ட பணம், நேரம், மனிதவளம் அனைத்தும் வீணாகின்றன. இது எளியோர்களுக்கான கணக்கு. முதலாளிகளின் உலகத்தில், இந்த மிகை உற்பத்தியும் தந்திரமாக லாபமாக்கப்படுகிறது.

நாட்டின் தொழில் துறை வளர்ச்சி விகிதத்துக்கு எவ்வளவு பொறியாளர்கள் தேவையோ... அதற்கேற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் கல்வியிடங்களும் இருக்க வேண்டும். மாறாக, நம் ஊரில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டன. 'பொறியியல் படிப்பதுதான் கௌரவம். அதுதான் எதிர்காலம்’ என்ற ஆசை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் அதில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு இந்தியத் தொழில் துறையில் வளர்ச்சி இல்லை. இதனால் இந்தியப் பொறியாளர்கள், மிகவும் சவாலான வேலைவாய்ப்புச் சந்தையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர். இப்படிக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் போட்டியிடும்போது, இயல்பாகவே ஊதியம் குறைக்கப்படுகிறது!

மிகை உற்பத்தி... மிகை லாபம்!

''இதில் நுணுக்கமாக ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கட்டி, அதில் லட்சக்கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்து, நம் குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை உறிஞ்சுகின்றனர். அந்தக் கல்லூரிகளின் மூலம் தேவைக்கு அதிகமான பொறியாளர்களை உற்பத்தி செய்து, அவர்களை குறைந்த கூலியில் வேலைக்கு எடுத்து, நம் இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அதிலும் லாபம்; இதிலும் லாபம்'' என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும் செந்தில்.

எனினும், இந்த வேலைகூட கிடைப்பது இல்லை என்பதுதான் இன்றுள்ள யதார்த்தச் சூழல். இதனால், பொறியியல் படித்த லட்சக் கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பி.பி.ஓ., டெஸ்ட்டிங் என்று ஐ.டி. துறையில் வந்து சரணடைகிறார்கள். இந்த வேலைகளும் உறுதியானவையோ, நிரந்தரமானவையோ அல்ல. இவை அனைத்தும் இந்தியாவின் குறைந்த சம்பளத்தைக் கணக்கில்கொண்டு அவுட்சோர்ஸ் செய்யப்படுபவையே. இதைவிட குறைவான சம்பளத்துக்கு வேறொரு நாட்டில் பணியாளர்கள் கிடைக்கும்போது, அவுட்சோர்ஸ் வேலைகள் அங்கு பறந்துவிடுகின்றன.
2014-ம் ஆண்டு பிப்ரவரியில் புகழ்பெற்ற கணினி நிறுவனமான ஐ.பி.எம்., குறைந்துவிட்ட தனது லாப விகிதத்தைச் சமப்படுத்த, உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் இருந்து 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தின் பெங்களூரூ கிளையில் ஒரே நாளில் 50 பேர் திடீரென்று நீக்கப்பட்டனர்!

கை கொடுக்காத கேம்பஸ்!

புறச்சூழல் இத்தகைய நெருக்கடிகளுடன் இருப்பது, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் தெரிகிறது. இதனால் எப்படியாவது 'கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்முகத் தேர்விலேயே ஒரு வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் துடியாகத் துடிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வளாக நேர்முகத் தேர்வு நடத்தவரும் நிறுவனங் களின் எண்ணிக்கையும், அவர்கள் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. காரணம், உலக ளாவியப் பொருளாதார நெருக்கடி. ஏற்கெனவே கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே அவர்களால் வேலை தர முடியவில்லை. புகழ் பெற்ற மும்பை ஐ.ஐ.டி-யில் 2012-13வது கல்வி ஆண்டில் 1,501 மாணவர்கள் கேம்பஸில் தேர்வானார்கள். ஆனால், அவர்களில் 1,005 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதே கல்லூரியில், கடந்த ஆண்டு 1,389 பேர் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டு, 1,060 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டது.

வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காவிட்டால், அது மன அழுத்தமாக மாறி சில நேரம் தற்கொலையில்கூட முடிகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த ஷாகில் முகமது என்கிற மாணவர், வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

எனில், பொறியியல் படிப்பது வீண் செயலா? பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா? இப்படி ஒரு முடிவுக்கு வருவது இல்லை இந்தக் கட்டுரையின் நோக்கம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் பேர் பொறியியல் படிப்புப் படித்து வெளியில் வருகின்றனர் என்றால், அதில் குறிப்பிடத்தகுந்த பேருக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அடியோடு அது வீண் என்று சொல்வதற்கு இல்லை. அதே நேரம் 'பொறியியல் படிக்கும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை உறுதி’ என்ற நிலை இன்று இல்லை.

இந்த நிலையில் கல்வியாளர்களின் பரிந்துரைதான் என்ன? அது எப்போதும் சொல்வதுதான். பிள்ளைகளின் ஆர்வம் எதில் இருக்கிறதோ, அந்தப் படிப்பில் சேர்த்துவிடுங்கள். 'இதற்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று ஊதிப் பெருக்கப்பட்ட மாயைக்கு இரையாகாதீர்கள்!

அனிஷ்குமார், மெக்கானிக்கல் இன்ஜினீயர்: ''என்னோட 1.20 லட்ச ரூபாய் கல்விக் கடன், இப்போ 1.40 லட்சமா இருக்கு. வேலைத் தேடிப்போற இடத்துல எல்லாம், 'டிப்ளமோ படிச்சிருந்தா வேலை தர்றோம். இன்ஜினீயரிங்னா வேண்டாம்’ங்கிறாங்க. ஏன்னா, டிப்ளமோவா இருந்தா அதிக வேலை வாங்கிட்டு கம்மி சம்பளம் தரலாம். இன்ஜினீயரிங்னா அது முடியாதே... 10 லட்சம் செலவு செஞ்சு இன்ஜினீயரிங் படிச்சதுக்கு 10 ஆயிரம் சம்பளத்துல வேலை கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு!''

திராவிடத் தம்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ்: ''படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமா பி.பி.ஓ. வேலைதான் பார்க்கிறேன். இப்போ ஐ.டி. வேலைக்கு இன்டர்வியூ போனா, 'உங்களுக்கு டச் விட்டுப்போச்சு. வேற ஃபீல்டுக்குப் போயிட்டீங்க... வேண்டாம்’ங்கிறாங்க. இந்த வேலையைப் பார்க்கிறதுக்கு எதுக்கு லட்சம், லட்சமா செலவழிச்சு நாலு வருஷம் படிக்கணும்?''

ரிஸ்வான், பி.டெக். ஐ.டி.: ''2007-ல் படிப்பு முடிச்சேன். ஏழு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் வாத்தியார் வேலை பார்த்தேன். டேட்டா என்ட்ரி, டீச்சிங் எதுக்குப் போனாலும் 7,000, 8,000 தான் சம்பளம் தர்றாங்க. யாரும் வேலை தர்றது இல்லை. ஆனா, எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறாங்க. வேலையே கொடுக்காம எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்கே போறது?''

மீண்டும் வங்கிப்பணி மோகம்!

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 250 முன்னணி நிறுவனங்களில் 'எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியது. அதன்படி 2011-வது நிதியாண்டில் 2.02 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இது, 2012-ல் 1.91 லட்சமாகவும், 2013-ல் 1.23 லட்சமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 2011-ம் நிதியாண்டில்         6.4 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, 2012-ல் 5.7 சதவிகிதமாகவும், 2013-ல் 3.5 சதவிகிதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால், 20 வயதில் இருந்து 30 வயது வரையிலான பொறியியல் பட்டத்தாரிகளில்         74 சதவிகிதம் பேர் வங்கி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். வருங்காலத்தில் வங்கி தொடர்பான வேலைவாய்ப்புகள் லட்சக்கணக்கில் அதிகரிக்க இருக்கும் நிலையில், பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!
'கெம்பா’ கார்த்திகேயன், மனிதவள நிபுணர்:

''தற்போதைய நிலையில், வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மைதான். அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தில் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருவதும் உண்மை. அதனால் பொறியியல் படிப்பு குறித்து அடியோடு அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. பொறியியல் கல்லூரிகள் அதிகமாக இருப்பதோ, தேவையைவிட அதிக பொறியாளர்கள் உருவாக்கப்படுவதோ ஒரு பிரச்னை இல்லை. உருவாகிவரும் பொறியாளர்களின் பெரும்பகுதியினர் திறனற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னை. இதற்கு, தனிநபர்களைக் குற்றம் சொல்ல முடியாது. முதலில் நாம் நமது கல்லூரிகளை, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்டவையாக மாற்ற வேண்டும். உள் கட்டமைப்பு என்றால், வெறும் கட்டடங்கள் அல்ல; மாணவர்களின் தனித்திறனையும் ஆற்றலையும் வளர்க்கும் கல்விமுறை, திறமையான ஆசிரியர்கள்... என்பதில் இருந்து அதைத் தொடங்க வேண்டும். இது, உடனடி பலன் அளிக்காது; எனினும், நீண்டகால நோக்கில் நிச்சயம் பலன் அளிக்கும்!''

Disclaimer: இந்த பதிவு ஆனந்த விகடன் நாளிதழில் இருந்து பலரும் அறியும் பொருட்டு இங்கு பகிரபடுகிறது, இதில் எந்த வணிக நோக்கமும் இல்லை, யாரேனும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம், பதிவு நீக்கப்படும். ஆனந்த விகடன் முகவரி கொடுக்கப்பட்டு உள்ளது Click Here